அழகான நாள். தெளிந்த வானமும் மஞ்சள் வெய்யிலும். பெரிய பையன் வெளியில் கிளம்பினான். கம்பளி ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தான். பழையதாகிப் போனதால் நிறம் மாறிப் போயிருந்தது. செருப்பு புதுசு. மிகக் குறைந்த விலை. மூத்த பிள்ளை வீட்டுக்கு முன்னால் இருந்த ஜாதி மரத்தின் நிழலுக்குப் போய் வழியைப் பார்த்துக் கொண்டு நின்றான். சில மாதங்களாக எப்போதும் இது போல அவன் நிற்பது வாடிக்கை.
அதைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு அற்புதக் காட்சி அங்கே இருப்பது போலத் தோன்றும். ஆனால் எதுவும் இல்லை. அந்த வழியே யாராவது எப்போதாவது போவார்கள். இன்றும் ஆட்கள் போய்க் கொண்டிருந்தார்கள். வடக்கு பக்கம்தான் நிறைய பேர் போய்க் கொண்டிருப்பார்கள். ஐந்தாறு பேர் சேர்ந்தாற் போலவும் போவார்கள். அதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உண்டு.
சிலருடைய தோள்களில் தூண்டில்கள் உண்டு. வழிக்கும் அவன் நிற்கும் இடத்திற்கும் இடையில் பாதி தூரத்திற்கு சரிவுதான். மீதி இடம் சமதளம். சரிவை மண் அடித்துக் கொண்டு போகாமல் இருக்க தட்டுகளாகப் பிரித்து வரப்புகள் வெட்டிவிடப்பட்டிருந்தன. மரங்களில் கொடி மிளகு படர்ந்திருந்தன. அவனுடைய வாடிக்கையான வேலைக்காரன் சின்ன தம்பி வந்து “வெட்டு அரிவாள் கொஞ்சம் வேணும்” என்றான்.
“வழி வெட்டறதுக்குதான்”. விவரம் சொன்னான். “வழி வெட்ட நிறய பேர் இருக்காங்களா?”. “தினம் பத்து ரூபா கூலி. நல்ல வேலை. எல்லாரும் சேந்து செஞ்சா சுலபமா முடிஞ்சுடும்”. “அதெப்படி?”. “எல்லாருக்கும் வேலை செய்யணும்ங்கற நினைப்பு கிடையாது. சர்ச்சுக்குப் போகற ரோடை உண்டாக்க. கூலி தந்தாத்தான் வருவோம்னு சில ஆளுங்க சொல்லி வேலைக்கு வர்றது இல்ல.
சிலருக்கு இடம் போகறத நினைச்சு சங்கடம். ஒரு ஆளுக்கு முப்பது செண்ட் இடம் இருக்கு. அந்த ஆள் இடம் தரமாட்டேன்னு சொல்லியாச்சு. அந்த ஆளு மண்வெட்டிய எடுத்து வீசியெறிஞ்சாரு. எதிர்ப்பக்கத்துலேர்ந்து அதிகமா எடுத்தாச்சு. நான் இந்த வேலைக்கு வர்றது இன்னிக்கு நாலாவது நாளு. வேலை செஞ்சு கூலி கிடைச்சாதான் குடிசைக்குப் போய் கஞ்சி வைக்க முடியும். இந்த சச்சரவெல்லாம் முடியற வரை வேலைக்கு வரவேணாம்னுதான் நினைச்சேன்”
“பத்து நாளு காய்ச்சல் வந்து படுத்துகிட்டா கூலி வேலைக்குப் போக முடியுமான்னு நினைச்சுகிட்டு அப்படி இருந்தியா?. இரண்டு வேளை கறுப்பு காபியாச்சும் இங்க வந்தா கிடைக்கும். மத்தியானத்துக்கு அரிசிக் கஞ்சியும் கிடைக்கும்”. மூத்த பிள்ளை சொன்னான். “அவனவனுக்கு எப்படியோ? எனக்கு இதெல்லாம் மேல்”
“நீ ஒரு காரியம் செய்யு. இன்னிலேருந்து பாதைய வெட்டப் போயிட்டு சாயங்காலமா இங்க வா. நான் ஏதாச்சும் கொடுக்கறேன். என்னோட பங்குக்கு நீ வேலை செஞ்சா நான் காசு கொடுத்துடறேன். இது அந்தக் கணக்கு இல்ல. நீ அரிவால எடுத்துகிட்டு போ...” அவன் போன பிறகே மூத்த பிள்ளை படி இறங்க ஆரம்பித்தான்.
இரண்டு மூன்று படிகளை நிதானமாக இறங்கினான். “என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? அங்க இறங்கினா இங்க ஏறவேணாமா?”. மனைவி அருகில் சென்றாள்.
அவன் வராந்தாவுக்குப் போனான். “நல்லது. நாப்பத்தி மூணு படி இருக்கு இந்த வீட்டுல. அத அஞ்சு பிரிவா பிரிச்சிருக்கு. அதுவும் நல்லதுதான்” அவன் படியேறினான்.
பத்து ஏக்கர் அளவுக்கு பரப்புள்ள தோட்டம். அது அவனுடைய உழைப்போட பலன். ஒன்பது அறைகள். சமையலறை. தொழுவம். எல்லாம் சேந்தபோது அந்தக் கிராமத்திலேயே அது பெரிய வீடாக மாறியது. இரண்டாம் உலகப் போர் அவனுக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. பல சரக்குக் கடையில் கணக்கெழுதுபவனாக இருந்த அவன் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டாம் என்று அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக வியாபாரத்தை ஆரம்பித்தான்.
பிறகு ரீட்டைல் வியாபாரி. அதுக்கு அப்புறம் அரிசி சர்க்கரை மண்னெண்ணை ஹோல் சேல் வியாபாரம். ராணுவத்தில் சேர்ந்த ஆட்கள் அனுப்பிய ரூபாய் நோட்டுகள் ஊரில் பறந்து வந்து கொண்டிருந்த காலம். அதில் இருந்து அதிக அளவு அவன் பிடித்தெடுத்தான். அதற்கு முன்பு வரை குஞ்சு சங்கரப்பிள்ளை என்று அவனை ஊர்க்காரர்கள் கூப்பிட்டார்கள். அதன் பிறகு, அவனை எல்லோரும் மூத்த பிள்ளை என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.
ஒரே ஒரு லட்சியம்தான் அவனுக்கு அப்போது. பணம் சேர்ப்பது. அது சேர்ந்தது. வேறு எதற்கும் நேரமில்லை. வீட்டில் இருந்து புறப்பட்டால் கடைக்கு. அங்கிருந்து கிளம்பினால் வீட்டுக்கு. வியாபாரம் தொடர்பாக மட்டும் ஆலப்புழைக்கோ கொச்சிக்கோ போவான். முழுநேர மூச்சும் பேச்சும் செயலும் எல்லாம் வியாபாரம் மட்டும்தான். சின்ன வயதில் வறுமையை அதிகமாக அனுபவித்தான். வியாபாரம் தழைத்து வளர ஆரம்பித்த போது குடும்பத்தில் இருந்து ஜாகையை மாற்றினான்.
மனைவி குழந்தைகளுடன் தனியாக வந்தான். எல்லாவற்றிலும் எளிமை. சாப்பாடு. துணிமணிகள். வீடு. வீட்டுச்சாமான்கள். எதிலும் ஒரு ஆர்ப்பாட்டமும் கிடையாது. அவனுடைய வளர்ச்சி பனை போல இருந்தது. ஒரு காற்றும் அவனை அசைக்கக்கூட முடியவில்லை.
ஊர்க்காரர்களுக்கும் அவன் மீது ஒரு அலாதி மதிப்பு இருந்தது. ஏதாவது உதவி கிடைக்கும் என்பதற்காக இல்லை அது. பணக்காரனை யார்தான் ஆதரிக்காமல் இருப்பார்கள்? “இன்னும் ஒரு வீடு கட்டணும். குழந்தைகளுக்கு வயசாயிடுச்சு. வேணுங்கற அளவுக்குத்தான் பணம் இருக்கே? ஆனா அது மட்டும் போதாது. நல்ல இடமா யோசிச்சு வாங்கணும். வீட்டுக்கு ப்ளான் வரையணும். வேலை செய்ய ஆளுங்கள நியமிக்கணும். அதுக்கு வேணுங்கற சாமான்கள் எல்லாத்தயும் சேக்கணும். கூடவே நின்னு வேலய வாங்கணும். யாருகிட்ட இது எல்லாத்தயும் கொடுக்கறது? கொஞ்ச நாளா இதே யோசனையாத்தான் இருக்கு”.
கடைசியில் சொந்தக்காரர்களில் ஒருவரிடம் இதையெல்லாம் ஒப்படைத்தான். எல்லாம் முடிந்த போது, அந்த ஆள் ஏமாற்றிவிட்டானோ என்று ஒரு நினைப்பு ஏற்பட்டது. அது சிலருடைய வாய்ப் பேச்சுகளால் வலுவடைந்தது. “ஒன்னு ஒன்னரை வருஷம் ஓடியாடி வேலைசெஞ்சதுக்கு நன்றி இல்லயே அந்த ஆளுக்கு?”. இந்தப் பேச்சு அவன் மீது குற்றச்சாட்டாக பாய்ந்தது. அவனுக்குள் பதட்டம் அதிகமானது.
அவன் நோயாளியானான். மருந்து மாத்திரை. பத்தியச் சாப்பாடு. ஓய்வு எல்லாம் அவசியமானதாக மாறியது. வியாபாரத்தைத் தொடர முடியாத நிலைமை. பெண் குழந்தைகள் அவரவர்களுடைய புருஷன்காரர்களுடன் தூரத்தில் குடியிருந்தார்கள். பெரிய பையனுக்கு வயசாகிறது. அவன் ஊதாரி. எதிலும் ஒரு ஈடுபாடு இல்லாதவன். அவன் எதையும் கண்டுகொள்வது இல்லை. ஐந்தாறு நாட்களுக்கு ஒரு தடவை மட்டுமே வீட்டுக்கு வருவான்.
சின்ன மகன் ஸ்கூலில் படிக்கிறான். வியாபாரத்தைப் பொறுப்பாக நடத்த சரியான ஆள் யாரும் இல்லை. மெல்ல மெல்ல அது சுருங்கிச்சுருங்கி ஒரு பங்காளியையும் சேர்த்துக் கொண்ட பிறகும் கடைசியில் தன்னுடைய எல்லா பங்குகளையும் உரிமையையும் பங்காளிக்கு விற்று அவன் வீட்டோடு ஒதுங்கினான். மனைவியும் சின்னவனும் கூட இருந்தார்கள்.
பெரிய பையன் எப்போதாவது சாப்பிட வருவான். ஒரு மின்னல் மாதிரிதான் அவனுடைய வரவும் போக்கும். எதற்கும் கஷ்டம் இல்லை. வங்கியில் போதுமான அளவுக்கு பணம் இருக்கிறது. குத்தகைக்கு விட்டிருக்கும் நிலத்தில் இருந்து வாடகை வந்து கொண்டிருந்தது. பாத்திரம் பண்டங்களை அடகு வைத்தால் வட்டிக்கு காசு கொடுக்கும் சின்ன அளவு வேலையை மனைவி செய்துவந்தாள்.
இவ்வளவு இருந்தாலும் மூத்த பிள்ளைக்கு மனதில் ஒரு நிம்ம்மதியில்லை. இந்த மலை வீட்டில் வாழ்ந்து அலுத்துப் போய்விட்டது. கடைத்தெருவில் மக்கள் நெரிசலில் வாழ்ந்து கொண்டிருந்த ஆள் அவன். இப்போதோ பெரும்பாலான சமயங்களிலும் தனிமைதான். மகன் ஸ்கூலுக்குப் போவான். வீட்டில் இருக்கும் போது அம்மாவோடு சேர்ந்து இருப்பான். அவனுக்கு அம்மாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும். அவனைக் கொஞ்சி அவனோடு விளையாட அப்பாவான மூத்த பிள்ளைக்கு முன்பெல்லாம் நேரமில்லையே!
மனைவி சமையலறை வேலைகளைப் பார்ப்பாள். விவசாயத்தில் ஈடுபடுவாள். ஆடு மாடுகளை பராமரிப்பாள். இதிலேயே அவளுடைய பெரும்பாலான நேரமும் கழிந்து போய்விடும். அவ்வப்போது மூத்த பிள்ளை மட்டும் தனியாளாக வெளியில் இறங்கி வாசலுக்கு அப்பால் தெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பான். அந்தப் பார்வையின் புலனத்திற்குள் வரும் பழமரங்கள் செடிகொடிகள் இவை எதுவும் அவனைக் கவரவில்லை.
பாதையில் நடந்து போகிறவர்களைத்தான் வேடிக்கைப் பார்ப்பான். அதுதான் அவனுடைய லட்சியமும் கூட. பாதையின் பெரும்பகுதியும் மரங்களால் மறைந்தே இருந்தது. பஸ் போகும் ரோடுக்கு செல்லும் மூன்றடிப் பாதை அது. அந்த வழியாக வடக்குப் பக்கமாகப் போனால் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தைப் பார்க்கலாம். அது சர்ச்சுக்குப் பக்கத்தில் இருந்தது. எதிர்ப்பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கோயில் இருந்தது.
இரண்டு பக்கங்களிலும் காபி கடைகள் சில்லறைக் கடைகள் இருந்தன. ஸ்கூலில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஒரு கள்ளுக்கடை இருந்தது. இதனால் அந்தப் பாதையில் அடிக்கடி ஆட்கள் நடமாடுவதைப் பார்க்கலாம். இந்த வழியாகப் போகிற ஆட்களைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு அலாதிப் ப்ரியம். திரும்பி வர ஏற வேண்டியிருக்கவில்லை என்றால் அவன் பாதையிலேயே போய் நின்று கொள்வான்.
மேடு ஏறக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். டாக்டர் அதற்கு ஒப்புக் கொண்டாலும் பயன் ஒன்றும் இல்லை. அதற்கெல்லாம் அவனுடைய உடம்பில் சக்தி இல்லை. ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து பாதையை அகலப்படுத்துகிறார்கள். லாரி போகிற அளவுக்கு அகலம் இருக்க வேண்டும். ஆனால் பஞ்சாயத்துக்கு விட்டுக்கொடுத்தால் அந்த இடத்தைப் பாதுகாக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இரண்டு பக்கமும் இருப்பவர்கள் இடத்தை காசு பணம் வாங்காமல் இலவசமாக விட்டுக் கொடுக்க வேண்டும். பாதையை வெட்டும் வேலையை ஊர்க்காரர்கள் எல்லோரும் கூடி ஒன்றாகச் சேர்ந்தே செய்யவேண்டும். இல்லாவிட்டால் வேலைக்காரனை அமர்த்தக் காசு கொடுக்க வேண்டும். முக்கியப்புள்ளிகள் வேலை செய்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த இடையிடையில் வெட்டும் வேலைக்கும் மற்ற சமயங்களிலும் அங்கே ஆஜராக வேண்டும்.
இட உரிமையாளருடைய சம்மதத்தை யாரும் கேட்கவில்லை. எல்லோருக்கும்தானே? யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிள்ளையுடைய இடம் அதிகமாகவேப் போகும். அது வயல். இப்போது நெற்கதிர் விளைந்து கிடக்கும் செழுமையான நிலம். விட்டுக் கொடுக்க வேண்டிய அந்த இடம் மட்டும் பத்து செண்ட் இருக்கும்.
அது பாதையோரமாக இருந்தது. இரண்டு பக்கத்தில் இருந்து சமமாக எடுத்தாலும் கூட பிள்ளைக்கு ஏழு செண்ட் இடம் நஷ்டமாகும். இந்த அளவுக்கு நஷ்டம் யாருக்கும் ஏற்படவில்லை. எதிர்ப்பக்கத்தில் மூன்று பேர் இடம் விட்டுக் கொடுத்தாலேப் போதும். மூத்த பிள்ளை எதிர்ப்பார் என்று பலரும் நினைத்தார்கள். சுகமில்லாமல் வீட்டில் இருக்கிறான் அவன் என்றாலும் அவனிடம் இதைப் பற்றிப் பேசவே எல்லோருக்கும் தயக்கம்.
அவன் புத்திசாலியானவன். பிடிமானம் உள்ளவன். இதைப் பற்றி தன்னிடம் பேச பலரும் வருவார்களோ என்று அவன் யோசித்தான். தூரத்தில் இருந்த குழந்தைகள், அவர்களுடைய குழந்தைகளுடைய பிறந்த நாள்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும். அதில் ஒரு சுவாரசியம். அடுத்த ஏகாதசிக்கு ஒரு பட்டாபிஷேகச் சொற்பொழிவு நடத்த வேண்டும்.
பாதையில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் மத்தியான சாப்பாடு போடவேண்டும். நடுநடுவில் ஏதாவது பண்டிகைகள் வரவேண்டும். கொஞ்சம் காசு செலவழிவதால் ஒரு குறைவும் வந்துவிடப் போவதில்லை. அறுவடை முடிந்தபிறகுதான் அவனுடைய எல்லையில் இருந்த இடத்தை பாதைக்காக எடுத்தார்கள். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அவன் தியாகம் செய்தான்.
சாக்கோ மாப்பிள இரண்டாவதாக வந்தது ஒரு மாதம் கழித்துதான். “நான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். இங்க வர்றதுக்கு என்ன இவ்வளவு நாளா யோசனை?”. மூத்த பிள்ளை அவரை வரவேற்றான். “என்ன விசேஷம்?”. “விசேஷமா எதுவும் நடக்கல. நான் இப்படியே இங்கயே கிடந்து அலுத்துப்போச்சு. செய்யறதுக்கு ஒரு வேலையும் இல்ல”.
“வேல செஞ்சு பழக்கப்பட்டவங்களுக்கு சும்மா இருக்கறதுன்னா மூச்சு விடறது கூடக் கஷ்டமான காரியம்தான்”. “உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தா நேரம் போகறதே தெரியாது. பழைய காரியங்கள் எல்லாம் வேற யாருக்கு இந்த அளவுக்கு நல்லாத் தெரியும்?”. “நானும் அப்பப்ப நினைச்சுப் பாத்துப்பேன். நேரம் கிடைக்கறப்ப எல்லாம் இங்க வரணும்னு. இந்தப் படிய எல்லாம் ஏறி வர்றனும்னு நினைச்சாலே பயமாயிருக்கு. அதனாலயே வரவேணாம்னும் இருந்துடுவேன்”.
“வயசு எழுபத்தி ஏழு ஆயிடுச்சு”. “எழுபத்தி ஏழா? எனக்கு அம்பத்தெட்டுதான் ஆகுது. அதுக்குள்ளயே வீட்டிலேர்ந்து வெளியக் கூட கால் எடுத்துவைக்க முடியாமப் போயிடுச்சு”. “பாதை போடக் கொடுத்ததுல நிறய இடம் போயிடுச்சு போல இருக்கே?. இடத்தக் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க முடியாதுன்னு குரு தர்க்கம் செஞ்சப்ப உங்க பேரச் சொல்லி அவருகிட்டப் பேசி முடிச்சாங்க. பிள்ளை பாதை போட வேண்டிய இடத்தக் கொடுக்காம இருந்திருந்தா பலம் ப்ரயோகிச்சு போலீசோட உதவியோட இடத்த எடுத்திருப்பாங்க.
நான் கேள்விப்பட்டேன். பாதைக்கு நீங்க இடம் கொடுக்கல. நீங்களே பாதய போட்டுக் கொடுத்துட்டீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. அதனால என்ன? பாதயோட வளைவ போட்டு முடிச்சப்ப ரோடோட அந்தப் பக்கத்துல பிள்ளைக்கு ஒரு பெட்டிக்கடைக்குத் தேவையான இடம் உண்டாச்சு”. அப்போது பாதையில் ஒரு லாரி வந்து நின்றது. இரண்டு பேரும் அங்கே போய்ப் பார்த்தார்கள். அவர்களுடைய முகம் தெளிவானது.
“அதெல்லாம் மரம் இல்லயா? யாருக்கு?”. மூத்த பிள்ளை சொன்னான். “புலித்தோலன் ரோட்டுக்கு பக்கத்துல பெட்டிக்கட வைக்கப்போறான். அந்தப் பக்கமாப் போனப்ப நான் அவங்கிட்ட கேட்டேன். உநக்கு ரோடு வேணாம்னு சொல்லிட்டு இப்ப லாரி வர்றதுக்கு மட்டும் அது வேணுமான்னு கேட்டேன்”. “வெட்கம் கெட்ட ஜந்து”. “சாக்கோ. நீங்க இதப் பத்தி அவங்கிட்ட கேக்கப் போகாதீங்க. அவன் ஒரு நிலையில்லாத ஆளு. நான் கூட யோசிச்சேன். சாக்கோ. ரோட்டோரத்துல சின்னதா ஒரு வீடு கட்டணும்”.
“வியாபாரம் செய்யவா? அப்படின்னா எனக்கு வாடகைக்கு தரணும். உக்காந்துக்க ஏதாச்சும் இடம்னு ஒன்னு வேணும். உப்பையோ மிளகாயையோ எதையாச்சும் வச்சுகிட்டு இருந்தா வயித்த நிரப்ப காசுன்னு ஏதாச்சும் கிடைக்கும். சின்ன வயசிலேருந்து செஞ்சுகிட்டு இருந்த வேல தானே?”. “கடை ஒன்னும் வைக்கப்போறது இல்ல. நான் இருக்கறதுக்கு ஒரு சின்ன இடம். ரெண்டு ரூமும் ஒரு வாசலும் அதுல ஒரு திண்ணையும் இருந்தாப் போதும்”.
“இவ்வளவு பெரிய வீடு இருக்கு. அப்படியும் எதுக்காக சின்னதா ஒரு வீடு கட்டறீங்க?”. “இங்க இருந்து ரொம்ப அலுத்துப் போச்சுன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும். மனுஷங்களப் பாக்காம இருந்தா நான் பைத்தியமாயிடுவேன். ரோடு பக்கத்தில இருந்தா மனுஷங்களப் பாக்கலாம். வெளியில இறங்கி கொஞ்சம் நடக்கவும் செய்யலாம். பணம் முக்கியமில்ல. மனுஷந்தான் முக்கியம்னு சொல்றது எவ்வளவு பெரிய சத்தியம்!
வீட்டுக்காரி சொல்லியும் கேக்காம ஒரு நாள் நான் புதுசா போட்ட ரோடுல கொஞ்சதூரம் நடந்தேன். நல்ல முதல் தரமான பாதை”. “எல்லாரும் ஒத்துமையா இருந்தா நம்பளோட இந்த காஞ்சு போன பூமி கூட சொர்க்கப் பூமியாயிடும். எல்லாரும் ஒத்துமையா இருப்பாங்க. முன்னால நின்னு செய்ய ஒரு ஆளு வேணும். அவ்வளவுதான்”.