சமைக்கிறவன் சொல்லாத கதை

நாளுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க - எங்க
கட்டில்சுகமும் கனவுலதாங்க,
சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச்
சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க;
சுட்ட பணம் பளபளக்கும் - மிளகாய்ச்
சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும்,
அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க
சமைக்கும் சோறு மணமணக்கும்;
நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி
துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும்,
வடிச்ச சோறு ஆவிப் போல – வயசு பறந்து
வாழ்க்கை உப்புச்சப்பில்லாம முடியும்;
முப்பது கடந்து - மனசு பொண்ணு தேடும்
தேடல் நீளும், எங்கோ ஒரு பொண்ணுக் கிடைத்தாலும்
அது தொப்பியைக் கழற்றிப் பார்க்கும் – தொந்தியைத்
தடவிநிக்கும் – வேறவழியில்லாம மனசு வேறுவீட்டைப் பார்க்கும்;
எப்படியோ திருமணமும் முடியும் – போகும்வரும் சொச்சநாளில்
பேருசொல்ல பிள்ளைகளும் பிறக்கும், பிறகு
பிள்ளைகளைப் பார்க்காம – மனைவியிடம் சேராம
போறநாளு ஒவ்வொன்னும் ‘ஏன்டா கட்டிக்குனன்னு கேள்விக் கேட்கும்;
சரி தலைஎழுத்தேன்னு சாம்பார் வைப்போம்
குழம்பு வைப்போம் சுட சுட இறக்கி வைக்கையில்
கைச்சுட்டாலும் கருமம்னு விடுவோம் – கரிப்பிடித்த
அடுப்போட மனசையும் போட்டெரிப்போம்;
உடம்பு முடியலையோ – வெகுநாளாத்
தூங்கலையோ – நாள்கடந்து நாங்க
திங்கலையோ’ கேட்க யாரிருக்கா - ஒருநாளு
சமைக்கலைன்னா கூலி குறைக்க ஆளிருக்கும்;
காதல்ல தோற்றாலும் – கட்டின மனைவி
கல்லெறிந்தாலும், வீட்டில் யாரோ செத்தாலும்
எங்கள் கண்ணீரும் சுவையாகும் – வெளியேத்
தெரியாதச் சாபமாகும்;
கருவேப்பிலை பிச்சிப் போட்டா – மனசும் கூட
பிய்ந்துவிழும், கடுகள்ளிப் போட்டாலும்
கனவெல்லாம் கூடவிழும், எரியும் நெருப்பைப் போல
மனசெரிந்து விறகாக் கருகும்;
பண்டிகைன்னாலே பயம் வரும் – அன்று
அரைப்பொழுதில்’ ஒரு நாள் வேலை கணக்கும்
கொண்டாடத் துடிக்கும் மனதில் – பிள்ளைங்க
அப்பான்னு ஏங்குமோன்னு கவலைவரும்;
பொண்டாட்டிப் பேசிடுவா; என்ன தொழிலுய்யான்னு
சொல்லாமல் முனுமுனுப்பா, வெடிக்கும் பட்டாசு சப்தம்
அவப் பேசும் தொலைப்பேசியில் கேட்கும், மனசு
சிட்டா பறந்து அம்மா அப்பாவையெல்லாம் நினைக்கும்;
படிச்சவங்களுக்கு மின்னஞ்சல் வரும் – நாங்க
படிச்சாலும் மீன்குழம்புதானே மிச்சம்? கொழும்பு கொதிக்கும்
நேரத்துக்குள்ள பழைய கடிதம் நினைப்பு வரும் – எடுத்துப்
படித்தா லழுகை வரும்; அவப் பட்டினி ஆங்காங்கே ஈரமா எழுதியிருக்கும்;
என் குறைய நான் சொல்ல எனக்குன்னு - யாரிருக்கா
இன்னொரு சமையல் காரன் என்னைப்ப் போல
எதிரிருப்பான் – எங்களுக்கு புரிஞ்ச வாழ்வை எதுக்கு சொல்லி
வெளியவைக்க, உள்ளே புகையிலை வெச்சி பீடியா புகைச்சித் தீர்ப்போம்;
ஒரு கிளாசு சாராயம் விளக்கு வெச்சா
குடிச்சித் தீர்ப்போம், விடிஞ்சா தெரியும் கறுத்த முகத்தில்
யாரும் துப்பாத எச்சில் துடைப்போம்’
குடிகாரன் பேரழிக்க நல்ல சமையல்காரன்னுப் பேரெடுப்போம்!
- வித்யாசாகர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.