பெட்டியுடன் சாலையில் இறங்கும் பகுதியில் திரும்பி கையில் ஒரு துண்டையும் கட்டிக் கொண்டு ஜேம்ஸைப் பார்த்தபோதுதான் பாபு குட்டன் சாலையில் ஏறி வந்தான்.
“நீ இப்ப எங்கடா திடீர்னு வந்த? ரெண்டு மூனு மாசமா உன்னைப் பத்தி ஒரு விவரமும் கிடைக்காம இருந்துச்சே? போன் இல்லாத ஒரு ஆள் உன்னைத் தவிர, உலகத்துல வேறு எவனும் இருக்கமாட்டான். எல்லாரும் விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கண்ணுக்குத் தெரியாம மறஞ்சு வாழற உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு கேட்டாங்க. என்னடா ஆச்சு?”.
“நீ சும்மாப் போடா. எனக்கு எவ்வளவு வேல இருந்துச்சு தெரியுமா?”
“அப்படி என்னடா உனக்கு தல போற வேல? ஏதாச்சும்...?”
“டேய். பிடிபட்டா ஜாமீன் கிடைக்காத வேலையாக்கும்”
“அப்படித் திருட்டுத்தனமா வாழணும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல. என்னோட வயசான அம்மாவே உழச்சுதான் இன்னும் சோறு திங்கறாங்க தெரியுமாடா?”
அந்த இடைத்தர வீட்டுல அம்பது வாழ வித்து கொண்டு போய்க் கொடுத்துட்டு வரணும்” ஜேம்ஸ் சொன்னான்.
“அது அங்க இருக்கட்டும். உனக்கு விஷயம் தெரியுமா? உன்னோட பழய எதிரி ஜென்ம எதிரி ரஜினியோட விஷயம் தெரியுமா? வேற யாரோட விஷயத்தப் பத்தி நான் உங்கிட்டப் பேசப்போறேன்?”
“அவளுக்கு என்ன?” வண்டியில் வாழையை ஏற்றுவதற்கு நடுவில் ஜேம்ஸ் பாபு குட்டனைக் கேட்டான்.
“அவளுக்கு புற்றுநோய்டா. மார்பகப் புற்றுநோய். மிஷின் ஆஸ்பத்திரியில இருக்கா. ஆபரேஷன் முடிஞ்சுடுச்சு”
வண்டியில் இருந்து கீழே விழப்போன வாழையை லாவகமாக கையில் பிடித்துக் கொண்டு சிரித்தபடி பாபு குட்டன் சொன்னான்.
“உனக்கு விஷயம் தெரியல. அதான். உன்னைத் திட்டறதுக்கும் வசவு பாடறதுக்கும் இனிம யாரும் இல்ல. உனக்கு இது நிம்மதியா இருக்கும்னு எனக்குத் தெரியும். அந்த சந்தோஷத்த நேருல பாக்கணும்னுதான் நான் வந்தேன். ஹோ! என்ன ஒரு அகங்காரம் அவளுக்கு! ஆளுங்களுக்கு காட்டவும் வேணும். ஆனா யாரும் பாக்கவும் கூடாது”
அப்போது ஜேம்ஸ் குன்றின் மேல் நின்று கொண்டிருந்தான்.
இருபத்து எட்டு வருஷத்துக்கு முன்னால ஒரு சாயங்காலப் பொழுது அது. பெரும்பேச்சிப் பாறையில் காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
அதை ரசித்தபடியே அந்தச் சிறு கூட்டம் பயணம் செய்து கொண்டிருந்தது. ஒன்று இரண்டு வயது பெரியவர்களான ஜேம்ஸும் பாபு குட்டனும்தான் குழுவின் பெரிய ஆட்கள். சிறிது கீழே ரமேஷும் இருந்தான். குழுவில் மூன்று சிறுமிகள். கூடப் படிப்பவர்களின் நிரந்தரமான வற்புறுத்தலால் அப்பா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ரஜினி அதில் கலந்து கொண்டிருந்தாள்.
தூரத்தில் இருந்து பார்த்தபோது மலையின் உச்சியில் ஆங்காங்கே ஆகாயத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கும் மரங்கள். அதெல்லாம் ரஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவை எல்லாம் பெரிய பெரிய மரங்கள் என்றுதான் அவள் நினைத்தாள்.
பக்கத்தில் போய்ப் பார்த்தபோதுதான் ஆகாயத்தைத் தொட்ட தெல்லாம் சிறிய மரங்கள் என்பதை அவள் உணர்ந்தாள். ஒன்று ஒன்றறை மணி நேரம் கழிந்த போது எல்லோருக்கும் களைப்பு ஏற்பட்டது. சோர்வைப் போக்கிக் கொள்ள சிலர் ஆங்காங்கே பாறைகளின் மேல் உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்த வறுத்த கடலையையும் நெல்லிக்காயையும் பங்கு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
குடிப்பதற்கு உள்ள தண்ணீர் ஜேம்ஸ் மற்றும் பாபு குட்டனுடைய பொறுப்பாக இருந்தது. கிளம்புவதற்கு எழுந்திருந்த போது ரமேசன் ரஜினியுடைய புள்ளி போட்ட பாவாடையின் நுனியைப் பிடித்து வேண்டுமென்றே இழுத்தான். அடுத்த நிமிடம் அவள் கீழே விழுந்தாள். கால் முட்டியிலும் கை முட்டியிலும் காயம். உள்ளங்கையில் தோல் உரிந்தது.
ஆறுதல் சொல்லவும் அவளுடைய அழுகையை மாற்றவும் அப்போது ஜேம்ஸ் அங்கே இல்லை. மலையேறியபோது பத்து பேர் இருந்தார்கள் என்றாலும் கீழே இறங்கும் போது அந்தக் கூட்டத்தில் ரமேசன் இல்லை. கால் எலும்பு உடைந்து ஒரு இடத்தில் கிடந்த அவனை வீட்டுக்காரர்கள் தாமதமாகவேக் கண்டு பிடித்தார்கள்.
தூக்கி இழுத்துக் கொண்டு போனார்கள். வீட்டில் சொல்லாமல் போனதற்கு ஏகப்பட்ட திட்டு. அப்போதும் அவன் ஜேம்ஸின் பெயரைச் சொல்லவில்லை. வாழையை எல்லாம் ஏற்றிவிட்ட பிறகும் வண்டியை எடுக்காமல் ஜேம்ஸ்
பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்புவதைப் பார்த்த பாபு குட்டன் கேட்டான்.
“எங்கடா கிளம்பிட்ட?” ஒரு வார்த்தையும் பதிலாகப் பேசாமல் அவன் வண்டியை எடுத்துக் கொண்டு போனான்.
தனியார்ப் பேருந்து ஸ்டாப்புக்கு முன்னால் இருந்த சுய உடவி மகளிர் குழு நடத்தி வந்த தேநீர்க் கடையில்தான் ரஜினி வேலை பார்த்து வந்தாள். டவுனுக்கு போகும் போதெல்லாம் அங்குதான் ஜேம்ஸுக்கு ஒரு தேநீர் குடிக்க வேண்டும்
என்று தோன்றும். அப்போது அவளைப் பார்ப்பதுண்டு. தனியாகவோ அல்லது ஷீபாவுடனோ அல்லது வேலை செய்யும் மற்றவர்களுடனோ அவளை அவன் பார்த்திருக்கிறான்.
அவன் அவளை எங்கேப் பார்த்தாலும் ஒரு தடவை உற்றுப்பார்ப்பான்.
அப்போது அவளுடைய கண்களில் சொல்வதற்கு உள்ள ஒரு வெறுப்பு வார்த்தை எதையும் இதுவரை அவள் சொன்னதில்லை. வருடங்கள் பல கழிந்துவிட்டாலும் இதில் ஒரு மாற்றமும் இல்லை. நாற்பதுகளின் நிறைவில் இருந்த போதும் அந்த
நிறைகுடமாக காட்சிக்கு விருந்தாகும் பெண்ணாக இருந்தாள்.
பட்டாளக்காரனுடைய மகளுக்கும், கோழிக்காரனுடைய மகனுக்கும் இடையில் இருந்த இந்த நட்பு இன்று நேற்று தொடங்கியதில்லை. பாவாடையைக் கட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பித்தக் காலம் முதலே இருந்தது.
பட்டாளக்காரன் என்றால் ரஜினியுடைய அப்பா. உண்மையில் அவன் பட்டாளத்தில் வேலை செய்யவில்லை.
முன்பு எப்போதோ சிறிது காலம் வடக்கு இந்தியாவில் இருந்தான். முரட்டுச் சுபாவக்காரன். யாருடனும் ஒத்துப்போகாத குணம் உயவன். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். அடுத்த வீட்டுக்காரனான ஜேம்ஸுடைய அப்பா கோழி வியாபாரம்
செய் துகொண்டிருந்தான். அதனால் ஊர்க்காரர்கள் அவனுக்கு கோழிக்காரன் என்று பெயர் வைத்தார்கள்.
கோழி வியாபாரம் முடிந்து விட்டாலும் அந்த பெயர் அவனை விட்டுப் போகவில்லை. அந்த வீட்டை கோழிக்காரன் வீடு என்றும் மகன் ஜேம்ஸை கோழிக்காரப் பையன் என்றும் கூப்பிட்டார்கள். பலா, மா, சப்போட்டா, பேரிக்காய், எல்லா மரங்களும் காய்த்துத் தொங்கும் பழத்தோட்டம் பட்டாளக்காரன் வீட்டைச் சுற்றி இருந்தது.
அதில் வளர்ந்திருந்த கற்பூர மாம்பழம் அதன் வாசனையாலும் சுவையாலும் தெருவில் போவோர் வருவோரை சுண்டி இழுக்கும். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல் குட்டிப் பையனாக இருந்த ஜேம்ஸ் ஒரு நாள் தோட்டத்துக்குள் நுழைந்தான்.
பட்டாளக்காரன் இல்லை என்று நினைத்துவிட்டான். ஆனால், அவன் ஜேம்ஸை அலறிக் கொண்டு ஓடிவந்து பிடித்து டிரவுசரை அவிழ்த்துவிட்டு, கணக்கு நோட்டில் ஒரு இடமும் விடாமல் கணக்குப் போடும் நேர்மையான மாணவனைப் போல ஒரு இடமும் விடாமல் அவனை அடித்து நொறுக்கினான். அடி உடையின் அடையாளங்கள் அவனுடைய உடம்பு முழுவதும் இருந்தன. அந்த ஆள் அடித்ததை விட ஜேம்ஸை வேதனைப்பட வைத்தது உள்ளே இருந்து ரஜினி அவனைப் பார்த்துச் சிரித்ததுதான்.
அதைப் பார்த்து கோபமடைந்த ஜேம்ஸ் அவளை “போடி உருண்டக்கண்ணுக்காரி” என்று சத்தமாக கூப்பிட்டான்.
அவளும் பதிலுக்கு “போடா கோழிக்காரப் பையா” என்று கூவினாள். அந்த அளவுக்கு அவளுடைய முகம் அழகாக இல்லையென்றாலும் அவளில் பூத்துக் குலுங்கிய பெண்மை அவளை ஒரு அழகியாக மாற்றிக் கொண்டிருந்தது.
அவளுடைய மார்பகங்கள் செதுக்கி வைத்த சிற்பம் போல தலையுயர்த்தி நிமிந்து நின்றன. அந்த அழகு பொறாமையால் பெண்களின், ஆசைப்பட்ட ஆண்களின் தூக்கத்தை கெடுத்தது. அவள் பள்ளிக்கூடத்துக்குப் போகும் போதும், பிறகு கல்லூரிக்குப் போகும் போதும் “உன்னை நாந்தாண்டி கட்டிக்கப்போறேன். பிறக்கற குழந்தையும் உன்னை மாதிரியே அழகா பிறக்கணும்” என்று ஜேம்ஸ் சொல்வது வாடிக்கையாகிப் போனது.
பதிலுக்கு அவள் “போடா லூசுப்பயலே” என்று சொல்வாள்.
பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு வியாபாரம் என்று அங்குமிங்கும் அலையும் ஜேம்ஸை ரஜினிக்கு பொருத்தமானவள் என்று நினைக்கவே ஒரு அருகதையும் இல்லை என்று ஊர்க்காரர்கள் உறுதியாக நம்பினார்கள். அவனுக்கு மட்டும் இல்லை. ஊர்க்காரர்கள் யாருக்கும் அவளை சொந்தமாக்கிக் கொள்ள அதிர்ஷ்டம் இல்லை. “ஊர்ல இருக்கற ஒரு பயலுக்குக் கூட நான் என்னோட பொண்ணக் கொடுக்க மாட்டேன்” என்று பட்டாளக்காரன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அதன் படியே அவன் ரஜினியுடைய படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினான். அவளை ஒரு ஊதாரிப்பயலுக்கு கட்டிக் கொடுத்தான்.
தடபுடலாகக் கல்யாணம். படிப்பையும்ம் நிறுத்திவிட்டு, அவனோடு போன ரஜினி சரியாக பத்தாம் மாதமே ஊர் திரும்பினாள். “அவனுக்கு போதைப் பழக்கம் உண்டு. அவனுக்கு வேற ஒரு செட் அப் உண்டு” என்று பலரும் அவரவர்கள் மனதில் பட்டபடி கதைகதையாகப் பேசித் திரிந்தார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பட்டாளக்காரனும் அவனுடைய குடும்பமும் அதைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை.
ஊர்க்காரர்கள் இப்படி வம்புக் கதைகளைப் பேசி அங்குமிங்கும் அலைந்து திரிந்து செருப்பைத் தேய்த்துக் கொண்டார்களேத் தவிர, வேறு எதுவும் உருப்படியாக நடக்கவில்லை. ஜேம்ஸ் பழைய சினிமா கதாநாயகன் மாதிரி தமிழ்நாட்டுக்கு வண்டி ஏறிக் கிளம்பினான். அவனுடைய அப்பா பட்டாளக்காரனுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டையும் தோட்டத்தையும் விற்று கோழி வியாபாரத்தையும் நிறுத்தினான்.
ஊரைவிட்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் மனைவி வீட்டுப்பக்கம் தன் இருப்பிடத்தை மாற்றினான். ஒரு நாள் ஜேம்ஸுடைய அப்பா செத்துப் போனான்.
அதனால் நாடு விட்டுப் போன நாயகன் திரும்பி வந்தான். துல்லியமாக எழுதி வைத்த ஒரு திரைக்கதை போல ஒவ்வொரு சம்பவமாக பல நிகழ்ச்சிகள் நடந்தன. வருடங்கள் கடந்து போயின.
ஜேம்ஸ் தன் தங்கையை அவள் காதலித்தவனுக்கே கட்டிக் கொடுத்ததால் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஜேம்ஸ் இல்லாதபோது அவனுடைய அம்மா தங்கை வீட்டுக்குப் போய்த் தங்கினாள். கூடு போல இருந்த வீட்டை ஜேம்ஸ் நல்ல வீடாக மாற்றியிருந்தான். ஆனால் ஜேம்ஸ் மட்டும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. திடீரென்று தோன்றி மறையும் ஒற்றை மனிதனாக அவன் வாழ்ந்தான்.
ஆனால், உசிலம்பட்டியில் அவனுக்குப் பொண்டாட்டியும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று ஊர்க்காரர்கள் அவரவர்களுடைய தராதரம் போல பேசி ரசித்தார்கள். ஊர்க்காரர்கள் யாரும் இதையெல்லாம் நேரில் பார்த்ததில்லை என்றாலும் இதெல்லாம் வதந்தி என்று விளக்கம் கொடுக்க ஜேம்ஸ் முயற்சி செய்யவில்லை. ரஜினியை அப்பறம் யாருக்கும் கல்யாணம் கட்டிக் கொடுக்கவில்லை.
ஆடம்பரமாக கட்டிக் கொடுத்துவிட்டு அனுப்பிய மகள் வாழாமல் உடனே வீட்டுக்குத் திரும்பி வந்தது பட்டாளக்காரனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எலி வாயில் இருந்து தப்பிக்க புலி வாயில் மாட்டிக் கொண்டது போலாகியது. சர்க்கரை அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாகி படுத்தப்படுக்கையாகக் கிடந்து நரக வேதனையை அனுபவித்துதான் அந்த ஆள் செத்துப் போனான்.
அதனால் வீட்டைத் தவிர, மற்ற எல்லா சொத்தும் விற்கப்பட்டன. ஒரு விஷயத்துக்கும் சாமர்த்தியம் இல்லாத, வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெந்தான் ரஜினியின் அம்மா. ஆரம்பத்தில் ஒரு ஜவுளிக்கடையில் விற்பனைப் பெண்ணாக அவள் வேலை பார்த்தாள். பிறகு சேனிட்டரி கடையில் கணக்கு எழுதும் வேலை.
இதற்கு நடுவில் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை தற்காலிக வேலை. பல வேஷங்களுக்கும் முடிவில் சுய மகளிர் உதவிக் குழு நடத்தும் தேநீர்க் கடையில் வேலையில் சேர்ந்தாள். அந்தப் பழைய வீட்டில் அம்மாவை கவனித்துக் கொண்டு அவளுடைய பிற்கால வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனில் விசாரித்து 116-க்கு போக லிஃப்ட்டில் ஏறிக் கொண்டிருக்கும் போதுதான் எண்ணைக் கறை படிந்த பையில் டீ ப்ளாஸ்க்குடன் இரண்டாவது மாடியில் இருந்த கேண்டீனில் இருந்து வந்த ஷீபாவை ஜேம்ஸ் பார்த்தான்.
“ஆஹா! விவரம் தெரிஞ்சு ஆளு வந்தாச்சே! ஒரு காலத்துல அங்கயும் இங்கயும் காத்துகிட்டு இருந்து சாஞ்சும் சரிஞ்சும் நின்னு பாக்கறதுக்கு உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சு இல்லயா?”. சாதாரணமாக இருந்தால் அதற்குப் பதில் சொல்லியிருக்கக்கூடிய ஜேம்ஸ் கேட்டான்.
“ஆபரேஷன் முடிஞ்சுடுச்சா?”
“ரெண்டு மார்பகத்தயும் எடுத்தாச்சு. கீமோ செய்யணும். ஆனா அவ அதுக்கு ஒத்துக்கமாட்டேங்கறா. கீமோ ரேடியேஷன் எதுவும் வேணாம்னு சொல்றா. கரிஞ்சு கருவாடாப் போன இந்த உடம்ப யாருக்காக வச்சுகிட்டு காப்பாத்தணும்னு கேக்கறா. அதுலயும் உண்மை இருக்கு இல்லயா? இருந்தாலும் யோசிச்சுட்டு பதில் சொல்லணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு”
ஷீபா முன்னாலும் ஜேம்ஸ் பின்னாலுமாக அறைக்குள் நுழைந்தபோது ரஜினி தலையணையை சுவரில் சாய்த்து வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
இன்னொரு தலையணை மடியில் இருந்தது. “ஏய். இது யாருன்னு பாரு”
ஷீபா சிரித்தபடி சொன்னபோது ரஜினியுடைய உதட்டில் ஒரு மின்னல் புன்னகை தோன்றி மறைந்ததா என்று ஜேம்ஸ்க்கு உறுதியாகத் தெரியவில்லை.
“இரு” ஷீபா ஸ்டூலை கட்டிலுக்குப் பக்கத்தில் இழுத்துப் போட்டாள்.
“ரஜினியோட அம்மாவால ஆஸ்பத்திரியில வந்து இருக்க முடியாது. அதனால ரஜினி கூட நான் இருந்து பாத்துக்கறேன். இல்லாட்டாலும் முடியாத வயசுல அவங்க இங்க எதுக்கு இருந்து கஷ்டப்படணும்?”. கட்டினவன் விட்டுட்டுப் போயிட்டாலும் இரண்டு குழந்தைங்களயும் வயசான அம்மா அப்பாவையும் வேலைக்குப் போய் சம்பாதிச்சு காப்பாத்திகிட்டு இருக்கறவதான் இந்த ஷீபா.
வாழ்க்கயை யாருக்காகவும் எதற்காகவும் தோற்றுக் கொடுக்க விரும்பாதவள் அவள். எதற்குமே நேரம் இல்லை என்றாலும் ரஜினியை அவள்தான் இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறாள். “டீ கொடு ஷீபா”. ரஜினி சொன்னாள். அதைச் சொல்லும் போது, அவளுடைய முகத்தில் அன்போ வெறுப்போ எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.
“நீங்க குடிங்க. முடியாதவங்களுக்காக வாங்கினத நான் குடிக்கறது சரியில்ல” ஜேம்ஸ் சொன்னான்.
“யாரும் வருவாங்கன்னு யோசிச்சு டீ வாங்கல. கூட இருக்கட்டும்னு வாங்கினேன்” ஷீபா சொன்னாள்.
ஷீபா கோப்பையில் ஊற்றிக் கொடுத்த டீயை வாங்காமல் ஜேம்ஸுக்கு வேறு வழி தெரியவில்லை. மௌனமான நிமிடங்கள் கரைந்து போய்க் கொண்டிருந்தன.
“எப்படி இருக்கு இப்ப? வலி இருக்கா?” டீயை குடிக்கும் போது எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக ஜேம்ஸ் கேட்டான்.
தளர்வாக இருந்த ஒரு பச்சை நைட்டி. கழுத்திற்குக் கீழே புதிதாக உருவாகியிருந்த சமதள பூமி! அங்கு எல்லாம் வெறுமையாகத் தோற்றமளித்தது! முன்பெல்லாம் மார்பகங்களை மறைக்க சிறிய ஒரு ஷாலையோ மகளிர் உதவிக் குழுவின் யூனிபார்மையோக் கவசமாக போட்டுக் கொண்டு ஓடி ஒளிய அவசரம் காட்டிய அவள் இப்போது அந்தப் பார்வையால் ஒரு சங்கோஜமும் படாமல் இருப்பதைப் பார்த்த ஜேம்ஸுக்கு வேதனையாக இருந்தது.
அவள் எப்போதும் சொல்லும் ஏதாவது ஒரு சாப வார்த்தையைக் கேட்க அவன் மனது ஏங்கியது.
“வலி பரவாயில்ல. இனிம யாரு பாத்தாலும் ஓடி ஒளிஞ்சு மறைச்சுக்க ஒன்னும் இல்லயே?” ரஜினி சொன்னாள்.
ஜேம்ஸுக்கு அப்போது பட்டாளக்காரனுடைய மதில் சுவருக்கு அப்பால் இரும்புக் கேட்டுக்கு எதிர்ப்பக்கம் இரண்டு கற்பூர மாம்பழங்களைப் புளிப்புடன் சுவைத்தது ஞாபகத்துக்கு வந்தது.
அடி உதையால் ஏற்பட்ட காயமும் வசவு வார்த்தைகளால் உண்டான புண்களும், வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சியும் யாரும் பார்க்காமல் எடுத்துக் கொண்டு போன அந்தப் புளிப்புச் சுவைகள். வீட்டுக்குப் போய் அந்த இரண்டு மாம்பழத்தின் கொட்டைகளையும் பாதுகாத்து வைத்து நட்டு வளர்த்த போது, அதில் ஒன்று பெரிதாகி காயாகி பழமாகி தோட்டத்தில் நின்று கொண்டிருந்தது.
அந்தக் காலங்கள் கடந்து போய்விட்டாலும், அது தந்த நினைவுகள் அதே இடத்தில்தானே இருக்கிறது! ரஜினி அவனுடைய முகத்தைப் பார்த்தாள். அந்த ஒற்றை நிமிடத்தில் அவளுடைய கண்ணோரம் உருண்டு திரண்டு வந்த கண்ணீர்த் துளியில் ஆயிரம் சூரிய சந்திரன்களின் பிரகாசம் இருந்தது.
சொல்லிக் கொள்ளாமல் ஜேம்ஸ் வெளியில் வந்தான்.
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் அறையில் நுழைந்தார். அவரிடம் ஜேம்ஸ் கேட்டான். “கீமோவோ ரேடியேஷனோ எது வேணுமோ அத செய்யணும் டாக்டர். ரஜினி அதுக்கு ஒத்துகிட்டா