ஆள் கூட்டத்தால் ப்ளாட்பாரம் நிரம்பி வழிந்தது. வண்டி வந்து சேர்ந்தவுடன் கடையில் இருக்கும் தயிர்ப் பானைகள் போல கூட்டமும் நெரிசலும் அதிகமானது என்றாலும் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு சரஸ்வதி வண்டிக்குள்
பாய்ந்து ஏறினாள். பின்னால் கணவனும் ஏறினான். உட்கார இடம் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
நிற்க இடம் கிடைத்தாலே போதும். அந்த அளவுக்கு ஆட்கள் அந்த சிறிய இடத்தில் முண்டியடித்துக் கொண்டு இருந்தார்கள்.
“எப்படி சார் நிக்கறது இங்க?” ஒரு ஆள் முணுமுனுத்தான்.
“தலய சாய்க்காம நிக்கணும்” இன்னொரு ஆள் சொன்னான்.
“உங்க டிரங்க் பெட்டிக்கு மேல இருக்கற என்னோட கால கொஞ்சம் இந்தப் பக்கம் எடுத்துக்கட்டுமா?” இது வேறொரு ஆளுடைய வேண்டுகோள்.
“என்னோட தொப்பிக்குள்ளதானா உங்க எண்ணை பாட்டில வப்பீங்க?” இன்னொரு ஆளின் புகார்.
இதற்கு நடுவில் குழந்தைகளின் கூட்டு அலறல்.
பறந்து பறந்து மேல் நோக்கி போகும் சிகரெட் புகை. இந்தக் கூட்டத்துக்கு நடுவில் புகுந்து நின்ற போது சரஸ்வதி நினைத்தாள்.
“என்னோட குழந்தய எங்க படுக்க வைக்கறது?”
அவள் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.
“குழந்தய இங்க கொடு”
அதற்கு சரஸ்வதி ஒப்புக்கொள்ளவில்லை.
“வேணாம்”
“கொடுங்கறேன். குழந்தய தூக்கிட்டு நிக்க முடியாது”
“முடியும்”
“ கொடுன்னு சொல்றேன்”
அவள் குழந்தையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
நான்கு பெரிய அண்டாக்களை வைத்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிழவி இந்த உரையாடலை கேட்டாள்.
”இந்த கூட்டத்துல எவ்வளவு நேரம் குழந்தய வச்சுகிட்டு நிப்ப? இப்படி இந்தப் பக்கமா வந்து நில்லு. எங்க போறம்மா?”
“பழனிக்கு. குழந்தைக்குச் சோறூட்ட”
“இதுதான் முத குழந்தயா?”
“ஆமாம்”
அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். “இந்த கேள்வியோட அர்த்தம் என்ன? என்னைப் பாத்தா அதிகமாப் பெத்தவ மாதிரி தோணுதா? இந்தக் கிழவிக்கு கண்ணு சரியாத் தெரியல”
வண்டி நகர ஆரம்பித்தபோது ஒரு நிசப்தம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். செய்தித்தாள் வாசிப்பு, பெட்டியைத் திறந்து பரிசோதனை, வெட்டித்தனமான பேச்சுகள். இப்படி பல பல வேலைகளில் மூழ்கினார்கள். குழந்தை அப்போதும் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தது.
ஜன்னல் கம்பிகள் வழியாக வெளியேப் பார்த்தாள்.
அமைதியாக நின்று கொண்டிருந்த கணவனின் மீது அவளுடைய கண்கள் பதிந்தன. நினைத்துப் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் காரியங்கள்தான் வந்து சேர்கின்றன. இந்த மனிதன் அவளைக் கல்யாணம் செய்துகொள்வான் என்று அவளோ அவனோ அக்கம் பக்கத்துக்காரர்களோ நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் அவர்கள் ஒரு நாள் கல்யாணத்தின் மூலம் சொந்தபந்தங்களாக மாறினார்கள்.
இதோ அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. விதித்தது போலத்தான் எல்லாம் நடக்கும். அவள் தன் விஷயத்தில் என்னவெல்லாம் ஆசைப்பட்டிருந்தாள்! என்னவெல்லாம் எதிர்பார்த்திருந்தாள்! பதினைந்து வயசாகும் போதே அவளை இன்ன்னொரு ஆளுக்கு என்று நிச்சயித்து வைத்து விட்டார்கள். அவளுக்கு அந்த ஆளைப் பிடிக்காமல் இல்லை.
“சரசு” என்று ஒலிக்கும் அவனுடைய ஒவ்வொரு அழைப்பிலும் தேனூறியது. அந்த வார்த்தைகள் அவனுடைய ஆத்மாவின் ஆழத்தில் இருந்து வருகின்றன என்பது அவளுக்கும் தெரியும். அவளோ சேகரனை பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப்பட்டு நிற்பாள். அவனைப் பார்க்காத நாளெல்லாம் விடியாத நாட்கள். அவள் அவனிலும் அவன் அவளிலும் வாழ்ந்தார்கள். இப்படி எத்தனையெத்தனை நாட்கள்! அவன் காலேஜில் படித்துவிட்டுத் திரும்பி வந்த நாள் ஞாபகத்திற்கு வந்தது. அவன் அப்போது எவ்வளவு உல்லாசமானவனாக இருந்தான்! வீட்டுக்கு வந்த அன்றே அவன் அவளைப் பார்க்க ஓடிவந்தான். அது நினைவுக்கு வந்தது.
“சரசு மெலிஞ்சு போயிட்டியே?”. அந்த வார்த்தைகளில் வேதனைப்படும் இதயம் வெளிப்பட்டது. ஆனால் எவ்வளவு பட்டென்று அவன் மாறிப்போனான்? ஆரம்பத்தில் அரசியல் செயல்பாடுகளின் அருகில் நடந்தான். அதை சரஸ்வதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவ்வப்போதும் சேகரனுடைய வீட்டில் இருந்தவர்கள் அதை லேசாக எதிர்த்தனர்.
ஆனால் அவனை மாதிரி அறிவும் ஆற்றலும் இருக்கும் இளம் வயதுக்காரர்கள் சும்மா இருக்கமுடியுமா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக சேகரன் ஒரு முழு அரசியல்வாதியாக மாறினான். காலை எழுந்தவுடன் வெளியில் ஓடினான். கட்சி ஆபீசுக்குள் நுழைவதுதான் முதல் வேலை. பிறகு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம். சொற்பொழிவுகளின் தொடர். ஊரெங்கும் நிகழ்ச்சிகள். போலீஸின் கனத்த நோட்டுப் புத்தகத்தில் அவனுடைய பெயரும் பதிந்தது.
அம்மா மகனிடம் சொன்னாள். “மகனே. உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தேன் தெரியுமா? வயசான காலத்துல எனக்கு நீ மட்டும்தான் ஒரே ஆதரவு. இப்படி வீட்ட மறந்து ஆட்டம் போடாத”. அம்மாவின் வற்புறுத்தல் மேலும் மேலும் இறுக்கமான போது அவன் அவளை ஆவேசத்தோடு சமாதானப்படுத்தினான்.
“அம்மா நீ ஒரு குடும்பத்த பத்தி மட்டும்தான் யோசிக்கற. நான் ஆயிரமாயிரம் குடும்பங்கள பத்தியும் பதினாயிரமாயிரம் அம்மாக்களப் பத்தியும் யோசிக்கறேன்”
“மகனே. உன்னை பெத்தது நாந்தானே?”. பார்வையில்லாத அம்மாவோடு வாதாடி ப்ரயோஜனம் இல்லை என்று நினைத்த சேகரன் வெளியில் இறங்கி நடந்தான்.
அவன் வெளியில் இறங்கியதுதான் தாமதம் அரசியல்காரர்கள் அவனை முற்றுகையிட்டனர். தலைவர்களுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. “மிஸ்ட்டர் சேகர். உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு”
திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் அவனை மேலும் மேலும் சாகசங்களில் ஈடுபடவைத்தது. சரஸ்வதிக்கு இது புரிந்தது.
“அம்மா சொல்றதக் கொஞ்சம் கேளுங்க. நீங்க நடந்துக்கற விதம் அவங்களுக்கு வேதனையா இருக்கு”
“சரசு நீ அம்மாவோட கூட்டத்துலதான்”
“ஆமாம். குழந்தைகளப் பெத்து வளக்கற சுமை...”
“நான் கேக்க விரும்பல”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. முதல்ல உண்மையத்தானே சொல்லணும்?”
அதற்குப் பிறகு சேகரன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனுடைய முகபாவத்தில் கவனிக்கத்தக்க வித்தியாசம் இருந்தது.
“என்ன இவ்வளவு அவசரம்?”
“எனக்கு ஒரு கூட்டத்துக்குப் போகணும்”
“சரி. போயிட்டுவாங்க. திரும்ப வர்றப்ப இந்த வழியா வருவீங்களா?” சரஸ்வதி கேட்டபோது “இல்ல. திரும்ப வர்ற ராத்திரி பன்னிரண்டு மணியாயிடும்” அவன் கிளம்பினான்.
அந்த நாட்கள் அவளுக்கு மூச்சு முட்டுபவையாக இருந்தன. அவளுடைய மடியில் இதோ இன்னொரு புருஷனுடைய குழந்தை! தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் விதி. அவளுடைய கணவன் அவள் இருந்த இடத்திற்கு வந்தான். சேகரன் அன்று சொன்ன அந்த வார்த்தைகளை இப்போதும் அவள் ஞாபகம் வைத்திருக்கிறாள்.
சேகரனுடைய குரலும் பார்வையும் எல்லாம் காயப்படுத்துபவையாக இருந்தன.
“மன்னிச்சுக்கங்க. உங்கள நான் நேசிக்கறேங்கறத புரிஞ்சுக்கங்க” அவள் விக்கி விக்கிச் சொன்னாள். அது அவனிடம் வேண்டுவது போலிருந்தது.
“மன்னிச்சுக்கங்கன்னா அடிமைப்படுத்தறதுன்னுதான் அர்த்தம். சரசு. என் வழிகள் வேறு”
“இல்லைன்னு புரிஞ்சுக்கங்க” அவள் கதறி கதறி அழுதாள்.
“ஒரு கண்ணீர்த் துளியாலும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. அநேகாயிரம் கண்ணுங்கள்ல வழியற கண்ணீரத் துடைக்கறதுக்குத்தான் இந்த கைகள் இருக்கு. உன்னால என்னோட வழியில நடக்கமுடியாது. என்னோட வழி நெருப்பு… உன்னோடதோ இளம் காத்து. நாம பிரியலாம்”. அவளுக்குத் தலை சுற்றியது.
சேகரன் அந்த இடத்தை விட்டு வெளியில் இறங்கினான். அப்புறம் அவன் நடந்தது எல்லாம் தீயின் பாதையில்தான்.
“சரஸ்வதிக்கு குடிக்கறதுக்கு ஏதாச்சும் வேணுமா?” கணவன் கேட்டான்.
”வேணாம்”
“ஏதாச்சும் கொஞ்சமாக் குடிச்சுக்க”
அந்த இருதயம் கடந்த காலங்களின் வழியாக ஊளையிட்டு ஓடியது.
சேகரன் போய் ஒரு வருடமானது.
அப்போதுதான் இந்த மனிதன் கல்யாணம் பேச அவளை அணுகினான்.
கல்யாணமும் நடந்தது. அது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! ஆரம்பத்தில் அவளுடைய மனதில் கவலைகள் இருந்தன.
“இந்த ஆள் நம்மை நேசிப்பானா? இது ஒரு வெற்றிகரமான தாம்பத்த்யமாக ஆகுமா?”
அன்பின் நம்பிக்கையின் தீராத உறைவிடமாக அவன் இருந்தான் என்பதை அவள் உணர்ந்து கொள்ளத் தொடங்கினாள்.
அவனுக்கு எல்லாம் தெரியும். அவளுக்கும் சேகரனுக்கும் இடையில் இருந்த காதலைப் பற்றிக் கூடத் தெரியும். “சேகரனிடம் இருந்து பெயர்த்தெடுத்த தன்னுடைய ஆத்மாவை இன்னொரு நல்ல மனிதனுடைய குழந்தையின் வடிவத்தில் தன் மடியில் வைத்துக்கொண்டு எதற்காக மனது கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது?”
இனிமேலும் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது தருமத்திற்கு விரோதமானது என்று அவளுக்குத் தோன்றியது. வண்டி ஸ்டேஷனை வந்தடைந்தது. “முருகனுக்கு அரோகரா! முருகணுக்கு அரோகரா!”
முழக்கங்கள் அலையலையாக கேட்க ஆரம்பித்தன. அவளும் முருகனைத் துதி பாடியபடியே குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு இறங்கினாள்.
கணவன் சாப்பாடு வாங்க வெளியில் போனான். அவளும் குழந்தையும் அந்த சத்திரத்தில் இருந்தார்கள். சிந்தனைகள் மறுபடியும் விட்டில் பூச்சிகள் போல அவளை வட்டமிட ஆரம்பித்தன.
“இதுலேர்ந்து தப்பிக்கணும்” அவள் சுற்றிலும் இருந்த காட்சிகளில் மனதைச் செலுத்த முயற்சி செய்தாள். அவள் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினாள்.
உண்மையில் அங்கே சுவாரசியமான ஒரு கூட்டம் இருந்தது. அதில் ஒரு மூலையில் ஒரு ஆள் ஒதுங்கியிருந்தான். அவன் மீது அவளுடைய கண்கள் பதிந்தன. உணர்ச்சிகள் பொங்கிய அந்த இரு கண்கள் அவளை நோக்கி சாட்டையின் வீச்சுகள் போல பாய்ந்து வந்தன. அவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஒரு அதிர்ச்சி! அவன்! சேகரன்! அவன் மெல்ல மெல்ல அவளுக்கு அருகில் வந்தான்.
“சரஸ்வதி”. குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவள் அந்த மனிதனைப் பார்த்தாள்.
“சரஸ்வதி. நான் யாருன்னு தெரிஞ்சுதா?”
“ம்” இருவரும் நிசப்தமானார்கள்.
“குழந்தய கோயிலுக்குக் கூட்டிகிட்டு போகவா வந்திருக்கீங்க?”
“ஆமாம்”
“சம்போ மகாதேவா! நல்லதாப் போச்சு. நீ சுகமா இருக்க இல்லயா?”
“ஆமாம்”
“கொஞ்ச நேரம் முன்னால போனா ஆளுதானே உன்னோட புருஷன்?”
“ஆமாம்”
“என்ன இங்க பாத்ததுல அதிர்ச்சி அடைஞ்சிட்டியா?” புன்சிரிப்புடன் அவண் தொடர்ந்தான்.
“வாழ்க்கையில எத்தன எத்தன மாறுதலுங்க! நான் என்னோட தப்பான வழியில இருந்து திருந்திட்டேன்”
“ஓ! இப்ப?”.அவள் விசும்பலோடு கேட்டாள்.
“வாழ்க்கையில ஒரே ஒரு வழிதான் இருக்கு. நிரந்தரமான மார்க்கம். அது பக்தி. ஆன்மீகம். நான் கடைசியில அந்த வழியில திரும்பிட்டேன். இன்னிக்குப் பூமியில இருக்கற எதனாலயும் என்னை மாத்தமுடியாது. சம்போ மகாதேவா! ஆன்ம சைதன்யத்த நான் கண்டுபிடிப்பேன்”
“என்ன? ஊருக்கு வரலயா?”
“இல்ல. பூலோக பந்தங்களில் என்ன இருக்கு? எல்லாம் ஒரு நாள் உடஞ்சு போகற பளிங்கு பாத்திரங்க” அவள் அழுவது போல விசும்பினாள்.
“என்னோட வழியப் பத்தி என்ன தோணுது?”
“எங்கிட்ட ஒன்னும் கேக்காம இருங்க. நீங்க இப்பவும் பழய மாதிரியே ஆயீட்டீங்களே?”
“நான் முன்னால போன வழியிலெர்ந்து மாறிட்டேன்.
அதுக்கு எதிரான திசையில வந்திருக்கேன். அதாவது வாழ்க்கையோட ஒரே ஒரு மார்க்கத்துக்கு”
“இங்க எதுக்கு வந்தீங்க? வீட்டுக்குப் போங்க. ஊருக்கு போங்க”
”அது சாத்தியமில்ல. என்னோட வழி வேற!” என்று சொல்லிவிட்டு அவன் பட்டென்று மௌனமானான்.
கடந்த கால வாழ்க்கை முழுவதும் “என்னோட வழி வேற” என்ற சாவியை வைத்து அவனுடைய மூளை அகலத் திறந்திருந்தது.
அவன் மெல்லிய குரலில் திரும்பத் திரும்பச் சொன்னான்.
“என்னோட மார்க்கம் வேற. என்னோட மார்க்கம் வேற... என்னோட மார்க்கம்...”.
“நிறுத்துங்க”
அவனுடைய கண்ணில் இருந்து கண்ணீர்த் துளி வழிந்து குழந்தையின் உடல் மீது விழுந்தது.
மறுபடியும் அவன் முணுமுணுத்தான்.
“என்னோட மார்க்கம் வேற”
“ஆமாம் மிஸ்ட்டர் சேகரன்” என்று சொல்லியபடி சரஸ்வதியின் கணவன் அங்கு வந்தான். அவள் அதிர்ந்து போனாள்.
அவனைப் பார்த்தாள். வழிமறிக்கப்பட்ட மானின் பார்வை போல இருந்தது.
“நீங்க அந்த மூலையில இருந்தத நான் பாத்தேன். திரும்பி வந்துட்டு பேசலாம்னு இருந்தேன்”
சேகரன் பதுங்கினான்.
“இந்த வழியில சுகமா இருக்கீங்க இல்லயா?”
“ஆமாம். எனக்கு இதுல நிம்மதி இருக்கு”
“அப்படின்னா அப்படியே ஆகட்டும். சரஸ்வதி. நாம கிளம்பலாம். தங்கற இடத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டேன். குழந்தய இங்க கொடு”
அவள் கணவனுடைய கையில் கொடுத்தாள்.
“நான் கிளம்பறேன்” என்று சேகரனிடம் சொல்லிக் கொண்டாள்.
கணவனுக்குப் பின்னால் நடந்தாள்.
“சம்போ மகாதேவா! இந்த வார்த்தைகள் ஒரு மலைக் கோயிலில் இருந்து வருவது போல சேகரனின் ஆத்மாவின் ஆழத்தில் இருந்து முழங்கியது.
கணவன், மனைவி, குழந்தை அடங்கிய அந்தட் சிறிய குடும்பம் விலகி விலகிப் போவதை அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.