பொங்கல் எங்கள் பொன்னாள்!!
வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும்
வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும்
மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும்
சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்;
பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத்
திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த
நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த
ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு;
மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம்
குங்குமம் விற்கும் பாய்க்கு மதமிரண்டு சமமாச்சி, மாயிலைத்
தோரணமும் குருத்தோலைப் பின்னலும் வாழையிலையும்
புத்தாடை வாங்க ஏழைக்கும் பணமாச்சி; பொங்கலொன்றே
எல்லோர்க்கும் பாகுபாடில்லா பெருநாளாச்சி;
ஊரெங்கும் திரிந்தாலும் பொங்கலுன்னு வீடுவந்தோம்
நாலுநாள் பண்டிகையை நாடெங்கும் கொண்டாடுவோம்
ஆடுமாடு வீடு வயல் அத்தனைக்கும் நன்றி சொல்வோம்
கனுக்கரும்பு இனிப்போட தைநாளில் கூடிநிற்போம்;
தமிழரது மரபாய போகியெனும் பண்டிகை போதும்
பழையன கழியும்நாளில் புதியன புகுமொரு ஜாலம்
தைய்யதில் ஆடை வேய்ந்து பளிச்சென வீடும் பேசும்
பொன்னோர் அன்று கண்ட பொங்கலெங்கள் பொன்னாளே!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.