திடுக்கிட்டுப் போனேன். டீ கிளாஸைத் திண்ணையில் வைத்து விட்டுப் போனதற்கு ஸ்டெல்லா சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டேன். சர்க்கரை இருப்பதால் மட்டும் இல்லை. க்ளாஸைப் பார்த்தாலே எறும்புகள் வரிவரியாக ஊர்ந்து வருவதைப் பார்க்கலாம். கறுப்பான உடம்பில் முதுகுப் பக்கம் வெள்ளை நிறப்புள்ளிகளுடன் உடையவை. “ஒன்னையும் பாத்துப் படிக்கறதில்ல. இங்கஒவ்வொருத்தனுக்கு இருக்கிற புத்தியை பாத்தா இது எவ்வளவு வேதனையா இருக்கு? வேலயில்லாமப் போயி நேத்தியோட ஒரு மாசமாச்சு” அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். பார்த்துக்கொண்டிருந்த வேலையில் இருந்து வீட்டுக்குப் போகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அதோ. சின்னவன் வருகிறான். காய்ச்சல் என்று சொல்லி ஸ்கூலுக்குப் போகவில்லை. எழுந்து வந்தவுடனேயே சின்னப்பையன் அறிவிப்பு கொடுத்தான். “காய்ச்சலடிக்குது. நெத்தியப் பாரு. சூடிருக்கா அப்பா?” கேட்டான். தூங்கி எழுந்திருக்கும்போது ஏற்படும் சூடுதான் அது என்று எனக்கு புரிந்தது.
அவனைக் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி செய்தால் அழுகையும் ஆர்பாட்டமும் ஆரம்பிக்கும். அது போதும். மூச்சிரைப்பு வரும். அப்புறம் ஸ்டெல்லாவைப் போல ஆகிவிடுவான். போன மாதம் வரை வேலை இருந்தது.
ஐஸ்வரியா டெக்ஸ்டைல்ஸ். அங்குதான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வேலை போய்விட்டது.
ஒரு உச்சி வெய்யில் நேரம்தான் அது நடந்தது. அதுதான் இப்போது சோத்துக்கு லாட்டரி அடிக்க வைக்கிறது. வேலை நாளாக இருந்த போதிலும் வழக்கத்திற்கு மாறான கூட்டம். மதிய சாப்பாடு சாப்பிடுவதற்கே நேரமாகிவிட்டது.
தலை லேசாக வலிக்கத் தொடங்கியது. ஒற்றைத் தலைவலி. சகலத்தையும் நாசமாக்கிவிட்டுதான் அது இடத்தைக் காலி செய்யும். அது அப்படிதான். தலைவலி வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கண்ணில் பாடை கட்டியது போல மங்கல் ஏற்படும். நிறங்கள் எல்லாம் எண்ணிக்கையில் குறையும். எனக்கு மொத்தம் கொஞ்சம் நிறங்கள் மட்டும்தான் தெரியும். அதைத்தவிர வேறென்ன சொல்ல? காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்த நிற்பது மத்தியானம் ஒன்றரைக்குதான் முடிந்தது.
சோறு சாப்பிட ஆரம்பித்தபோதுதான் இரண்டு பெண்கள் கடைக்குள் நுழைந்தார்கள். சிறிய கடையாக இருந்ததால் நானும், ராதா அக்காவும் மட்டும்தான் துணிகளை எடுத்துப்போட இருந்த ஆட்கள்.
தினம் 550 ரூபாய் கிடைக்கும். ராத்திரி எட்டு மணிவரை நிண்று கொண்டே இருக்க வேண்டும். எங்களைத் தவிர, அப்புறம் கடையில் இருப்பது முதலாளி மட்டும்தான். அரவணைக்கும் தோரணையில் கைகளை நீட்டி மலர்த்திப் பிடித்து முத்துமாலையைப் போட்டுக்கொண்டு நிற்கும் யேசுவின் போட்டோவுக்குக் கீழே ஒரு துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் முதலாளி உட்கார்ந்திருப்பார்.
காலை பத்தரைக்கு டீ கொண்டு வந்து கொடுப்பது நாந்தான். கடையில் நல்ல கூட்டம் இருந்தால் மட்டும் ஹோட்டலுக்குப் போன் செய்து முதலாளி டீயை வரவழைப்பார். நான் வெறுமனே எந்த உணர்ச்சியும் இல்லாமல் யேசுவைப் பார்த்தேன். சுவர் நிறைய அலமாரிகள். பெண்களுக்கு மட்டுமே உள்ள அந்த கடைக்கு முதலாளியையும், என்னையும் தவிர ஆண்கள் அபூர்வமாகவே வருவார்கள். வந்தால் ஐந்து நிமிடத்துக்குள்ளேயே துணியை வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி செய்துவிடுவார்கள்.
ராதா அக்கா புருஷனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டிய நாளாக அது இருந்தது. அதனால் அன்றைக்கு கடையில் நான் மட்டுமே தனியாளாக இருந்தேன். அக்காவோடப் புருஷனுக்கு மரம் வெட்டறதுதான் வேலை. வெட்டிக் கொண்டு இருக்கும் போது மரத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டார். சாகவில்லை. அக்கா சொன்னாள். ஒற்றை நிமிடத்தில் இந்த வாழ்க்கைப்பந்து எப்படியெல்லாம் உருண்டோடி விடுகிறது!
ஒரு வாய் டீயைக் குடித்துவிட்டு பையன் அதைத் துப்பினான். முகத்தை சுளித்தான். “என்ன கசப்பு?”
அவன் சொன்னான். “வாழ்க்கையில்லயா? அப்படித்தான் கசக்கும். எப்போதாச்சும் இனிக்கும்” சொல்லிவிட்டு நான் அவனைப் பார்த்து சிரித்தேன்.
“எப்ப அப்பா வாழ்க்கை இனிக்கும்?”. களங்கமில்லாத அவனுடைய முகம் என்னை சுட்டது.
என்னிடம் இருந்து உற்சாகம் திடீரென்று காணாமல் போனது. நான் சிரிக்க முயற்சி செய்தேன்.
“கொஞ்சம் கூட தித்திப்பு இல்லாம சத்தியம் இல்லாம என்ன வாழ்க்கை இது?”
நினைத்துக் கொண்டேன். “அப்பா... க்ளாஸ்ல நந்து ஓடற கார் வாங்கிருக்கான்”
எனக்கு எங்கேயாவது ஓடவேண்டும் போல இருந்தது. அவனை நான் என் பக்கத்தில் கூப்பிட்டு என்னுடன் சேர்த்துப் பிடித்தேன். “குழந்தைதானே?”.
நான் என்னுடைய குழந்தை பருவத்தை ஒரு நிமிடம் ஒரு நடுக்கத்தோடு நினைத்துப் பார்த்தேன்.
ஸ்டெல்லா டீ கப்பை எடுத்துக்கொண்டு போவதாகத் தெரியவில்லை.
எறும்புகள் மொய்க்க ஆரம்பிப்பதை நான் பார்த்தேன். “அவுங்களுக்காச்சும் என்னால ஒரு நன்மை கிடைச்சதே”. வாசலில் கிடந்த நாய் கடித்து பயனற்றுப் போன ஹவாய் செருப்பை நான் வெளியில் எடுத்தேன். ஓடு இளகிப் போன வாசலில் செங்கற்களுக்கும், மேல் பலகைகளுக்கும் ஆணி அடித்தது நாந்தான். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஒரு ஜோடி செருப்பில் ஒரு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. செருப்பு தைக்கும் கத்தியையும், செருப்பையும், பெரிய பையனுடைய ஜியாமெண்டரி பாக்சில் இருந்து காம்பசையும் எடுத்தேன். மாமரத்துக்கடியில் உட்காரலாம். திண்ணையில் வெய்யில் இருந்தது. நாசமாய்ப்போன சூடால் பேண்ட் போடமுடியவில்லை. சாயங்காலம் ஆகிவிட்டால் நடந்து தளர்ந்து போய் பெரியவன் வருவான். ஸ்கூல் பஸ் எதற்கு? நடந்து பழகட்டும். வாழ்க்கையில் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? இருந்ததை வாரித் தின்று திண்ணையில் வந்து பெரியவன் பார்க்கும்போதுதான் அவனுக்கு இது தெரியும்.
முன்பு இதற்காக அவன் எத்தனை ஆசைப்பட்டான்? ஆட்கள் எல்லாரும் மண்ணைத் தொட்டு நடக்கும் காலத்தில் கட்டையை உண்டாக்க செருப்பு எங்கே இருந்து கிடைக்கும்? காம்பசை வைத்து வட்டத்தைப் போட்டேன். இரண்டு வண்டி செய்யவேண்டும். மூத்தவன் என்றும் இளையவன் என்றும் எனக்கென்ன வித்தியாசம்?.
சாயங்காலம் அண்ணன் இங்கே வருவான். நீங்க அப்போ எதையாச்சும் சொல்லி கிறுக்குத்தனம் செய்யாதீங்க. இருக்கற பத்து செண்டோட டாகுமெண்ட் எல்லாம் பேங்குலதான் இருக்குங்கறத மறக்கவேணாம்”. அவள் கோபத்துடன் இருந்தாள். வீசியெறிந்து உடைப்பதற்கு அடுக்களையில் ஒன்றும் இல்லாததால்தான் பேச்சில் கோபத்தைக் காட்டினாள். அப்படியே ஏதாச்சும் இருந்தாலும் உடைத்தால் அதுபோல வேறொன்றை வாங்க இப்போது முடியாது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
“ரெண்டு நாளு கழிஞ்சா இருக்கும் சாமாங்கள் எல்லாம் தீர்ந்துபோய்விடும். கரண்ட் பில் கட்டலைன்னா பீசைப் பிடுங்கிட்டுப் போயிடுவாங்க. வளரவேண்டிய ரெண்டு குழந்தைங்க. எலும்பும் தோலுமாயிட்டாங்க. எந்த கெட்ட நேரத்துலோ...”
அவள் இன்னும் எதையெதையோ முணுமுணுத்தாள். “சரிதான். குழந்தைங்க காதுல விழவேணாம்னு நினைச்சுதான் அவ முணுமுணுத்து கிட்டு இருக்கறா”. டயரை வெட்டி செய்வதை முழங்கால் போட்டு உட்கார்ந்து தாடையில் கையை வைத்து சிறியவன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு என்ன தெரியும்? எத்தனை செதுக்கினாலும் வட்டத்துக்குள் வராமல் போவதுதானே வாழ்க்கை? “ஓ.. ஐஸ்வரியா டெக்ஸ்டைல்ச்ல எப்படி வேலை போச்சுங்கறத நான் இன்னும் உங்ககிட்ட முழுசா சொல்லலையே? ரெண்டு பொண்ணுங்க கடைக்குள்ளாற வந்தாங்க. என்னோட தலையோ சுக்குநூறா உடையற மாதிரி வலிச்சிச்சு. அவுங்க ஒவ்வொரு துணியா அலமாரியில இருந்து
எடுக்கவச்சாங்க. நான் புடவைங்கள ஒவ்வொன்னா மேச மேல விரிச்சேன். சிலதை என்னோட மார்புல போட்டு முந்தானையோட அழக புரியவச்சேன்.
அவுங்க எங்கிட்ட நான் இன்னிக்கு வரைக்கும் பாக்காத கலருங்களக் கேட்க ஆரம்பிச்சாங்க. சத்தியமா எனக்குத் தெரியல. நிறைய காலம் மேஸ்திரியா இருந்த எனக்கு எப்படி நிறங்களப் பத்தி எல்லாம் தெரியும்? ஒரு மணி நேரமாச்சு. நான் தோத்துப் போனேன். அவுங்க சொன்ன கலருங்க எதையும் என்னால கண்டுபிடிக்கமுடியல. கடைசியா அலமாரியோட இன்னொரு மூலையில
அவுங்களோடப் பார்வை போச்சு. எனக்கு அது ரோஸ். அவுங்களுக்கு அது அப்படியில்ல. அந்த கலரோட பேரைக் கூட அப்புறம் என்னால ஞாபகப்படுத்த முடியல. அந்த அளவுக்கு நிறங்களோட அந்நியமானது என்னோட வாழ்க்கை. அவுங்க காட்டின புடவைய வெளியில எடுத்தேன். அவுங்க அதை வாங்கிகிட்டாங்க. எனக்கு நிம்மதியாச்சு. ஒரு மணிநேரம் நின்னதுக்கு புண்ணியம்
கிடைச்சுது இல்லயா? அப்படிதான் நான் நினைச்சுகிட்டேன்.
போகும்போது முதலாளிக்கு காசு கொடுத்த உயரமான பொண்ணு சொன்னா.”வேல தெரிஞ்சவங்கள வைக்கலைன்னா ஒரு தடவை உங்க கடைக்கு வந்தவங்க அப்புறம் இந்த வழியாக்கூட தல வச்சுப் படுக்க மாட்டாங்க”
சாயங்காலம் கூலி தர்றப்ப முதலாளி எந்த உணர்ச்சியயும் வெளியில காட்டாம சொன்னாரு. “நாளையிலேர்ந்து வரவேணாம்”. எதுவும் பேசாமல் கடையை விட்டு வெளியில வந்தேன்.
மழை தூறிக்கிட்டு இருந்திச்சு. நடக்கறப்ப யாரும் பாக்கலைன்னு உறுதியா தெரிஞ்சப்ப நான் சார்லி சாப்லினானேன். அப்பவும் கவருல பொதிஞ்ச ஐநூத்தி அம்பது ரூபா இடுப்புல இருந்திச்சு. எனக்கு முதலாளி மேல கோபம் ஒன்னும் வரல. அந்தப் பொன்னுங்க மேலயும் எனக்குக் கோபம் வரல. அவுங்களுக்கு கலருங்க அத்தனை முக்கியம்”
மேலும் நான்கு துண்டுகள் வெட்டினேன். இனிமேல் இரண்டு 6 வடிவத்தில் காரை தயார் செய்யணும். அதில் ஓட்டை போட்டு குழாய்த்துண்டை சொருகி நுழைக்க வேண்டும். டயர்களுக்கும் ஓட்டை போடவேண்டும். பைப் வழியாக நீளமாக இருக்கும் குச்சியைசொருகவேண்டு. தோப்பில் இருக்கிற மூங்கில் கூட்டத்தில் இருந்து தடிமன் இல்லாத இரண்டு துண்டு வெட்டவேண்டும். வளைக்கும் விதத்தில் இரண்டு ஈர்க்குச்சியை வைத்தால் ஸ்டீரிங் ரெடி.
காலையில் காய்ச்சல் அடிக்கிறது என்று சொன்னவன் வெய்யிலில் நாள் முழுவதும் இருக்கிறான். ஸ்டெல்லா சொல்லிவிட்டுப் போனாள். சாயங்காலம் அவளுடைய அண்ணன் ஜாக்சன் வருகிறான். சேலத்தில் வேலை. டீக்கடை வைத்திருக்கிறான். ஆனால் உண்மை என்னவென்று எனக்கு மட்டும் தெரியும். அவளிடம் சொன்னால் நம்பமாட்டாள். நம்பிக்கையில்லாததிலும் அவள் ஆண்கள்
போலத்தான். கோபம். வரும் வந்தால் அப்புறம் ஒரே ருத்ரதாண்டவம்தான். பார்க்க சகிக்காது.
போன ஞாயிற்றுக்கிழமை அவன் போன் செய்திருந்தான். வேலை போன விஷயத்தை போன ஒருமாதமாக அவள் உடன் பிறந்தவனிடம் சொல்லி சொல்லி பூதாகாரமாக்கியிருப்பாள். சும்மா ஒன்றும் துணிக்கடைக்கு போகவில்லை. கட்டிட வேலை கிடைக்காதபோதுதான் அங்கே போனேன். கடையில் இருந்து வந்த அடுத்த வாரம் ஜோசப் வக்கீல் வீட்டு மதில் கட்டும் வேலை கிடைத்தது. என்பதாயிரத்துக்கு பேசி முடித்தாயிற்று. அடுத்த திஞ்கட்கிழமை வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு நான் வக்கீல் வீட்டுக்குப் போனேன். வரப்பில் அரை பர்லாங் நடக்கவேண்டும். வானம் கண் விழிக்கும் போது வீட்டை விட்டு புறப்பட்டேன். ஒரு டீ குடிக்க மட்டுமே கையில் காசு இருந்தது. மத்தியானத்துக்குச் சாப்பாடு கட்டி எடுத்து வந்திருந்தேன். பத்து மணி டீயைக் குடிக்க ஏதாவது வழி இல்லாமல் போகாது. அடுத்த வீட்டு பைஸலை உதவிக்கு கூடக் கூட்டிக்கொண்டு வந்திருந்தேன். எப்போதும் வேலை வேண்டும் என்று ஒன்றும் அவனுக்குக் கட்டாயம் கிடையாது. மாதச் செலவுக்கு ஒரு தொகையை வீட்டுக்குக் கொடுத்தால் போதும். எல்லாம்
சரியாக நடக்கும். கொஞ்ச நாட்களாக வேலை இல்லாததன் அங்கலாய்ப்பு அவனிடமும் இருக்கிறது என்று நான் ஊகித்தேன். ஊகித்தது சரிதான். ஒரு வாரமாக அவனுடைய பாக்கெட் காலி. மதில் வேலையைப் பார்க்கும்போதே அடுத்த வேலையையும் பிடிக்கவேண்டும். நான் அவனிடம் சொன்னேன். அவன் அதற்கு ஒரு முனகல் மட்டும் பதிலாகக் கொடுத்தான். நாங்கள் போனபோது ஜோசப் வக்கீல் வாசலில் தனியாக நின்றுகொண்டிருந்தார்.
முற்றத்தில் கூட்டம் கூடி நிண்றுகொண்டிருந்த வங்காளிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். “தோட்ட வேலைக்கு வந்திருப்பாங்களாயிருக்கும்” நினைத்துக்கொண்டேன். வக்கீலுக்கு இரண்டு பாக்குத் தோட்டம் இருக்கிறது. வங்காளிகள் என்றால் பாக்கைக் கட்டி சாக்குகளில் போட்டு மூட்டையை வாசல் திண்ணையில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். பிறகு அதையெல்லாம் காய வைத்து விற்கவோ அல்லது பழுத்த பிறகு கடைக்குக் கொண்டுபோய் கொடுக்கவோ செய்யலாம். காயவைத்துக் கொடுத்தால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். இதற்கெல்லாம் அவருக்கு எங்கிருந்து நேரம் இருக்கிறது? வடக்கு பாகத்தில் அரை மதில்தான் கட்டவேண்டியது. வீடு இருக்கும் தோட்டத்தின் சுற்று மதில் செண்ட்ரல் ஜெயில் மதில் மாதிரி உயர்த்தி முன்பே கட்டியிருந்தார்.
“சார்லி.. இவுங்க எழுபதாயிரத்துக்கு வேலைய முடிச்சுடறதா சொல்றாங்க. அத விட குறைவா உன்னால செய்யமுடியும்னா செய்”. கனமான அந்த சொற்கள் கேட்டு நான் உருக்குலைந்துபோனேன். “எப்படி கட்டுப்படியாகும்? சிமெட்டோட விலை நாளுக்குநாள் உசந்துகிட்டே போகுது”. எதுவும் சொல்லாமல் வெளியில் வந்தேன்.
பைஸல் முன்னால் நடந்தான். சக்கரங்களுக்கு ஓட்டை போட்டேன். எல்லாவற்றிலும் ஓட்டை விழுந்தது. இனிமேல் அடிப்பாகத்தை உருவாக்குவதுதான் வேலை. நீளமாக இருந்த குச்சியை
எடுத்து ஒரு முனையில் சக்கரத்தை நுழைத்து ஏற்றிவிட்டேன். அதனுடைய இன்னொரு பாகத்திலும் சக்கரத்தைப் பொருத்தினேன். இனிமேல் தேவை மூங்கில் தடி மட்டும்தான். செய்து வைத்ததைப் பார்த்துக் கொள்ள பையனிடம் சொல்லிவிட்டு தோப்புக்குள் நடந்தேன்.
சகிக்கமுடியாத வெய்யில். தோல் உரிந்துபோயிவிடும் போலிருந்தது. தலை சுற்றியது. கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. சர்க்கரைநோயின் கேடு. இல்லாவிட்டால் இப்படி ஒரு தாகம் எடுக்குமா? சூறைக்காற்று அவலட்சணமாக வீசியது. “அவளோட அண்ணன் வர்றப்ப நானும் அவன் கூடப் போகணும்ங்கற பிடிவாதத்துல அவ இருந்தா. வாரத்துல ஒரு நா வேல கிடைச்சாலும் எப்படியாச்சும் பிடிச்சு நிக்கணும்”
வாழைமரத்தில் உட்கார்ந்து காக்கை கரைந்துகொண்டிருந்தது. “எதுக்காகக் கத்துதோ? அத ஒண்ணயும் என்னால தடுத்து நிறுத்தமுடியாது”. காடு வந்தது. கார் செய்ய சரியா இரண்டு ஒல்லியான குச்சிகளை வெட்டினேன். ஸ்டீயரிங் செய்ய பொருத்தமா குச்சியும் கிடைத்தது. வியர்த்து ஓடிக்கொண்டிருந்தது. காற்றும் இல்லை. இருந்தால் மட்டும் என்ன புண்ணியம்? மனதின் சூட்டை காற்றால் குளிரவைக்க முடியுமா? தூசைக் கிளப்பிவிட்டு ஆறுதலாக ஒரு லேசான காற்று கூட வீசவில்லை. அது என்னுடைய அதிர்ஷ்டம். குற்றம் சொல்லி பயன் இல்லை. மழை வேண்டுபவனுக்கு வெய்யிலையும், வெய்யில் வேண்டுபவனுக்கு பனியையும் கொடுத்து தெய்வம் என்கிற இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கிற வாள் மனிதர்களை சோதிக்கிறதே? வேகவேகமாக நடந்தேன். பெரியவனுக்குதான் ஆச்சரியமாக இருக்கும். இப்படி ஒன்றை செய்வேன் என்று அவன் கனவில் கூட நினைத்திருக்கமாட்டான்.
வீட்டை நெருங்கினேன். சிரிப்பும் விளையாட்டும் வெளியில் கேட்டது.
“கரகரத்த அந்த சத்தம் யாரோடது? மச்சினனோடதா? வாசல்ல விளையாடிகிட்டிருக்கறது பெரியவன் இல்லயா? அவன் என்ன இவ்வளவு சீக்கிரமா ஸ்கூல்லேர்ந்து வந்திருக்கான்? அவனோட கையில என்ன? சரியாத் தெரியல. கொஞ்சநாளா கண்ணு அப்படிதான். தலைவலி வந்ததுனால இப்படி. சின்னவன் கையில இருக்கறது என்ன? அது ஒரு கார் இல்லயா? வெறுமனே எனக்குத் தோணியதா இருக்கும். இல்ல அது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியா?”. நான் முற்றத்தை நோக்கினேன். நாசமாய்ப் போகும் அந்த நாய் சக்கரங்களைக் கடித்து கீறிக்கொண்டிருந்தது. காட்டிலிருந்து கொண்டு வந்த இந்த மூங்கில் தடியை என்ன செய்வது? தோற்றுபோன காவலாள் கையில் இருக்கும் ஈட்டியைப் போல அது என்னை முறைத்துப் பார்த்தது.
“தெய்வமே! தோத்துப் போயிட்டேன். இனிம எனக்கெதுக்கு இந்த ஆயுதங்க? இதோ இந்தா. எல்லாத்தயும் கருணையோட ஏத்துக்க. உங்கிட்ட ஒப்படைக்கறேன்”