தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் - ஒன்று (1) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஒன்றாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் ஒன்றுக்குரிய கோள் புதன் ஆகும். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இக்கோள் தான் மற்ற எல்லாக் கோள்களையும் விட அதிக வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனிடமிருந்து அதிக ஆற்றலையும் பெறுகிறது. எனவே அதிக ஆற்றலும் வேகமான செயல்பாடும் இக்கோளின் பண்புகள் என்று கூறலாம்.
இக்கோளின் தாக்கம் பெற்றவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சோர்வாக உட்கார்ந்து பார்க்க முடியாது. எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களது முடிவு எடுக்கும் திறனும் மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தும். எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் விரைவாக முடிவெடுத்து செயலில் இறங்கியும் விடுவார்கள். பொழுதை வீணடிப்பது இவர்களுக்கு எள்ளளவும் பிடிக்காத விசயம்.
பூமிக்கு அடுத்ததாக அதிக அடர்த்தி கொண்ட கோள் இதுவே ஆகும். அடர்த்தி என்பது பொருள் செறிவைக் குறிப்பது. இக்கோளைப் போலவே இக்கோளின் தாக்கம் பெற்றவர்களிடத்தில் அதிக பொருள் வளம் இருக்கும். அத்துடன் இவர்களுடைய மனதில் ஒளிவுமறைவு என்பதே இருக்காது. ஒரே எண்ணம் ஒரே செயல் ஒரே வாக்கு என்று வாழ்வார்கள். கோள்களில் மிகவும் சிறியது புதனே ஆகும். சிறுமை நுணுக்கத்தைக் குறிப்பதால், பொருள் வளம் மட்டுமின்றி நுண்ணிய அறிவையும் இவர்களிடம் காணலாம். பயணம் செய்வது இம்மக்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும்.
எண் ஒன்றுக்குரிய எழுத்துக்கள் க், ங், ர், ஹ் என்பன. இவ்வெழுத்துக்களின் தோற்றத்திற்கான அடிப்படை வினை"திரள்தல்" ஆகும். திரள்தல் என்பதன் விரிவாக கவர்தல், ஈர்த்தல், ஒன்று சேர்த்தல் போன்ற வினைகளைச் சொல்லலாம். எனவே தான் இவ்வெண்ணுக்கு உரியவர்கள் தங்களது சுறுசுறுப்பான பண்பினால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுகின்றனர். அத்துடன், அதிக செயல்திறனும் விரைந்து முடிவெடுக்கும் பண்பும் கொண்ட இவர்கள் சமுதாயத்தில் முதன்மை மாந்தராக இருப்பதையும் காணலாம். எண் ஒன்று என்பதால், யாரையும் சந்தேகிக்காமல் எளிதில் நம்பிவிடுவர். தங்களது முடிவில் எந்த மாற்றமும் இன்றி உறுதியாக இருப்பர். இவருடைய முடிவை யாராலும் மாற்ற முடியாது.
வணிகத்தின் மூலமாக பணம் சேர்த்தல், நிறைய நூல்களைக் கற்று அறிவு சேர்த்தல் போன்ற வினைகளில் அதிகம் ஈடுபடுவர்.
மேற்கூறிய நற்பலன்கள் எல்லாம் புதன் கோள் நல்லநிலையில் வலுவாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். புதனின் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், இவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் நரம்புத் தளர்ச்சி, உடல் சோர்வு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற நோய்கள் இக்காலத்தில் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வேலையையும் உடனே முடித்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கும் இவர்களுக்கு அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும். அவசரமாக வேலைகளைச் செய்யும்போது விளைவுகள் எதிர்மறையாகி விடும். எடுத்த முடிவுகள் தவறாகிப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்வர். வணிகம் பாதிக்கப்படுதல், பணத்தை இழத்தல், மதிப்பு குறைதல் முதலானவை நேரிடலாம். யாரையும் எளிதில் நம்பிவிடுவதால் பிறரால் ஏமாற்றப்படும் வாய்ப்புக்கள் உண்டு.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.