தமிழினப் பேறு போற்ற நடைபோடுவோம்...!
ஆழிப்பேரலை அழித்ததன் முடிவிலும்
அடங்கா பெருநெருப்பென
அகிலம் பரப்பி வெளிச்சமாய்
அகன்று வளர்ந்தது தமிழினம்;
அடிமைத் தனமகலும் போருக்கு
உயிரையும் உதிரத்தையும் -
ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும்
சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்;
கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின்
நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் -
தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும்
கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்;
வீரம் பெரிது! மானம் பெரிது! அறிவு பெரிது!
உறவுகள் பெரிது! உயிர்பருகும் அன்பும் நட்பும் பெரிது!
அதற்குத் தகநடக்கும் பண்பு உயிரினும் மானப் பெரிதென
என்றோ மனிதருக்கு வாழ்வினைப் போதித்தது தமிழினம்;
குடும்பம், கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை, சுய ஆய்வு,
திறன் வளர்த்தல், தீரா நம்பிக்கை, ஒழுக்கம் நல்குதல்,
உணர்வு பகிர்ந்து உறவு பிணைந்து ஒற்றுமைத் தீக்குச்சியில்
ஒவ்வாமை கொளுத்தலென வரையறைகளோடு வாழுமினம் தமிழினம்;
இங்ஙனம், காலக் கணக்கில் பழையதாகி
புதுமை ஏடுகளில் புது பொலிவு சேர
அடியடியாய் நகர்ந்துள்ளோம்; இனி மிச்சத்தை
இமைபோல் காத்து இவ்வினம் -
தலைநிமிர்ந்து கடக்கவே நாமும் நடைபோடுவோம்...!!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.