ஆபீசில் வழக்கம் போல அப்போதுதான் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். குரூப் அண்ணன் வழக்கம் போல கோயிலுக்குப் போய்விட்டு வந்து ஆபீசைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். நடுவில் எதையோ முணுமுணுத்துக் கொண்டும் இருந்தார்.
“குப்பயப் போடறதுக்கு இங்க குப்பத்தொட்டி வச்சிருக்கு. ஆனா கீழ தரையிலப் போட்டாதான் சில பேருக்கு நிம்மதியா இருக்கும் போலிருக்கு”
யாரோ ஆபீசில் குப்பையை கீழே போட்டதற்கான வசவுதான் அது.
எப்போதும் அவர் யாரைப் பற்றியாவது ஏதாவது ஒரு புகார் சொல்லிக் கொண்டுதானிருப்பார். அதுவும் எப்போதும் என்னிடம் வந்துதான் புகார்களின் மூட்டையை அவிழ்ப்பார். அதற்கெல்லாம் பதிலாக “ம்” என்று முனகலை மட்டும்தான் பதிலாக நான் தருவேன்.
காது கொடுத்துக் கேட்காமல் போனதுனால்தான் ஒரு முனகலை மட்டுமே நான் பதிலாகச் சொல்கிறேன் என்று அவருக்கு அவ்வப்போது சந்தேகம்.
யாரிடமும் நான் போய் குரூப் அண்ணன் சொல்லும் புகார்களைச் சொல்ல முடியாது. அதனால் நான் பதில் பேசாமல் இருந்தேன். “சார்தான் அவங்க கிட்ட கொஞ்சம் சொல்லணும்” குரலைத் தாழ்த்திச் சொல்வார்.
அதற்கும் நான் பதில் சொல்லமாட்டேன். வேலையை முடித்துக் கொண்டு அவர் போனார். அங்கயும் இங்கயுமாக ஒவ்வொருவராக ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். “சார். என்னோட புகாருக்கு ஏதாச்சும் தீர்மானம் ஆச்சா?”
கேள்வியைக் கேட்டு நான் பைலில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தேன்.
மெலிந்த உருவத்துடன் முதுமையின் அவஸ்தைகளை கை பிடித்துக் கொண்டு வாழும் ஒரு ஆள். எதுவும் செய்யமுடியாத தன்மையும் விரக்தியும் நிராசையும் வெளிப்படுத்தும் ஒரு முகம். முன்பும் அவர் வந்திருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர். வேலையை விட்டு அவர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதுதான் புகார். மேசை மேலிருந்த பைல்களின் குவியலில் இருந்து அவருடைய பைலைத் தேடிப் பிடித்து எடுத்தேன்.
வயதாகிவிட்டதால் வேலையை விட்டு எடுத்திருக்கலாம். ஒன்றிரண்டு தடவை கம்பெனி உரிமையாளருக்கு ஆபீசில் இருந்து வரச்சொல்லி அழைப்புக் கடிதம் அனுப்பிய போதும் வாங்காமல் அவை திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. பலவீனமான அவருடைய முகத்துக்கு நேராக அதைச் சொல்ல எனக்கு சங்கடமாக இருந்தது.
நான் பேசாமல் இருந்ததால் அவர் மறுபடியும் என்னைக் கேட்டார். “சார். அவங்க விவாதம் செய்ய வர்றாங்களா?”
“நோட்டீஸ் அனுப்பியிருக்கு. வராங்களான்னு பாக்கலாம்”. என்னுடைய பதிலைக் கேட்டு அவர் முகம் மங்கலானது.
“நான் புகார் கொடுத்து ரெண்டு வாரமாச்சு”. நிராசையோடு அவர் சொன்னார்.
“சார். போக்குவரத்து செலவுக்கு கடன் வாங்கிட்டுதான் நான் வரேன். சீக்கிரம் ஒரு பரிகாரத்த உண்டாக்கிக் கொடுங்க”. அவர் கண்களில் கவலைக்கு அப்பால் நிறைந்து நிற்கும் வேதனை.
“நீங்க எப்பவும் வரணும்னு இல்ல. நான் விவரங்கள உங்ககிட்டக் கூப்பிட்டுச் சொல்றேன். போன் நம்பரக் கொடுங்க”
அவர் ஒரு காகிதத் துண்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து எனக்கு நேராக நீட்டினார். அதில் போன் நம்பர் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பிறகு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கையில் மடக்கி வைத்திருந்த கசங்கிப் போன ஒரு நூறு ரூபாய் நோட்டை என் மேசை மேல் வைத்தார்.
“சார். என் கையில இருக்கறது இதுதான். எப்படியாச்சும் இத முடிச்சுத் தரணும்”
அவருடைய கண்ணீர் விழுந்த அந்த நோட்டை நான் பார்த்தேன்.
போக்குவரத்து செலவுக்கு யாரிடம் இருந்தாவது கடன் வாங்கியதாக இருக்கலாம். “காசு கொடுத்தாத்தான் கவர்மெண்ட் ஆபீஸ்ல காரியங்கள் நடக்கும்” என்பது அவருடைய எண்ணமாக இருக்கலாம்.
“தாத்தா. அந்தப் பைசாவ எடுத்து கையில வச்சுக்கங்க. இனிம வர்றப்ப போக்குவரத்து செலவுக்கு நான் காசு தரேன்” அதைக் கேட்டு அவநம்பிக்கையோடு அவர் என்னைப் பார்த்தார். மறுபடியும் நான் கட்டாயப்படுத்தியபோது அவர் காசை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
அப்போதும் குறைவான காசு என்பதால்தான் வாங்கிக் கொள்ளாமல் இருந்தேன் என்ற சந்தேகம் அவருடைய முகத்தில் தெரிந்தது.
“தாத்தா. நீங்க கிளம்புங்க. நான் கூப்பிடறேன்”. தயங்கியபடி அவர் கிளம்புவதற்காக நடந்தார். “வேலைக்கு திருப்பி எடுக்கலைன்னாலும் பரவாயில்ல. நஷ்ட ஈடு கிடைச்சாக் கூட போதும்” மெல்லிய குரலில் அவர் சொன்னார்.
பலவீனத்தின் மொத்த உருவமாக அவர் நடந்து அகன்றார். இதற்குள் ஆபீசில் எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
புகார் கொடுக்கவும் விவாதத்தில் பங்கெடுக்கவும் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆபீசர் ஷைலஜா மேடத்திடம் அன்றைக்கு விவாதத்திற்கு வரும் பைல்களை எடுத்துக் கொடுக்க நான் தயாரானேன். அப்போது அவருடைய பைலை மறுபடி எடுத்துப் பார்த்தேன். மூன்று முறை நோட்டீஸ் அனுப்ப்பியும் இடத்தில் ஆள் இல்லை என்று சொல்லிதான் நோட்டீஸ் திரும்ப அனுப்பப்பட்டிருந்தது.
ஆள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. பெருமை நிறைந்து நின்ற பழைய நினைவுகளின் பாக்கி பத்திரமாக அங்கே இப்போதும் கொஞ்சம் பேர் வசித்துக் கொண்டிருந்தார்கள். நகரத்தில் வணிகப் பிரமுகராக இருந்தவரின் மிச்சம் மீதிகளை இப்போதும் அங்கே பார்க்கலாம். பிறந்த இடங்களுக்கு பலரும் திரும்பிப் போய்விட்டார்கள் என்றாலும் இப்பவும் சில குடும்பங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
“அங்க போய் நேர்ல பாத்து விஷயத்த சொல்லிட்டு வந்தா என்ன?” என்று சொன்னபோது மேடம் சொன்னார். “நானும் அத யோசிச்சேன்” அவரோட முகத்தைப் பார்க்கும் போது ரொம்ப சங்கடமா இருக்கு. எத்தன நாளா ஏறி இறங்கறாரு. ஆபீசர் ஜான் சாரும் வரேன்னு சொல்லியிருக்கறாரு” நகர நெரிசலில் இருந்து சிறிது தூரம் மாறி வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கம்பெனிக்குள் நுழைந்தோம்.
பெரிய கேட்டுக்கு முன்னால் நின்ற காவல்காரன் எங்களைத் தடுத்து நிறுத்தினார். ஆபீசில் இருந்து என்று சொன்ன போது கேட்டைத் திறந்தார்.
கம்பெனியின் அருகிலேயே ஹவுஸிங் காலணி போல நஷ்டமடைந்த பெருமைகளின் ஞாபகங்கள் நிறைந்து நிற்கும் சில வீடுகளும் கடைகளும் அங்கு இருந்தன.
அமைதி நிழல் விரித்த சுற்றுப்புறம். மேனேஜரை அழைத்துக் கொண்டு வரச் சொன்னபோது முதலில் அவர் கொஞ்சம் தயங்கினார். “ஏதாச்சும் வம்பு பிடிச்ச கேசோ?” என்ற சந்தேகத்தில் அவர் தயங்கி நின்றார். ஜான் சார் கொஞ்சம் சீரியஸாக சொன்னதால் அந்த ஆள் ஆபீசை நோக்கி நடந்தார். சிறிது நேரம் கழிந்தபோது நடுத்தர வயதுடைய ஒரு ஆள் வந்தான்.
“இங்க வேல பாத்த பழைய செக்யூரிட்டிகாரனோட விஷயத்தப் பத்திப் பேச வந்திருக்கோம். மூனு தடவை நோட்டீஸ் அனுப்பியும் நீங்க வாங்கல. அதனால நேர வந்து நோட்டீஸ் தரலாம்னு வந்திருக்கோம்”. மேடத்தின் குரலில் கோபம் கலந்திருந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அந்த ஆளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
நாங்கள் நேராக வருவோம் என்று அந்த ஆள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.
“நோட்டீஸ் ல கையெழுத்துப் போட்டுத் தரணும்”
நான் நோட்டீசையும் புக்கையும் அந்த ஆளுக்கு நேராக நீட்டினேன். மனதில்லா மனதோடு அந்த ஆள் நோட்டீசில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.
“அடுத்த வாரம் விவாதம் செய்ய தேதி குறிச்சிருக்கோம். வேல கொடுக்கலைன்னாலும் நீங்க நஷ்ட ஈடாச்சும் தரணும்”
மேனேஜர் சொன்னார். “அந்த ஆளு ஏதோ ஒரு விபத்துல ஆஸ்பத்திரியில இருந்தாரு சார். கொஞ்ச நாளா காணாமப் போனதுனால வேற ஆள எடுத்தோம். அப்பறம் அந்த ஆளுக்கு வயசும் அதிகமாயிடுச்சு சார்”
நியாயங்கள் அடுக்கப்பட்டன.
“இங்க வேல பாத்த காலத்துக்கு உரிய எல்லா பாக்கியயும் தரணும். நீங்க விவாதம் செய்ய வாங்க. மிச்சத்த அங்க வச்சு தீர்மானிச்சுக்கலாம்” மேடம் சொன்னார்.
அடுத்த நாள் நான் தாத்தாவைக் கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். அவருக்கு பெரிய மகிழ்ச்சி.
“ஆபீசருங்க போய்ச் சொன்னா இனிம அவங்க வருவாங்களா இருக்கும்”
அவர் வார்த்தைகள் வெளிப்படுத்திய நம்பிக்கையில் என் மனது நிறைந்தது.
”மகனே. உதவற வாய்ப்ப ஒரு ஆளுக்குக் கூட ஒருபோதும் நஷ்டமாக்காதே” என்று எப்போதும் என் அப்பா சொல்லும் வார்த்தைகள் அப்போது என் நினைவுக்கு வந்தன. முன்பு வருமானச் சான்றிதழுக்காகவும் மற்ற சான்றிதழ்களுக்காகவும் கிராம அலுவலகத்துக்கு அலைந்த அந்த நாட்களை நான் மறக்கவில்லை. பல தடவை நடந்து தளர்ந்தபோது மனதில் ஒரு தீர்மானம் எடுத்திருந்தேன். என்றைக்காவது அரசாங்க வேலை கிடைத்தால் ஒருவரையும் மனப்பூர்வமாக துரோகிக்கக்கூடாது. முடியக்கூடிய உதவி எதுவாக இருந்தாலும் செய்யவேண்டும். யாரும் ஆபீசுக்கு வந்ததனால கச்தப்படக் கூடாது. ஆனால் எல்லோருடைய மனதும் ஒரே மாதிரியா இருக்கவேண்டும் என்பது இல்லையே? நேரில் சென்று சொல்லியும் அவர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இரண்டாவது விவாதத்திற்கும் அவர்கள் வரவில்லை. பாவம். தாத்தா மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வந்து காத்துக் கொண்டிருந்தார்.
“சார். இன்னிக்கு அவங்க வருவாங்க இல்லயா?”
வந்தவுடனேயே அவர் என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்.
“நாங்க நேராப் போய்தான் நோட்டீஸ் கொடுத்திருக்கோம். வரோம்னுதான் சொன்னாங்க”. என்னுடைய வார்த்தைகளைக் கேட்டபோது ஆபீசுக்கு படிகளில் ஏறிவந்ததால் ஏற்பட்ட மூச்சிரைப்புக்கு இடையிலும் அவர் சிரித்தார்.
“தாத்தா. சாப்பிடலைன்னா சாப்பிட்டுட்டு வாங்க. ரெண்டு மணிக்குதானே விவாதம் வச்சிருக்கு”. அப்போது மணி ஒன்றுதான் ஆகியிருந்தது.
“நான் தண்ணி குடிச்சுட்டேன்ன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கறேன்”அவர் மெல்லிய குரலில் சொன்னார். எப்படியாவது வழக்கு இன்றுடன் சமாதானமாக முடிந்தால் சரியென்ற எண்ணம் அவர் முகத்தில் இருந்தது. பஸ் டிக்கெட்டுக்கு கடன் வாங்கி வரும் ஒரு ஆளிடம் சாப்பிட்டுவிட்டு வரச்சொன்ன அபத்தத்தைப் பற்றி அப்போதுதான் நான் யோசித்தேன்.
ஆபீசில் எல்லோரும் சாப்பிடக் கிளம்பினார்கள். சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நடக்கும்போது கையில் இருந்த நோட்டை எடுத்து அவருடைய கையில் வைத்தேன். “போய் சாப்பிட்டுட்டு வாங்க. சில சமயம் விவாதம் முடிய நேரமாகலாம்”. நான் நடந்துபோனபோது அவநம்பிக்கையோடு அவர் என்னைப் பார்த்தார்.
ஒரு அரசாங்க ஆபீசில் வேலை பார்ப்பவர் ஆபீசுக்கு வருபவருக்கு காசு கொடுப்பது அதுவே முதல் அனுபவமாக அவருக்கு இருக்கும். மெல்ல படியிறங்கி கீழே போனார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து விவாதத்திற்காக காத்திருந்தார். மணி இரண்டானது. மூன்றானது. அப்போதும் எதிர்தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
அழைத்தபோது போனையும் எடுக்கவில்லை. அவருடைய முகத்தைப் பார்க்க முடியாமல் நான் பைலைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரம் ஆனபோது அவர் எழுந்து என் அருகில் வந்தார்.
“நான் என்ன செய்யணும் சார்?” தொண்டையில் கரைந்த அவருடைய வார்த்தைகளைக் கேட்டு என் மனது வேதனைப்பட்டது.
மேடமும் சாரும் நிம்மதி இழந்து இருந்தார்கள். இன்றைக்கு நிச்சயமாக வருவார்கள் என்றும் எப்படியாவது நஷ்ட ஈடு வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடனும் நாங்கள் இருந்தோம். “தாத்தா. நீங்க கிளம்புங்க. இதுக்கு மேல அவங்க வருவாங்கன்னு தோனல. நான் கூப்பிடறேன். ரெண்டு நாளுக்குள்ள எப்படியாச்சும் ஒரு தீர்மானத்துக்கு வரலாம்”
எங்களை மாறி மாறிப் பார்த்துவிட்டு அவர் மெதுவாகத் திரும்பிப் போனார்.
அதைப் பார்த்து என் மனது சங்கடப்பட்டது. ஆரோக்கியமா இருந்தப்ப வேலய வாங்கிக்கிட்டு முடியாம ஆனப்ப திரும்பப் பாக்காம இருக்கறது எவ்வளவு கொடூரமானது! எத்தனை நாள் அவர் புகாருடன் அலைந்து திரிகிறார். பிறகும் பல தடவை நாங்கள் மாறி மாறி அழைத்தோம்.
ஒரு முறை அவர்கள் போன் எடுத்தார்கள். என் கோபம் முழுவதும் உடைந்த அணையில் இருந்து பாயும் தண்ணீர் போல பொங்கி வந்தது. “ரெண்டு நாளைக்குள்ள நீங்க வந்து முடிக்கலைன்னா என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்”. ஆபீசரின் அந்த வார்த்தைகளுக்கு பலன் ஏற்பட்டது. அவர்கள் ஓடி வந்தார்கள்.
“சார். அன்னிக்கு அத்தியாவசியமான ஒரு வேல வந்ததுனாலதான் வரமுடியல”
“அத்தியாவசியம் யாருக்கு வேணும்னாலும் வரலாம். அத சொல்லவாச்சும் செய்யணும்ங்கற மரியாத தெரியாது உங்களுக்கு? வயசான அவரு எவ்வளவு நேரமா இங்க வந்து காத்துகிட்டு இருந்தாருன்னு தெரியுமா?”
மேடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் ஒரு செக்கை எடுத்துக் கொடுத்தார்கள்.
அதை வாங்கிப் பார்த்து விட்டு மேடம் சொன்னார்.
“அவரக் கூப்பிட்டு இது சம்மதம்னா கேச முடிச்சுக்கலாம். எப்படியானாலும் நீங்க இன்னும் ஒரு தடவ வரணும்”
“வர்றோம் சார், என்னிக்குன்னு சொன்னாப் போதும்”அவர்கள் இறங்கி நடந்தவுடனே நான் தாத்தாவுக்கு போன் செய்தேன். இந்த சந்தோஷமான சேதியை அவரிடம்தானே முதலில் சொல்லவேண்டும்?
ஒன்றிரண்டு முறை போன் செய்தும் யாரும் போனை எடுக்கவில்லை. சில சமயம் வேறு வேலையாக இருக்கலாம். திரும்பக் கூப்பிடுவாராக இருக்கும்.
அவர்கள் செக் கொடுத்த விஷயத்தை அவரிடம் சொல்லாமல் எனக்கு நிம்மதி ஏற்படவில்லை. எத்தனை நாள் அவர் நடையாய் நடந்திருக்கிறார்? சிறிது நேரம் கழித்து மீண்டும் கூப்பிட்டபோது ஒரு பெண் குரல் கேட்டது.
“அது சோமன் அண்ணனோட நம்பர்தானே?”. சந்தேகத்தோடு நான் கேட்டேன்.
“நான் அவரோட பொண்ணுதான்”. மெதுவான குரலில் பதில் வந்தது.
“அவர்கிட்ட போனக் கொஞ்சம் கொடுக்க முடியுமா?”
சிறிது நேரம் பதில் எதுவும் இல்லை. மீண்டும் நான் “ஹலோ… ஹலோ…” என்று கூப்பிட்டேன். பதிலாக மறுமுனையில் இருந்து அழும் சத்தம்தான் கேட்டது.
என்ன நடந்தது என்று புரிந்தது. மீண்டும் யாரோ போனை எடுத்தார்கள் அது ஒரு ஆண் குரல்.
“யாரது?”.தாத்தாகிட்ட அத்தியாவசியமா ஒரு விஷயம் சொல்லணும்”
“நான் அவரோட மருமகனாக்கும். மாமா நேத்து ராத்திரி செத்துப்போயிட்டாரு. திடீர்னு நெஞ்சு வலி. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறப்ப செத்துட்டாரு. சடங்கெல்லாம் இப்பதான் முடிஞ்சுது. எதுவா இருந்தாலும் நான் அப்பறம் கூப்பிடறேன் சார்”
அவருடைய வார்த்தைகள் இடியாக வந்து என் மீது இறங்கியது. ஒரு சில காரியங்களை ஒரு போதும் உண்மையாகக் கூடாதே என்று நாம் விரும்பும் நிமிடங்கள். அப்படிப்பட்ட நிமிடம் அது. நான் வேலை செய்து கொண்டிருந்த போதும் தூங்கும் போதும் அவர் முகம் என்னை வேட்டையாடியது.
“எப்படியாச்சும் காசு வாங்கித் தரணும்”. கண்களில் நீருடன் அவர் சொல்லும் வார்த்தைகள். அவை என் சிந்தனைகளை, நித்திரையை ஆக்ரமித்தது. முடிவில் எல்லாம் சரியாகி செக் கிடைத்தபோது அதை வாங்க அவர் உயிருடன் இல்லை. ஆபீசர்கள் முன்னால் நான் சென்று நின்ற போது சிறிது நேரத்திற்கு என்னால் எதுவும் பேச முடியவில்லை.
மேடம் மற்றும் சாரின் சீட்டுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து போன போது நான் விஷயத்தை சொன்னேன். என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் அவர்களும் நிசப்தமாக இருந்தார்கள். இதுவரை யாருக்காகவும் எந்த ஒரு மேனேஜரும் நேராகப் போய்ப் பேசியதில்லை. தாத்தாவுக்காக மட்டும்தான் அப்படி.
அவருடைய நிலைமையைப் பார்த்துதான் நேரில் போனோம். “அத்தனை கஷ்டப்பட்டு செக் வாங்கியும் பிரயோஜனப்படாமல் போச்சே?”
சாரின் வார்த்தைகளில் சங்கடம் நிறைந்திருந்தது. “செக்க அவங்களுக்கு திருப்பி தரலாம். முடிவ அங்கீகரிச்சு புகாரு கொடுத்த ஆள் கையெழுத்துப் போடாததுனால செக்கை வேற யாருக்கும் கொடுக்க முடியாது”
மேடத்தின் குரலிலும் நிராசையும் துக்கமும் நிறைந்திருந்டன. மேடம் கொடுத்த செக்கை நடுங்கும் கைகளுடன் நான் வாங்கினேன். எங்கிருந்தோ தாத்தா நிறைந்து தளும்பும் கண்களுடன் என்னைக் கேட்பதாகத் தோன்றியது.
“என்னோட புகாரு முடிவுக்கு வந்துடுச்சு இல்லயா?”