பல்லவியைப் பூட்டி வைத்து அடித்து உதைத்து என்னவெல்லாமோ செய்து பார்த்தாயிற்று. அவள் வாய் திறப்பதாய் இல்லை. மனசுக்குள் கனம் கூடிக்கொண்டே சென்றது.
“நான் என்ன குற வச்சேன் இவளுக்கு, வீட்டில் புதிதாய் வாங்கும் எந்தப் பொருளுக்கும் இவள் பெயர்தான், ஆரம்பிக்கும் தொழிலுக்கும் இவள்தான் துவக்கம். என்ன குற வச்சேன் இவளுக்கு” என்பதுதான் கணேசனின் புலம்பல்.
கணேசன் பல்லவியின் அப்பா. பல்லவியோடு பிறந்தவர்கள் இரண்டு பேர். இரண்டும் அண்ணன்கள். ஆஸ்திக்கு இரண்டு பையன்கள் இருக்க, ஆசைக்காக வேண்டி விரும்பி ராஜ யோகம் கூடி வர பிறந்தவள்தான் பல்லவி. ஆனால் அவளின் தனிப்பட்ட ஆசைதான் அவர்களின் ஈரக்கொலையை இன்று பிய்த்துக் கொண்டு அலையும்படிச் செய்திருக்கிறது.
அண்ணன் தம்பி ரெண்டுபேரும் பத்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆனால் பல்லவியைப் பெரிய யுனிவர்சிடியில் சேர்த்தெல்லாம் படிக்க வைத்தார்கள்.
“பெரிய படிப்பெல்லாம் படிக்க வச்சு என்ன செய்றது? இன்னக்கு எம்மானத்தெல்ல வாங்கிபிட்டா? பார்த்துப் பார்த்து, அழகு பார்த்த மகதான். அடிக்கையில மனசு வலிக்குது. ஆனா மனச மாத்தாம வீம்பு புடிக்கிறாளே. இம்பிட்டு பிடிவாதம் இவகிட்டு இருக்கும்னு நெனைக்கல்லயே” என்று அழுது பார்த்தாள் லெட்சுமி.
“நமக்கெல்லாம் காதல் கீதல்லாம் சரி வராது”ன்னு பல்லவியின் அம்மா கண்ணக் கசக்கிப் பாத்தா, ஆனாலும் பல்லவி மனசு மாறல. அதனாலதான் இம்புட்டு அடியும் உதயும். பொத்திப்பொத்தி வைத்த மகளை இன்று உடல் பொத்துப் போக அடிக்கும் போது பல்லவியின் அப்பன் மனம் வலிக்கத்தான் செய்தது. வலித்ததும் ஒரு பாட்டிலை உள்ளே இறக்கிவிட்டு இன்னும் கொஞ்சம் மூர்க்கத்தனமாய் பல்லவியை மாடைப் போட்டு அடிப்பதைப் போல அடித்துத் துவைத்ததில், பல்லவியின் மஞ்சள் நிற மேனி எங்கும் குங்குமம் கட்டி கட்டியாய்க் கெட்டிப்பட்டதைப் போல தடுப்புகள் பாளம் பாளமாக கை கால்களில் வெடித்துக் கிளம்பிய ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாய்க் கிடந்தாள்.
பார்க்க மனசில்லாம மண்டையிலேயே அடித்துக் கொண்டு சேலைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டு நாலாம் பேருக்குத் தெரியாமல் கதறினாள்.
எப்படித்தான் ஆம்பிள்ளைகளுக்கு, பொம்பளைகளாள கௌரவம் போகக் கூடாதுன்னு தோணுமோ நேத்துவர பாசமா பேசுன அண்ணன்கள் ஆளுக்கு முந்தி அருவாளோடு நிக்குறாணுக. பெண் பிள்ளைகள் தன் விருப்பத்திற்கு முடிவெடுத்து விட்டால் இந்த உலகமே இடிந்து தூள்தூளாகும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது. அவளை ராசிக்காரியாய், அஷ்டலெட்சுமியின் உருவமாய் தாயாய் மதிப்பதெல்லாம் அவள் வாய்திறந்து எனக்கொருவனை பிடித்திருக்கிறது என்று சொல்லும் வரைதான் என்று தோன்றுகிறது.
சொல்லிவிட்டால இந்தப் பல்லவியின் கதைதான் எப்படிப்பட்ட தேவதைக்கும் நேரும்.
அவ்வளவு பிரச்சனைகளையும் அடிகளையும் உதைகளையும் தாங்கிக் கொண்டுதான் பல்லவி பலவீனமாகிக் கிடக்கிறாள். இந்தச் சூழ்நிலை நிகழ வாய்ப்பிருக்கிறது என ஏற்கனவே பல்லவியும் ரமேசும் தெரிந்தே வைத்திருந்தனர். வகுப்பில் சக மாணவனாய் ஏற்பட்ட பழக்கம்தான். எது பிடித்துப் போனதோ தெரியவில்லை. இன்று நினைத்தால் எல்லாமுமே பிடித்திருந்ததாய் தோன்றுகிறது. அவனின்றி இவளில்லை. இவளின்றி அவனில்லை எனும் நிலை மெல்ல உருவாகிப் போனது. இரண்டு வருடங்கள் கடந்ததும் இதனைத் திருமணத்தில் முடிக்க வேண்டும் எனும் போதுதான், கண்ணால் மட்டும் வேரூன்றியிருந்த காதலின் கிளைகள் உண்மையில் எத்தனைப் பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனும் உண்மை இருவருக்கும் புரிந்தது.
முயற்சிப்போம் என்கையில் ரமேசுக்கும் முதலில் தயக்கமும் பயமும் இருந்தது. பின் வீட்டில் சொன்னபோது எதிர்பாராத வகையில் ஏற்றுக் கொண்டனர். உடனே விடுதியில் தங்கியிருந்த பல்லவியைப் பார்க்கப் புடவையோடும் பூவோடும் வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்ததை விட எல்லா வகையிலும் தகுதியாய் இருந்ததால் ரமேசின் வீட்டில் சம்மதம் முழுதாகக் கிடைத்துவிட்டது.
அதே நாளில்தான் பூகம்பமொன்றும் கிளம்பியிருந்ததை பல்லவி உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பார்த்துச் சென்ற இரண்டே நாளில் பல்லவியின் அம்மாவும் அண்ணனும் விடுதியின் வாயிலில் வந்து நின்றார்கள். என்ன காரணமாயிருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள் அம்மாவின் அழைப்பு மீண்டுமொரு முறை வந்தது. என்ன சொல்வது என்று நிதானிப்பதற்குள் லெட்சுமி சொன்னாள்,
“பெரியகுளத்துள இருக்கிற உங்க பாட்டிக்கு சீரியஸா இருக்கு. உன்ன பாக்கணும்னு சொல்லுது. இப்பவோ பிறகோன்னு கிடக்குது. துணிமணி எடுத்துக்கிட்டு கிளம்பு போயிட்டு வந்துருவோம்.” சொல்லி முடிக்கும் போது வேறு எதையும் ரமேசிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப நேரமில்லை. அறைத் தோழியிடம் மட்டும் “வரேண்டி” என்று மட்டுமே சொல்ல முடிந்தது பல்லவியால்.
அப்படி அழைத்து வந்துதான் இப்படித் துவைக்க ஆரம்பித்தார்கள். பல்லவி தன் தைரியத்தை இழக்கவில்லை. நல்லவேளையாய் ஏற்கனவேப் பேசியிருந்தது ஞாபகம் வர செயல்படுத்த ஆரம்பித்தாள். இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிறது. ரமேசுக்கு எந்தத் தகவலும் கொடுக்க முடியவில்லை. எங்கு அமர்ந்திருந்தாலும் கண் அசைத்தாலும் கூட குடும்பமே அவளைக் கண்காணிப்பது அவளுக்குத் தெரியும். வந்ததும் முதலில் பிடுங்கியது கைபேசியைத்தான். என்ன செய்வதென யோசித்து மருகிக் கொண்டிருந்தாள் பல்லவி.
ரமேசை வேண்டாமென்று சொல்லப் பல காரணங்கள் இருந்தன. ஒன்று அவன் வேறு சாதி. இது முக்கியக் காரணம். அப்படி அவன்தான் முக்கியம்னு இவ ஓடிப்போனா வெட்டிக் கொள்ளவும் தயாரா இருந்த அண்ணன்களுக்கு அடுத்து நம்ம கௌரவம் என்ன ஆகும் என்பதே மிகப் பெரிய காரணம். ஓடுகாலி என்பது மாறாத பட்டப் பெயராய் தன் குடும்பத்தைத் துரத்தும் என்பதும் ஒரு காரணம். மற்றுமொரு முக்கிய காரணம் இவள் எப்படி தனியாய் பெண் பிள்ளையாய் இருந்து கொண்டு முடிவெடுக்கலாம் என்பதே மிக முக்கியக் காரணம்.
சொல்லிப் புரிய வைப்பது இதற்கு மேல் முடியாது. பழைய யோசனைகளை ஏறக்கட்டி விட்டு செயலில் இறங்கினாள் பல்லவி. எங்கு எதை எடுத்தாலும் கண்டு கொள்வார்கள் பாத்ரூம் போனால் கூட அம்மாவும் கூடயே வருவாள் என்ன செய்வது. எழுந்தாள் முகத்தை நன்றாகக் கழுவினாள்.
“அம்மா நான் தலைக்கு ஊத்திட்டேன்” (தலைக்கு ஊத்துதல் - மாதவிடாய்) எனக்கு சீயக்காய் வாங்கி வா” என்றாள்.
அம்மா கிளம்பவும் பாத்ரூம் கதவை அடைத்தாள் ஏற்கனவே அண்ணனும் அப்பாவும் தோப்புக்குச் சென்றிருப்பது தெரியும். அதனால் சத்தமில்லாமல் ஏற்கனவே ரமேஷ் வாங்கிக் கொடுத்திருந்த போனுக்கு உயிரூட்டி அவசரச் செய்தியை உடனே அனுப்பினாள். நாளைக்கு என்னைக் கூட்டிச் செல்ல வா. நான் தகவல் கொடுத்ததும் வந்து அழைத்துச் செல்” எனச் அவசரக் குறுந்தகவலைச் சொல்லிவிட்டு மீண்டும் போனை அணைத்து நாப்கினுக்குள்ளேயே நுழைத்து வைத்தாள். அவர்கள் சோதனையிடாத ஒரே ஒரு பொருள் அதுதான்.
பதற்றம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், நன்றாகத் தலையை அலசிக் குளித்தாள். உடனே பெத்தவர்கள், இனி நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டாள், பயந்து விட்டாள் என்று நினைத்து வேறு முடிவை எடுத்தார்கள்.
“தேனிக்காரங்க ரொம்ப நாளா நம்மகிட்ட பொண்ணு கேக்கிறாக. பிள்ள படிக்குதுன்னு இத்தன நாள தள்ளி போட்டுகிட்டே வந்தாச்சு. இவ படிச்சு கிழிச்ச வரைக்கும் போதும், அவர்கள் வரச் சொல்லி பொண்ணையும் காட்டி நாளு கிழமய குறிச்சு வெரட்டி விட்டுப்பிடுவோம். அவக நாங்க படிக்க வக்கிறம்னுதான் சொன்னாக. எப்படியும் போகுது. அதுக்கு மேல அவக தலச்சொம” கணேசன் சொல்லி முடித்தார்.
“எவ்வயித்துல இப்படியொரு பிள்ளயா, எங்க வீட்டில என்ன பெத்தவங்க கிழிச்ச கோட்ட நான் தாண்டுனதுல்ல”. வயிற்றிலும் மாரிலும் மாறி மாறி அடித்துக் கொண்டாள் லெட்சுமி. பல்லவியை போட்டு நாலு அடியும் அடித்தாள்.
பல்லவி முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவர்களாகவேப் பேசினார்கள், நாளை மாப்பிள்ளை வீட்டாரை வரச் சொல்வதாக அவர்களே முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் வருவதால் வீட்டு வேலைகள் ஆரம்பமானது. இவள் மீது கவனம் குறைந்தது நாப்கினுக்குள் மறைத்து வைத்திருந்த போனில் இருந்து அவசர குறுந்தகவலொன்றை ரமேசுக்கு அனுப்பினாள். ஏற்கனவேத் தயாராய் இருந்த ரமேசும் அவனது நண்பர்களும் உடனே வீட்டின் கொல்லைப்புரம் வந்து சிக்னலைக் கொடுத்தார்கள்.
அடுப்படியில் ஏதோ மாப்பிள்ளை வீட்டாருக்காக லெட்சுமி சமைத்துக் கொண்டிருந்த கண நேரத்தில் இத்தனை நாள் வாங்கிய அடியையும் உதையையும் கண நேரத்தில் மறந்து வேகமாக பல்லவி வீட்டை விட்டு வெளியேறினாள். ஏதோ பார்க்க வெளியில் வந்த லெட்சுமியின் முன்னமே, வேறு ஒரு ஆடவன் கைபிடித்து பல்லவி ஓடிக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் கத்த மறந்து, நிதானித்துக் கத்துவதற்குள் தெரு கடந்து வாகனம் ஏறியிருந்தாள் பல்லவி.
தன் கணவனுக்கும் மகன்களுக்கும் போன் அடித்த மறுகணம் லெட்சுமிக்குத்தான் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அபிசேகம் நடந்தது. மாப்பிள்ள வீட்டுக்காரவங்க வேற வரப் போறாங்க அதுக்குள்ள அவ ஊர தாண்டுறதுக்குள்ள பிடிக்கணும்னு அண்ணனுக ரெண்டு பேரும் அவங்க கூட்டாளிகள ஏவுனாக. இருந்தாலும் எந்தப் பாத வழி போனாகனு கண்டுபிடிக்க முடியல.
“மாப்பிள்ள வீட்டுக்குப் போன் பண்ணி பெறகொரு நாளு பாத்துக்கிடுவோம்னு சொல்லி வைங்க” என ஒரு பெரிசு சொல்ல, ஏற்கனவே ஏழுமல என்னும் அந்த ஊர் எழவு விழுந்த ஊராகிப் போனது.
“எப்படி நம்ம சாதிக்காரப் பொண்ண ஒருத்தன் ஊருக்குள்ள வந்து தூக்கிட்டு போலாம். இந்தா பாரு மதினி நீ முன்னாடியே சொல்லி இருந்தா அவ குடுமிய அறுத்து வீட்ல உக்கார வச்சுருப்பேன்” என்று முகத்தைத் திருப்பினாள் ஒருத்தி.
“என்ன பெரியம்மா முன்னாடியேச் சொல்லி இருந்தா அந்த… சாதிப்பயலையும், அவகூட ஓடிப் போன ஆக்கங்கெட்ட கூகையையும் அறுத்து கூறு போட்டிருப்பன்ல” என்று வேட்டி நிக்காத வெறும்பய கத்திக் கொண்டிருக்க,
புயல்போல் வந்த கணேசன் வெட்சுமியின் முடியை இழுத்துப் பிடித்து சுத்தி சுவற்றில் அடித்தான். ஊருசனமே கூடிவிட்டது.
கணேசனை மறிக்க வந்த ரெண்டு பொம்பளகளுக்கும் அடி விழுந்தது.
“மாமா இரு மாமா” என்று மூன்று வாலிபப் பையக கட்டி பிடிச்சு அடக்கியும், ஆத்திரம் தீரவில்லை கணேசனுக்கு பாத்திரங்களை எட்டி உதைத்துக் கத்தினான்.
“என்ன கேவலமா பேசுறாண்டி தேனிக்காரன், ஓடுகாலிய பெத்து வச்சுக்கிட்டு அத மறச்சு எனக்கு கட்டிக் குடுக்க பாக்கிறியான்னு கேக்குறான். அந்த சல்லிப்பய கெட்ட கேட்டுக்கு மானமிருந்தா நடுவீட்ல தொங்குங்கன்னு சொல்லுறான். என்னடி செய்ய? சொல்லுடி? ஒத்த பிள்ளய ஒழுங்கா வளக்கத் தெரிஞ்சிருக்கா ஒனக்கு. என்ன பண்றா? எவன் கூட பேசுறான்னு ஒனக்குத் தெரிய வேணாமா? நீ ஒழுங்கா இருந்தாத்தானடி ஒம் பிள்ளய சரியா வளத்துருப்ப நீயே நடத்த கெட்டவதான?” என்று தடித்த வார்த்தைகளால் மற்றுமொரு பிரச்சனையைக் கிளர வீடு ரெண்டு பட்டு ஊர்க்காரர்கள் கூத்தாடும் இடமானது.
நான்கு நாள் வெறி கொண்டு தேடி சல்லடை போட்டும், பல்லவியும் ரமேசும் கிடைக்கவில்லை. ஐந்தாவது வது நாள் கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசனில் இருந்து போன் வந்தது. “உங்க பொண்ணு இங்க ஸ்டேசனுல சரண்டர் ஆகி இருக்கு. எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் எங்க அப்பா, அம்மா, அண்ணன்களால பாதுகாப்பில்லனு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு நீங்க எங்கொயரிக்கு இங்க வந்திருங்க” என்று சொல்லி போனை வைத்ததும்,
தீ பிடித்த வீட்டில் இடி விழுந்ததைப் போல ஆனது. ஒரு வேன் நிறைய ஆட்களோடு ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டுமென கூட்டம் கன்னியாகுமரிக்குக் கிளம்பியது. எத்தனையோ மனக் கணக்குகளோடு ஸ்டேசன் வந்து சேர்ந்தார்கள். பொறுமையாகப் பேசி பிள்ளயக் கூட்டிக்கிட்டு வந்து காரியத்த முடிப்பதுதான் முதல் திட்டம்.
ஆனால், பல்லவி அவன் கையை பிடித்துக் கொண்டு எழுந்ததும், மஞ்சள் கயிறொன்று அவள் நெஞ்சில் ஊஞ்சலாடியதும் கணேசனின் பொறுமையை இழக்க வைத்தது. ஆரம்பத்திலே தான் இருப்பது போலீஸ் ஸ்டேசன் என்பதையும் மறந்து கத்திவிடவும்,
ஒரு போலீஸ் “சார் கொஞ்சம் அமைதியா இருங்க. உங்க வருத்தம் எங்களுக்குப் புரியுது. ஆனா ஏற்கனவே உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ணி இருக்காங்க. அதிகமா பேசுனா உங்களையும் உங்க மகன்கள் மேலயும் நான் கேஸ் எழுத வேண்டி இருக்கும்” என்றதும் கணேசன் நிதானமானார்.
“நீங்க பேசிப் பாருங்க உங்க பொண்ணு ஒருவேள உங்ககூட வந்தா நீங்க கூட்டிக்கிட்டுப் போலாம். ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. யோசிச்சுப் பேசுங்க” என்று சொல்லி போலீஸ் நகர்ந்தார்.
லெட்சுமி ஆரம்பித்தாள் தன் மகள் பல்லவியிடம், “ஒங்க அப்பா உன்ன எப்படியெல்லாம் வளத்தாரு மறந்திருச்சா. நீ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து என்ன தேவையோ அவ்வளவுக்கும் மேல சாதி சனத்த எதுத்து ஒன்ன படிக்க வச்சாரு. இன்ன வரைக்கும் நீ இல்லாம அந்த ஆளுக்கு பச்சத்தண்ணி பல்லுல படலடி. தேனிக்காரன் பேசுன பேச்சுல தூக்கில தொங்கப் போனவரக் காப்பாத்திக் கொண்டு வந்திருக்கோம். வாம்மா நம்ம வீட்டுக்குப் போயிரலாம். ஏம் புருசன் உசுரு ஒங்கையிலதான்டி இருக்குன்னு”. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பல்லவி காலில் விழுந்து விட்டாள் லெட்சுமி.
பல்லவி கண்களில் நீர் ததும்பி நின்றது. ஆனாலும் வர மாட்டேன் என்றேத் தலையசைத்தாள். லெட்சுமிக்கு ஆங்காரம் பொத்துக் கொண்டு வந்தது. போலீஸ் ஸ்டேசன் என்பதை மறந்து முகத்தில் அறைந்தாள்.
“நீயெல்லாம் நான் பெத்து வளத்த பொண்ணா. சீ நாய்க்கு இருக்கற நன்றி கூட ஒனக்கில்ல” என்று ஓங்கி இன்னொரு அடியும் அடித்தாள்.
“இங்க பாருங்கம்மா போலீஸ் ஸ்டேசன் வந்த பிறகு இப்படியெல்லாம் நடக்கக் கூடாது. சமாதனத்துக்குப் பேசிப் பாருங்க. இல்லையா நாங்க இவங்கள தொந்தரவு பண்ண மாட்டோம்னு பெத்தவங்க எழுதிக் குடுத்திட்டு போங்க.” என்று போலீஸ் சொன்னதும் அந்த இடம் அமைதியானது.
“இந்த மானங்கெட்டவ நமக்கு வேணாங்க. எழுதிக் குடுத்திட்டு தல முழுகுவோம். இப்படியொரு ஓடுகாலிய பெத்ததுக்கு நான்தான் மருந்தக் குடிச்சுக்கிட்டு சாகணும். ஆனா, என் கருமாதிக்குக் கூட வரக் கூடாதுடி…. மவளே” என்று இறைந்து தள்ளினாள்.
“ஒனக்கும் எங்களுக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்ல. எதுக்கும் எவ்வூட்டுப்படி ஏறக் கூடாது” என்று கணேசன் சொல்லி முடிக்கவும், லெட்சுமி தவ்விக் கொண்டு வந்தாள்,
“ஏன்டி ஓடுகாலி எங்கள ஏமாத்தி மாப்பிள்ள வீட்டுக்காரங்கள வரவச்சுட்டு அவமானப்படுத்தி பசப்பி, எங்களுக்கு துரோகம் பண்ணிட்டலடி நீ வௌங்கவே மாட்ட. நல்லா இருக்க மாட்ட. நாசமாத்தான் போவ. போற இடம் சுடுகாடாப் போவும். நாதியத்து நிப்படி. நான் இந்தக் கண்ணக் கொண்டு பாப்பன்டி: என்று ஸ்டேசன் வாசலில் மண்ணை வாறித் தூற்றி எறிந்தாள்.
ஒருவழியாக அவர்கள் இருவரும் கையெழுத்திட்டுப் போனதும் வெளியில் வந்து பெருமூச்சுவிட்டான் ரமேஷ். இவ்வளவு நடந்தும் சலனமற்று பல்லவி இருந்தது அவனைக் கொஞ்சம் பீதி அடைய வைத்தது.
“பல்லவி… பல்லவி...” என்று உலுக்கினான் ரமேஷ்.
“ஏதாவது பேசுமா பயமா இருக்கு. என்ன ஆச்சு உனக்கு, உங்க அம்மா அப்பாவ விட்டு வந்தத நினைச்சுக் கவலப்படுறியா?” என்று கேட்டதும் இல்லையென்று தலையசைத்தாள். பேச இயலவில்லை.
“உங்க அம்மா சொன்ன மாதிரி உங்க வீட்டுக்குத் துரோகம் பண்ணிட்டதா நீயும் நினைக்கிறியா” என்ற ரமேசிடம் பதைபதைப்பே அதிகம் இருந்தது.
“இல்லை ரமேஷ், நீ கவலப்படாத. நான் ராசிக்காரின்னு நெனச்ச என்ன பெத்தவங்கதான். இன்னைக்கு நீ உருப்படமாட்ட. போற இடம் சுடுகாடாப் போகும்னு சொல்றாங்க என்ன பண்ண? பாத்துக்கலாம் , அவங்க பூட்டி வச்சு அடிச்சத விட அநத வார்த்தைகள் ரொம்ப வலிக்குது ரமேஷ்.”
“நான் யாருக்கும் துரோகம் பண்ணலியே, நான் உன்ன காதலிச்சிட்டு தேனிக்காரன கட்டியிருந்தாத்தான் அது துரோகம். காதலியா உனக்கும், மனைவியாக அவனுக்கும் அது கடைசி வர துரோகமா இருக்கும் நான் அதைச் செய்ய விரும்பல. துரோகம் பண்ணாம வாழ்ந்து காட்டத்தான் விரும்பறேன்” என்று கண்கள் அழுது கொண்டிருக்க உள்ளத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற துணிவும் பிறந்திருக்க தன் வாழ்க்கைத் துணையின் மார்பில் சாய்ந்து கொண்டாள் பல்லவி.
இணைந்து கடக்க இன்னும் பல இருக்கத்தான் போகிறது. இருந்தாலும் இணைந்த மனதோடு, இதயத் தெளிவோடு வாழ்ந்து காட்டுவார்கள் என்று பல்லவியைப் போல நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம்.