சமீபத்தில் ஒரு அரசு அலுவலகத்துக்கு சென்ற போது, அங்கு இருந்த ஊழியர்கள் எல்லோரும் ஒரே மாதிரி கறுப்புப் பட்டைகளை அணிந்திருப்பதைப் பார்த்தேன். “எனக்குப் பசிக்கிறது” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பசியின் இலட்சணமேத் தெரியாதவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் எனக்குத் தெரிந்தவர்.
சம்பளம் குறைத்துதான் வாங்குகிறார் என்றாலும் பெரிய அதிகாரி போலதான் அவருடைய நடை உடை இருக்கும். பளபளப்பான ஷூ, மடிப்பு கலையாத இஸ்திரி போட்ட பாப்லின் ஷர்ட், இரட்டைக்கரை போட்ட வேட்டி, தங்க பிரேம் போட்ட கைக்கடிகாரம், அலங்காரத்துக்காக மட்டும் பயன்படுத்தும் மூக்குக் கண்ணாடி. இவை இல்லாமல் ராமப்பணிக்கரை நான் பார்த்ததேயில்லை.
இந்த ஆர்பாட்டமான வெளிப்புறத் தோற்றத்திற்கு செலவிடுவதற்காக அவருக்கு எப்போதும் பசி இருக்கத்தானே செய்யும். அதனால் அவருடன் எனக்கு பொறாமை ஏற்படவில்லை. மாறாக அன்புதான் மேலிட்டது.
ஒரு நாள் அவருடைய வீட்டுக்குப் போனேன். வாடகை வீடு. சிறிய வீடுதான் என்றாலும் பளிச்சென்று துடைத்துவிட்டது போல சுத்தமாக அழகாக இருந்தது அந்த வீடு. வராந்தாவில் இருந்த நாற்காலிகள், மேசை எல்லாம் குஷன் போட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன. முற்றத்தில் நான்கைந்து பூத்தொட்டிகள் இருந்தன. அதற்குப் பக்கத்தில் பூக்கள் அழகாகப் பூக்கும் செடிகளும் இருந்தன. ஆகமொத்தத்தில் சுகமாக வாழ கொடுத்து வைத்த ஒரு அதிர்ஷ்டசாலிதான் அவர்.
“பணிக்கர் சார் இல்லயா?” நான் கேட்டேன்.
வாசலுக்கு வந்த ஒரு பெண் பாதி மறைந்தபடி நின்றுகொண்டு சொன்னாள். “இன்னிக்கு ஆபீஸ் இல்லாததால் சீட்டு விளையாடப் போயிருப்பார்னு நினைக்கறேன்”.
அவள் பணிக்கருடைய மனைவி என்பதை நான் ஊகித்தேன். நான் திரும்பிப்போக ஆரம்பித்த போது அவள் தொடர்ந்தாள்.
“ஒம்பது மணியானப்ப போனது. ஒன்னும் சாப்பிடாமாத்தான் போயிருக்காரு. எந்திரிச்சு வந்தப்ப ஒரு காபி குடிச்சாரு. ஒன்னும் சாப்பிடல. அப்புறம் பல்லத் தேய்ச்சுட்டு வந்தப்பறம் பித்தளப் பாத்திரத்துல காச்சின பால் குடிச்சாரு. உடம்பக் கவனிச்சுக்கறதுல கொஞ்சம் கூட அக்கற இல்ல. பித்தளப் பாத்திரத்துல தண்ணியேக் கலக்காத பாலக் காச்சிக் கொடுத்தா முழுக்கக் குடிக்காம போறவங்க இருக்காங்களா?
நான் கட்டாயப்படுத்தினப்பறம் ரெண்டு முட்ட தோசை சாப்பிட்டாரு. மனுஷங்கதானே? எதுவும் சாப்பிடாம எந்திரிச்சு நடக்கமுடியுமா? நெய்யுல புரட்டி நேந்திரம் பழத்த எடுத்துகிட்டு வர்றப்பவே எந்திரிச்சிட்டாரு. அப்புறம் அதுல ரெண்டு துண்டு மட்டும்தான் சாப்பிட்டாரு. சின்னக் குழந்தைங்க மாதிரிதான் சாப்பிடறது. யாராச்சும் கட்டாயப்படுத்தினாதான் கொஞ்சமாச்சும் எதயாவது சாப்பிடுவாரு.
நான் எண்ணயயும், தன்வந்திரிக் குழம்பயும் காச்சி வச்சது அங்கயேதான் இருக்கு பாருங்க. சீட்டு விளையாடறதுல பைத்தியம். போகறதுக்கு அவசரப்பட்டுகிட்டு தலயில கிரீமத் தடவிகிட்டு முகத்தில ஸ்நோவயும் தடவிகிட்டு பெட்டியில இருக்கற வேட்டி சட்டய எடுத்து போட்டுகிட்டுக் கிளம்பினாரு. அதுலவேற எதப் போட்டுக்கறதுன்னு தேட ஆரம்பிச்சிட்டாரு”.
அவள் பேசுவதை நான் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். “அப்ப நான் ஒரு காரியத்த செய்வேன். எனக்கு நல்லாத் தெரியும். சீட்டு விளையாடப் போனா அங்கயேதான் அவரு உச்சி வெய்யில் நேரம் வரை இருப்பாருன்னு. கஞ்சி குடிக்காமப் போயிட்டாருன்னா? நல்ல ருசியான கஞ்சிய வச்சேன். அரிசிப்பொடியில போட்டது. தொட்டுக்க எதயும் செய்யல. அத செய்யப்போனா கஞ்சிய குடிக்காமலேயே போயிடுவாரு. அஞ்சாறு பப்படம் சுட்டு வச்சேன். அப்புறம் பலாக்காய் வருவல், பலாப்பழ அல்வா எதாச்சும் இருக்கும். வீட்டுலயே இருந்தா அஞ்சாறு துண்டு அதுலேர்ந்து எடுத்து எனக்கு சாப்பிடக் கொடுப்பாரு”. கேட்காமலேயே அது மாதிரி எதையாவது அவள் எனக்கும் தருவாள் என்று நினைத்தேன். கேட்காமலேயே கிடைக்கும் என்று நம்பி நான் மௌனமாக இருந்தேன். ஆனால் ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது.
“பயிறு புழுங்கி வைக்கலைன்னா கஞ்சி பக்கமே திரும்பிப் பாக்கமாட்டாருன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதனால கொஞ்சம் பயிறயும் வேகவச்சுக் கொடுத்தேன். வேட்டி சட்டய செலக்ட் செய்யறதுக்கு ஒதுக்கற நேரத்துல நான் இதெல்லாத்தயும் செஞ்சு முடிச்சுடுவேன். ஒரு உருண்ட வெல்லமும் கொடுத்தேன். வெல்லம்னா சுக்கு போட்டு தயார் செஞ்ச ஸ்பெஷல் உருண்ட. தேங்காப்பூவயும் அதுல சேத்துக் கொடுத்தேன். இதெல்லாம் சாதாரணமானவங்களுக்கு கஞ்சி குடிக்கப் போதாதா என்ன?
ஆனா அவரு கஞ்சி குடிக்கறதப் பாத்தா கஷாயம் குடிக்கற மாதிரி இருக்கும். ஹும். நான் கொஞ்சம் வெண்ணயயும் கஞ்சியோட சேத்துப் போட்டுக் கொடுத்ததுனால குறை ஒன்னும் சொல்லாம குடிச்சிட்டுப் போனாரு. இனி எப்ப வருவாரோ? வர்றதுக்குள்ள நான் சமைக்க வேணாமா? சமையலறையில ஒரு வேலயும் இன்னும் முடியல.
சாம்பாரயும் அவியலயும் செய்யணும். பருப்பயும் வச்சிட்டேன். அதனால கவலயில்ல. பாலை உறயவச்சு கெட்டியாத் தயிரயும் தயார் செஞ்சு வச்சிருக்கேன். தண்ணி ஊத்தாத தயிரு. நாலு வகை ஊறுகா இருக்கு. மட்டன் இப்பதான் வந்திச்சு. அத நெய்யிலப் போட்டு வதக்கணும். ஒரு பொறியலயும் செய்யணும். என்னால இன்னிக்கு வேற ஒன்னையும் செய்யப்போறது இல்ல”.
மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த அவளுடைய பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். “இத்தன வேலயயும் நீங்க தனியாத்தான் செய்யறீங்களா? வேலக்காரங்க யாரும் இல்லயா?”
அவள் தொடர்ந்தாள். “வேலக்காரங்களா! என்ன புண்ணியம்? வீட்டப் பெருக்கி சுத்தப்படுத்தணும்னா நான்தான் போகணும். வீட்ட துடைக்கறப்ப அழுக்குப் போகலைன்னா அத நாந்தான் செய்யணும். வேட்டிய அடிச்சுத் துவைச்சு வெள்ளயாக்கணும்னா நாந்தான் தோய்க்கணும். சோத்துல கல் வராம இருக்கணும்னா நாந்தான் புடைக்கணும். சமையல்ல உப்பு மிளகாய நான் போடலைன்னா தொடவே மாட்டாரு. எல்லாத்துக்கும் நான் வேணும். அப்புறம் எதுக்கு வேலக்காரி? இருந்தாலும் நம்ம ப்ரெஸ்டிஜை காப்பாத்த வேணாமா? அதுக்காக ஒரு பொண்ண வேலைக்கு வச்சிருக்கேன். அவ அவளோட வீட்டுக்குப் போயிருக்கா. இன்னிக்கு நாளைக்கு வந்திடுவா. எதுக்கும் புண்ணியமில்லைன்னாலும் சாப்பிட டிரஸ் போட தூங்க அவளுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்கேன்”. என்னிடம் சொல்ல இன்னமும் நிறைய இருந்தது.
அதையெல்லாம் வாயால் அவளைச் சொல்ல வைக்காமல் கிளம்புவதுதான் நல்லது என்று எனக்குப் பட்டது. “அப்புறமா ஒரு நாள் வரேன்”. சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
நடக்கும்போது நான் நினைத்துப் பார்த்தேன். இவள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால், பணிக்கர் ஒரு பிரபு. பிரபுவாக இருந்தால் கூடப் போதாது. இதையெல்லாம் சாப்பிட்டால்... சாப்பிட்டால் செரிமானக்கோளாறு வராமல் இருக்க அவர் பீம அவதாரமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவள் பொய்ப் பித்தலாட்டக்காரியாக இருக்க வேண்டும். கேட்பவர்களுக்கு கொஞ்சமும் அறிவே இல்லை என்று நினைக்கும் தம்பட்டக்காரியாக இருக்கவேண்டும். இதில் அவள் எதுவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை.
லஞ்சம் வாங்க ஒரு வழியும் இல்லாத ஒரு குறைந்த சம்பளக்காரனுடைய தினசரி வாழ்க்கைக் குறிப்பைத்தான் அவள் விவரித்திருக்கிறாள். வேண்டும் என்றால் பணிக்கரிடமே இதைப் பற்றிக் கேட்டுவிடலாம். “இந்த அளவுக்கு சாப்பிட வழி எப்படி வந்திச்சு? வழி இருந்தாக்கூட வயிறு எங்க இருக்கு? வேணாம். எதுக்காகக் கேக்கணும்” நினைத்துக் கொண்டேன்.
அந்தப் பெண்ணின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதையும் ஏற்பட்டது.
எனக்கும் மனைவின்னு ஒருத்தி இருக்கிறாள். பணிக்கர் வாங்கும் சம்பளம்தான் எனக்கும். இவ்வளவு நேரம் என்னுடைய மனைவிக்கு முன்னால் நான் நின்றுகொண்டிருந்தால் அவள் என்ன சொல்லுவாள் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா?
“கிளம்பறதுக்கு முன்னால ரெண்டு ரூபா கொடுத்துட்டுப் போகணும். கருப்பெட்டிகாரனோட கடன் சொல்லி சொல்லி அவனப் பாக்கறப்ப எனக்கு பயமாயிருக்கு. காலையில சட்னி அரைச்சது வடக்கே இருக்கற வீட்டுலேர்ந்து மிளகாய் கடன் வாங்கித்தான். மத்தியானத்துக்கு ரேஷன்ல அரிசி வாங்கி கஞ்சி வைக்கலாம்னா தொட்டுக்க ஒன்னும் இல்லாம எப்படிக் குடிக்கறது? இதெல்லாம் சமைக்கற எனக்குத்தான் தெரியும். கிணத்துல இருக்கற கயிறு எத்தனத் தடவ பிஞ்சு பொயிடுச்சு தெரியுமா?
அது எப்ப அறுந்து வாளியும் கிணத்துக்குள்ள விழுமோ தெரியல. பல்லு வலிக்கு கொஞ்சம் புகையில திங்கலாம்னா அதுக்கும் வழியில்ல. பல்லு வலி சகிக்கமுடியல”. வேண்டாம். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். என்னுடைய மனைவியின் வாயில் இருந்து இதையெல்லாம் கேட்கும் போது எனக்குக் கோபம் வரும். பதிலுக்கு நான் பேசினால் அது எப்படி இருக்கும் என்று உங்களுக்கு ஊகிக்கமுடியும் இல்லையா?
இப்படி அதிர்ஷ்டக்காரரான ராமப்பணிக்கர் “எனக்குப் பசிக்கிறது” என்று கறுப்புப்பட்டை அணிந்து கொண்டிருக்கிறார். இது வெறும் பொழுதுபோக்கிற்காகவா? அன்று நடந்தது ஒரு எதிர்ப்புப் போராட்டம் என்றும், பசியின் அர்த்தம் மிகப் பெரியது என்றும் எனக்கும் தெரியும். அவருக்கு பசி இருப்பதால் அவர் அந்தப் பட்டையைப் போட்டுக் கொண்டிருக்கவில்லை. அவருடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே அவர் இப்படி செய்தார் என்று மற்ற எல்லோரையும் போல எனக்கும் தோன்றியது. இருந்தாலும் அதற்காக இப்படியா செய்வது?
அவருடைய மனைவி சொன்னதைக் கேட்ட பிறகு, நேராக உண்மை ஆராய அவருடைய வீட்டுக்கு போகவில்லை. அன்றைக்குப் போனதற்கு முன்னாலும் அவருடைய வீட்டுக்கு நான் போனதில்லை. இப்போதும் என்னைப் பார்த்தால் அவள் என்னை ஞாபகத்தில் வைத்திருப்பாள். போய் ஒரு மாதம்தான் ஆகியிருந்தது.
“பசிக்கிறது” பட்டையைப் பார்த்த அன்று சாயுங்காலம் பணிக்கரைப் பார்க்கப் போனேன். அவர் ஆபீசில் இருந்து வீட்டுக்குப் போய் அரை மணி நேரம் கழித்துதான் போனேன். அவருடைய சாயங்கால பலகாரத்துக்கு அவ்வளவு நேரம் தேவைப்படுமே? இல்லாவிட்டாலும் நாங்கள் ஒருவரையொருவர் ஒரு தடவை பார்த்திருக்கிறோமே? இருந்தாலும் எனக்காகக் காத்திருந்தது போல அவர் இருந்தார். நான் போகவில்லை என்றால் அவரே என்னைப் பார்க்கக் கிளம்பி வந்திருப்பார் போலத் தோன்றியது.
வேலை பார்த்து வந்த களைப்பு அவரிடம் இருந்தது. ஆபீசில் இருந்து வந்த பிறகு, அவருடைய மனைவி சொன்னது போல எதையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் பதட்டம். ஒரு சண்டை முடிந்தது போல இருந்தது. “உங்க போராட்டம் எத்தன நாளைக்கு?” நான் கேட்டேன். “அதப் பத்தி இங்க ஒன்னும் பேச வேணாம். சமையலறையில இருக்கற பொம்பள தம்பட்டம் அடிக்கறவ”. அவர் சொல்வது உண்மையென்று எனக்குப் பட்டது.
எந்தவிதத்திலும் இருக்கும் சூழ்நிலையை மோசமாக்கக்கூடாது என்று யாரையோ பார்த்துப் பயப்படுவது போல அவர் தாழ்ந்த குரலில் சொன்னார். இருந்தாலும் எனக்குத் தெளிவாக எதுவும் புரியவில்லை. ஆனால் மனைவியுடைய பெருமைக்கு குந்தகம் ஏற்படுவது போல எதையோ செய்த குற்றத்திற்காக குற்றவாளிக் கூண்டில் அவர் நின்று கொண்டிருந்தார்.
நிலைமையை மோசமாக்கவேண்டாம் என்று நானும் நினைத்தேன். வேறு எதைப் பற்றி எல்லாமோ அவர் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு கோப்பை கறுப்புக்காப்பியை கொண்டுவந்து வைத்துவிட்டு அவள் சொன்னாள். “எல்லாருக்கும் நல்லாத் தெரியட்டும். இங்க கறுப்புக்காப்பிதான் குடிக்கறதுன்னு”. “அதுல என்ன இருக்கு? சாதாரணமா நான் இததான் குடிக்கறேன்”. நான் சொன்னேன்.
“என்ன இருந்தாலும் ஊர் முழுக்க இருக்கற தரித்திரத்த டமாரம் அடிக்கணுமா? எல்லோருக்கும்தான் தரித்திரம் இருக்கு. அதை கொண்டாட்டமா ஆக்கினா அவுங்களுக்குதான் அசிங்கம். இங்க எதுவும் இல்லைன்னாலும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு அது தெரியாம இருக்க நான் எவ்வளவு பாடுபடறேன் தெரியுமா? அதுக்காக நான் எத்தன பொய் சொல்லியிருக்கேன்னும் தெரிஞ்சா...”
பேச்சை முடிக்காமல் உள்ளே போய் “இத யாராச்சும் குத்திகிட்டு நடப்பாங்களா?” என்று கறுப்புப்பட்டையை எடுத்து மேசை மேல் வீசியெறிந்தாள். “இதப் பாத்து ஆபீஸ்ல இருந்தவங்க யாராச்சும் நல்ல காபி எதாச்சும் வாங்கிக் கொடுத்தாங்களா? வெக்கக்கேடு. இதக் குத்த்திகிட்டு ஒரு வாரம் ஆபீசுக்குப் போகலைன்னா என்ன குடியா முழுகிடும்? உடம்பு சரியில்லைன்னு சொல்லி வீட்டுல இருக்கக்கூடாதா இந்த மனுஷன்?”
அதுவரை எதையும் கவனிக்காமல் இருந்த பணிக்கர் சொன்னார். “போதும் நிறுத்து. இதெல்லாம் உனக்குப் புரியற விஷயம் இல்ல. உண்மய சொன்னதா குத்தம்?”.
“பொய் சொல்லியே ஆகணும்னா?”. நான் சொன்னேன். “எல்லாம் வெத்துவேஷம். இதனால ஏதாச்சும் நல்லது நடந்திருக்கா?”. அவர் கேட்டார்.
சிறிதுநேரம் அமைதி. பிறகு அவள் தோல்வியை ஒத்துக் கொண்டவள் போல சொன்னாள். “கல்யாணமாயிட்டு வந்தப்ப அம்மா எங்கிட்ட சொல்லி அனுப்பினாங்க. அசலு ஊர்க்காரரு அவரு. சம்பளம் ரொம்பக் குறைவுதான். ராமன கஷ்டப்படுத்தாதே. நம்மளோட தரித்திரத்த யாருக்கும் தெரியாமப் பாத்துக்க. இதச் சொல்லித்தான்...
புகுந்த வீட்டுக்கு நான் கிளம்பறப்ப அம்மா சொன்ன ஒரே அட்வைஸ்”.