நவநாகரீகத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் சுவாமிஜியுடைய சொற்பொழிவு மொபைல் வழியாகவும் ,வாட்ஸ் ஆப் வழியாகவும் மிதந்து வந்து கொண்டிருந்தது. “மனசாட்சி வேணும். படைச்ச தந்தைக்கு பத்தில ஒன்னு கொடுக்கணும். கருமுட்டை அதாவது சைகோட் உருவாக தந்தையுடைய விந்தணுவும் ஒரு காரணம். அது இல்லாட்டா நீங்க இல்ல. அதுக்காக நீங்க நன்றியோட நடந்துக்கணும். தந்தையத் துன்பப்படுத்தக்கூடாது. பிச்சையெடுக்க வைக்காதீங்க”
அந்தச் சொற்பொழிவில் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மகி என்ற தந்தையையும், சாருலதா என்ற மகளையும் எனக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. மகி என்ற மகேந்திரன் எனக்கு வெறும் ஒரு நண்பன் மட்டும் இல்லை. சகோதரன். உடன் வாழ்ந்தவன். அன்பின் இருப்பிடம். நல்ல ஆலோசகன். இதையெல்லாவற்றையும் தாண்டி இன்னும் வார்த்தையால் விவரிக்க முடியாத வேறு ஏதோ ஒன்றுமாக அவன் இருந்தான்.
முதல்முறையாக அவனை நான் பார்த்தது ஒரு வீடியோ படத்தில் பார்ப்பது போல இப்போதும் என் மனக்கண்ணில் தெளிவாகத் தெரிகிறது. மூடுபனியுடைய அருளால் வயநாடு அப்போதும் பாதி தூக்கத்தில் இருந்தது. குலுங்கிக் கொண்டு நின்ற பஸ்ஸில் இருந்து இறங்கும் போது எனக்குப் பின்னாலேயே இறங்கி மெல்லிய உடலோடு வெளுத்த நிறத்தில் இருந்த அவனைக் கவனித்தேன். தோளில் ஒரு பெரிய பை.
வலது கையில் எதையோப் போட்டு நிரப்பி வைத்திருந்த பெரிய பிளாஸ்டிக் கவர். ஆபீஸ் பைல் போல ஒன்று நெஞ்சுடன் சேர்த்து வைத்து இடது கையில்.
முன்பேத் தீர்மானிக்கப்பட்ட தலைவிதியையோ, பதட்டத்தையோ உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு பனியால் மூடப்பட்டிருந்த வயநாட்டின் நுழைவுவாயிலில் இறங்கிய அவன் சுற்றுமுற்றும் கண்களை ஓடவிட்டு முன்னோக்கி நடக்கும் போது, சுவையூறும் வயநாட்டின் தேநீரின் ருசியை நான் மெதுவாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். தயக்கத்துடன் என்னை நெருங்கி வந்த அவன் “இங்க எங்கயாச்சும் ஒரு ரூம் எடுக்கற மாதிரி ஏதாச்சும் லாட்ஜ் இருக்கா?” என்று கேட்டான். அதில் இருந்து அவன் இந்த ஊர்க்காரன் இல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
“எங்கேர்ந்து வர்றீங்க?”
“கோட்டயம்”
“இங்க?”. சிவில் சப்ளை ஆபீசில் புது அப்பாயிண்ட்மெண்ட். ஆபீஸ் இங்கேர்ந்து கிட்டக்கத்தான் இருக்கா?”
“ஆமாம். பத்து இருபது நிமிஷம் நடக்கணும். அவ்வளவுதான்”
எட்டு மணியான பிறகும் ஹெட் லைட்டைப் போட்டுக்கொண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த அளவுக்கு பனிமூட்டம் இருந்தது.
பொதுவாக வாகனங்கள் குறைவாகத்தான் ஓடின. தெருவில் பாதசாரிகளும் குறைவாகத்தான் இருந்தார்கள்.
“நான் இருக்கற லாட்ஜிலேயே ரூம் காலியாயிருக்கும். அது போதும்னா அங்கயேத் தங்கிக்கலாம். தேவைப்பட்டா, நிதானமா வேற நல்ல ரூமையும் பாக்கலாம்”
”ஓ... வீட்டுக்காரங்க கூட இல்லாதப்ப எங்கயாச்சும் ஒரு இடத்துல தங்கினாப்போதும்”
இப்படித்தான் நானும் மகியும் முதல்முதலாக ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.
வார இறுதிகளில் வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்ததால் மகேந்திரனை லாட்ஜ் மேனேஜருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.
நான் ஸ்கூலுக்குப் போனேன். சிங்கிள் ரூம் காலியாக இல்லாததால் ஒரு கட்டிலையும் நாற்காலியையும் கூடுதலாகக் கொடுத்து லாட்ஜ் மேனேஜர் எங்களை இணைத்துவிட்டார். மாலையில் ஒன்று சேரும் போதுதான் நாட்டு விசேஷங்களிலும் வீட்டு விசேஷங்களிலும் ஆழமாகப் பேச்சு நடந்தது.
மகேந்திரனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியிருந்தன. மகள் தன்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று அவன் நம்பினான்.
கிளார்க் முதல் கிளாஸ் ஒன் ஆபீசர் வரை உள்ள எல்லா டெஸ்ட்டுகளையும் எழுதித் தரப்பட்டியலில் இடம் பிடித்தான் என்றாலும், எங்கும் போய்ச்சேராமல் நிராசையின் ஆழச்சுழியில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதுதான் தழுவித் தலைவருடி ஆறுதல் கொடுக்க பழுப்புக் கவரில் பொதிந்த ஒரு அப்பாயின்மெண்ட் ஆர்டரை நீட்டியபடி போஸ்ட்மேன் வந்தார்.
மகளுடைய ஜாதகத்தில் தந்தையுடைய ராஜயோகம் பற்றி ஒருவேளைக் கூறப்பட்டிருக்கலாம். அவனுடைய சித்திரத்தும்பி இறக்கைகள் வீசி கனவுகளில் இந்திரஜாலமிட்டுப் பறந்து வந்தது. நான் என்னுடைய மகனையும், மகளையும் அவர்களுடைய தாய் ராஜியையும் அன்பொழுகும் மொழியில் வார்த்தைகளால் அவன் முன் காட்சிப்படுத்தினேன். எல்லாச் சாயங்கால நேரத்திலும் இரண்டு பேர் மட்டுமே கூடும் எங்கள் மகாப்பேரவையின் அரங்கை குமாரன் ஆசானும் வள்ளத்தோளும் சங்கரம்புழையும் ஐயப்பனும் சுள்ளிக்காடும் அலங்கரித்தார்கள்.
தன்னுடைய செல்லப்பெண்ணைப் பற்றியப் புராணங்களை இதெல்லாம் முடிந்துதான் அவன் பேசுவான். “என்னோடப் பொண்ணுக்கு சாருலதான்னு பேரு வச்சிருக்கேன்”
“அப்படியா? நல்ல பேரு”
சாருவைப் பற்றி பேச ஆரம்பித்தவுடனேயே அவன் கண்களில் வானவில்கள் படையெடுத்து வரும். அதைப் பார்க்கும் போதெல்லாம் இதற்குப் பின்னால் ஒரு தூறலாவது இருக்குமே என்று எனக்குத் தோன்றும்.
மழை பெய்து கண் மூடும்போது பாதி ராத்திரியைத் தாண்டியிருக்கும். அவன் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. “நான் எனோடப் பொண்ணை ஒரு ஐ ஏ எஸ் ஆக்குவேன்”
குழந்தைகள் வளரும்போது அவர்களுக்குப் பிடித்தமான விஷயத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கட்டும். அவர்களுக்குப் பிடித்தமானத் தொழிலைச் செய்யட்டும். இதுதான் என்னுடைய கொள்கை.
இதனால் சொந்தக் குழந்தைகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய சுமைகளைத் தாங்கிக் கொண்டு நடப்பது பிச்சைக்காரனுடைய ராஜ கனவு போல ஆகிவிட்டால்...?
குழந்தைகளுக்குப் படிக்க, நல்லவராக வளர உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதிலேயே என் கவனம் முழுவதும் இருந்தது. மகியைப் போலவே எல்லா விடுமுறை நாட்களிலும் நானும் வீட்டுக்குப் போய் வந்தேன். அவனுடன் சேர்ந்து வயநாடு மஞ்சள், இஞ்சி, நாட்டுப்புற வாழைப்பழக்குலை, புழுங்கிக் குத்திய அரிசி, தித்திக்கும் மலைத்தேன் எல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் என்னுடைய சேகரத்தில் தவறாமல் இடம் பெற்றிருந்தன.
“எல்லாமே என்னோட சாருவுக்குதான். இங்க கிடைக்கற மாதிரி புத்தம்புதுசாக் கலப்படம் இல்லாத சாமானுங்க அங்க கிடைக்கறது இல்ல. என்னோட பொண்ணு கலப்படம் இல்லாம வளரட்டும். அவ வளந்து கலப்படமும் ஊழலும் இல்லாத ஒரு மாவட்டத்த ஆளட்டும்”. நன்மைகள் நிறைந்த ஒரு மாவட்ட கலெக்டரைப் பார்க்க தந்தை மகேந்திரனுக்கு இந்திரஜாலக்கண்கள் வேண்டுமோ என்னவோ!
நான் என்னுடைய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிரமப்பட்டேன். கோடை விடுமுறையின் ஒரு சாயங்காலப் பொழுதில் மகேந்திரனைப் பார்க்க ஒரு ஆள் வந்தான். சாயங்கால வானத்தில் வண்ணக்குடை நிமிர்த்தி மேகங்கள் அணிவகுத்தன. வந்த ஆள் சொன்னான். “நான்... ரேஷன் கடை நடத்தற ராஜசேனன். சாருகிட்ட கொஞ்சம் பேசறதுக்காகத்தான் நான் வந்தேன். நாம சாரோட ரூமுக்குப் போகலாமா...?”
“இங்க நின்னேப் பேசினாப் போதாதா?”
“அப்படியில்ல. மனசுக்குள்ள இருக்கற கஷ்டங்களக் கொஞ்சம் சொல்லணும்”
படி ஏறி ரூமுக்குள் நுழைந்த போதே அந்த ஆள் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.
“சார். நான் ரொம்பக் கஷ்டப்பட்டு கடன் வாங்கி, இப்ப ரேஷன் கடய நடத்திக்கிட்டு இருக்கேன். அது என்னோட அப்பா நடத்திக்கிட்டு இருந்த கடை. நிறய கடன் இருந்துச்சு. அதோட சேந்து சில கேசும் வந்தப்ப சிவில் சப்ளைஸ்காரங்க கடயப் பூட்டிச் சீல் வச்சுட்டாங்க.
அதோட அப்பா நோயாளியா ஆயிட்டாரு. பல கஷ்டத்தயும் சகிச்சுகிட்டு ஒருவிதமா இந்தக் கடய நடத்தறேன். அடுத்த அலாட்மெண்ட்டுல ஒரு லோடு வாங்கித் தரேன்னு சொல்லி ஒரு வியாபாரிகிட்ட கொஞ்சம் பணத்தக் கடன் வாங்கினேன். வாங்கினப் பணத்த செலவழிச்சிட்டேன். இந்த ஒரு தடவ மட்டும் சார், கொஞ்சம் கருணை காட்டினாப் போதும். வாங்கின பணத்தத் திருப்பிக் கொடுக்க ஒரு வழியும் இல்லாம... அதனாலதான் சார்... இனிம இப்படி எதுவும் நடக்காது. இந்த ஒரே ஒரு தடவ மாத்திரம்...”
கண்ணீர்ப் பெருவெள்ளத்துக்கு நடுவில் அவன் ஒரு கவரை நீட்டினான். “நீங்க சொல்றதெல்லாம் எனக்குப் புரியுது. நியாயத்தோட பக்கம் மட்டும்தான் நான் நிப்பேன். கவர சீக்கிரமா இங்கேர்ந்து எடுத்துகிட்டுப் போங்க. இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இங்க நிக்காதீங்க...”
முன் ஜென்மத்தில் பெற்ற நீதி நியாய உணர்வை மாற்றிக்கொள்ள மகேந்திரனால் முடியவில்லை.
இன்னொரு வியாபாரி ஒரு பாட்டில் தேனையும், கொஞ்சம் ஏலக்காய்களையும் கொண்டு வந்தான். மகி அவனிடம் கேட்டான்.
“இதுக்கு என்ன விலை?”
“அய்யோ சார்... விலைக்கு இல்ல. இது என்னோட வீட்டுல காய்ச்சது. நீங்க ஊருக்கு எடுத்துகிட்டுப் போகத்தான் கொண்டு வந்தேன்.
“விலைக்குக் கொடுக்கறதுன்னா கொடுங்க. இல்லாட்டா கொண்டு வந்தது போலவே கொண்டு போயிடுங்க”
இப்படிப் பல சந்தர்ப்பங்களில் பல சம்பவங்கள் மகியுடைய வாழ்க்கையில் அரங்கேறின. ஒவ்வொரு தடவை வீட்டுக்குப் போகும்போதும் மகளுக்குப் புதுத் துணி... விளையாட்டுப் பொம்மைகளை வாங்க அவன் மறந்ததில்லை.
ஒரு நாள் அவன் சொன்னான். “நாளைக்கு செகண்ட் சேட்டர் டே இல்லயா? பொண்ணுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போக என்னோட கையில காசு இல்ல. கரெக்டா பஸ் சார்ஜுக்கு மட்டும்தான் காசு இருக்கு”
“ஒரு நூறு ரூபா போதுமா?”
“போதுமே. குழந்தைக்கு ஏதாச்சும் ஒன்னு வாங்கினாப் போதும்”
அன்று காலையில்தான் புன்னகையுடன் இருக்கும் காந்தியை அடக்கம் செய்த கவருடன் ஒரு ஆள் மகேந்திரனைப் பார்க்க வந்தான். கடுமையான வசவுகளைப் பரிசாகப் பெற்று அவன் திரும்பிப் போனான்.
அந்த ஆளுடைய கடைக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது.
அப்போதும் மகியுடைய மனம் முழுக்க தார்மீக உணர்வுகளே மேலோங்கியிருந்தன.
ஒவ்வொரு தடவை வீட்டுக்கு போய்விட்டுத் திரும்பும் போதும் எங்களுடைய உரையாடல்களிலும் மகி சாருலதாவுடைய செயல்களை நிரப்பி வண்ணவண்ணச் சாயங்களைப் பூசினான். மகளுக்குப் பால் பற்கள் முளைத்தன... நடை பயின்றது.. அப்பா என்று கூப்பிட்டது... எகிறு ஊறி வந்த போது தோளில் கடித்துக் காயத்தை ஏற்படுத்தியது. இப்படி எல்லாக் கதைகளும்...
மகேந்திரன் என்றால் சாருலதா... சாருலதா என்றால் மகேந்திரன்...
தோழமையின் தித்திக்கும் கணங்கள் நகர எங்களுடைய நாட்களும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து போயின. வயநாட்டின் அன்னை மடியில் ஆகாயத்தின் அதிசயங்களைப் பார்த்து பருவநிலை மாற்றங்களுக்குச் சாட்சியாக இருந்து கோடையும் குளிரும், இலையுதிர்காலமும் வசந்தகாலமும் குடை மாற்றம் நடத்தி நிறங்களை அள்ளித் தெளித்து எங்களைக் கடந்து போனதை நாங்கள் உணரவேயில்லை.
ஊருக்கேப் போய் செட்டிலாக அவன் ஏறி இறங்காத இடங்களே இல்லை. காலம் என்னும் கடிகார மணியில் விதிவசம் ஏற்படும் மாற்றங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டேயிருந்தன. ஒரு மே மாத தொடக்கத்தில் இடமாற்றத்திற்காக விண்ணப்பத்தை நான் எழுதி முடித்தேன். இதைத் தெரிந்துகொண்டால் மகியுடைய மனதில் ஒளி வீசிக்கொண்டிருந்த நிலவின் பிரகாசம் மங்கிப்போகும் என்று எனக்குத் தெரியும்.
இந்த விஷயத்தை அவனிடம் எப்படிச் சொல்வது? என்று நான் பரிதவித்துக் கொண்டிருக்கும் போதுதான் என்னுடைய முகமூடியைக் கிழித்தெறிந்து மகியுடைய இடமாற்றத்துக்கான உத்தரவு அவனைத் தேடி வந்தது. அவனுக்குக் கோட்டயமேக் கிடைத்து விட்டது. வீட்டில் இருந்தே போய் வரக்கூடிய தூரத்தில் ஆபீஸ்.
சாருவுக்காக ஒரு சாய்ந்தாடும்மா குதிரையை வாங்கி நான் கொடுத்தனுப்பினேன். காலம் என்னும் மகத்தான கடிகாரத்தின் ஓட்டத்தை நிறுத்த யாரால் முடியும்? நானும் அவனும் பூமியுடைய இரண்டு முனைகளுக்கு பணியிடை மாற்றம் வாங்கிக் கொண்டு போனது போல ஒரு அனுபவம் ஏற்பட்டது. காலமும் தூரமும் வாழ்க்கைச் சூழ்நிலைகளும் மாறினாலும், மீதமாவது சில நல்ல நினைவுகளும் புரிந்துகொள்ள முடியாமல் போன அன்பு உறவுகளுமே...
நறுமணம் வீசும் பூக்கள் போலத்தான் ஒவ்வொரு நட்பும்... இதழ்கள் இணைந்திருக்கும் போதுதான் பூவுக்கு அழகும் வாசனையும் கிடைக்கும். அவ்வப்போது எப்போதாவது பேசும் ஒரு அலைபேசி அழைப்பில் எங்களுடைய தோழமை ஒதுங்கிப் போனது. அழைக்கும் போதெல்லாம் சாருலதாவைப் பற்றிய விஷயங்களே முக்கியமான பேசுபொருளாக இருந்தது.
எல்லா வகுப்புகளிலும் படிப்பில் அவள் முதல் ரேங்க். விளையாட்டிலும் கலை நிகழ்ச்சிகளிலும் முதல் ரேங்க். இதையெல்லாம் பெருமையும் சந்தோசமும் கலந்த குரலில் மகி என்னிடம் பகிர்ந்து கொண்டான். அவனுடைய மகளைப் பற்றிய ஐ ஏ எஸ் கனவுகள் பெரியதாகி வெள்ளி வெளிச்சத்தில் அசைந்தாடுவதை நானும் கவனித்தேன்.
அலுவலக வேலையில் சில பின்னடைவுகளையும் அவன் சந்திக்க வேண்டி வந்தது. தாலுகா சப்ளை ஆபீசராக ஆனதோடு மகியின் போக்கைக் கட்டுப்படுத்தி அவனைச் சுற்றி வேலி கட்ட எதிராளிகள் சங்கமே உருவானது. ஊழலுக்கும் லஞ்ச லாவன்யங்களுக்கும் ஒத்துப்போகவில்லை என்பது மட்டும் இல்லை... தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் லஞ்சம் வாங்குவதையும் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு உதவுவதையும் தடுத்தான். தவறுகள் நடக்கும்போது கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தான்.
இது பலரையும் அவனுடைய எதிரிகளாக மாற்றியது. மகியுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரகுமானும் கோபாலகிருஷ்ணனும் தலைமை வகித்த ஒரு சங்கம் சரியான நேரம் பார்த்து மகியை மாட்டிவிடக் காத்துக் கொண்டிருந்ததை அவன் உணரவேயில்லை.
“அந்த ஆளுக்கு வேணாம்னா வாங்கவேணாம். ஆனா அதுக்காக மத்தவங்கள எதுக்காகத் தொந்தரவு செய்யணும்? படிக்கறப்பவே எல்லாத்தயும் ஒழுங்காக் கத்துக்கணும். எங்க வேலையப் பாக்க எங்களுக்குத் தெரியும்”
ஒரு சமயம் ரகுமான் சொன்னான்.
மாவட்ட சப்ளை ஆபீசராக வேறொரு மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்று, அவன் வேறு மாவட்டத்துக்குச் செல்லும் போது எதிராளிகளுக்கு அது ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் ஊழல் செய்ய தங்களுடன் ஒத்துழைக்காத உயர் அதிகாரியை நிர்வாக மன்னிப்பு கொடுத்து சாப விமோசனம் வழங்க அவர்கள் தயாராக இல்லை. நீதி நியாயங்களை மறக்காமல் செய்ய வேண்டியதை செய்துவிட்ட திருப்தியில்அவன் வசந்தகீதம் பாடினான்.
ஒரு நாள் விடியற்காலையில் போன் சத்தம் கேட்டு தட்டுத்தடுமாறி கனவுக்குள் நடப்பது போல நடந்து ரிசீவரை எடுத்தபோது மறுமுனையில் “என்னோட பொண்ணுக்கு சிவில் சர்வீஸ் செலக்ஷன் கிடைச்சுடுச்சு” ஆனந்தத்தின் உச்சத்தில் மகியுடைய வார்த்தைகள் தொண்டைக்குள் குழுமின. ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாத ஏதோ ஒரு நடு இடத்தில் பறப்பது போல ஒரு உணர்ச்சிவெள்ளம் அவனிடமிருந்து பாய்ந்து வருவதை நான் உணர்ந்தேன்.
மாவட்ட சப்ளை ஆபீசருடைய மகள் சிவில் சர்வீஸ் செலக்ஷன் ரேங்கை எட்டிப் பிடித்தது அடுத்த நாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தியாக வந்தது. ஜென்ம சாபல்யம் கிடைத்தது போல ஒரு உணர்வு. நட்டு நனைத்து வளர்த்த விதை செடியாகி மரமாகி பூத்துக்குலுங்கி மணம் வீசத்தொடங்கியது. அந்த சந்தோஷத்துடன் அவன் தொலைதூர மாவட்டத்தில் இருந்த ஆபீசுக்குப் போனான்.
ரகுமானும் கோபாலகிருஷ்ணனும் அவர்களுடைய பரிவாரங்களும் அங்கும் யூனியன் செயல்பாடுகள் என்ற பெயரில் வந்து சேர்ந்தனர். சதிக்கூட்டங்களை நடத்திவிட்டு வேவு பார்க்கும் வேலையை முடித்து அவர்கள் திரும்பிப் போனது மகிக்குத் தெரியவேயில்லை. மகியுடைய களங்கமில்லாத மனதில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை.
ஐ ஏ எஸ் பயிற்சிக்குக் கிளம்புவதற்கு முன்னால் சாருலதா ஒரு ரகசியத்தைப் போட்டு உடைத்தாள். அது மகியுடைய இதயத்தில் சங்கடப்பூக்களை சொரிந்தன. அவளுடன் பயிற்சிக்கு வந்திருந்த முகமது சஹீர் என்ற பையனை அவள் காதலித்தாள். இருவரும் நெருக்கமாகப் பழகினார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துவிட்டார்கள். பயிற்சி முடித்த பிறகு திருமணம்.
வானவில்லுடைய ஒரு துண்டு மின்னலாக வானத்தில் இருந்து பூமிக்கு வந்து விழுந்தது. வானவில்லும் மின்னலும் உருவாவது ஒரே மேகத்தில் இருந்தே. மகேந்திரனிடம் இருந்து இந்த விஷயத்தில் ஒரு எதிர்வினையும் ஏற்படவில்லை. எதிர்வினை செய்ய நினைத்தாலும் யோசிக்கச் சொல்லி பொறுமை அவனுக்கு உபதேசம் செய்தது.
பேராசைக்காரனாக ஒரு தந்தையும் மாறக்கூடாது. சாருலதாவுடைய பயிற்சி முடிய ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆபீசில் இருந்து ஏதோ ஒரு அவசர வேலைக்காக அவன் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. தற்செயலாக ஆபீசில் தன்னுடைய டேபிளைப் பூட்ட அவன் மறந்துபோனான்.
உதவியாளரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போனான். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த எதிரிகளுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. திரும்பி வந்த மகேந்திரன் தன்னுடைய மேசைக்குள் இருந்த கவரைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் ஏராளமான ரூபாய் நோட்டுகள்!
அதை வெளியில் எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்தான். “இதெப்படி இங்க வந்துச்சு? யார் இதக் கொண்டுவந்து இஞ்க வச்சது?”. யோசிப்பதற்குள் உயர் அதிகாரி பரிசோதனைக்காக ரூமுக்குள் நுழைந்தார். தனிப்பட்ட பதிவேட்டில் பதிவு செய்யப்படாத பணம். குடோனுக்குள் தான் லஞ்சம் வாங்கியதாக ஒருவனுடைய புகாரையும் உயர் அதிகாரி காட்டினார்.
ஊழல் செய்த வியாபாரியைக் கேஸில் இருந்து தப்ப வைக்க அவனிடம் கேட்டு வாங்கிய லஞ்சப்பணம்தான் அது என்பது புகார்.
குடோனில் இருந்து உணவு தானியங்களை ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கும் ஒப்பந்தக்காரன்தான் புகார் கொடுத்திருந்தான்.
“எனக்கு எதுவுமே தெரியாது. நான் ஒரு பைசா கூட வாங்கல. நான் நிரபராதி. என்னை வேணும்னே பொய்க்கேசுல சிக்க வச்சிருக்காங்க”
மகியுடைய புலம்பல்கள் எதுவும் அங்கே அப்போது செல்லுபடியாகவில்லை. இரண்டு நாள் விடுமுறைக்கு அப்போது சாருலதா வீட்டுக்கு வந்திருந்தாள். எல்லா ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக அந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. மாவட்ட சப்ளை ஆபீசர் லஞ்சம் வாங்கிய கேசில் கையும் களவுமாக பிடிபட்டார். எல்லா கோலாகலங்களுக்கும் முடிவில் மனம் நிறைய தன்னம்பிக்கையோடு மகி வீட்டுக்கு வந்தபோது மனைவி லலிதா அவனுடைய மோவாயைப் பிடித்து கண்ணீரை மழையாகப் பெய்தாள்.
ஆனால்...? சாருலதா...? அவள் முகம் கொடுக்கவேயில்லை. தலையைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.
எல்லாவற்றையும் மகி விவரமாகச் சொல்லி முடித்த போது அவள் சொன்னாள்.
“இது ரொம்ப அவமானமாப் போச்சு. இவ்வளவு காலம் நல்ல பேரு எடுத்து என்ன புண்ணியம்? இவ்வளவும் நடந்ததுக்கு அப்புறமும் எதுக்காக உயிரோட இருக்கணும்? கூட இருப்பவங்களுக்கு மானக்கேட்ட உண்டாக்கவா இன்னும் நீங்க உயிரோட இருக்கீங்க? எங்கயாச்சும் விழுந்து சாகக்கூடாதா என்ன?”
மகியுடைய கன்னங்கள் வழியாக இரண்டு சூடான கண்ணீர்த் துளிகள் ஓசையில்லாமல் கீழே உருண்டு விழுந்தன. அன்று இரவே ஊடகங்கள் மற்றொரு செய்தியை ப்ளாஷ் நியூசாக ரிப்போர்ட் செய்தன.
“லஞ்சம் வாங்கின கேசில் பிடிக்கப்பட்ட மாவட்ட சப்ளை ஆபீசர் தற்கொலை செய்து கொண்டார்!”
சுவாமிஜியுடைய சொற்பொழிவு இன்னமும் தொலைக்காட்சி அலைவரிசையில் தொடர்ந்து கொண்டிருந்தது.