மட்டைத் தேங்காய் கிடைத்த நிலையில் இருந்தார் சப் இன்ஸ்பெக்டர் பரசுராமன் பிள்ளை. அனுபவ முதிர்வில் எஸ் ஐயாக பதவி உயர்வு பெற்று அதிக நாட்கள் ஆகவில்லை. பென்சன் வாங்கி ஓய்வு பெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த உடம்பைக் காக்கியில் பொதிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து முப்பத்திரெண்டு ஆண்டுகளாகிவிட்டன. இதற்குள் எத்தனையோ துப்புத் துலக்க முடியாத கேஸ்களுக்கு துப்புத் துலக்கி உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்.
இப்போது சொல்லி என்ன ஆகப்போகிறது? கிரெடிட் முழுவதையும் மேலதிகாரிகள் தட்டிக்கொண்டு போகவில்லையா? தோள்பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் ஏறிய பிறகு வாய்க்கு ருசியாக ஒரு குற்றம் சாட்டப்படுபவன் கிடைத்திருப்பது இதுதான் முதல் தடவை. “எனக்கும் சரித்திரத்தில் ஒரு இடம் இருக்க வேண்டாமா?” பரசுராமன் பிள்ளை தனக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் மட்டைத் தேங்காய்தானே இப்போது முன்னால் நிற்கிறது?
“ஏண்டா. உருப்படாத பயலே. ஏதாச்சும் ஒன்ன சொல்லித் தொலயேண்டா. எவ்வளவு நேரமா நான் உங்கிட்டக் கேக்கறேன். இது வெறும் விசாரணதானேடா? உன்னப் பாத்தா கேடு கெட்டவனாட்டம் தெரியலயேடா. எப்படி விசாரிக்கணும்னு தெரியாம ஒன்னும் இல்ல எனக்கு. அடிச்சு உதச்சு உடம்பக் காயப்படுத்தி விசாரிக்கறது இந்தப் பரசுராமன் பிள்ளயோட ரீதியில்ல. தானாப் பழுக்கற பழத்த கல்லால அடிச்சுப் பழுக்க வைக்கறது எனக்குப் பிடிக்காது.
நாடு முழுவதும் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் தலைநகரில் ஒரு ரயிலில் நிகழ்ந்த தாக்குதல். அதற்கான பொறுப்பை ஒரு தீவிரவாதக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்தக் குழுவில் ஒரு ஆளைக் கூட போலீசாரால் பிடிக்க முடியவில்லை. ” அன்னிக்கு அந்த ரயிலில் வெடித்துச் சிதறின எட்டாம் நம்பர் கம்பார்ட்மெண்ட்டில் இருந்த ஒரு ஆளைத்தான் நான் இப்பப் பிடிச்சிருக்கேன். இதோ அவந்தான் என்னோட முன்னால நிக்கறான். இவனப் பிடிக்க எத்தன கஷ்டத்த அனுபவிச்சேன். இவன நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன்”
இப்படிப்பட்ட ஒரு சாதனம் என்னோட கஸ்டடியிலதான் இருக்குன்னு சொன்னா இருக்கற மேலதிகாரிங்கற கழுகுப்பயல்கள் எல்லாம் பாய்ஞ்சு பறந்து வந்திடுவாங்க இல்லயா? ஆனா என்ன செய்யறது? இது ஒரு மட்டத் தேங்காயாப் போச்சே”
பரசுராமன் பிள்ளை டப்பாவைத் திறந்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து இரண்டு நாசித் துவாரங்களிலும் நிறைத்துவிட்டு ஒரு இழுப்பு இழுத்தான். ஒன்றிரண்டு தும்மலும், சீந்துதல்களும் கழிந்தபின் அவனுக்குள் ஒரு உற்சாகம் ஊற்றெடுத்தது.
“ஏண்டா ஊமப்பயலே. பரப்பிரம்மமே. உன் பேரையாச்சும் கொஞ்சம் சொல்லுடா”
“ஆத்மாராமன்”
“அடக்கடவுளே. கடைசியா வாயத் துறந்துட்ட. பரசுராமன் பிள்ளையின் உள்ளுக்குள் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் பேரிரைச்சலுடன் ஓடத் தொடங்கியது.
“ம். ம். சொல்லு. சொல்லு. ஒன்னு கூட விடாம. தொடக்கம் முதல் கடைசிவர...” இப்படி ஒருவழியா ரயில் கிளம்பிச்சு. அவர் உற்சாகப்படுத்தினார்.
“ரயில் அன்னிக்கு அரை மணிநேரம் லேட்டாத்தான் கிளம்பிச்சு. அதனால அரை மணி நேரத்துக்கு அப்புறம் நடந்த சம்பவங்களப் பத்தி மட்டும்தான் என்னால சொல்லமுடியும்” ஆத்மாராமன் தன் வாய் சாமர்த்தியத்தைக் காட்டினான்.
“எனக்குக் கொஞ்சம் தியானம் செய்யணும். அப்பதான் எல்லாத்தயும் வரிசப்படி ஞாபகப்படுத்த என்னால முடியும்”
“சரி. ஒத்துகிட்டாச்சு. ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காம முடியாது. ஆனா என்னை ஏமாத்தறதுதான் உன் திட்டம்ன்னா என்னோட இன்னொரு முகத்த நீ பார்க்க வேண்டி வரும். நம்மோட நாட்டுக்காக ஒரு நல்ல காரியத்த நீ எனக்காகச் செய்யணும். அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு வேணும். இவ்வளவையும் சொல்லிவிட்டு பரசுராமன் பிள்ளை ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு இடத்தை ஆத்மாராமனுக்கு சுட்டிக்காட்டினான். சில நிமிடங்களுக்குப் பிறகு, திரும்பி வந்தவன் அவன் மௌனியாக வந்து பரசுராமன் பிள்ளையின் முன்னால் நிண்றான்.
“அடப் பாவிப்பயலே. நான் இங்க உன் வாய்லேர்ந்து விஷயத்த வாங்க படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா தியானம் சமாதின்னு ஆனந்தக்கூத்தாடிக்கிட்டு இருக்கற. என்னோட பொறுமயச் சோதிக்காத, வந்து நின்னு வாய மூடிட்டு இருக்கற. பேச்சு வராம மூச்சு முட்டுதா? அடியுதை உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க”
இல்ல சார் இல்ல. பேச்சு முட்டியதில்ல. நான் இப்ப அனுபவிக்கற ஆனந்தத்த வர்ணிக்க போதுமான வார்த்தைங்க கிடைக்கல. சொர்க்கத்துக்குப் போகணும்னா நினைக்கற நினைப்பும் பேசற பேச்சும் செய்யற செயலும் நல்லதா இருந்தாப் போதாதா சார்? சாரு கடோபநிஷதம் படிச்சிருக்கீங்களா? சாந்தோக் உபநிடதம்? அஸ்த்ரா வக்ரகீதம்? சிஜ்ஜர சிந்தனம்?”
“அடேய் அடேய் ஆத்மாராம. என்னை நீ முட்டாளாக்காத. நீ அந்த ரயில்ல தாவி ஏறிக்கோ. அப்பறம் நடந்தத எல்லாம் மணிமணியாச் சொல்லு. ரயில்ல குண்டு வெடிச்சதுக்குப் பின்னால இருந்தது நீதான். நீயும் உன்னோட கூட்டாளிகளும். எனக்கு இதப் பத்தி சொன்னாப் போதும்”
“ஓஹோ. அப்ப சார் திரைக்கதய ஏற்கனவே தயாராக்கி வச்சிருக்கீங்க”
ஆத்மாராமனின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் பரசுராமன் பிள்ளைக்கு அவன் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது. மனம் இளகியது.
ஆத்மாராமா. உனக்கு எல்லாம் தெரியும் இல்லயா? அந்த உண்மைய நீ மனசு திறந்து சொல்லணும். இல்லாட்டா அந்த ரயில் விபத்துல உயிரிழந்தவங்களோட ஆத்மாக்கள் உனக்கு மன்னிப்பு தராது”
“ஆத்மாவப் பத்தி சாருக்கு ஒன்னும் தெரியல. மரணம்னு சொல்றது கண்ணுக்குத் தெரியற உடம்போட அழிவு. தெரியாத சூக்ஷம தேகத்துக்கு எப்பவும் அழிவில்ல. அது இப்பவும் இங்கயும் இருக்கு. அது இன்னொரு உடம்பத் தேடி பயணம் செஞ்சுகிட்டு இருக்கு. புதுப்புது அனுபவங்களாளத் தேடி ஆத்மா ஒன்னுலேர்ந்து மத்தொன்னுக்கு போய்க்கிட்டிருக்கு.
ஆத்மா ஒரு பொருள் இல்ல. ஒரு நிலை. ஞானநிலை. அதாவது போதநிலை. இதத்தான் சைதன்யம்னு சொல்றது. ஆத்மா இரண்டு விதமா இருக்கு. ஜீவாத்மா. அதாவது மனுஷ ஆத்மா. இன்னொன்னு பரமாத்மா. இந்தப் பரமாத்மாவோட ஒரு அம்சம்தான் ஜீவாத்மா. ஜீவாத்மாவ பரமாத்மாவுல இரண்டறக் கலக்கச் செய்யற செயல்கள்தான் வாழ்க்கையில் ஏற்படவேண்டியது. இதுக்கு அப்புறம் இதயெல்லாம் எப்படி சார் நான் உங்களுக்குப் புரியவைக்கறது?”
“அடேய். நீ என்னக் குழப்பாதடா. ஆன்மீக விஷயத்த எல்லாம் கொஞ்சம் மூட்டக் கட்டி வச்சுட்டு நீ நியூஸ் பேப்பரப் பாரு. “வெடிவிபத்துக்குப் பின்னால் மூவர் குழு. மத பண்டிதனான சைய்து அஹமது அன்சாரியும் மகள் நஸ்ரின் அஹமது அன்சாரியும் இன்னுமொரு நடுத்தர வயதுக்காரனும் தீவிரவாதக் குழுவின் ரகசிய உளவாளிகளாக இதன் பின்னால் இருந்து செயல்பட்டனர். இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். தப்பித்து ஓடிப்போன ஆள் யார்? அந்த ஆள் எங்கே?”. வெடிவிபத்து நடந்த அன்று வெளிவந்த பேப்பர்கள் ஆத்மாராமனுடைய கையில் இருந்து நடுங்கின.
“என்னடா? மறுபடி வாய் அடைச்சிடுச்சா?”. பேப்பர்களைத் திரும்ப வாங்கிக்கொண்டு பரசுராமன் பிள்ளை கேட்டார்.
“சுத்த முட்டாள்தனம். பரம சாத்மீகனான அந்த மனுஷனையும் அவரோட மகளையும் தீவிரவாதிங்களா.. வேவுக்காரங்களாக்கியது யாரோ செஞ்ச சதிவேல. சத்தியமாச் சொன்னா மதத்தோட பேர்ல நடக்கற தீவிரவாத செயலுங்கள எப்பவும் எதிர்க்கறவரு அவரு. அவர் டெல்லிக்குப் போனது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துல நஸ்ரினோட அட்மிஷன் சம்பந்தமா. வர்க்கலாலேர்ந்து காயங்குளம் வரைக்கும் நான் அவுங்களோட பயணம் செஞ்சேன். இதுதான் சத்தியம்” ஆத்மாராமன் சொல்லி முடித்தான்.
“வெரி குட்”. பரசுராமன் பிள்ளை புலகாங்கிதம் அடைந்தார்.
“அப்படி வா வழிக்கு. அப்ப ஒன்னு உறுதியாத் தெரியுது. அந்த மூணாவது ஆள் நீதான். ஈச்வரா. என்னோட உழைப்பு ஒன்னும் வீணாப் போகல. அந்த மத பண்டிதனுக்கும் உனக்கும் என்ன உறவு?”
“வெறும் தோழமை. நட்பு. ஆன்மக்கலையில் பயில்றவங்களோட ஒரு ஆத்மார்த்தமான சொந்த பந்தம். இப்படியே சூபிஸத்தப் பத்தி ஒரு விவாதத்துக்கு இடையில நான் காயங்குளத்துல இறங்கினேன். அங்கதான் என்னோட கற்றலும் முடிவுக்கு வந்திச்சு. அதுக்கப்புறம் டெல்லி வரைக்கும் போன டிரெயின்ல என்ன நடந்ததுன்னு எனக்கொன்னும் தெரியாது. நான் புரிஞ்சுகிட்டவரைக்கும் அவுங்க தீவிரவாதிங்க இல்ல. முழுக்க முழுக்க தேசப்பற்று உள்ளவங்க. சார் எனக்கு செஞ்ச எல்லா உதவிக்கும் என்னோட நன்றி. குளிக்கவச்சதுக்கு. ஷேவ் செஞ்சதுக்கு. சாப்பாட்டயும் துணியயும் வாங்கித்தந்து ஊருக்குக் கூட்டிகிட்டு வந்ததுக்கு. மனைவியயும் குழந்தைங்களயும் ஒரு தடவ பாக்கணும்னு எண்ணம் இருக்கு. வீட்டுக்குப் போகறதுக்கு உரிய வழி எனக்குத் தெரியும். வழிச்செலவுக்கு காசு இல்ல. ம். அது பரவாயில்ல. டிரெயின் இருக்கு இல்ல? நம்ம சொந்த திருட்டு வண்டி”. ஆத்மாராமன் அங்கிருந்து தப்பிப்போக முயன்றான்.
“அங்கயே நில்லுடா. ஒரு அடி முன்னால வச்சா கொன்னுடுவேன் உன்ன...” பரசுராமன் பிள்ளை ஆத்மாராமனுக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டினார்.
சிறிதுநேரம் தயங்கி நின்றான். என்றாலும் ஆத்மாராமன் மனதிற்குள் ஏதோ உறுதி செய்துகொண்டது போல திரும்பி வந்து பரசுராமன் பிள்ளைக்கு முன்னால் உட்கார்ந்தான்.
“இதோ. இதப் பாத்தியா? மொபைல் போன்”. பரசுராமன் பிள்ளை அடுத்த துடுப்புச் சீட்டை நீட்டினார்.
“எந்த போன்?” ஆத்மாராமன் பதட்டத்துடன் கேட்டான்.
“உன்ன சிக்கவைக்க இது ஒன்னே போதும். நஸ்ரின் அஹமது அன்சாரியோட போன். இதுல கேமரா காப்பி செஞ்சது முழுக்க உன்னோட படங்கதானே? எங்கடா அந்தத் தொப்பி?”
“எந்தத் தொப்பி?”. அவன் துணுக்குற்று நின்றான்.
“அந்த மதப்பண்டிதனோட சூடு பிடிச்ச சிந்தனைங்களால பலமடைஞ்ச தொப்பி? எதுக்காகடா அந்த ஆள் அத கழட்டி உன்னோட தலயில மாட்டிவிட்டது?”
“நான் கேட்டு வாங்கினேன் சார். அந்த மகாத்மாவோட தொப்பிய மாட்டிக்கிட்டுதான் நான் தியானம் செஞ்சேன். இதோ. இதுதான் அந்தத் தொப்பி”. பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு உரோமத் தொப்பியை எடுத்து நீட்டி அவன் லேசாக சிரித்துக்கொண்டு நின்றான்.
“சரி. யாரோட பையில குண்ட மறச்சு வச்சிருந்தீங்க?”
“எனக்குத் தெரியாது சார். அந்த வெடிவிபத்தோட எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்ல”
“தொடர்பிருக்குன்னு நான் நிரூபிச்சுக்கறேன். வெறும் ஒரு தோணல்லதான் நான் அன்னிக்கு டெல்லியில இத எல்லாம் பிடிச்சேன். அதனாலதான் விபத்து நடந்த இடத்திலேர்ந்து இந்த போனும் அதுக்குப் பின்னால நீம் எனக்குக் கிடைச்சீங்க. எது எப்படி இருந்தாலும் என்னோட உழைப்பு பாழாப்போகல. நீ அன்னிக்கு காயங்குளத்துல இறங்கினேனுதானே சொன்ன? சரியா ஒரு வாரம் ஆனதுக்கு அப்பறம் அந்த விபத்து நடந்த இடத்துக்கு நீ எப்படி சரியா வந்து சேந்த?. அங்க நீ ஏன் எதுக்காகப் போன?”
“சார். அது.. பிரயாகையில கும்பமேலாவுல கலந்துக்கறதுக்காக..”
“அந்நிய மதத்தவனான உனக்கு கும்பமேலாவுல என்ன வேல?” பரசுராமன் பிள்ளை விடுவதாக இல்லை.
“அந்நிய மதத்தவன்னு யாரு சொன்னது?”
“அப்ப தொழுக சமயத்துல போடற இந்த தொப்பி?”
“தொப்பிக்கு சாதியும் மதமும் உண்டா சார்?” ஆத்மாராமனுடைய மறுப்பு குரல் பரசுராமன் பிள்ளைக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
“எங்களோட வேதத்தயும் புராணத்தயும் உபநிடதங்களயும் மேலோட்டமாப் படிச்சிட்டு ஆத்மாராமன்னு திருட்டுப் பேர வச்சுகிட்டு நீ நாட்டுல தீவிரவாத வேல செய்யறயில்ல?” பரசுராமன் பிள்ளை எழுந்து நின்று முஷ்டியை மடக்கி மேசை மீது வைத்துக்கொண்டு கேட்டார்.
ஆத்மாராமனும் எழுந்தான். “அப்படின்னா அப்படிதான்” இனிம எல்லாம் சாரோட இஷ்டம் போல நடக்கட்டும். சார் சரித்திரத்துல இடம் பிடிக்கறத நான் தடுக்கல. அது என்னால இல்லாமப் போகவேணாம். அன்னிக்கு நான் காயங்குளத்துல இறங்கல. என்னோட பையிலதான் குண்டு இருந்திச்சு. எட்டாம் நம்பர் கம்பார்ட்மெண்ட்டுல குண்டு வச்சுட்டு நான் அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்குப் போயிட்டேன்.
நான் தீவிரவாதிதான் சார். கொடூரமான பயங்கரவாதி. என்னைக் கைது செய்யுங்க. நான் இதோ என்னோட இந்த பௌதீக உடம்ப உங்க முன்னால சமர்ப்பிக்கறேன். குறிப்பாக் கவனிங்க. இது ஒரு சமர்ப்பணம். இத ஒரு தியாகமா தப்பாப் புரிஞ்சுக்காதீங்க. தியாகம் செய்யறதுக்கு நான் யேசு கிறிஸ்து ஒன்னும் இல்லயே? நான் சரணடையல. அதி சாகசமான ஒரு மோதல்ல சார் என்னைப் பிடிச்சிருக்கீங்க. இப்படித்தான் நியூஸ் வரணும். அப்படின்னாதான் சாரோட பேரு சரித்திரத்துல இடம்பெறும்”
ஆத்மாராமன் சொன்னதுபோல எல்லாம் நடந்தது. களைப்புடன் சோர்ந்து லாக்கப்பில் போய் விழுந்தான்.
“இது யாரு சார்? என்ன விஷயம்?” சக ஊழியர்கள் பரசுராமன் பிள்ளையைச் சுற்றிக் கூட்டம் கூடினர்.
“ஹும். இவன் ஒரு கொடிய பயங்கரவாதி. டெல்லியில டிரெயின் குண்டு விபத்துல மாஸ்டர் ப்ரயின். நாட்டுக்காக என்னால இத மட்டும்தான் செய்யமுடிஞ்சிச்சு” நெஞ்சம் விரிந்தது என்றாலும் அடக்கம் குறையாமல் பரசுராமன் பிள்ளை சொன்னார்.
“ஐய்யோ சார்! நீங்க இன்னிக்குப் பேப்பர் படிக்கலயா? நேத்து டிவி நியூஸயும் பாக்கலயா? குண்டு வெடிச்ச சம்பவத்துக்குப் பின்னால இருந்தவங்க எல்லாரும் டெல்லியில அரெஸ்ட் ஆயிட்டாங்களே! அயல்நாட்டு தீவிரவாதிங்களோட ஏஜெண்ட்டுங்கதான் அவுங்க” அஸிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் நடந்த உண்மையை வெளிப்படுத்தினார்.
“அடக் கடவுளே!” பரசுராமன் பிள்ளை தலையில் கை வைத்துக்கொண்டு மேலே பார்த்தான்.
“புலி வாலப் பிடிச்ச கதயா ஆயிடுச்சே சிவராமா?”
“அந்த ஆள வெளியில விட்டுடட்டுமா?”
ஏ எஸ் ஐயின் உத்தரவிற்காகக் காத்திருந்தார்.
“அனுப்பவேண்டி வராது. சுமந்துகிட்டுப் போகவேண்டி வரும். ஹெட் கான்ஸ்டபிள் ஜெயராமன் காற்றில் கறுப்புக்கொடி பறப்பதைக் கற்பனையில் கண்டார்.
“என்னது?” நடுக்கத்தின் கோரஸ் முழங்கியது.
“ஆமாம் சார். அந்த ஆளுக்கு நினைவு தப்பிடுச்சு. ஒரு அசைவும் இல்ல. மூக்குல கைய அசைச்சுப் பாத்தேன். மூச்சு இல்ல சார். ஆனா சம்மணம் பொட்டு சுவத்தில சாஞ்ச நிலையிலதான் உடம்பு இருக்கு”
“சிவராமா! அவனோட காதுல ஓங்கி ஒரு அற விடு”
எஸ் ஐ கட்டளையிட்டார். சிவராமன் ஓங்கி அடித்ததும் ஆத்மாராமன் கண் திறந்ததும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.
“நல்ல சூப்பர் அடி. அடிச்ச சார்க்கு நன்றி. நான் நிருதிகல்ப சமாதியாயிட்டேன். என்னை சுயநிலைக்கு திரும்பக் கொண்டு வந்ததுக்கு மறுபடியும் ஒரு தடவ நன்றி. என்னை எப்ப கோர்ட்டுல ஆஜராக்கப் போறீங்க? எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல. நேரம் வர்றப்ப சொன்னாப் போதும். கோர்ட்டுக்குப் போறப்ப மூஞ்சிய மறச்சுக்க ஒரு துண்டு துணி தரணும்”
படுத்தபடியே மயக்கத்தில் நழுவி விழுந்த ஆத்மாராமனுடைய வெறும் பாதங்களை முத்தமிட்டு பரசுராமன் பிள்ளை மெதுவாகச் சொன்னார்.
“மன்னிச்சுக்கணும். எதயும் வேணும்னே செய்யல. எந்த போலீஸ்காரனுக்கும் இந்த மாதிரி அபத்தம் நடக்கும்”
லாக்கப்பில் தீவிரமான ஒரு ஜில்லிப்பு வந்து நிறைந்த போது தொப்பியையும் பேண்ட்டையும் கழட்டி எறிந்து குறைந்த ஆடை உடுத்தியவனாக மாறிய பரசுராமன் பிள்ளை ஆத்மாராமனையும் தோளில் தூக்கிக்கொண்டு அவசரமாக ஸ்டேஷனுடைய படிகளில் இறங்கினார். “டிரெயின்ல ஒரு மீள் பயணம். தலைநகரத்துக்கு...” யாரிடமும் குறிப்பிட்டு சொல்லாமல் அவன் சொன்னான்.
எல்லாவற்றிற்கும் சாட்சியாக ஆனால் பொருள் எதுவும் தெரியாமல் திடுக்கிட்டு நின்ற சிவராமனும் ஜெயராமனும் பரசுராமன் பிள்ளையையேப் பார்த்துக்கொண்டு நின்றனர்.
மற்ற போலீஸ்காரர்கள் முன்னால் அவன் “வெளிப்படுத்தல் புத்தகத்தை” திறந்தான். “பிறந்தவன் சாகத் தொடங்குகிறான். இறந்தவன் வாழத் தொடங்குகிறான். வாழ்க்கை மரணமும், மரணம் வாழ்க்கையுமாகும். உண்மையில் யாரும் வருவதும் இல்லை. போவதும் இல்லை. நிலை நிற்பது பிரம்மம் மட்டுமே. ஜனன மரணங்கள் மாயையின் வெறும் ஜால வித்தைகளே”
“சார் எந்த மாயை! சொல்லுங்க போதும். அவள கஸ்டடியில எடுத்துடலாம்”. சிவராமன் தன் கடமையுணர்வை வெளிப்படுத்தினார்.
பரசுராமன் பிள்ளைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அடேய் மடப்பயலே. நீ கடோபநிதத் படிச்சிருக்கியா? சாந்தோக் உபநிஷத்? அஷ்டா வக்ர கீதா? சிஜ்ஜல சிந்தனம்? இனிம எப்படா நீ இத எல்லாம் படிக்கப்போற?”
பரசுராமன் பிள்ளையும் ஆத்மாராமனும் பார்வையில் இருந்து மறைந்த போது ஹெட் கான்ஸ்டபிள் ஜெயராமனும் மற்ற போலீஸ்காரர்களும் சிவராமனை மொய்த்துக் கொண்டார்கள். உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடக்கிறது?
சிறிய மௌனத்திற்குப் பிறகு சிவராமன் சொன்னான்.
“டெத் கேஸோட எஃப் ஐ ஆர் எழுதறப்ப கவனிங்க. இன்ன இடத்துல இன்ன வீட்டுல இன்னாரோட இத்தன வயசுள்ள மகனாவோ மகளாவோ மனைவியாவோ புருஷனாவோ ஆன இன்ன ஆள் மரணமடைஞ்சாரு. அந்த ஆளோட அதாவது அவரோட பௌதீக உடம்புக்கு நாசம் சம்பவிச்சிருக்கு. ஆத்ம சரீரத்துக்கு ஒன்னும் சம்பவிக்காது. சம்பவிக்கவும் இல்ல. அது இப்பவும் இங்கேயேதான் இருக்கு”
“சார் சொல்றது? திகைப்பின் உச்சத்தில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள் வேறு எதையும் கேட்கத் தோன்றாமல் அசைவற்று நின்றனர்.