“நிரந்தரத்தின் அக்கரையில் இருந்து நீ திரும்பிப் பார்த்தது போல... பூமியின் மேல்பரப்பில்... எங்கிருந்தோ தவழ்ந்து வந்த உன்னுடைய குரலை நான் உணர்ந்தது என்னுடைய காதிலா... நெஞ்சிலா... இல்லை என்னுடைய பழமையான நினைவுகளின் குளிர்ச்சியிலா...? என்னுடைய விளையாட்டு மைதானங்களில் நீ என் கூட இருந்தது இல்லை... விடலைப் பருவக் காலங்களில் என்னை நீ தொட்டு உரசிப் போனது இல்லை, இளமைத்துடிப்பில் புடைத்த நரம்புகளில் நீ நெருப்பை வாரி இறைத்ததும் இல்லை, இளமைக் காலங்களில் உன்னுடைய நீண்ட தலைமுடி இழைகள் என் மீது பறந்து வந்து விழுந்ததும் இல்லை... நீ வந்ததோ மிகவும் காலதமதமாகவே...! என்னுடைய கைகளைப் பற்றிப் பிடிக்காமலேயே நீ என்னை எல்லையில்லாத வழிகளில் கூட்டிக்கொண்டு போனாய்... “என்னுடைய வாழ்க்கையே நீதான்...!” என்று நீ என்னை அழைத்திருந்தாய்...! இல்லை மரணமே என்று நீ என்னை அழைத்திருந்தாயா...?” நிரந்தரத்தின் அக்கரையில் இருந்து நீ என்னைத் திரும்பிப் பார்க்கும் பார்வை, வெறும் என்னுடைய தோணல் மட்டும்தானோ..? எனக்கு மட்டுமே தோன்றுகிற நீ மட்டுமே அல்லவா சத்தியம்..! காதல் எவ்வளவு கடினமான தருமசங்கடம்..,! மாயா.,.! இதோ.., நான் உன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன்...”
*****
சில காலங்களுக்குப் பிறகுதான் அபர்ணா என்னை போனில் கூப்பிட்டது. அபர்ணா என்னுடைய பழைய மாணவி ஆவாள். முதுகலை மலையாள இரண்டாம் வருட வகுப்பில் காலியாக இருந்த ஒரேயொரு சீட்டில் அவள் சேர்வதற்காக வந்தாள். அட்மிஷன் கிடைப்பதற்காக நான்தான் அவளுக்கு உதவி செய்தேன். முன்பே பழக்கப்பட்டிருக்கவில்லை. நன்றாகப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உடையவளாக இருந்தாள் அவள். அதனால் அன்பையும், முழுமையான சுதந்திரத்தையும், உரிமையையும் என்னிடம் இருந்து கவர்ந்து எடுத்துக் கொண்டாள். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட போதும் அபர்ணா இப்போதும் பழைய மாதிரி அதே உற்சாகத்தோடு இருந்தாள்.
“சார்... நல்லா இருக்கீங்களா...?”
“ம்...”
“நான் ஒரு விஷயம் சொல்றதுக்காகத்தான் கூப்பிட்டேன்...”
“என்ன...?”
“மாயாசந்தனம்ங்கற ஆளத் தெரியுமா...?”
“அது யாரு மாயாத சந்தனம்...?”
“சாரோட எப்.பி ப்ரென்ட்... கண்ணூர்ல டீச்சரா இருக்கறாங்க...”
நினைத்துப் பார்த்தபோது எங்கேயோ அந்தப் பெயரைக் கேட்டது போல இருந்தது. மாயா சந்தனுடைய ப்ரொபைல் கண்ணுக்கு முன் காட்சி தந்தது.
“என்ன விஷயம்..?”
“ஒன்னுமில்ல... நான் பாத்திருக்கேன்... என்னைப் பாக்கறதுக்காக வந்திருந்தாங்க... கொஞ்சநாள் முன்னாலத்தான் சாரோட எப்.பி. ப்ரென்டானது... நீங்கன்னா அவ்வளவு உசிரு... பிடிக்கும்னு சொன்னா... ஔ... என்னால அதப் பத்தி விவரிச்சு சொல்லவே முடியாது...”
“அது ஏன் அப்படி...?”
“எனக்கு ஒரு ப்ரென்ட் இருக்கறா... மேஹா... அவளோட பிரென்ட்தான் இந்த மாயா... எனக்குச் சொல்லிக் கொடுத்த சார்னு தெரிஞ்சப்ப மேஹாவயும் கூட்டிக்கிட்டு என்னைப் பாக்கறதுக்கு வந்திருந்தா... என்னோட அம்மாவோட வீட்டுக்குப் பக்கத்திலதான் மேஹா இருக்கறா... சாரோட எப் . பி அக்கவுன்ட் ஒரிஜினல்தானா இல்ல போலியானதான்னு அவளுக்குத் தெரியணுமாம்... அப்புறம் உங்களப் பத்திக் கொஞ்சம் டீடைல்ஸ...”
“அப்புறம்...!”
“நான் எல்லாத்தப் பத்தியும் சொன்னேன்... கொஞ்சம் கூடுதலாகவேச் சொல்லி வச்சேன். அவளுக்கு எங்கிட்ட குறும்பு செய்யணும். உங்களப் பத்தித் தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் அவ கண்ணூர்ல இருந்து வந்ததே...”
“என்ன வயசு...?”
“இருபத்தி மூனு... நல்ல அழகா இருப்பா... நீங்க எழுதின எல்லாத்தயும் ஏலேர்ந்து இசட் வரை படிச்சிருக்கறா... அதுல விழுந்திட்டா... அய்யோ... என்னன்னு சொல்றது...? அவ்வளவு காதல் உங்க மேல...!”
“நீ க்ளைமாக்சச் சொல்லு...”
“அது இனிமத்தான் வரவேப் போகுது... உங்களப் பத்தி நிறயக் கேட்டா... ஔப்பனான ஆளா...? இல்ல... ப்ர்ராடா...? நான் அதப் பத்தி எல்லாம் விவரமாச் சொல்லிருக்கேன்... இனிம உங்கள போன்லக் கூப்பிடுவா... ஆஹா... உங்களுக்கு ரொம்பவும் பொருத்தமான கம்பெனி... எங்கிட்டேர்ந்து உங்களோட நம்பர வாங்கிக்கிட்டு இருக்கா...”
“இந்த மாயா சந்தனோட உத்தேசம் என்ன...?”
“ஒன்னுமில்ல... ரொம்பப் பிடிக்கும்... ஆத்மார்த்தமான அன்பு... நீங்க சொல்லுவீங்களே... அந்த மாதிரியான ஒரு பிராணசகி..! பிராணனப் பறிச்சு எடுக்கற சகி...!”
“இங்கக் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே...?”
“நான் சொன்னேன்... அவளுக்குப் பயம்...! உங்களுக்கு முன்னால வர்றதுக்குத் துணிச்சல் இல்ல... பாவம் சார்... இப்படி ஒரு பொண்ணு காதலப் பத்திப் பேசறத நான் இப்பத்தான் முதல்முறையாக் கேள்விப்படறேன்... அதுவும் நேரிலப் பாக்கமாலேயே... எதப் பத்தியும் தெரியாம... காதலிக்கற ஒரு பொண்ண...! அவப் கூப்பிடறப்ப நீங்க அவ பேசறதுக்கு எதுக்கும் மறுப்பு சொல்லாதீங்க... பாவம்... அந்த பொண்ணு... மாயாசந்தன்...”
அபர்ணா போனை வைத்து விட்டாள். நான் லேப்டாப்பை ஆன் செய்து எப். பி யில் செர்ச் செய்தேன். அவள் வந்தாள். அது அவள் போலத் தோன்றவில்லை. ஒரு சினிமா நடிகை போல இருந்தாள். அவள்..! புரொபைலில் மாயாசந்தனுடைய படமே இல்லை... ஆகாயத்தின் வண்ண மேகங்களும், நதியும், காடும், தொங்குபாலமும், நாட்டுப்புறத்துப் பாதைகளும் மட்டுமே மாயாசந்தனுடைய அக்கவுன்டில் இருந்த படங்கள்... மனித வடிவங்களாகச் சில குழந்தைகளின் படங்கள் மட்டும்... அபர்ணா சொன்னது ஒவ்வொன்றும் மனதுக்குள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. “மாயாசந்தன்” என்று என்னையும் அறியாமல் நான் ஒரு பரிசுத்தமான மந்திரத்தைப் போல அவளுடையப் பெயரை உச்சரித்தேன். அபர்ணா சொல்லி முடித்தது இப்படித்தான்.
“பிரபஞ்சத்திலே சார் தனியாத்தான் இருக்கறாருன்னு சொன்னப்ப... மாயாக்கு ரொம்பவும் வருத்தமாப் போயிடுச்சு... எல்லாரயும் நேசிக்கற ஆளான அவரு எப்படி இப்படித் தன்னந்தனியாளா ஆனாருன்னு அவ ஆச்சரியப்பட்டுப் போயிட்டா... பிரபஞ்சநாதனுக்கு ஏகாந்தத்தோடத்தான் காதல்னு நான் சொன்னப்ப அப்படித் தனியா விடறாதுக்கு நான் விடமட்டேன்னு அவ உறுதியாச் சொன்னா...”
மாயாசந்தனைப் பற்றி நினைத்துக்கொண்டே நான் நடந்தேன். எனக்குள் முழுவதும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்தாள். “அவளோட மனசுக்குள் என்னவாக இருக்கும்...? இந்தக் காதலுக்கு பாஷை என்னவா இருக்கும்...! என்ன நிறமா இருக்கும்...! காதல் கீதமே... என் ஒவ்வொரு முடியோட நுனி வரைக்கும் நீ நிறஞ்சு இருக்குற...”
மாயாசந்தன் கூப்பிட்டாள். ஜென்மங்களுக்கு அப்பால் இருந்து... காலத்தின் மறுக்கரையில் இருந்து... வந்த அழைப்பு போல இருந்தது அது. மாயாவுடைய குரலில் ஒரு தென்றல் காற்று தவழ்ந்து வந்தது. அது புல்லாங்குழலுடைய நாதத்தைப் போல இருந்தது. ஜென்மங்களாகப் பழக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிற ஒரு குரல்..!
“சொல்லு... என்னால நம்பவே முடியல... என்ன...? கூப்பிட்ட என்னையும், கூப்பிடற உன்னையும்..! அது என்ன...? இப்படி நடக்கும்னு நான் எதிர்பாக்கவே இல்ல... என்ன எம் மேல இப்படி ஒரு அன்பு ஏற்பட என்ன காரணம்...?”
“ஸகூல் காலத்துல இருந்தே நான் படிச்சு ரசித்தது... பாப்போம்னோ அல்லது நெருக்கமாப் பழக வாய்ப்பு கிடைக்கும்னோ ஒரு காலத்துலயும் நினைச்சதே இல்ல... இவ்வளவு நாளானப்புறமும் உங்க மேல ஏற்ப்பட்ட நேசம் குறையவே இல்ல... இப்ப... இதோ... நான் கேக்கறேன்... உங்கக் குரல...! நம்பவே முடியல...”
“இந்தப் பிரியத்தோட அடிப்படை என்ன...?”
“அது எப்படி வேணாம்னாலும் இருக்கலாம்... ஐ லவ்யூ லாட்..!”
“எனக்கு வயசு ரொம்ப ஆயிடுச்சு...”
“எனக்கு வயசே ஆகல... வெறும் இருபத்தி மூன்னு...”
“எனக்கு ஒரு பொண்ணு இருக்கறா... அவள விட அஞ்சரை வயசு உனக்கு அதிகம்...”
“இதெல்லாம் எதுக்காகச் சொல்றீங்க...? இதெல்லாமே எனக்குத் தெரிஞ்ச விஷயங்கள்தானே...? அறிவாளிங்க எல்லாம் இப்படி எல்லாம் யோசிப்பாங்களா...?”
என்னால் அதற்கும் மேல் எதுவும் பேசமுடியவில்லை. வார்த்தைகள் முடமாகிப் போயின.
“ஆனாலும்..!”
என்னுடைய வார்த்தைகள் பலவீனமாயின.
“எல்லைகளே இல்லாத என்னோட அன்ப நீங்க காதல்னே வச்சுக்கலாம்... எல்லாரயும் நேசிக்கற ஆளு இல்லயா நீங்க...?”
நான் சிரித்தேன். என்னால் அப்போது அதை மட்டுமே செய்யமுடிந்தது.
மாயா தொடர்ந்தாள்.
“எனக்கு ரொம்பவும் வருத்தமா இருக்கு... ஒவ்வொன்றையும் யோசிச்சுப் பாக்கறப்ப... வெளியிலப் பெரிசாச் சிரிக்கற மனுஷங்களுக்குள்ளாற இருக்கற வேதனைகள என்னால புரிஞ்சுக்கமுடியும்... இப்ப மட்டும் இருக்கற என்னோட இந்தக் வாழ்க்கயில இதுவரைக்கும் யார் மேலயும் ஏற்படாத ஒரு அன்பு... அளவே இல்லாத ஒரு அன்பு... உங்க மேல எனக்கு ஏற்படுது...”
நான் மௌனமானேன்... மனது ஆர்பரித்தது... யாரும் பார்க்காத என்னுடைய நிறைந்த கண்களை நான் அழுத்தி இறுக்க மூடிக்கொண்டேன்.
காலையில் எழுந்திருந்தபோது சும்மா பார்த்தேன். அதோ தெரிகிறது..! இன்பாக்சில் மாயாவுடைய மூன்று போட்டோகள். நடுங்கிப் போனேன். இளம் மஞ்சள் நிறத்தில் டாப்சும், நீல ஜீன்சையும் போட்டுக் கொண்டு ஏதோ ஒரு ஏரியின் மீது இருந்த மரப்பாலத்தின் மேல் நின்று கொண்டு அவள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள். இன்னொன்றில் சிவப்புப் புள்ளிகள் போட்ட ப்ராகைப் போட்டுக்கொண்டு கறுப்புக்கண்ணாடியை நெற்றியின் மீது தூக்கிப் பிடித்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் இருந்தாள். மூன்றாவதில் அவள் புடவையில் இருந்தாள். அடர் நீல நிறம். என்னுடைய கற்பனையில் மாயா இப்படித்தான் இருப்பாள் என்று எதிர்பார்த்தேன். மனதில் நான் கற்பனை செய்து வைத்திருந்த உருவம் அதே போல இருந்ததை நினைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. போட்டோக்களுக்குக் கீழே அவள் எழுதியிருந்தாள்.
“ you are not my past.. but you are my present & I shall need you in my future too...”
நான் நிறையநேரம் அவளுடைய போட்டோக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“என்னோட கற்பனையே...! நீ எப்படி இப்படி யதார்த்தமானாய்...? பிரபஞ்ச அழகின் சாரமே...! நீ எப்படி இந்த உருவத்தில் வடிவெடுத்தாய்...? நீ சத்தியமா...? இல்ல மாயையா...?” நான் உரத்த குரலில் சொன்னேன்.
மாயாவுடைய நம்பரைப் போட்டு நான் கூப்பிட்டேன். ஸவிட்ச்சுடு ஆப். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவளோடு பேசவேண்டும் என்று நான் அவசரப்பட்டேன். நான் போனில் அவளைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். ‘எல்லைக்கு அப்பால்’ இருப்பதாக போனில் பதில் வந்தது. மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டேன். அந்தப் பகல் நேரம் முழுவதுமே நான் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். விரக்தி அடைந்தேன். சாயங்காலம் நான்கு மணிக்கு நான் காலேஜில் இருந்து திரும்பும் போது மாயாசந்தன் போனில் தெரிந்தாள்.
“நான் எத்தனத் தடவக் கூப்பிட்டேன் தெரியுமா...? ஏன் இப்படி தொடர்பு எல்லைக்கு வெளில இருக்கற...?”
“அதுவா...? வீட்டுல டவர் கிடைக்கறது இல்ல... நான் இப்பதான் ஸகூல்லேர்ந்து கிளம்பறேன்... வீட்டுக்குப் போயிட்டா டவர் கிடைக்காது...”
“போட்டவப் பாத்தேன்...”
“எப்படி?”
“எனக்குத் தெரியும்... இப்படித்தான் இருப்பேன்னு...”
“சத்தியமா...?”
“ஹூம்...”
“என்னப் பிடிச்சிருக்கா...?”
“யாருக்குத்தான் பிடிக்காமப் போகும்...? மழப் பெய்யுதா அங்க...?”
“சாறல் மழ...”
“இங்க மேகமூட்டமா இருக்குது... எவ்வளவு தூரம் இருக்கும் ஸகூல்லேர்ந்து வீட்டுக்கு...?”
“ரெண்டு கிலோமீட்டர். அதோ... பஸ் வருது... நான் ஆன் லைன்ல வர்றேன்...”
வீட்டுக்குப் போய் நான் காத்துக் கொண்டிருந்தேன்... இடி மின்னலோடு ஒரு மழை வானத்தைப் பொத்துக்கொண்டு பெய்யத் தொடங்கியது. லேப்டாப்பை ஆன் செய்யவே முடியவில்லை. மழையை நான் முதல் தடவையாகச் சபித்தேன். இடி, மின்னல் எல்லாம் நின்று போய் மழைத் துளிகளாகப் பெய்ய ஆரம்பித்த போது, அவள் ஆன்லைனில் வந்தாள். நான் கேட்டேன்.
“நீ மாயையா... இல்ல உண்மயா...?”
அவள் பதிலை எழுதிக் காட்டினாள்.
“ரெண்டும் இல்லை... உங்களோட உயிரின் அம்சம்...!”
“எனக்கு உன்ன நேர்லப் பாக்கணும்...” நான் சொன்னேன்.
“பாக்கலாம்... முடிவு செய்யுங்க...” அவள் ஒத்துக்கொண்டாள்.
“ஒரு நாள் காலையில நான் வர்றேன்... கண்ணூர்ல நீ காத்துக்கிட்டு இரு. பையனூர்ல எனக்கு ஒரு குடும்ப வீடு இருக்கு. சந்திரமோகனோடது. அந்த வீட்டுக்கு நாமப் போறோம். அவருகிட்ட விஷயத்தச் சொல்லியிருக்கறேன். அங்க மத்தியானச் சாப்பாட்டச் சாப்பிட்டுட்டு திரும்பிப் போகலாம். சாயங்காலம் நீ வீட்டுக்குப் போயிடலாம். வர்ற சனிக்கிழமை. என்ன...?”
“சரி... சிட்டியிலயும், பீச்லயும் நாம சந்திக்க வேணாம். தெரிஞ்சவங்கப் பாக்கலாம். இப்படிச் செஞ்சா பிரைவசியும் கிடைக்கும்”
“ஒரு விஷயம்...”
“என்ன...?”
நான் இப்ப சங்கடமான நிலைமையில இருக்கேன். சில சமயம் சனிக்கிழம திரும்பிக் கிளம்பறப்ப நானும் கூட உங்க கூட வரலாம்...”
“வா...”
“நான் வந்தா...?”
“வந்தா என்ன...?”
“என்னைப் புரிஞ்சுகிட்டீங்களா உண்மையிலயே...!”
“ஒரு விஷயம் நல்லாப் புரிஞ்சுகிட்டேன்... நீ என்ன ரொம்பவே பாதிக்கற...”
“நானா..? எப்படிப்பட்டப் பாதிப்பு...?”
“மாயாத மாயாவோட பாதிப்பு...!”
“உங்களப் பத்தி சொன்னப்ப என்னோட ஒரு தோழி சொன்னா... இனிம சார் வாழ்க்கையில தோத்தே போகக்கூடாதுன்னு... உண்மைதான்... இந்த மாதிரி காதல் ஒரு போதும் போகவேப் போகாது... நான் கூடவே இருக்கறேன்... நீங்க தோக்காம இருக்க ஆயுசு முழுக்கவும் உங்களோட ஆயுள் கைதியாட்டாம் கூடவே நான் இருக்கேன்...”
*****
“நீ சொன்ன... “வீட்டு மாடியிலேர்ந்து என்னைக் கீழே முற்றத்தில நிறுத்தியிருந்த காரில் கொண்டுபோய் உக்கார வச்சப்ப நான் ஒரு சூன்யமானப் பிண்டத்தப் போல ஆயிட்டதான்னு எனக்குத் தோணிச்சு” என்று... பயணத்துக்கு நடுவில் நீ என்னைக் கூப்பிட்டிருந்தாய்... எங்கேயோ காபி குடிக்க நான் போயிருந்த போது... உன்னுடைய குரலுக்கு அப்போது ஒரு தெளிவு இருந்தது... “போகறதுக்கே மனசில்ல” என்று நீ சொன்ன போது உன்னுடைய குரலில் நம்பிக்கை நிறைந்திருந்தது.
“நீ எங்கே...? போய் மூன்று நாள்களாகிவிட்டன..! இன்று... ஜூன் பதினேழு... ராத்திரி ஒன்பது ஐம்பத்தி இரண்டில்... இன்பாக்சில் தும்பிகள் பறந்தன...
“பிரியமானவனே... நான் உடனே வருகிறேன்... தெரிகிறதா... பிரபஞ்சம் மாலை சூடும்...”
ஜூன் பதினேழு... ராத்திரி... நல்ல மழை... இடி மின்னல்களுடைய கூத்து நடந்து கொண்டிருந்தது... அன்று ராத்திரி ஒன்பது ஐம்பத்தைந்துக்கு... நீ மரணம் அடைந்தாய் என்று நான் தெரிந்து கொண்டேன்... என்னை நினைத்து நினைத்து நீ உயிரை விட்டாய்... அம்மாவிடம் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டே நீ உயிரை விட்டாய்... மரணத்தைக் கோரமாக்காமல் நீ பஞ்சபூதங்களோடு இரண்டறக் கலந்தாய்... அதற்குப் பிறகுதான் உன்னுடைய தங்கை பவித்ரா கூப்பிட்டுச் சொன்னாள். நீ எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்களை அவள் பிறகு கொடுத்தனுப்பினாள்... அந்தக் கடிதங்கள் இப்படி முடிந்திருந்தது..
“உங்களை யாரையும் நேரில் பார்க்காமலேயே நான் விடைபெற்றுச் செல்கிறேன்... என்னுடைய சாரை நீங்கள் தனியாளாக ஆக்கிவிடாதீர்கள்...”
கங்காவுக்கு ஒரு புடவையை அவள் கொடுத்து அனுப்பி இருந்தாள். நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவள் இளம் மஞ்சள் புடவையில் எம்ப்ராய்டரி செய்திருந்தாள். அந்தக் கைவேலைப்பாடுகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
“நீ எங்கே...? நேற்று ஜூன் பதினேழு... கங்கா அந்தப் புடவையை கட்டிக்கொண்டுதான் காலேஜுக்கு வந்தது... நீ விட்டுவிட்டுப் போய் ஒரு வருடம் ஆகிறது... பவித்ரா நடுவில் போன் செய்வது உண்டு... அவள் சொல்லுவாள்... “மாயா அக்கா இல்லாட்டாலும் உங்க வழியா அவளப் பாக்கலாம் இல்லயா...”
*****
“நீ எங்க இருக்க இப்ப...? அழியாத ஆத்மாவோட அக்கரையில நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கற இப்ப...? நாம எப்ப ஒருத்தர ஒருத்தர் இனிமப் பாக்கறது...? பாக்கவே பாக்காம இப்படி காதலிச்ச நாம இல்லயா சத்தியமானவங்க...! காதல்ங்கறது எவ்வளவு கொடூரமான தரும சங்கடம்...!”
(பிராணசகி - உயிருக்கு உயிரான துணைவி, பிராணன் - உயிர், ஏகாந்தம் - தனிமை, சபித்தல் - கடுமையாகத் திட்டுதல், குடும்ப வீடு -–பரம்பரை சொத்தாகக் கிடைத்த வீடு )