லம்போதரன் உன்னி என்பதுதான் அவனுடைய பெயர். என்றாலும் ஊர்க்காரர்கள் வைத்த செல்லப்பெயர்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பொட்டன் உன்னி. அங்காரக்கடவின் பொதுச்சொத்து . நன்றாக மெலிந்த உருவம். ஆரோக்கியம் இல்லாதவன் போன்ற தோற்றம். என்றாலும் காரியத்தில் அப்படியில்லை. தேவைப்பட்டால் ஒரு எதிரியை ஒத்தையாக நின்று எதிர்க்கும் துணிச்சலும் அவனுக்கு உண்டு. இருந்தாலும் தனக்கு ஏதோ சில குறைபாடுகள் உள்ளது என்ற
அடிப்படையில்லாத தோணல்தான் அவனை ஒரு பொதுச்சொத்தாக மாற்றியது.
எப்போதும் யாராவது ஒருவரின் நிழல் அவனுக்குத் தேவை. ஆனால், யாருக்கும் ஒரு பாரமாக இருப்பதில்லை. அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை என்றாலும் எல்லோரும் அவனுடைய சொந்தக்காரர்கள் என்பதுதான் நிதர்சனமான சத்தியம். வெளிச்சம் விழுந்தால் உடனே குளித்துத் தோய்த்ததை போட்டுக் கொண்டு கிராமத்தில் எந்த ஒரு டீக்கடைக்குள்ளும் கூச்சமில்லாமல் நுழைவான். விறகு வெட்டுவது, தண்ணீர் இறைப்பது, எச்சில் பாத்திரங்கள் கழுவுவது என்று எல்லா வேலைகளையும் கடைக்காரர் கேட்காமலேயேச் செய்வான்.
அலமாரியில் தயாராக இருக்கும் ஆவி பறக்கும் பலகாரங்களில் இஷ்டமுள்ளதை இஷ்டப்பட்ட அளவுக்கு அவனே எடுத்துச் சாப்பிடுவான். கேள்வியும் இல்லை. பதிலும் இல்லை. வரவும் செலவும் இல்லை. கடன் கொடுப்பதும் வாங்குவதும் இல்லை. முன் கூட்டியே உழைப்பைச் செலவிட்டதால் யாருக்கும் ஒரு புகாரும் இல்லை.
சொல்லி வைத்தது போல நூல் பிசகாமல் எல்லா வேலைகளும் ஒழுங்காக நடக்கும். ஒவ்வொரு நாளும் அவன் தங்களின் கடைக்கு வர வேண்டுமே என்பதுதான் டீக்கடைக்காரர்கள் எல்லோருடைய பிராத்தனை. இதற்குப் பின்னால் சுய நலமும் கலந்திருந்தது. அவன் கால் வைக்கும் கடையில் அன்றைக்கு வியாபாரம் அற்புதமாக நடக்கும். அது ஒரு ராசி என்ற விஷயத்தில் டீக்கடைக்காரர்களுக்கிடையில் ஒரு சந்தேகமும் இல்லை. “வேல எதையும் செய்ய வேணாம். சும்மா வந்து இருந்து உனக்கு வேணுங்கறத சாப்பிட்டு போலாம் இல்லயா?” என்று எல்லா டீக்கடைக்காரர்களும் கேட்பதுண்டு. என்றாலும் உழைக்காமல் கிடைக்கும் சோறு அவனுக்கு சுவைக்காது.
ஒவ்வொரு நாளும் நுழைய வேண்டிய கடையைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள ரகசியம் அங்கே இருந்து வரும் வாசனைகளில்தான் உள்ளது என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும். அன்றைக்கு அந்தக் கடைக்காரனின் நாள். பகல் வேளைக்குக் கோயிலில் பிரசாதமும் பாயசமும்தான் சாப்பாடு. இரண்டையும் சேர்த்து குழைத்து சாப்பிடுவதுதான் அவனுடைய வழக்கம். இல்லாவிட்டால் அன்றைய பயணத்துக்கு கூட்டிக்கொண்டு போகும் ஆள்தான் அவனுக்கு வேண்டியது எல்லாவற்றையும் செய்வான். அவனை கூட்டிக் கொண்டு போகும் எந்த ஒரு காரியமும் நூற்றுக்கு நூறு வெற்றியில்தான் முடியும். அதனால் அந்த வகையிலும் அவனுக்கு பெரிய கிராக்கி. நடுவில் அபூர்வமாக, சில பைத்தியக்காரத்தனமான கேள்விகளை கேட்பதுண்டு.
நெரிசலான ரோடை தாண்டி செல்லும்போது அம்மா ஒன்றரை வயதுள்ள குழந்தையைக் கவனிக்காமல் ஏன் முன்னால் நடந்து போனாள்? அரசாங்க பஸ், ஸ்டாப்பில் நிறுத்தாமல் அரை பர்லாங் அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ மாறி நிறுத்துவது ஏன்? வாட்டர் அத்தாரிடியினரின் பைப் உடைந்து போனதால் உருவான வானவில்லை ஒரு அக்கறையும் இல்லாமல் ஊர்க்காரர்கள் எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள்? இப்படி சில வேண்டாத கேள்விகள். இதனால்தான் ஊர்க்காரர்கள் அவனுக்கு பொட்டன் என்ற செல்லப்பெயரைச் சூட்டினார்கள்! எல்லாரும் அதை ஆதரித்தார்கள்!
காரியங்கள் இப்படி போய்க்கொண்டிருந்தாலும் அவனுடைய ஆராதனை கதாபாத்திரம் நகுலன் அண்ணன்தான். அண்ணனுக்கு எந்த அவசியமும் இல்லையென்றால்தான் அவனுடைய உதவி மற்றவர்களுக்குக் கிடைக்கும். பேச்சையே ஆயுதமாக்கி சூழலில் நிரந்தரமாக போராட்டக் குணத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஆள்தான் நகுலன் அண்ணன். வெள்ளை நிறக் காட்டன் சட்டை காற்றில் அசைந்தாடினால் “ச்சடேல்!” என்று வேட்டு போல சத்தம் வரும். ஒற்றை
வேட்டி போட்டுக் கொண்டு காட்சி தரும் அண்ணன் நீதி நியாயத்துக்காக போராட அவதரித்திருக்கும் அரசியல் கதாநாயகன். உன்னியுடைய கண் கண்ட கடவுள் அவன்தான். அண்ணனுடைய தனிப்பட்ட ஆளுமையும் ஆற்றல் மிக்க செயல்பாடும் எல்லாம் உன்னியை இயக்கிக் கொண்டிருந்தது. வெய்யில் கொளுத்தும் சாலை வழியாக எண்ணற்ற முழக்கங்களுமாக அண்ணன் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் போது அவனுக்குப் பின்னால் உன்னி இருப்பான்.
கோஷம் போடும் வாக்கியங்களின் பொருள் எதுவும் தெரியாது என்றாலும் மிக சீரியஸான காரியங்கள்தான் அவை எல்லாம் என்ற ஆவேசத்தில் உன்னி அதே படி திரும்பி சொல்லி ஆகாயத்தை நோக்கி முஷ்டியை உயர்த்துவான். எங்கேயாவது ஊழல் அக்கிரமம் பாரபட்சம் நடப்பது தெரிந்தால், தருமத்தை நிலைநாட்ட அங்கேயெல்லாம் நகுலன் அண்ணன் அவதரிப்பான்.
நீதியை நடைமுறைப்படுத்தாமல் திரும்புவதில்லை. இதுதான் அண்ணனுடைய சரித்திரம். பூமி அறிவியல். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசு இயந்திரத்தோடு நெருக்கமான உறவு வைத்துக் கொள்ளும் நகுலன் அண்ணனுக்கு ஊரில் பதில் இல்லாத சகல பொதுக்காரியங்களுக்கும் இருக்கும் ஒரே பதில். இப்படிப்பட்ட நகுலன் அண்ணனை தவிர வேறு யாருக்கு உன்னி ஆதரவு காட்டுவான்? இந்த ஆராதனையுடைய அடித்தளத்தில் இவன் பொட்டன் இல்லை என்று சிந்திப்பவர்களும் உண்ண்டு. அண்ணணோடு இருக்கும் கூட்டுறவை தவிர உன்னிக்கு வேறு ஒன்றே ஒன்றுதான் இருந்தது.
அதுதான் கிராமத்தை இரண்டாகப் பிளந்து ஓடும் மாலதி ஆறு. அதில் நீராடுவதுதான். முங்கும்போது ஆள் ஆற்றில் பாய்ந்து ஒரே குதி! முங்கிய பல மணி நேரம் கழித்து நீருக்குள் இருந்து மேலேறி வருவான். நீர் சாகசங்களில் ஊர் இளைஞர்களின் ஹீரோ அவந்தான். சில நேரங்களில் பெண்கள் குளிக்கும் படித்துறைக்கு சமீபத்தில் ஆள் முங்காங்குழி போட்டு கிடப்பது அரண்மனை ரகசியங்களை உளவு பார்க்கத்தான் என்று ஒரு கருத்தும் ஊரில் உண்டு. இதைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துகள் இருந்தன என்றாலும் தப்பான எண்ணம் அல்ல அதற்கு பின்னால் இருப்பது என்பதில் ஊர்க்காரர்களுக்கு கருத்து வேறுபாடு எதுவுமில்லை. நீதிதேவதையின் ப்ரியமான சகோதரனான அண்ணனின் நேர் வாரிசான தான் அப்படியெல்லாம் தப்பான வழிக்கு போகக்கூடாது என்ற உறுதியான உணர்வுடன் இருந்தான். அது அவனுக்குள் எப்போதும் இருந்தது.
மீனை பிடித்துக் கொண்டு வரும் அவனைப் பார்த்தால் அது அண்ணனுடைய வீட்டுக்குத்தான் போகிறது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அன்றைக்கு சாப்பாடு அங்கேதான். ஆற்று மீன் கிடைக்காத போது இரவு சாப்பாட்டு விஷயத்தில் எந்த ஒரு அவனுக்கு ஒரு முன் நிபந்தனையும் அவனுக்கு இல்லை.
காலையில் ராயப்பன் அண்ணனுடைய கடையில் வாசனை வீசும் அப்பத்தையும் கோழிக்கறியையும் சாப்பிட்டு வழக்கம் போல தோய்த்து காய வைத்துப் போட்டுக் கொள்ளும் உடைகளின் வேஷத்தில் தயாராக நிற்கும் அவனைக் கூட கூட்டிக்கொண்டு போக பலர் முயற்சி செய்தார்கள் என்றாலும் அவன் பிடி கொடுக்கவில்லை. காரணம் கேட்கவேண்டியதில்லை. அண்ணனுடன் தலைநகருக்கு துணையாக போவதற்குரிய நிற்புதான் அது. யாராக இருந்தாலும் ஒரு
தடவை அவனை திரும்பிப் பார்ப்பார்கள். கேவலமான உடல் வேஷத்துக்கும் அப்பால் ஏதோ ஒன்று அந்த முகத்தில் இருந்தது!
அம்மா அப்பாவைப் பார்த்த ஞாபகம் அவனுக்கு இல்லை. நினைவு தெரிந்த போது கோயில் சுற்றுவட்டாரத்தில்தான் இருந்தான். ஆறும் கோயிலும் டீக்கடைகளும் வாசிக்கத் தெரியாது என்றாலும் வாசிப்பதைக் கேட்க முடியக்கூடிய திறமையும் வாசகசாலையும்தான் அவன் காட்சி தரும் வாடிக்கையான இடங்கள். கோயிலின் மடப்பள்ளிக்கு வெளியில் இருக்கும் சரிவில்தான் தூக்கம். ராத்திரி எதிர்பாராமல் ஒற்றைப்படும் யாருக்காவது படுத்துக்கொள்ள துணையாக நம்பகமான ஒரு ஆள் அவசியம் என்றால் அது அவன்தான்.
“வாடா. ஏறு”. அண்ணன் உத்தரவிட்டான். காரில்தான் பயணம். டிரைவிங் சீட்டில் இருக்கும் ஆளுடைய ஏதோ ஒரு காரியத்தைச் சாதிப்பதற்கு உள்ள பயனம்தான் அது. “நீ பின்னால் இருடா”. முன் கதவைத் திறக்க முயற்சித்த உன்னியை வண்டியின் சொந்தக்காரன் பின்னால் வரச்சொல்லி ஒரு கை கொடுத்து உதவினான். அப்போதுதான் ஆள் யாரென்று உன்னிக்கு தெரிந்தது.
“ஓ! இது வேற யாரும் இல்ல. அண்ணனோட மூத்த அண்ணன் நாராயணன் குட்டி. ஊரில் போதுமான அளவுக்கு காசு பணம இருக்கற ஒரு ஆள்” அவன் உன்னியைப் பார்த்துச் சிரித்தான். கார் முன்னோக்கிப் பயணித்தது. சங்கோஜம் எதுவும் இல்லாமல் பொது இடத்தில் இருந்து கொண்டு புகை பிடிக்கும் ஒன்று இரண்டு ஆட்காரர்களை அண்ணன் கோபத்துடன் பார்ப்பதைக் கண்டு உன்னி ஆமோதித்தான்.
ஒரு ஆள் காரித் துப்பி அசிங்கமாக எதோ பேசியதைப் பார்க்காதது போல நடித்தான். இடடு பக்கம் ஓவர் டேக்கிங். இண்டிகேட்டருடைய தவறான சிக்னல். இது போல, போக்குவரத்து அத்துமீறல்களின் திருவிழா சாலை முழுவதும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும்போதும் காரில் இருந்து இறங்கி எதிர்ப்பு தெரிவிக்காததில் அண்ணன் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று உன்னிக்குத் தோன்றியது. அதற்கேற்ற முக பாவங்கள். உடல் மொழிகள் எல்லாவற்றையும் வெளியில் காட்டி உன்னி கௌரவத்தோடு காரில் இருந்தான்.
“நீ ஏன் காபி குடிக்கக் கூப்பிட்டப்ப வரல?”. நாராயணன் திரும்பிப்பார்த்து உன்னியிடம் கேட்டான்.
“ஓ. அவன் வரமாட்டான். வேலை. கூலி. அப்பறம் சாப்ப்பாடு. இதுதான் அவனோட ஒரு லைன்”
சும்மா கிடைக்கறது எதுவும் அவனுக்குப் பிடிக்காது. அதனாலதான் ஊர்க்காரங்க இவனை பொட்டன்னு கூப்பிடறாங்க?” நகுலன் சொன்னான்.
“இவன் ஆளு புத்திசாலின்னு கேட்டிருக்கேன்” நாராயணனுடைய புகழ்ச்சியில் உன்னி லேசாக மயங்கினான்.
“அது உண்மைதான். கண்ணை மூடிக்கிட்டு நம்பலாம். ஒரு அனா கூட தப்பா இருக்காது. கோடி ரூபா கொடுத்தனுப்பினா ஒரு அனா பைசா கூட குறையாது. சொல்ற இடத்துல கொண்டு போய்ப் பத்திரமாக் கொடுப்பான். சொல்ற ஆளு கிடைக்கலைன்னா ஆளு கிடைக்கற வரை ரகசியமாப் பூட்டி சங்கதிய இவன் பத்திரமா பாதுகாத்து வச்சுப்பான். எனக்கு அனுபவம் இருக்கு. சும்மா ஒன்னும் இல்ல. ஊர்க்காரங்களுக்கு இவன் செல்லப்பிள்ள ஆனது!” நாராயணனோட இந்த அபிப்பிராயமும் உன்னிக்கு ஒரு பாராட்டாகவேத் தோன்றியது.
ஒரு காரியத்துக்குக் கூட கூட்டிகிட்டு போக அசல் ஒன்னாம் தரமான ஆளு. போன காரியம் எப்ப நடந்துச்சுன்னு கேட்டாப் போதும்” நகுலன் தொடர்ந்தான். “அது யாருக்குதான் தெரியாது? அதனாலத்தானே நான் இன்னிக்குக் காரியத்துக்கு இவனை முன்னாடியேப் புக் செஞ்சு வச்சேன்”
“ஹிஹி...”. பலகை போல இருந்த பற்களை வெளியில் காட்டிச் சிரித்தான். புகழ்ச்சிகளின் முடிவில்லாத புதைகுழியில் உன்னிக்கு மூச்சு முட்டியது. திறந்து கிடந்த வாயில் நீண்ட நேரம் தங்கியிருந்த புன்முறுவலில் அது கலந்திருந்தது. எதனாலயோ வழிந்த கண்ணீரை அவன் துடைத்துக்கொண்டான்.
“ரொம்ப பெரிய உபகாரம் அவசியத்துக்கு மட்டும்தான் வாயத் திறப்பான். அவசியம்ன்னு ஒன்னும் இல்ல. புகாருங்க இல்ல. ஒரு வேலய கொடுத்தா நேரா நேரத்துக்கு செஞ்சதுக்கு சன்மானம் தரணும். ஆச்சரியப்படறதுக்கு ஒன்னும் இல்ல. தம்பி நீதானே அவனோட ஹீரோ”
இந்த தடவை நாராயணன் தம்பியை புகழ்ந்தான். அந்தப் புகழ்ச்சியெல்லாம் தனக்கு எதுவும் இல்லை என்பது போல நகுலன் பேசாமல் இருந்தான். கார் தலைநகருக்கு அருகில் வந்துவிட்டது. நண்பகல் வெய்யிலில் வாகன வியூகத்தில் சிறிய புள்ளியாக அந்த வாகனம் ஊர்ந்தது.
சிக்னல்களிலும் தடைகளிலும் வேண்டிய அளவு பொறுமையைக் கடைப்பிடித்துச் சென்று கொண்டிருக்கும் அந்தக் கறுப்பு அரண்மனைக்குள் இருந்த உன்னிக்கு முன்பொரு காலத்தில் முதல்முதலாக நகரக் காட்சிகளைப் பார்த்த போது தன் மூளையில் ஏற்படுத்திய ஆச்சரியங்களை இப்போது ஏற்படுத்தவில்லை என்பதை உன்னி உணர்ந்தான்.
நகுலனுடைய நகர விஜயத்துக்கான உத்தேசம் என்ன என்று உன்னிக்குத் தெரியாது. யாருக்கோ என்றோ கிடைக்க வேண்டியிருந்த ஏதோ ஒரு சலுகையை அதிகாரிகள் தாமதப்படுத்தவோ அல்லது தடையோ செய்திருப்பார்கள். இல்லாவிட்டால் நேரான வழியை விட்டு, எதுவோ எங்கேயோ நடந்திருக்கிறது.
இதில் இரண்டில் ஒன்றைப் பார்க்கவே சொந்தமாக வாகனம் இல்லாத நகுலன் அவருடைய அண்ணனோட இப்ப தலைநகருக்கு வராரு. ஆனால் எதிர்பார்த்தபடி மந்திரியுடைய ஆபீசில் சென்று அந்தப் பயணம் முடியவில்லை. அப்புறமும் சில ஏற்ற இறக்கங்கள். கார் கார்ப்பரேஷன் தலைவருடைய வளாகத்துக்கு செல்லும் வழியில் நுழைந்தது.
தலைவருடைய தனி அதிகாரி நகுலனை பார்த்தவுடன் வணக்கம் சொன்னான். கேட்டான், “எப்ப சிட்டிக்கு வந்தீங்க அண்ணே?”
“அண்ணன் கூப்பிட்டவுடனேயே புறப்பட்டதுதான்”
“அப்படியா? இதானா நீங்க சொன்ன ஆளு?” அவன் கேட்டான்.
“ஆமாம். என்னோட பெரியண்ணன். நாராயணன் குட்டி”
“இந்தத் தடவை நகுலன் அண்ணனோட ஸ்வரம் லேசாக இடறியதோ?” என்று உன்னிக்கு ஒரு சந்தேகம். “ஓ. அப்படியெல்லாம் இல்ல. எனக்குதான் தோணியிருக்கும்” அவர்கள் ஆபீஸ் அறைக்குள் நுழைந்தார்கள்.
“அலெக்ஸ். இது நம்பளோட சொந்த கேஸாக்கும்” நகுலன் குரலை தாழ்த்தினான்.
“அண்ணே. எல்லா காரியமும் பக்கா ரகசியமா இருக்கணும். புரியுதா?”. அலெக்ஸ் இன்னும் மெல்லிய ரகசியக் குரலில் சொன்னான்.
“அது எனக்குத் தெரியாதா என்ன?”. அண்ணன் இப்படி குரலை தாழ்த்திப் பேசுவது உன்னிக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதில் காரணமில்லாத ஒரு சங்கடம் அவனைப் பொதிந்தது. ஒரு வலி. அலெக்ஸின் கண்கள் சந்தேகத்தோடு தன்னை உற்றுப் பார்ப்பதை உன்னி புரிந்து கொண்டான். “அவனப் பாத்து பயப்படவேணாம். நம்ம ஆளு.”
அவனுடைய அங்கலாய்ப்பை உணர்ந்தது போல நகுலன் இடைமறித்துச் சொன்னான்.
“அலெக்ஸ். இது என்னோட சொந்த அண்ணன் காரியம். ஞாபகத்துல வச்சுக்கணும். நேர் வழியில போனா ஜென்மத்துல அவன் ஒன்னும் நடக்காது. லிஸ்ட் வர்றப்ப அதுல இவனுக்கு நிச்சயமா ஒரு இடம் வேணும்.”
“புரியுது... புரியுது.. இப்ப காலம் எவ்வளவு மோசமா இருக்கு? ஏதாச்சும் வெளிய தெரிஞ்சா என்ன செய்யறது?”. அலெக்ஸ் யோசனையில் ஆழ்ந்தான்.
“நீ தைரியமா இரு. நான் இருக்கேன் இல்லயா?” அசாதாரணமான அந்தக் காட்சிகளில் ஆதி அந்தம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு நிற்பது போல உன்னிக்குத் தோன்றியது. நெற்றியில் சுருக்கங்கள். வியர்வைத் துளிகள்.
“அண்ணா. அத இங்க எடுத்துகிட்டு வா”. நாராயணன் உடனே பல்லைப் பற்களை வெளியில் காட்டி புன்முறுவல் முறிந்து போகாமல் அவ்வளவு நேரமும் மௌனம் பூண்டிருந்துவிட்டு நெஞ்சோடு சேர்த்து பிடித்துக் கொண்டிருந்த ப்ரீஃப் கேஸை எடுத்து மேசை மேல் வைத்தான்.
“திறக்கட்டுமா? முழுக்க இருக்கு.” திறக்கப்பட்ட ப்ரீஃப் கேஸின் வயிற்றில் செலவழிக்காமல் கிடக்கும் புது வாசனை மாறாத காந்தி தலைகளுக்கு மேல் உன்னியுடைய பார்வை சென்று பதிந்தது. கண்களில் இருந்து மூளைக்குப் பாய்ந்த அதிர்ச்சியில் உன்னி எரிவது போல உணர்ந்தான்.
வந்த வேலையை முடிப்பதில் மும்முரமாக இருந்த அவர்கள் திடீரென்று உந்தித்தள்ளிய ஒரு உள்ளுணர்வில் வெளியில் ஓடிய உன்னியை பார்க்கவில்லை. கண்களால் பார்த்த காட்சியை மறுபடி மனதுக்குள் அசை போட்டு நடந்ததெல்லாம் உண்மைதான் என்று உன்னி உறுதி செய்ய முயன்று கொண்டிருந்தான்.
வாகனங்களுக்கும் மக்கள் கூட்டத்துக்கும் நடுவில் சாலை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு சமநிலை தவற விட்டு அவன் நடந்தான். ஓடினான். பறந்தான். முடிவில்லாத வழிகள். சுற்றி உள்ளது எல்லாம் வினோதக் காட்சிகள். பெரிய சத்தத்துடன் அப்போதே வெடித்துவிடும் என்று தோன்றிய நெஞ்சை அவன் அமுக்கிப் பிடித்துக் கொண்டான்.
எங்கே என்றேத் தெரியாமல் அவன் ஓடினான். கடற்கரையில்தான் அந்த ஓட்டம் நின்றது. கடல் ஒரு குழம்பிய குளத்தைப் போல முன்னால் சுருங்கிக் கிடந்தது. அவன் அதில் இறங்கினான். இறங்க இறங்க அதன் ஆழம் அதிகமானது. கடல் இரண்டு கைகளையும் நீட்டி அவனை ஏற்றுக் கொண்டது.
சுய அர்ப்பணிப்பின் குளிர்ச்சியில் உள்ளிருந்த உஷ்ணப்பிரதேசங்கள் ஜில்லிட்டபோது கடல் அவனுடைய மாலதி ஆறாக மாறியது.
நிர்வாணமான பாதங்களில் முத்தம் கொடுக்கும் மீன்கள் அவனைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தன. தான் இப்போது தமாஷுக்காக ஆற்றின் கருவறையில் முங்காங்குழி இட்டு கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது.