அச்சுதன் என்ற அந்த நான்காவது வகுப்பு படிக்கும் பையன் அவனுடைய அப்பாவுக்கு முன்னால் விடைத்தாளோடு நின்றான். ஐம்பதுக்கு நாற்பத்தி ஒன்பது. அப்பாவுடைய பார்வை எப்போதாவது விடைத்தாளில் இருந்து இறங்கி அவன் மீது கடுமையாகப் பதிந்துவிடுமோ என்று பயந்தான்.
“மூனும் மூனும் ஆறும் நாலும் பத்தும்” அப்பா அப்போது அவனுடைய மதிப்பெண்களை கூட்டிக் கொண்டிருந்தார்.
எல்லா பதில்களும் சரி என்று டிக் அடிக்கப்பட்டிருந்தாலும் அப்பாவுடைய மனக்கணக்கு ஐம்பதை தாண்டாமல் நின்றது. அவர் கேள்வித்தாளையும் விடைத்தாளையும் சேர்த்து வைத்து ஒரு நுண்ணோக்கி ஆராய்ச்சி நடத்தினார்.
ஆறாம் எண் வினாவில் கொடுக்கப்பட்டிருந்த ஐந்தாம் உப பிரிவு கேள்வியை அவர் மீண்டும் மீண்டும் வாசித்தார்.
“ஜாஸ் ஒரு பயங்கர உயிரினம்” இது கேள்வி. ஆனால் அவன் எழுதியிருந்த பதில் “அப்பா ஒரு பயங்கர உயிரினம்”!. ஆசிரியை அதற்கு டிக் அடித்திருந்தாலும் மார்க் கொடுக்காமல் அதனோடு சேர்ந்து ஒரு கேள்விக்குறியையும் இட்டிருந்தாள். அந்தப் பதிலுக்கு ஆசிரியை ஏன் டிக் போட்டார் என்ற வினாவுடன் அவருடைய கண்கள் ஆகாயத்தையும் பூமியையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தன.
“ஐம்பதுக்கு ஐம்பது ஏன் வாங்கல? என்ற வழக்கமான கேள்வியை எதிர்பார்த்திருந்த அவனுக்கு ஒரு பார்வை கூட பார்க்காமல் கையெழுத்து போட்டு அவனிடம் கொடுக்கப்பட்ட விடைத்தாள் மற்றொரு மகா அற்புதமாக இருந்தது.
வாசலில் தூண் மாதிரி நின்று கொண்டு “என்ன ஆச்சு?” என்ற கேள்வியுடன் ஆமை தலை நீட்டி பார்ப்பது போல நோட்டமிட்ட அம்மாவுடைய பார்வைக்கு லேசாக சிரித்து கொஞ்சம் இருமிக்காட்டி “பிரச்சனை ஒன்னும் இல்ல” என்று அச்சுதன் சைகை மொழியில் பதில் சொன்னான்.
அப்போது அம்மா வாங்கிக் கொடுத்த, அப்பா இல்லாதபோது மட்டும் உயிர் பெறும் தூரிகைகளும் வண்ணப்பூச்சுகளும் அவனை நோக்கி சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தன. அப்போது மனதில் ஏதேதோ ஞாபகங்கள் விம்மிக் கொண்டு
வந்தன. அவன் மனது ஒரு கூடை முல்லைப்பூ போல வெண்மை நிறத்துடன் பூத்து நறுமணம் வீசி அம்மாவுக்கு நன்றி கூறின.
“அம்மா!”. வசந்தமும் இலையுதிர்காலமும் வேனிலும் மழைக்காலமும் போல சரியான நேரங்களில் பரீட்சைகள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தன. 98% மதிப்பெண் சதவிகிதத்துடன் ப்ளஸ் 2 பாஸ் ஆன அன்று அவன் முதல் முறையாக ஒரு நிபந்தனையை விதித்தான். எம் பி பி எஸோ என்ஜீனியரிங்கோ படித்துக் குடும்பத்தைக் கரையேற்றுவது பற்றி யோசிக்க வேண்டிய நேரத்தில் அவன் படம் வரையப் போக வேண்டுமாம்.
“இந்த யோசனய யாருடா உங்கிட்ட அருளியது?. ஷோகேஸில் நிறைத்து வைத்திருந்த மெடல்களை பார்த்துக் கொண்டு அவன் ஒரு விருது வாங்கிய சினிமாவுடைய மௌனத்தில் நின்றான். மௌனத்தின் இடம் நீண்டபோது அவன்
குரலை உயர்த்தி “அவனவனுக்கு பிடிச்சது படிக்கணும்” என்று சொன்னான்.
நடுக்கம் இருந்தது என்றாலும் முகத்துக்கு முகம் நேராக கடந்து வந்த அவனுடைய வார்த்தைகளில் உறுதி இருந்ததை அவர் புரிந்து கொண்டார்.
“வரையறதுக்கு படிச்சுட்டு பெயிண்ட் வாங்கக் கூட காசு இல்லாம தெண்டிகிட்டு திரியறப்ப அந்த சாருங்க வாங்கிகிட்ட காசுலேர்ந்து கூலின்னு ஏதாச்சும் தருவாங்களா?”.
“படிக்கணும்னா எனக்கு பிடிச்சததான் படிப்பேன்” அவன் வாக்குவாதத்தை நிறைவு செய்த போது பதில் இல்லாமல் அப்பா தோட்டத்தை நோக்கி இறங்கிப் போனார்.
வழக்கத்திற்கு அதிகமாக பூப்பதையும் கிளை விடுவதையும் தெரிந்து வைத்திருந்த மண் அவருடைய வருகைக்காக காத்துக் கொண்டு நின்றது.
“கொஞ்சம் ஆறட்டும்”
அப்பா” மூச்சிரைத்து கொண்டு நின்ற போது மண் கேட்டது.
“விளைஞ்சு நின்னா அறுவடையில முடியணும்?. பிடிச்சு வச்ச வாழையிலேர்ந்தெல்லாம் குல வெட்டலாம்னு நம்பிகிட்டு இருக்கக் கூடாது. நேராநேரத்துக்கு மழயும் வெய்யிலும் கிடக்கும்னு உத்தரவாதம் இருக்கா? வாழ்க்கை ஒரு பரீட்சை. ஜெயிக்கவும் செய்யலாம். தோத்தும் போகலாம்.
ஜெயிப்போம்னு உறுதியா நம்பு” பதில் சொல்லும்போது அப்பாவுடைய முகத்தில் ஒரு லாகவம் இல்லை. “நான் எதுத்து நிக்கப்போறது இல்ல”
“நின்னாலும்”
அவனுடைய வார்த்தைகளில் ஒரு நடுக்கம் இல்லை.
அவனுடைய விருப்பம் அதுதான் என்றால் அப்போது அம்மா அவனுக்குப் படர ஒரு பந்தல் போல இருந்தாள். “அப்படின்னா திருப்போனித்துறையில ஆர் எம் வியில் போய்ப் படிக்கலாம். செலவும் குறைவுதான்”
“இல்ல. நான் சாந்தினிகேதனுக்கு போய்ப் படிக்கணும்”
“அது வங்காளத்துலதானே இருக்கு?. அங்க போய் தனியா?”
“வாழ்க்கையில தனியா இருக்கவும் கத்துக்கணும்” தலைமை ஆசிரியரைப் பார்க்க போன போது அவர் கேட்டார்.
“என்ன படிக்கப் போற?” அவனுடைய தயாரெடுப்புகளில் அப்படி ஒரு கேள்வி இல்லாததால் அவன் மௌனத்தின் மேய்ச்சல் புறங்களுக்கு இறங்கிப் போனான்.
அப்பா சொன்னார். “விதைக்கணும்னு இறங்கிட்டா அறுத்து முடிச்சுட்டுதான் ஏறணும்”
”அதனால எல்லாத்தயும் படிக்கணும்”
“எல்லாம்னா?”
“ஓவியம். பெயிண்ட்டிங். சிற்பவேலை. புகைப்படக்கலை. அலங்கார வேலைப்பாடு”
“அப்பறம் இப்ப கேக்கற ஒரு பேரு உண்டே. அது என்ன? ஓ. பினாலே”
“அதுவும்தான்”
அன்றைக்கு முதல்முறையாக அச்சுதன் அப்பாவை அன்பொழுகும் கண்ணால் பார்த்தான்.
அப்படின்னா அப்பா ஒரு பயங்கர ஜீவிங்கற நினைப்ப வெட்டி எடுத்துடணும்” என்று நினைத்தான். என்றாலும் “அத அப்பறமா பாத்துக்கலாம்” என்று யோசித்தான். தனியாக ஊருக்குத் திரும்பி வரும் பயணத்தின் போது அப்பா கற்பனைகளில் மூழ்கி ஆகாயத்தில் சஞ்சரித்தார்.
“என்னோட மகன்! செதுக்கறதுல சிற்பங்கள செய்யறதுல அலஞ்கார வேலைப்பாட்டுல... அவர் ஆகாயத்தில் இருந்து நெஞ்சை விரித்தார்.
ஒற்றையாள் சம்பாதிக்கும் குடும்பமாக இருந்ததால் தேவைகள் அதிகமான போது அப்பா அதிக நேரமும் வயலிலும் தோட்டத்திலும் இருந்தார்.
இதனால் போன் உரையாடல்கள் அதிகமாக அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில்தான் நடந்தன.
ஒரு நாள் சாயங்காலம் உழைத்து களைத்துப் போய் அலுப்புடன் வாசல் திண்ணையில் ஒரு கோப்பை தேநீருக்காக காத்திருந்தபோது, அவரை நோக்கி தேநீருக்கு முன்னால் வந்து சேர்ந்தது மனைவியுடைய உரத்தக் குரலில் வந்த முணுமுணுப்புகள். அவை கட்டவிழுந்து விழுந்தன.
“தும்பியப் போய் கல்லெறியற? அப்பவே நான் சொன்னேன். அவனுக்கு நேரம் கிடைக்காதுன்னு. சுதந்திரம் இருக்காதுன்னு”
“எதுக்காக இதெல்லாம் கத்துக் கொடுக்கறாங்க?”
மகனுடைய தோல்விகளையும் முணுமுணுப்புகளையும் ஒன்று சேர்த்து வைத்து கூட்டி அவள் மொபைலில் இருந்து அரித்து எடுத்துச் சமைத்ததுதான் அதெல்லாம்.
“விதைக்கணும்னு இறங்கிட்டா, அறுத்து எடுத்துட்டுதான் ஏறணும்” முன்பு சொன்னதை தொண்டையில் அடக்கி அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்த ஒரு பழைய உரையாடலைத் தற்செயலாக கேட்டதை அப்பா ஞாபகப்படுத்திப் பார்த்தார்.
“என்னால முடியாது. எனக்கு முடியல. அலுத்து போயிட்டேன். அப்பாவப் பாத்துதான் எனக்கு இப்பப் பயமே. அப்பா சொன்னத படிச்சாலே போதுமா இருந்துச்சு. இது ஒரு பழி வாங்கற வேல”
“நேருக்கு நேரா சொன்னா போதும்”
“அதெப்படி? வீட்டுக்கு வர்றதுக்கு கூட நேரமில்ல?”
“வந்துடட்டுமான்னு கேட்டா க்ளாஸ் இல்லயா? பரீட்ச இல்லயா? இப்ப படிக்க வேணாமா? பரீட்ச சமயமில்லயா? காசு வேணாமா?” இப்படி ஏராளமான கேள்விக்கணைகள்.
“அத பத்தி நீ கவலப்படாத. நீ வா”
“டிக்கெட்டுக்கு காசு?”
“அம்மா தரேன்”
“மகனோட படிப்புக்காக உச்சி வெய்யில்லயும் வேல செஞ்சு உருகறப்ப மர நிழல் அப்பாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
“வா. இந்த நிழல்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு போ” எதுக்கும் நேரமில்ல.
நான் வெய்யில்ல உழச்சாதானே அவனுக்கு நிழல் கிடைக்கும். அவன் வானம் முட்ட வளர்றப்ப அந்த நிழலே எனக்கு போதும்”. மொபைலைப் பத்தியும் இண்டர்நெட்டப் பத்தியும் இ மெயில்லப் பத்தியும் ஒன்னும் தெரியாதுன்னாலும் அப்பா லேண்ட் போன் மூலமா துல்லியமா எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டிருந்தார்.
”என்னோட மகன் அச்சுதன்!” அவன் எல்லோருடைய நம்பிக்கையாக இருந்தான். எதயாச்சும் சாதிப்பான். செய்யணும். பெரிய ஆளா ஆகணும்” அப்பாவுடைய பதிலில் கல்லின் உறுதி இருந்தது.
“நான் ஆவேனா?”. அவனோ காற்றில் அலையும் தீபம் போல இருந்தான்.
“அவன் ஆவான். என்னோட வியர்வ இல்லயா” அவனிடம் இதைச் சொல்லவில்லை என்றாலும் வயல்வெளியில் காற்றோடும் பறவைகளோடும் வண்ணத்துப் பூச்சிகளோடும் அப்பா இதையேத்தான் ஜெபித்துக் கொண்டிருந்தார்.
ஒரு விடுமுறை நாளில் அச்சுதன் அப்பாவிடம் பணிவோடு கேட்டான்.
“அப்பா. நீங்க சொல்ற மாதிரி ஆகலைன்னா?.
“ஆத்தக் கடக்கறவன் நீந்தாம எப்படி அதத் தாண்டுவான். நீந்தி நீந்தி அந்தப் பக்கம் கரையிலேர்ந்து இந்தப் பக்கம் கரைக்கும் வருவான். நீயும் நீந்து”
“ஏன் அப்பா என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கறாரு” அவன் யோசித்துக் கொண்டிருந்த போதே அப்பா வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சக் கிளம்பிப் போய்விட்டார். ஆற்றில் பாதியளவுக்கு மூழ்கிக் கொண்டிருக்கும் அவனுடய படத்தை வரைந்து அப்பாவுடைய மேசை மேல் வைத்துவிட்டு அவன் விடுமுறையின் கடைசி நாளை முடித்துக்கொண்டு கிளம்பிப் போனான்.
அதற்கு அப்புறம் அவன் வீட்டுக்கு வரவில்லை.
“நான் வரல”
“அதென்ன?”
அம்மா கேட்டாள். “எனக்கு அப்பாவப் பாத்தாலே பயமாயிருக்கு. இதயெல்லாம் படிச்சுட்டு நான் எதுவுமா ஆகலைன்னா? அப்பாவோட கையில எனக்கு தீர்ப்பு சொல்ற கணக்கு வந்து சேரும்”
அந்தச் சாயங்கால நேரத்தில் அம்மாவுடன் அச்சுதன் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அவர் திடுக்கிட்டுப் போனார்.
வயலில் இருந்து வந்த அவருடைய வரவை அறியாமல் அவளுடைய போன் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.
“அம்மாக்குதானென் மேல பாசம். அப்பாக்கு என் மேல அன்பு இல்ல. நான் டாக்டராவோ எஞ்ஜீனியாராவோ ஆகல இல்லயா? நான் எதயும் சாதிக்கல இல்லயா? நான் வீட்டுக்கு வந்தா அப்பா எங்கிட்ட பேசறது இல்ல. என்னப் பாக்கக் கூடாதுங்கறதுக்காகதான் அவரு எப்பவும் வயல்லயும் தோட்டத்துலயும் இருக்காரு. அப்பா எம்மேல கொஞ்சம் அன்பு காட்டக்கூடாதா?”
அதை கேட்டபோது ஷெட்டில் வைக்க வேண்டிய கோடாரி மண்வெட்டியை எல்லாம் தோளிலேயே சுமந்து கொண்டு அப்பா வீட்டுக்கு பின்பக்கம் இருந்த திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டார்.
பிறகு ஒரு ஆத்ம பரிசோதனையுடைய வரம்போரமாக நடக்க ஆரம்பித்தார்.
“அன்பு... பசிக்கு சாப்பாடு... போட்டுக்க உடை... படுக்க ஒரு இடம்... படிக்க புத்தகம்... கஷ்டம்னா என்னன்னே தெரியாத வாழ்க்கை... இதெல்லாம் இருக்கறவங்களுக்கு இல்லாம இருக்கறதுதான் அன்பு பாசங்கறதெல்லாம்? இல்லாட்டா கட்டுப்பாடுங்கள்லேர்ந்து வெளியில போகறதுக்கு ஒரு தப்பிக்கற வழிதான் இது. இருந்தாலும் நான் அவன் மேல பாசம் வச்சிருந்தேனே?” காய்ந்து போகாமல் இருக்க விதைகளை ஈரப்படுத்திய போது மண்ணை வெட்டிய கைகளால் தலை வருடி அழுக்காக்க வேண்டாம் என்று நினைத்தபோது ”அவன் அலையாம இருக்க நான் அலைஞ்சப்ப நான் அவன் மேல அன்பு காட்டலயா?”
அவனை அவனுடைய அவசியங்களை நினைத்து கட்டிலில் அப்படியும் இப்படியுமாக புரண்டு கொண்டிருந்தார்.
“நான் அவன் மேல அன்பு காட்டாமலயா இருந்தேன்? ஆனா அத எல்லாத்தயும் வெளியில சொல்லல. பேசி பேசி இதயெல்லாம் வெளிக்காட்டல. இல்லாட்டா இதுக்கெல்லாம் நடுவுல பாசத்த காட்ட எனக்கு நேரம் கிடைக்கல. நான் உழாம இருந்திருந்தேன்னா அவன் உண்டிருக்க முடியுமா? நான் மழையில நனையாம இருந்திருந்தா அவன் குடைய எப்படி சூடியிருப்பான்? இது அன்பு இல்லயா? அம்மாவோடு அவன் பேசி முடித்ததைத் தெரிந்து கொண்ட அவர் ஆத்மப் பரிசோதனைக்கு நடுவில் கேட்டார். “சொந்தக்கால்ல நின்னப்பறம்தான் அவருகிட்ட நாலைஞ்சு வார்த்த பேசணும். கேள்வி கேக்கணும்.
“அது என்ன?”
“இப்பவே சொன்னா அப்பா என்னோட படிப்புக்கு காச அனுப்பாம விட்டுட்டாருன்னா?” அதற்கு அம்மாவுடைய பதில் வெறுமையாக இருந்தது.
கீறல் விழுந்த அப்பாவுடைய மனதில் அப்போது “இவன் ஏன் இப்படி இருக்கான்?” என்று யாரிடமும் சொல்ல முடியாத பூகம்பங்கள் வெடித்தன.
எண்ணங்கள் கடல் சீற்றம் போல அலையடித்தன. “பிறகு மகன் தன்னைத் தனதாக்கிக் கொள்ள தன்னை அழைக்கும் போது அதை விலக்கிவிட்டு நிழல் கொடுக்க முடியாமல் ஒதுங்கி நிற்க வேண்டி வருமா என்ற சிந்தனைக் கடலில்
மூழ்கினார். என்றாலும்...!!!
பல காலங்களுக்கு பிறகு ஒரு சாயங்கால நேரத்தில் நைந்து நொறுங்கி நடுங்கும் கைகளோடு ஒரு சேனலுடைய பட்டனை அமுக்கிய போது எதிர்பாராமல் அவர் மகனைப் பார்த்தார். எதிர் திசையில் ஒரு பேட்டி எடுக்கும் ஆள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முயன்றார் என்றாலும் சரியாக காது கேட்காது என்பதால் பலவற்றையும் அவரால் கேட்கமுடியவில்லை.
இருந்தாலும் கடைசி கேள்வி! ஒரு இளம் வயதுக்காரனுடைய துல்லியத்தன்மையுடன் அப்பா அந்தக் கேள்வியையும் அதற்கு வந்த பதிலையும் உன்னிப்பாகக் கவனித்தார்.
“கடசியா ஒரு கேள்வி கேக்கட்டுமா?. – ஒரு ஒரு பயங்கர உயிரினம்னா எத சொல்வீங்க?”
“அப்பா!”