பிடிப்பும் பசையும்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்
தன்னைக்
கரைத்துக் கொண்டவள்…!
உணவின் சுவையை
அறியாதவள்
பசையின் சுவையை மட்டுமே
அறிந்தவள்...!
தீப்பெட்டி ஒட்டியேத்
தேய்ந்து போனது
அவளது
கைவிரலும் மனதும்...!
காய்ந்த பெட்டியைப் போல
அவள் மனதும்
கலகலப்பானது...!
ஊதியத்தை வைத்து
உழைப்பைக் கணக்கிட்டவள்
களைப்பை வைத்துக்
கடிகாரத்தைக் கணித்தவள்...!
தீப்பெட்டிக் கணக்கு
அறிந்தவள்
வாழ்க்கையின் கணக்கை
அறியாமல் போனாள்...!
தீப்பெட்டி ஒட்டியவள்
வாழ்க்கையில்
இல்லாமல் போனது
பிடிப்பும் பசையும்...!
நெருப்பு
தீக்குச்சி மட்டுமல்ல
அவளும்தான்...!
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.