புங்க மரம் வெயிலுக்கு நல்ல குளுச்சியான மரம். வேப்பம மரம் மாதிரியே அதனோட நிழல் ரொம்ப குளு குளுன்னு இருக்கும். இந்தப் புங்க மரத்தப் பத்தி ஒரு கத வழங்கி வருது. அது ஒரு நம்பிக்கையாவே இருந்து, அந்த மரங்களையும் மக்கள் வழிபடக் கூடியதா ஆக்கி அதை வழிபட்டுக்கிட்டு வர்றாங்க.
ஒரு பெரிய ஊரு இருந்துச்சு, அந்த ஊருல ஏழு அண்ணந்தம்பிக, அவங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி. இந்த அண்ணனுக ஏழு பேரும் தங்கச்சி மேல ரொம்பப் பாசமா இருந்தாங்க. தங்கச்சிய விட்டுட்டு எதையும் சாப்புட மாட்டானுக. அதே மாதிரி அவளும் அண்ணனுக மேல ரொம்பப் பாசமா இருந்தா. இதப் பாத்துட்டு ஊரே ரொம்ப ஆச்சரியப்பட்டுப்போச்சு.
இப்படி இருந்துக்கிட்டு இருந்தப்போ ஒரு நாளு இந்த அண்ணனுக எல்லாரும் தங்கச்சியப் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு வேட்டைக்குப் போனாங்க. தங்கச்சிக்கிட்ட, ‘‘ஆத்தா நாங்க வேட்டைக்குப் போயிட்டு வர்றோம். நீ பத்தரமா இரு. எந்தக் காரணத்தக் கொண்டும் வெளியில போயிறாத. மனுசளத் திங்கற கிழவி ஒருத்தி இருக்கா. நீ கொஞ்சம் கவனமா இருக்கணும்னு’’ சொன்னாங்க. தங்கச்சியும் பத்திரமா இருக்கேன் நீங்க வேட்டைக்குப் போயிட்டு வாங்கன்னு சொன்னா.
தங்கச்சி சொன்னதக் கேட்டுட்டு இவனுக ஏழுபேரும் வேட்டைக்குப் போனாங்க. தங்கச்சிகாரி அண்ணனுக போனவுடனே, வேட்டைக்குப் போனவங்க சீக்கிரமா வந்துருவாகன்னு தங்கச்சிகாரி வேக வேகமா சமைச்சு வச்சிருவோம். அண்ணனுங்க வந்தாங்கான்னா பசியோட இருப்பாங்க. அப்படீன்னு சொல்லிட்டு அடுப்புப் பத்த வைக்கறதுக்காகப் போனா. ஆனா நெருப்பு அணைஞ்சி போயி இருந்துச்சு.
ஆகா நெருப்பில்லையேன்னு நெனச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிச்சா. அவங்க வீடு ஊரவிட்டுக் கொஞ்சந்தள்ளி காட்டுக்குள்ளாற இருந்துச்சு. அதனால பக்கத்துல வீடுக இல்லை.
தங்கச்சிகாரி, சரி ஊருக்குள்ளாற நெருப்பப் போயிக் கேட்டு வாங்கிக்கிட்டு வருவோம்னு நெனச்சி ஊருக்குள்ளாறப் போயி, ஒவ்வொரு வீட்டுலயா கேட்டா. ஆனா யாரு வீட்டுலயும் நெருப்பு கிடைக்கல. என்னடா பண்ணுறதுன்னு நெனச்சிக்கிட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்தவளுக்கு ஒரு யோசனை தோணுச்சி. நம்ம வீட்டுக்குக் கொஞ்சந்தள்ளி ஏதாவது களத்து வீடுக இருக்கும் அந்த வீடுகள்ள நெருப்புக் கிடைக்கும் அப்படீன்னு நெனச்சிக்கிட்டு அவ வரையோட்ட எடுத்துக்கிட்டு நெருப்பு அள்ளிக் கொண்டாறதுக்காக வீட்டுல இருந்து பொறப்புட்டா.
ரொம்ப நேரமாத் தேடியும் ஒரு வீடும் கண்ணுல தெம்படல. அப்ப ஒரு புங்க மரத்துல ஏறிப் பார்ப்போம் ஏதாவது வீடு தெரியும்னு நெனச்சிக்கிட்டு புங்க மரத்துல ஏறிப் பாத்தா. அப்ப கொஞ்சத் தூரத்துல ஒரு வீடு இருந்துச்சு. அந்த வீட்டுக்குப் போயி நெருப்ப எடுத்துக்கிட்டு வருவோம்னு தங்கச்சிகாரி நெனச்சா. அவ கௌம்பப் போறபோது அவளோட அண்ணனுக சொன்னது, அவளுக்கு நெனப்பு வந்துச்சு. ஒருவேளை அந்தக் கிழவி வந்து நம்மளப் புடிச்சிட்டான்னா என்ன செய்யிறதுன்னு நெனச்சிக்கிட்டு, எதுக்கும் இந்தப் புங்க மரத்துஅடியில நம்மளோட அடையாளமா அண்ணனுக தெரிஞ்சிகிறமாதிரி நம்மளோட காதோலையையும் கருகமணியையும் கழட்டி வச்சிட்டுப் போவோம். அந்தக் கிழவியால நமக்கு ஏதும் ஆயிருச்சுன்னா இந்தப் புங்க மரத்தடியில வந்து தேடுனாங்கன்னா நம்ம தங்கச்சி இந்தப் பக்கந்தான் போயிருக்கான்னு தெரிஞ்சுக்குவாங்கன்னு நெனச்ச்கிட்டு காதுல கழுத்துல கிடந்ததக் கழட்டி புங்க மரத்தடியில வச்சிப்புட்டு நெருப்பு எடுக்கறதுக்காக அந்த வீட்டப் பாத்து வேக வேகமாப் போனா.
அந்த வீட்டுக்கு யாரும் போகமாட்டாங்க. ஏன்னா அங்கதான் அவ அண்ணனுக சொன்ன கெழவி இருந்தா. அவ அழகா யாரு போனாலும் அவங்கள லேசுல விடமாட்டா. அவங்கள வசியப்படுத்தி கொன்னு சாப்புட்டுருவா. அவ மந்திர தந்திரமெல்லாம் தெரிஞ்சவ. அதனால அவ வீட்டுக்கு யாரும் போகமாட்டாங்க.
இந்தக் கிழவியப் பத்தி தெரியாததனால தங்கச்சிகாரி அங்க போயி நெருப்புக் கேட்டா. யார்ரா இங்க வந்திருக்கான்னு அந்தக் கெழவி வீட்டுக்குள்ளாற இருந்து வெளிய வந்து பாத்துச்சு. அங்க அழகான இந்தத் தங்கச்சிகாரி வரையோட்ட கையில வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தா.
அவளப் பாத்த அந்தக் கிழவி, ‘‘ஒனக்கு என்ன வேணும்னு கேட்டா?’’ அதுக்கு தங்கச்சிகாரி எங்க அண்ணனுங்க வேட்டைக்குப் போயிட்டாங்க, அவங்க திரும்ப வர்றதுக்குள்ளாற சோறு வடிச்சி வக்கணும். அதுக்கு நெருப்பு இல்ல. கொஞ்சம் நெருப்பு இருந்தாத் தாங்கன்னு’’ கேட்டா.
அதக்கேட்ட அந்தக் கிழவி, ஆகா நல்ல பிள்ளை வழியக்க வந்து மாட்டிக்கிட்டா இவள விட்றப்புடாதுன்னு நெனச்சிக்கிட்டு, சரி நெருப்புத் தர்றேன். உள்ளாற வந்து அடுப்புல இருக்கறத எடுத்துக்கிட்டுப் போன்னு சொன்னா.
அட இந்தக் கிழவி ரொம்ப நல்லவளா இருக்காளேன்னுட்டு வீட்டுக்குள்ளாறப் போனா. அவ வீட்டுக்குள்ளாறப் போனஉடனேயே இந்தக் கிழவி வேகமா வந்து கதவச் சாத்திக்கிட்டா. தங்கச்சிகாரி கெழவியப் பாத்து, ‘‘எதுக்கு நீ இப்ப கதவச் சாத்துற. கதவத் தொறந்து விட்டுரு. எங்க அண்ணனுகளுக்குத் தெரிஞ்சிச்சி ஒன்ன வகுந்து கூறு போட்டுருவாங்கன்னு’’ சொன்னா.
அதுக்கு அந்தக் கெழவி சும்மாதான் நாங் கதவச் சாத்துறேன் நீ பயப்படாத. நீ அடுப்படிக்குப் போயி நெருப்ப எடுத்துக்கிட்டு வான்னு’’ சொன்னா. அந்தக் கிழவி சொல்றத நம்பி தங்கச்சிகாரி நெருப்பெடுக்க அடுப்படிக்குப் போனா. தங்கச்சிகாரி அடுப்படிக்குப் போனவுடனேயே அவ பின்னாடியே வந்த கிழவி வேகமா அடுப்படிக் கதவையும் சாத்தி கொக்கி போட்டு கையில வச்சிருந்த ஒலக்கையால தங்கச்சிகாரி மண்டையில ஓங்கி அடிச்சா. அவ அடிச்ச அடியில சின்னப்புள்ளயான தங்கச்சிகாரி கீழ விழுந்து செத்துப் போயிட்டா. அந்தக் கிழவி ஒடனே அந்தப் புள்ளய சமைச்சிச் சாப்புட ஆரம்புச்சிட்டா.
வேட்டைக்குப் போன அண்ணந்தம்பிக ஏழுபேரும் வேட்டை முடிஞ்சி வீட்டுக்கு வந்தானுக. வீட்டுக்கு வந்து பாத்தா வீட்டுல தங்கச்சியக் காணோம். அங்கயும் இங்கயும் தேடுனாங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பக்கமாப் போயித் தேடிக்கிட்டு வந்தானுக. தங்கச்சியக் கண்ணுலயே காணல, என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு ஊருக்குள்ளாறப் போயி ஒவ்வொரு வீட்டுலயாக் கேட்டாங்க. அப்ப ஊருக்குள்ளாற அவங்க தங்கச்சி வந்து நெருப்புக் கேட்ட விசயத்த அங்கன உள்ளவங்க சொன்னாங்க.
அப்ப எங்க போனா நம்ம தங்கச்சின்னு நெனச்சிக் கவலப் பட்டுக்கிட்டு அவங்க ஏழுபேரும் திரும்பவும் வீட்டுக்கு வந்தானுக. வந்துட்டு கடைசித் தம்பிய மட்டும் வீட்டுல இருக்கட்டும் நாம ஆறுபேரும் போயித் தங்கச்சியத் தேடிக் கண்டுபிடிச்சிக்கிட்டு வந்துருவோம்னு மா வேகம் மழை வேகமாப் போனாங்க. அப்படிப் போயிக்கிட்டு இருக்கயில அவனுக எந்தப் பக்கம் போகனும்னு தெரியாமாக் கிடந்து அலைஞ்சு கடசியில தங்கச்சிகாரி போன பக்கமாவே போயி அந்தக் கிழவி வீட்டக் கண்டுபிடிச்சிட்டாங்க.
அவங்க போறதுக்குள்ளாற அந்த மந்திரக் காரக் கிழவி அந்தச் சின்னப்புள்ளயச் சமச்சுச் சாப்புட்டுட்டா. அண்ணனுங்க ஆறுபேரும் வீட்டுக்குள்ளாறப் போயிப் பாத்தா தங்கச்சியோட சட்டைதுணிகதான் ரத்தக்கறையோட கெடந்துருக்கு. அதப்பாத்த அண்ணனுங்க கதறிக் கதறி அழுதாங்க. அப்ப அங்க வந்த கிழவி அவனுகளப் பாத்துட்டு, ‘‘ஏப்பா நீங்கள்ளாம் அழறீங்க... அழாதீங்க... நான் காட்டுக்குள்ளாற வெறகு பெறக்கப் போனப்ப இந்தச் சட்டைத்துணிங்க கெடந்துச்சு அப்ப ஒரு சிங்கம் ஒங்களோட தங்கச்சியத் தின்னுக்கிட்டு இருந்துச்சு. சரி இந்தப் புள்ளயோட ஆளுங்க யாராவது வந்து கேட்டாங்கன்னா, நாம அடையாளத்தச் சொல்லி விசயத்தச் சொல்றதுக்கு ஏதுவா இருக்குமேன்னுட்டு இந்தச் சட்டைங்கள எடுத்துக்கிட்டு வந்தேன்னு’’ பொய் சொன்னா.
அதநம்பிட்ட அண்ணன்க ஆறுபேரும் ‘‘ஐயோ எங்களோட தங்கச்சி போன பிறகு, நாங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே தங்களோட சூரிக்கத்திகள எடுத்து அவங்க அவங்க வயித்துல குத்திக்கிட்டு செத்துப் போனானுங்க. அந்தக் கெழவிக்கு ரொம்பச் சந்தோஷம். அந்த ஆறுபேத்தையும் தன்னோட சொந்தக்காரங்கள வரச்சொல்லி சமச்சுப் சாப்புடச் சொன்னா.
தன்னோட அண்ணனுங்க போனவங்க இன்னும் காணமேன்னு நெனச்சிக்கிட்டு இருந்த தம்பிகாரன் இனிமேலும் இருக்கக் கூடாது. நம்ம தங்கச்சிக்கும் அண்ணனுகளுக்கும் ஏதோ ஆகிப்போச்சு அப்படீன்னு நெனச்சிக்கிட்டு அவங்களத் தேடிக்கிட்டு இவனும் போனான்.
எந்தப் பக்கம் போறது என்ன செய்யறதுன்னு அவனுக்குப் புரியல. அப்ப ஒரு புங்கமரம் அவனோட கண்ணுல தெம்பட்டது. அந்த மரத்து மேல ஏறிப் பார்த்த அவனுக்கு ரொம்ப தூரத்துல ஒரு வீடு இருக்கறது தெரிஞ்சது. சரி, அந்த வீட்டப் பக்கம் போயிப் பாப்பம்னுட்டு மரத்த விட்டு கீழ எறங்கனவனோட கண்ணுல தங்கச்சிகாரி அவுத்து வச்சிருந்த காதோலையும் கருகமணியும் கண்ணுல பட்டுச்சு.
அதப் பார்த்த தம்பிகாரனுக்கு, ‘‘ஐயையோ இது நம்ம தங்கச்சியோட கதோலையும் கருகமணிமில்ல... நம்ம தங்கச்சி இந்தப் பக்கமாத்தான் போயிருக்கணும்னு’’ நெனச்சி அழுது மயங்கி விழுந்தான். கொஞ்ச நேரத்துல சில்லுன்னு காத்து அவனோட முகத்துல பட்டவுடனே அவன் எழுந்திருச்சுப் பாத்தான்.
அப்ப அந்தப் புங்கமரம் அவங்கிட்டப் பேசிச்சு. ‘‘சின்னத் தம்பி சின்னத்தம்பி. நீ அழுவாத... ஒன்னோட தங்கச்சியயையும் அண்ணன்களையும் கொன்னது அந்த மோசகாரக் கிழவிதான். அவ மந்திரம் தந்திரம் தெரிஞ்சவ. அவள அவ வழியில போயித்தான் கொல்ல முடியும். நீ என்னோட மரப்பிசினை எடுத்துக்கிட்டு தலை போற அளவுக்கு உள்ள ஒரு கொட்டானுக்குள்ளாரத் தடவி எடுத்துக்கிட்டுப் போயி அந்தக் கிழவியோட தலையில மாட்டிவிட்டுரு. அவளோட தலைமயிரோட இந்தக் கொட்டானும் எடுக்க முடியாம ஒட்டிக்கிரும். அவ தலையில இருந்து அத எடுக்கப்பாப்பா ஆனா அது முடியோட பிச்சிக்கிட்டு வந்துரும் அந்தத் தலைமுடியெல்லாம் வந்துட்ட அவளும் தானாகவே செத்துப்போயிருவா... நீ கவலப் படமாப் போ. அவ சொல்லறத எல்லாம் நம்பீராதன்னு சொல்லி...’’ தன்னோட மரப்பிசினையும் கொடுத்துச்சு.
புங்கமரத்தோட பிசினை எடுத்துக்கிட்டுக் கொட்டானுக்குள்ளாரத் தடவிக்கிட்டுப் போயி அந்தக் கிழவி வீட்டுக்குள்ளாரப் போனான்.
அவனப் பாத்த கிழவி இந்தப் பய செத்துப் போனவங்களோட சொந்தக்காரனாத்தான் இருக்கணும்னு நெனச்சி அந்தக் கிழவி, ‘‘தம்பி வாப்பா... வீட்டுக்குள்ளாற ஒக்காருன்னு’’ அன்பாப் பேசுறது மாதிரிப் பேசி ஒக்கார வச்சா.
வீட்டுக்குள்ளாற ஒக்காந்த தம்பிகாரன் அங்கன கெடந்த தன்னோட அண்ணனுகளோட வேட்டி சட்டைகளையும், தங்கச்சியோட பாவாடை சட்டையையும் பாத்துட்டுக் கதறிக் கதறி அழுதான். அவன் அழுகறதப் பாத்துட்டு, அந்தக் கெழவி அவனோட அண்ணன்கிட்ட சொன்னமாதிரியே சொன்னாள். அதுக்கு அவன், ‘‘அந்தச் சிங்கத்த நான் கொல்றதுக்குத்தான் வந்துருக்கேன்னு’’ சொன்னதக் கேட்ட கிழவி, அவன ராத்திரித் தங்கிட்டு பகல்ல போயி அந்தச் சிங்கத்தக் கொல்லுன்னு சொல்லி தங்கவச்சா. ராத்திரி நேரத்துல அந்தப் பய மெதுவா எந்துருச்சிப் போயி அந்தக் கொட்டானக் கிழவியோட தலையில மாட்டிவிட்டுட்டு வந்து பேசாமாப் படுத்துக்கிட்டான். விடிஞ்சி எந்திரிச்சுப் பாத்த கிழவி தன்னோட தலையில மாட்டியிருந்த கொட்டானக் கழட்டிக் கழட்டிப் பாத்தா. அந்தக் கொட்டான் சாமானியத்துல கழறல. அவ தன்னோட பலத்தக் காட்டி வேகமாப் புடுச்சு இழுத்தா. அப்படி இழுக்கயில கொட்டான் அவளோட தலைமயிரோட பிச்சிக்கிட்டு வந்துடுச்சு. தலைமயிரலெ்லாம் பிச்சிக்கிட்டு வந்ததால அவ செத்துக் கீழ விழுந்தா.
தம்பிகாரன் தன்னோட அண்ணனுகளோட துணிமணிகளையும், தங்கச்சியோட துணியைப் பார்த்துப் பார்த்து அழுதான். அவனுக்கு அதுக்குமேல ஒண்ணுஞ் செய்யத் தோனல. தன்னோட சூரிக்கத்திய எடுத்துத் தன்னோட நெஞ்சுல குத்திக்கிட்டு செத்துப் போயிட்டான்.
அந்த ஊருக்காரவுக என்னடா அண்ணன் தம்பிகளையும் அந்தப் பிள்ளையையும் காணலன்னுட்டு அவங்களத் தேடிக்கிட்டு வந்தாங்க. வந்த அவங்களுக்கு அந்தப் புங்கமரம் நடந்ததெல்லாம் சொல்லி வழியும் காட்டுச்சு. ஊர்க்காரங்க புங்கமரம் காட்டுன வழியில போயி அந்தக் கெழவி வீட்டப் பார்த்தாங்க. அதுக்குள்ளாற தம்பிக்காரன் செத்துப் போயிக் கிடந்ததப் பார்த்துட்டு அந்த ஏழு பேரோட துணிகளையும் அந்தத் தங்கச்சிகாரியோட காதோலை கருகமணியையும் எடுத்துக்கிட்டு வந்து அந்தப் புங்கமரத்துக்குக் கீழ வச்சிச் சாமியாக் கும்புட ஆரம்பிச்சாங்க. அன்னயிலருந்து புங்க மரத்த யாரும் இந்தப் பக்கம் வெட்டுனதே இல்ல. அந்தப் புங்கமரத்த எரிச்சா பாவம் வந்துரும்னு நெனச்சி அத அவங்க தொடரது இல்ல. இந்தக் கதை இன்னக்கி வரைக்கும் வழக்கத்துல வழங்கி வருது.