தோற்பையில் இருந்து லேசான எடை மட்டுமே உடைய பர்ஸை எடுத்து பாக்கெட்டில் வைத்தேன். போனைத் தேடி எடுத்து இரண்டு தடவை நேரம் பார்த்தேன். நேரம் நடு ராத்திரியைத் தாண்டியிருதது. முன்னால் அதோ பூத்துக் குலுங்கும் ஒருன் பூ மரம். இதுவரைக்கும் பகல் நேரத்தில் பார்க்காத ஒன்று. வலது பக்கத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குச் செல்லும் நுழைவாயில். ஆகாயத்தில் எண்ணிப் பொறுக்கிவிடக் கூடிய அளவுக்கு நாலோ ஐந்தோ நட்சத்திரங்கள். அவற்றிற்கு வெள்ளி நாணயங்களின் மினுமினுப்பு.
சுற்றுமுற்றும் பார்த்து இதையெல்லாம் உறுதி செய்து முடித்தபோது, “வருவது வரட்டும். நடக்கலாம்” என்று தீர்மானித்தேன். இல்லாவிட்டாலும் ராத்திரி இரண்டரை மணிக்கு தெருவில் பாதுகாப்பாக கனவு காண சுதந்திரம் ஒன்றும் இல்லையே? மூன்று நாட்களாக மாறி மாறிப் போட்டுக்கொண்ட இரண்டு ஜோடி உடைகளே பையில் இருந்த பாரம். ஒரு வழிப்பறிக்காரனுக்கு அது ஒளித்து வைத்துக் கடத்தக் கூடிய தங்கமாகலாம். ஒரு நாய்க் கூட்டத்துக்கு பை இல்லை மனிதந்தான் முக்கியம்.
“ஊ” என்று உரத்த சத்தத்துடன் ஒரு நரைத்துப்போன சூப்பர் பாஸ்ட் டிரெயின் பத்து மணிக்கு திருச்சூரை விட்டுக் கிளம்பும் போது, வழியில் வேறு தடங்கல்கள் எதுவும் இல்லையென்றால் பொழுது புலரும் முன்பு மூன்று மணிக்கெல்லாம் நான் இறங்கவேண்டிய இடத்தில் இறங்கி விடலாம். அப்படித்தான் வண்டியின் வளையத்தைப் பிடிக்க இருந்த குட்டை மனிதன் சொன்னான். ஐந்தாவது வரிசையில் ஒரு சீட்டை ஏற்பாடு செய்து வைத்திருந்தது தூக்கத்திற்கு எந்த குந்தகமும் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையால்தான்.
ராத்திரி நேரத்தில் முன்பும் இந்த ஸ்டாப்பில் வந்து இறங்கியதுண்டு. அப்போதெல்லாம் உறுதியாக ஒன்றிரண்டு ஆட்டோ ரிக்ஷாக்கள் இருக்கும். அதில் ஒரு ஆள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்வான். பயணி சொல்லும் தூரம் எதுவாக இருந்தாலும் அவனுக்கு அப்போது அதெல்லாம் ஒன்றுதான். நான் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.
இனி இப்போது எந்த நேரமும் நாய்களுடைய ஒரு படை பாய்ந்து வரலாம். பகல் வெளிச்சத்தில் மறைந்து வாழும் போராளிகளைப் போல பார்த்தும் பதுங்கியும் நடந்து கொள்பவை. ஒரு கைவீச்சில் நூறு காத தூரம் பாய்ந்து தாவி ஓட பார்ப்பவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாகப் பாய்ந்து வருவார்கள். ராத்திரியின் கனமான தொடையில் அதிகாரத்தோடு பற்றிப் பிடித்து அவை கடிக்கும். சர்வாதிகாரிகளின் அதிகாரத்தோடு குரைக்கும். சிக்கியவர்களின் முக்கல் முனகலில் மனிதனுடைய கையாலாகாத்தனத்தைக் கோர்த்து சடசடவென்று நடுங்க வைக்கும்.
அப்போது பின்னால் யாரோ இருப்பதாக எனக்குத் தோன்றியது. “என்ன? பயந்து போயிட்டீங்களா?” ஆபத்தான ஒரு குற்றம் செய்பவனோடு கேட்பது போலத்தான் அந்த முதல் கேள்வி இருந்தது. “ஏய்...இல்ல”. இரண்டரை மணியின் மர்மமான பொழுதில் பயமும், லேசான குளிரும் சேர்ந்து முகத்தசைகளை பிடித்து இழுத்தது, எழுபது வயதைத் தாண்டிய ஒரு ஆள்.
“சாதாரணமா இப்படி ராத்திரி வந்து இறங்கினா நடந்துதான் போவீங்களா?” அந்த ஆள் அதிகாரத்தோடு அடுத்த கேள்வியைக் கேட்டான்.
எல்லா திகில் கதைகளிலும் மறைந்துகொண்டிருக்கும் கூர்மையான ஒரு கொலைகாரன் இப்படித்தான் பேச ஆரம்பிப்பான். எளியவனிலும் எளியவனாக... பணிவுள்ளவர்களுக்கெல்லாம் பணிவுள்ளவனாக... நான் அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோக்கினேன். இனி இந்த மனிதன் எந்த வளைவில் வைத்து தாக்கப் போகிறான்? ஒரு கொலைகாரனுக்கு இருப்பது போன்ற கனமான கொஞ்சம் கூட மிருதுத்தன்மை இல்லாத கரடுமுரடான உள்ளங்கைகள்.
தூக்கம் கலைந்து போன ராத்திரிகளில் கிழக்குப் பக்கம் இருக்கும் பெரிய ஜன்னல்களைத் திறந்துவிட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, சும்மா தோன்றுவதுண்டு. ராத்திரியுடைய மஞ்சள் கறை பிடித்த பற்களை வெளிச்சத்துண்டுகளைக் கொண்டு அழுத்தித் தேய்க்கிறது விடிகாலைப்பொழுது. அப்படி இருக்கும் ஒரு விடிகாலை நேரத்தில் இந்த ஆள் எங்கே போகிறான்? அவன் பழக்கத்தால் இடைவெளியைக் குறைத்து என்னுடனேயே நடக்க ஆரம்பித்தான்.
“ராத்திரிப் பயணங்க உங்களுக்கு புதுசு போல இருக்கு”. அவன் என்னை பயத்தின் படுகுழியில் தள்ளிவிட்டபடி என்னிடம் அடுத்த கேள்வியைக் கேட்டான். ஒரு ஆளுடைய சலனங்களில் இருந்து நுணுக்கமாக அந்த ஆளுடைய வாழ்க்கையை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களே கைதேர்ந்த கொலைகாரர்கள். கொள்ளைக்காரர்களும் அப்படித்தான். நான் உறுதியாக நம்பினேன்.
நினைவுகளில் இருந்து மீண்டு அந்த ஆள் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன்.
“அப்பப்ப வர்றது உண்டு. அப்ப எல்லாம் இங்க ஆட்டோரிக்சா கிடைக்கும். இந்த ஆட்டோ ஸ்டாண்டு இந்த மாதிரி காலியாக் கிடந்தது இல்ல”. இந்த உலகத்தில் மிக அதிக நிராசையுடைய மனிதர்கள் ராத்திரி வண்டிகளில் பயணம் செய்பவர்கள் என்று எனக்கு அப்போது தோன்றியது. “கொரோனா கொள்ளைநோய் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஆட்டோ ரிக்ஷாகாரங்களோட பிரச்சனை எல்லாம் தெரிஞ்சதுதானே?”. ஒரு வீழ்ச்சியை மற்றொரு வீழ்ச்சியால் தந்திரமாக கடந்து போகவேண்டும் என்ற பதட்டத்துடன் நான் சொன்னேன்.
“ஒரு ஆளுக்காச்சும்...” அந்த ஆளுக்கு நான் சொன்னது பிடித்திருந்தது போல “ம்...ம்” என்று முனகிக் கொண்டு குலுங்கி குலுங்கிச் சிரித்தான். நான் கண்டு கொண்டிருந்த அதி அற்புதமான ஏதோ ஒரு நாடகத்தின் கதாபாத்திரத்தின் முக பாவம் அப்போது அவனுக்கு இருந்தது. அவனுடைய முகம் அப்போது அதி கற்பனை நிறைந்த நான் கண்ட நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் முக பாவம் இருந்தது.
“இதோ பாரு. அப்படி ஒரு ராத்திரியிலும் அதிர்ஷ்டத்த சோதிச்சுப் பார்க்க முயற்சி செய்யாதே. ஆபத்துக்களுக்கு வழி வகுக்கும் என்று தெரியும் சந்தர்ப்பங்கள்ல அந்த மாதிரி செய்யக்கூடாது. தாமதமில்லாம எல்லாம் இருண்டு போகலாம்னு நிச்சயமாத் தெரியறப்ப அந்த நிமிஷம்தான் முக்கியம். அப்பக் கொஞ்சமாச்சும் வெளிச்சம் உண்டாகும்” அவன் சொன்னான். மனதிற்குள் ஒரு உற்சாகம் ஊக்கத்துடன் பீறிட்டு உடல் முழுவதும் பரவுவது போலத் தோன்றியது.
அவன் வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். சதி செய்து கொலை செய்யவோ, இல்லை மிரட்டி திருடவோ திட்டம் போடும் ஒரு கொலைகாரன் இப்படித்தான் நவீன காலத்து மோட்டிவேட்டர் மாதிரி வாழ்க்கைத் தத்துவங்கள் சொல்வானா? நான் சும்மா மூக்கைச் சொறிந்து கொண்டேன். இப்போது நாங்கள் ஒன்றாக நடக்க ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. அவனுடைய செருப்பு எனக்கு பலதையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.
எங்கே போகிறான் என்று சொல்லாமல் அவன் என்னுடன் நடந்து கொன்டிருந்தான். நிசப்தத்தின் விரலில் சொடுக்கு போட்டுஅவன் மறுபடியும் பேச ஆரம்பித்தான். “வண்டிய விட்டு இறங்கி நீங்க பதற ஆரம்பிச்சவுடனேயே எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு”.
“அடக் கடவுளே. இது அதுதான்” என்று உறுதி செய்துகொண்டு நான் காரணம் எதுவும் இல்லாமல் முதுகில் இருந்த பையை லேசாக அசைத்தேன்.
“இந்த நாய்ங்களப் பாத்தாதான் எனக்குப் பயம். அதனாலதான் ஆட்டோங்க ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சப்ப...”
“ஹக்ஹக்ஹக்ஹக்ஹா” நிசப்தத்துக்கு ஒரு அலாரம் கொடுத்த மாதிரி அவன் உரத்த குரலில் பெரிதாக சிரித்தான். ஏய். மெல்ல. நாய்ங்கள எழுப்பி விட்டுடாதீங்க”. நான் இருட்டின் ஜாக்கிரதையோடு ஒரு இமோஜியை அனுப்பினேன்.
“நாய்ங்கள இல்ல. இந்த பூமியில உசிரோட இருக்கற மனுஷங்களப் பாத்து மட்டும் தான் பயப்படணும்”. அவன் உயரத்தில் இருந்த வானத்தைப் பார்த்தான். “மனுஷன்”. எத்தனையோ நாட்களுக்கு அப்புறம் நான் அந்த வார்த்தையை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னேன். மறுபடியும் அவன் மர்ம வாசனையுள்ள ஒரு கதாபாத்திரத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறானோ என்ற பயம் உள்ளுக்குள் வளர்ந்து பெரிதாகி என்னைக் குத்த ஆரம்பித்தது.
மலை போல குப்பைகள் குவிந்து கிடந்த ஒரு இடத்தின் வழியாகத்தான் நாங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தோம். அவன் தொடர்ந்தான். “நீங்க வந்து இறங்கிய வண்டிக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்த ஒரு சூப்பர் பாஸ்ட் வண்டியிலதான் நான் வந்தேன். என்னை ஒரு நாயும் ஒன்னும் செய்யறது இல்ல. முன்னாலயே நான் சொன்னேன் இல்லயா? பயப்படணும்னா மனுஷங்களப் பாத்து மட்டும் பயந்தாப் போதும்”
அவன் அப்போதும் நேரம் கெட்ட நேரத்தில் சிரிப்பது போல சிரித்தான். அதுவும் சத்தம் போட்டு... மறுபடியும் மனுஷன். இந்த தடவை நான் அந்த வார்த்தையை இரண்டு மூன்று தடவை இருட்டை நோக்கி விரட்டிவிட்டேன். வெளுக்காத ஒரு செப்புப் பாத்திரம் மாதிரி அது வானத்தில் ஒரு பிறை நிலா போல ஜொலித்துக் கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு உயரமான மதிலுக்குப் பின்பக்கத்தில் இருந்து நீல நிறக் கண்களுடன் ஒரு ஜீவி எங்களுக்கு முன்னால் பாய்ந்தது. அதைப் பின்தொடர்ந்து ஒரு பூனையும். “அய்யோ!”. நடுங்கிப்போன நான் அவனுடைய கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன். முன்னால் பாய்ந்து வந்தது ஒரு மரநாய். நீலக் கண்களோடு அது எங்களை உற்றுப் பார்த்தது. என்னுடைய உடல் வெட்டி வெட்டி இழுத்தது. நடுங்கியது.
அவனுடைய கைகளை நான் மறுபடியும் இறுக்கப் பிடித்தேன்.
அந்த விரல்களில் இருந்து ஒரு சூடு என்னுடைய தலைக்குப் படர்ந்து ஏறியது. வாலை ஆட்டிக் கொண்டு நின்ற அந்த பூனை மர நாயை மட்டுமேப் பார்த்தது. பிரேதமானாலும் பூதமானாலும் அப்படியும் இல்லை பெரிய ஒரு ஆள் மாறாட்டக்காரனாக இருந்தாலும் ரூபம் கொண்டு ஆறுதல் தரும் ஒரு மனுஷனாக அவன் அப்போது எனக்குத் தெரிந்தான்.
“பகல் நேரத்துல நெரிசலான இந்த ரோடுல ஒரு மர நாயக் கற்பனை செஞ்சு பாக்கமுடியுமா?” நான் விரும்பாத போதே அவன் அப்போது என்னிடம் இருந்து விரல்களை விடுவித்துக் கொண்டான்.
“நல்லாப் புரிஞ்சுக்க. நாம எவ்வளவுதான் விரட்டி விரட்டி அடிச்சாலும் இந்த பிராணிங்க எல்லாம் இங்கதான் இருக்கும். அவங்க இப்படி நடு ராத்திரியில சுதந்திரத்தோட வருவாங்க. போவாங்க. இவங்களதான் நாம பிரேதம்னும் பிசாசுன்னும் கூப்பிடறோம்”
எதிர்ப்பு காட்ட மர நாய் பந்து போல துருப்பிடித்துக் கிடந்த வாலை உயர்த்தி சீறியது. திரும்பி இன்னொரு குதி குதித்து சாலையைக் கடந்து வேறொரு பக்கம் போனது. விடாமல் வர்க்க வீரியத்தோடு பூனையும் பின் தொடர்ந்து சென்றது. அப்போது எனக்கு அப்பாவுடன் முதல் தடவையாக மியூசியம் பார்க்கப் போன ஞாபகம் வந்தது.
புலியும் சிங்கமும் அன்று கோபத்தில் ஆக்ரோஷத்தோடு இருந்தன. “நீ ஒரு ஆம்பள இல்லயாடா? இப்படிப் பயப்படாத”. அப்பாவுடைய சத்தம் காதில் முழங்கியது. அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு நாங்கள் எதுவும் பேசவில்லை. செருப்பும் ராத்திரியும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன. “வீடு வரைக்கும் நான் வரணுமா?”. அவன் கேட்டான்.
“வேணாம். அடுத்த வளைவு வந்தா வீடு வந்துடும். நான் தனியாப் போயிக்கறேன்”. புராதன காலத்துப் பொருள் போல மறைந்து கொண்டிருந்த ஒரு மைல் கல்லுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு நான் அதைச் சொன்னேன். என்றைக்காவது ஒரு நாள் பார்க்கலாம் என்று அவனிடம் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
அவ்வளவு ஏன்? பெயரைக் கூடக் கேட்கவில்லை. அடுத்த நிமிடம் மறக்க வேண்டிய வாழ்க்கையில் ஒரு ராத்திரிப் பயணத்தில் ஏற்பட்ட நட்பினால் என்ன புண்ணியம்? என்று தோன்றியது.
“இனிம நான் போயிக்கறேன்” என்று சொன்ன வார்த்தைகளில் பதுங்கியிருந்த சுயநலத்தை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்புறம் அந்த ஆள் திரும்பிப் பார்க்கவேயில்லை.
மிஞ்சிப் போனால் மூன்று விளக்குக் கம்ப வெளிச்சங்களைத் தாண்டினால் வீடு வந்துவிடுமே என்ற நிம்மதியில் நான் வழியில் இருந்த இலவ மரத்தின் அடியில் சிறுநீர் கழிக்க நின்றேன். அந்த நேரத்தில் அந்தக் குறுகிய நடுவழியில் தடித்துக் கொழுத்த நான்கைந்து நாய்கள் என்னை எதிர்பார்த்து அங்கே நிற்கும் என்று என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை.