சினிமா
விசித்திரமான வானம் இது
மின்னும் நட்சத்திரங்களுக்கானது...
எப்போது வேண்டுமானாலும்
மங்கவைத்து காணாதுசெய்து விடும்.
விசித்திரமான இராட்டினம் இது
கீழிருப்போரை மேலேற்றி
மேலிருப்போரை கீழிறக்கி
அசந்தால் குப்புறத் தள்ளி விடும்.
விசித்திரமான மாயவலை இது
மீளமுடியாமல் சிக்கவைக்கும்,
சிக்கிக்கொண்டோரை மாயவைக்கும்,
சிக்கலைச் சிக்கலாக்கி ஓயவைக்கும்.
விசித்திரமான மாயக்கண்ணாடி இது
சிரித்தால் அழுது காட்டும்
அழுதால் சிரித்துக் காட்டும்
விழுந்தால் எழுந்து காட்டி விழவைக்கும்.
விசித்திரமான சூதாட்டம் இது
பணம்பெருக்கி குணம் சுருக்கும்
பணம்சுருக்கிப் பிணமாக்கும்
பணத்தாலே பணம்பண்ணும்.
விசித்திரமான புதைகுழி இது
தோண்டினால் புதையலும் கிடைக்கும்
தோண்டுவோர்க்கான புதைகுழியுமாகும்.
எட்டிப்பார்ப்போர்க்கு அதிசயக்குழியாகும்.
ஜரிகைக் கனவுகளால்
கட்டப்படும் கூடாரமிது...
எந்நேரமும் கலையலாம், உடையலாம்
கலைத்தபின் கூடலாம், சேரலாம்.
மொத்தத்தில் இது
தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு
சைத்தான்களால் சபிக்கப்பட்டு
மனிதர்களால் விளையாடப்படும்
மாயவிளையாட்டு ஆகும்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.