வீட்டுக்கு வரும் மருமகனுக்கு மாமனார் மாமியார் எல்லாரும் நல்லா மரியாதை கொடுப்பாங்க. மருமகன் எது கேட்டாலும் அவங்க வாங்கிக் கொடுப்பாங்க. அதிலும் மருமகன் வந்துட்டாலே வீட்டுல உள்ள கோழியப் புடிச்சி அடிச்சி கொழம்பு வச்சிப் போடுவாங்க. மருமகன நல்லாக் கவனிச்சாத்தான் தங்களோட மகள நல்லா வச்சிக்குவாருங்கற எண்ணமும் அந்த உபசரிப்புல கலந்துருக்கும்.
மருமகன் மாமியார் கூட பேசுறதுக்கு முன்னே எல்லாம் கூச்சப்படுவாங்க. ஆனா மாமனாரு அப்படி இல்ல. அப்பாவுக்கும் பையனுக்குமுள்ள உறவு மாதிரிப் பேசிக்குவாங்க. சில மருமகங்க தாங்கள் ரெம்ப அறிவாளின்னு நெனச்சிக்கிட்டு எடக்கு மடக்கான கேள்விகள எல்லாம் மாமனாருக்கிட்ட கேட்டு அவங்களத் திக்குமுக்காடச் செய்வாங்க. அதுலயும் பதில சொல்ல முடியும்னாலும் அந்தப் பதிலால ஏதாவது பிரச்சனை வந்துருச்சின்னா என்ன செய்யறதுன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு ரொம்பப் பொறுமையாப் பதிலச் சொல்வாங்க.
சில பேரு தங்களோட அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டணும்னு நெனச்சிக்கிட்டு மாமனாருக்கிட்ட கேள்விமேல கேள்வி கேட்டு அவர மடக்கப் பாப்பாங்க. அதத் தெரிஞ்சிக்கிட்ட மாமனாரு மருமகனோட அறியாமையையும் வெட்டித்தனமான பந்தாவையும் வெளிச்சம்போட்டுக் காட்டுறமாதிரி பளிச்சுன்னு பதிலச் சொல்லுவாங்க.அதக் கேட்ட மருமகன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருப்பாங்க. அதுமாதிரி மாமனாருகிட்ட மாட்டிக்கிட்ட மருமகனப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.
நகரத்துல படிச்சிட்டு ஆசிரியர் வேலை பாத்துக்கிட்டு நகரத்துல குடியிருந்த ஒருத்தன் கிராமத்துல போயிக் கலியாணம் பண்ணிக்கிட்டான். பொண்ணு ரொம்ப அழகா இருப்பா. அதனால ரெம்ப விரும்பிக் கிராமமா இருந்தாலும் பரவாயில்லைன்னு நெனச்சிக்கிட்டு கிராமத்துப் பொண்ணக் கலியாணம் செஞ்சிக்கிட்டான்.
அவன் கலியாணம் செஞ்ச வீட்டுல பொண்ணோட அப்பா செக்குல எண்ணெயாட்டுற வேலை செஞ்சாரு. அவரே சொந்தமா செக்குப்போட்டு எண்ணெய எடுத்து வியாபாரம் பண்ணினாரு. ஒரே பொண்ணுங்கறதால தன்னோட பொண்ணுக்குச் சீருசெனத்தி நல்லா செஞ்சாரு. அதனால மருமகனுக்கு மாமனாரு மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் உண்டு.
மாமனாரும் மருமகன தன்னோட மகனாவே நெனச்சாரு. மாப்பிள்ளயும் பொண்ணும் ஒருநாள் கிராமத்துக்கு விருந்துக்கு வந்தாங்க. மாமியாக்காரி மருமகனும் மகளும் வந்துட்டாகளேன்னு நல்ல வெடக்கோழியா அடிச்சிக் கொழம்பு வச்சிருந்தா.
கறிக்குழம்பு வாசனை வாசல் வரைக்கும் வந்து மூக்கைத் தொலைச்சது. மாமனாரு செக்கடியிலருந்து மாட்ட சுத்தவச்சிட்டு எறங்கி மருமகனப் பாத்துட்டு ஓடிவந்து, ‘‘வாங்க மாப்பிள.. நல்லாருக்கியளான்னு’’ கேட்டாரு. அவனும் மாமனாரப் பாத்து, ‘‘நல்லாருக்கேன் மாமா.. நீங்க நல்லாருக்கீங்களான்னு?’’கேட்டான்.
மாமியாகாரி, ‘‘சரிசரி ரெண்டுபேரும் வந்து சாப்புடுங்கன்னு’’ சொல்லி ரெண்டுபேருக்கும் சாப்பாட்டப் போட்டா. மாமனாரும் மருமகனும் பேசிக்கிட்டே சாப்புட்டாங்க. அப்ப மருமகங்காரன் மாமனாரப் பாத்து, ‘‘ஏம்மாமா நீங்கபாட்டுக்கு செக்கடியிலருந்து வந்துட்டிங்களே… மாடுக செக்கச் சுத்திக்கிட்டு வருமான்னு’’ கேட்டான்.
அதுக்கு மாமனாரு, ‘‘ஓ…மாடு அதுபாட்டுக்குச் சுத்திக்கிட்டே வரும் மாப்பிளே’’ன்னு சொன்னாரு. ஒடனே மருமகன் விடாம, ‘‘ஆமா மாடு செக்கச் சுத்திக்கிட்டே வருதுன்னு நீங்க எப்படி மாமா கண்டுபிடிப்பீங்கன்னு’’ அடுத்த கேள்வியையும் கேட்டான்.
அதக் கேட்ட மாமனாரு, ‘‘அது ரொம்பச் சுலபமானது மாப்பிளே... மாட்டுக கழுத்துல மணிகளக் கட்டியிருக்கேன் அதுக சுத்திக்கிட்டே வர்றபோது மணிச் சத்தம் கேக்கும். அதக் கேட்டுட்டு நான் மாடுக செக்கச் சுத்திக்கிட்டு இருக்குதுங்கன்னு நெனச்சிக்கிடுவேன்னு’’ சொன்னாரு.
மருமகன் இதோட கேள்வி கேக்குறத விட்டுடுவாருன்னு மாமனாரு நெனச்சாரு. ஏன்னா அவருக்குச் சாப்புடயில பேசறது புடிக்காது. இருந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகன் கேக்கறபோது பேசமா இருக்கவும் முடியல. மருமகங்காரன் தான் அறிவாளிங்கறதக் காட்டணும்னு நெனச்சிக்கிட்டு மாமனாரப் பாத்து, ‘‘எனக்கொரு சந்தேகம் மாமா. அந்த மாடுக செக்கச் சுத்திவராமா ஒரே இடத்துல நின்னுக்கிட்டு கழுத்த மட்டும் ஆட்டிக்கிட்டே இருந்துச்சுகன்னா நீங்க என்ன செய்வீங்கன்னு’’ கேட்டுட்டு மாமனாரப் பாத்தான்.
மாமனாருக்குச் சரியான கோபம். என்னடா இவன் கிறுக்கன் மாதிரி தத்துப்பித்துன்னு கேள்விகேக்குறான்னு நெனச்சிக்கிட்டு அத வெளியில காடடாம ரொம்ப நறுக்குத் தரிச்சமாதிரி, ‘‘மாப்பிள்ள அந்த மாடுங்க ஒங்க மாதிரி அதிகம் படிக்கலைல்ல. அதனால அப்படிச் செய்யாதுகன்னு’’ சொன்னாரு.
அந்தப் பதிலக் கேட்ட மருமகனுக்கு ஏண்டா இப்படியொரு கேள்வியக் கேட்டம்னு ஆகிப்போச்சு. அப்பறம் அவன் பேசவே இல்லை. பேசமாச் சாப்பிட ஆரம்பிச்சான். இதக் கேட்ட மாமியாரும் மகளும் சமையக்கட்டுக்குள்ளாறப் போயி மாப்பிள்ள காதுல விழுகாமா விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இந்தக் கதையக் கேக்குறவங்க இன்னைக்கும் சிரிப்பாங்க.