எல்லாருக்கும் மரியாதை உண்டு. அந்த மரியாதையும் நாம் நடந்து கொள்கின்ற முறையை வைத்துத்தான் கிடைக்கும். முறை தவறிவிட்டால் அங்கு மரியாதை என்பது இல்லாமல் போய்விடும். எதுவும் ஒரு அளவுதான் என்று வழக்கில் கூறுவார்கள். அளவினை, அதாவது எல்லையை மீறி விட்டால் இருக்கின்ற மரியாதையும் போய்விடும். அதனால் அளவோடு எல்லாம் இருக்கின்ற போதே நாம் எதைச் செய்தாலும் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிய கதை ஒன்று புதுக்கோட்டை வட்டாரத்தில் வழக்கில் வழங்கி வருகின்றது.
பக்கத்து ஊருல ஒருத்தனுக்கு சம்பந்தம் பேசி முடிச்சாங்க. அந்த பக்கத்தூருக்காரங்களும் நல்லா தங்களோட பெண்ணுக்கு வேண்டிய சீர் செஞ்சி சிறப்பாக் கலியாணத்தைப் பண்ணி முடிச்சாங்க. மாப்பிளையும் பொண்ண நல்லாப் பாத்துக்கிட்டான். இப்படி இருக்கையில மறுவழி போறதுன்னு ஒரு சடங்கு இருக்கு. அதாவது பொண்ணும் மாப்பிள்ளையும் ஒண்ணாச் சேந்து மாமியார் வீட்டுக்குப் போவாங்க. அதுக்குப் பேருதான் மறுவழின்னு சொல்வாங்க. திருமணமானவங்களுக்கு விருந்தாக்கிப் போடறதுண்ணும் சொல்வாங்க. இந்த மறுவழிக்கு வந்து பக்கத்து ஊருல உள்ள மாமியாரும் மாமனாரும் வந்து மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டாங்க.
மாப்பிள்ளைகாரனும் தன்னோட அப்பங்காரனுக்கிட்ட, “அப்பா நான் மறுவழிக்குப் போயிட்டு வர்றேன்னு” சொல்லி அனுமதி கேட்டான். அவனோட அப்பா, “டேய் தம்பி நல்லாப் போயிட்டு வா. ஆனா ஒண்ண மட்டும் மனசுல வச்சிக்கோ. ஓம்முகம் ஒனக்குத் தெரியறதுக்குள்ள நீயி நம்ம வீட்டுக்கு மருமகளக் கூட்டிக்கிட்டு வந்துரு. அதுதான் நமக்கு மரியாதை. இதக் கவனமா மனசுக்குள்ள வச்சிக்க. போயிட்டு வா”ன்னு சொல்லி அனுப்பிச்சாரு.
மகனுக்கு ஒண்ணும் புரியல. என்னடா இது நம்ம அப்பா என்னமோ ஓம்மொகம் ஒனக்குத் தெரியறதுக்குள்ளாற வந்துருன்னு சொல்றாரேன்னு குழம்பிக்கிட்டே பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு மாமனாரு வீட்டுக்கு மறுவழி விருந்துக்குப் போனான். அப்பாக்கிட்ட இதப்போயி என்னத்தக் கேக்குறதுன்னு அவருக்கிட்ட கேக்காமயே விட்டுட்டான்.
மாமியாரும் மாமனாரும் மகளையும் மருமகனையும் பார்த்துட்டு ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க. விழுந்துவிழுந்து மருமகனைக் கவனிச்சாங்க. மருமகனுக்கு ரொம்பரொம்ப சந்தோஷமாப் போயிருச்சு.
விருந்துக்குப் போன அன்னிக்கு வாழை இலைய வாங்கிக்கிட்டு வந்து மருமகனுக்குப் போட்டு கறிக்குழம்போட விருந்தாக்கிப் போட்டாங்க. மருமகனும் நல்லாச் சாப்புட்டான். மொதநாளு அவனே நெனச்சிப் பாக்காத அளவுக்கு அவனுக்கு மரியாதை செஞ்சாங்க. அவனும் மலைச்சிப் போயிட்டான்.
மறுநாளு வந்தது. மருமகன் தனக்கு மொதநாளு மாதிரியே மதிப்பும் விருந்தும் கிடைக்கும்னு நெனச்சிக்கிட்டு இருந்தான். அவனுக்குச் சாப்பாடு ஆக்கிப் போட்டாங்க. வாழை இலை இல்லைன்னு தைச்ச எலையைக் கடையில வாங்கிக்கிட்டு வந்து அதுல விருந்து பரிமாறுனாங்க. அவன் மாமனாரப் பாத்துட்டு, “ஏம்மாமா வாழை இலை இல்லியா”ன்னு கேட்டான். அதுக்கு மாமனாரு, “வாழை இலை கிடைக்கலை மாப்பிளே. தையலைதான் கிடைச்சது. அதனால அதையே நீங்க சாப்புடறதுக்காக வாங்கிக்கிட்டு வந்துட்டேன்னு” சொன்னாரு.
மருமகனும் சரி எதுல சாப்புட்டாத்தான் என்னன்னு நெனச்சிக்கிட்டுப் பேசாமச் சாப்பிட்டான். ஊருக்குப் போகணும்னு அவனுக்குத் தோனல. மாமனாரு வீட்டுல தங்கிட்டான். அப்பா சொன்னதெல்லாம் அவனுக்கு ஞாபகத்துக்கு வரல.
மூணாவது நாளாயிருச்சு. அப்ப மாமனாரு வீட்டுல எந்த விருந்தும் ஆக்கல. சரி கடையில வாங்கிக் கொடுக்கப் போறாங்க போலருக்குன்னு நெனச்சிக்கிட்டான். காலையில சாப்புட ஒக்காந்தான். இலைச்சாப்பாடு போடுவாங்கன்னு நெனச்சான். ஆனா இலை வரல. ஒரு கும்பாவுல (சாப்பிடும் தட்டு) சோத்தப் போட்டுத் தண்ணிய ஊத்தி அஞ்சாறு சின்ன வெங்காயத்தைப் போட்டுக் கொண்டுக்கிட்டு வந்து வச்சாங்க.
அதப் பாத்தவுடனே தன்னோட பொண்டாட்டியப் பாத்தான். அவ அவங்கிட்ட வந்து, “கோவுச்சிக்காதீங்க. இன்னிக்குச் சமைக்க முடியல அதனாலதான் வீட்டுல ராத்திரி வடிச்ச சோறு மிஞ்சிருச்சு. அதத்தான் தண்ணி ஊத்தி வச்சிருந்தோம். அதுதான் இன்னிக்கு எல்லாரும் சாப்பிடணும்னு” சொல்லிட்டுப் போனா.
மருமகன் கும்பாவப் பாத்தான். அதுல அவனோட மொகந் தெரிஞ்சது. அப்பத்தான் அவனோட அப்பா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்துச்சு. ஆஹா... நம்ம அப்பா சொன்னது சரியாப் போயிருச்சு. நம்ம மொகந் தெரியறதுக்குள்ள ஊருக்கு வந்து சேருன்னு சொன்னாரு. நாமதான் புரியாம இத்தனை நாளு இங்கயே இருந்துட்டோம். இனி இங்க இருந்தா நமக்கு மரியாதை இல்லைன்னு முடிவு செஞ்சி பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு சொல்லிக்கிட்டு தன்னோட வீட்டுக்கு வந்து சேந்தான்.
இதை வச்சித்தான், “மொத நாள் வாழை இலை, மறுநாளு தையலை, மூணாம் நாளு கையெலை”ங்கற பழமொழி இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கிக்கிட்டு வருது. விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குத்தாங்குறது இதவச்சித்தான் வந்ததோன்னும் நெனக்கத் தோணுது. நமக்குள்ள மரியாதையை நாம காப்பாத்திக்கணும். இன்னைக்கு வரைக்கும் மாமனாரு வீட்டுக்கு விருந்துக்குப் போறவங்ககிட்ட இந்தக் கதையச் சொல்லுவாங்க.