தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், விவச்சுவான், புருடன், கவித்ரு, துவட்டன், இவர்கள் மேட மாதம் முதலாகச் சஞ்சரிப்போர். திவச்சுவான், சவித்துரு, துவட்டா. இப்பெயர் சித்திரை மாதம் மேடம் இராசி முதல் ஒவ்வொரு மாதத்து ஒவ்வோர் ராசியிற் புகுந்து சூரியனுக்கு முறையே செல்லும் என்பர். இவரே துவாதசாதித்தர்.
சூரியமூர்த்தி - சூரியன்
1.ஒரு முகம் எட்டுக் கைகளில் இரண்டு கைகளில் இரண்டு கமலம், தூபம் மணி, கமண்டலம், அபயம், வாதம், ஜப மாலையுடையராய், பொன்னிறம், பொற்பட்டு, வஸ்திரம், பொன்னாபரணம் உடையவராய் இருப்பர்.
2.வெண் தாமரை மேல் இருப்பவராய் மாதுளம்பூ நிறம் உள்ளவராய், மிக்க காந்தியான விருத்தமத்யராய், இரண்டு தோள்களிலும் காம்புடன் கொண்ட வெண்டாமரை உள்ளவராய், ஒரு முகம், இரண்டு நேத்ரம், சிவப்பு வஸ்திரம் - ஆடை உள்ளவராயிருப்பர்.
3.பரமவித்தை, சாத்வித தேசஸ், கைவல்யம், ஞானம், பிராகாம்யம், சம்வித்த, போதகம், கதி, ஸ்மிருதி முதலிய உருவத்தால் பரமப் பிரகாசனாய் இருப்பவன். முதலில் இருளான அண்டம் உண்டாக அதன் மத்தியிலிருந்த பிரமன் அதைப் பிளந்தனன். அக்காலத்தில் ஓம் என்னும் ஒலி உண்டாயிற்று. அந்த ஓங்காரத்தால் பூ: புவ: சுவ: எனும் வியாவிருதி திரயம் உண்டாயின. பின் ஓங்காரத்தால் சூரியனுக்குச் சூட்சும உரு உண்டாயிற்று. அதனால் அதிதூலமாகும் (ம:) எனும் வியாவிருத்தியும் அதனால் தூலதரமாகும் ஜந: எனும் வியாவிருதியும் அதனால் தப: சத்யம் எனும் வியாவிருதிகளும் உண்டாயின. இந்த ஏழு வியாவிருதிகளே சூர்ய உருவமாம். முன் சொன்ன ஓங்காரமே, தேசோ ராசியான பிரமனாய் எண்ணுக. இந்தப் பிரமனுடைய கிழக்கு முகத்தில் இருக்கு. தட்சண முகத்தில் எஜஸ், மேற்கு முகத்தில் சாமம், வட முகத்தில் அதர்வண வேதங்களும் பிறந்தன. இவனது தேஜஸே இருக்கு வேத ரூபத்தால் விட்ணு வாய்த்திதியும் சாம வேத ரூபத்தால் ருத்ரனாய் லயத்தையும் செய்யும். ஆதலால் இந்தப் பரமபுருடனே சதுர்வேத மயனும் திரிகுணாத்மகனும் திரிமூர்த்தி சுவரூபனும் ஆவன். பிரமன் முதலில் சிருட்டிக்கத் தொடங்குகையில் சிருட்டி கெடப் பிரமன் துதித்து வேண்டத் தன் சுவாலையை ஒடுக்கினவன். (மார்க்கண்டேயம்.) இவரைச் சிவாகமங்கள் சிவசூரியன் எனக் கூறும். அச்சிவ சூர்யர் நான்கு முகம், எட்டுத்தோள், செவந்த ஆடை, மேற்கில் சத்தியோசாதம், வடக்கில் வாமதேவம் கிழக்கில் தற்புருடம், தெற்கில் அகோரம் ஆகிய நான்கு மூர்த்திகள் நான்கு பக்கங்களில் அமரப் பெற்றவர். இவர், நான்கு முகம் உடைய பாற்கரனை முன்னும் வலப்புறத்தில் நான்கு முகமுடைய பானு மூர்த்தியையும் பின்புறத்தில் நான்கு முகமுடைய ஆதித்ய மூர்த்தியையும் இடப் பாகத்தில் நான்கு முகத்தோடு கூடிய இரவியையும் கொண்டு இருப்பர். கிழக்கில் வித்தாரை தெற்கில் சுதாரை மேற்கில் போதினி வட பால் யாப்யாயனியும், சிவ சூர்ய தானத்தில் தீத்தை, சூக்குமை, சேயை, விபூதி, விமலை, அமோகை, நான்கு கரத்தோடு கூடிய வித்துதை, பத்திரை, நான்கு முகமுடைய சர்வதோமுகி, ஆகிய சத்தியருடன் கூடி நிற்பர். இச்சூர்யருக்குப் பீடங்கள் பிரபூதம், விமலம், சாரம், ஆராத்யம், பரமசுகம் என்பனவாம். சூர்யனுடைய கதிரின் வேறுபாடு சூர்யனுடைய அமுதக் கதிர் மழை பொழிவிக்கும், சுழுமுனைக் கதிர் சந்திரனுக்கும் அரிகேசம் என்பது நட்சத்திரங்களுக்கும், விச்வகன்மா புதனுக்கும், விச்சுவா வௌ்ளிக்கும், சத்து விசு செவ்வாய்க்கும், சருவாவசு வியாழத்திற்கும், சுவராடு சநிக்கும் ஒளி தரும். மற்றொரு புராணம் சுஷ்மனைச் சந்திரனுக்கும், அரிகேசன் புதனுக்கும், விசுவா வௌ்ளிக்கும், வசுரம், கங்கியம் பூமிக்கும், சுருவாவசு வியாழத்திற்கும் சுவராட்சநிக்கும் ஒளி தரும். இச்சூரியன், மேருவிற்கு இடது பக்கத்தில் இருந்து கொண்டு மேருவை வலஞ் செய்பவன். முதலில் இந்திரன் பட்டணத்திலிருந்து புறப்பட்டு யமன் பட்டணத்தை அடைந்து பிறகு வருணன் பட்டணத்தைத் தாண்டிச் சோமன் பட்டணத்தை அடைந்து மீண்டும் இந்திரன் பட்டணத்தை அடைகிறான். இப்படிப்பட்ட சூரியனுக்கு ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர், அத்தேர்க்குக் பன்னிரண்டு மாதமாகிற இலைகள் ‘ட் ருதுக்களாகிய முனைகள், சாதுர்மாச்யங்களாகிய தொப்பைக்கட்டைகள், சம்வச்சரமாகிய ஒற்றைச் சக்கரம் இந்த ரதத்தின் இருசின் ஒரு முனை மேரு சிகரத்திலும் மற்றொரு முனை மான சோத்திர பர்வத்திலும் சுழலும். இதில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இத்தேரின் உயரம் 9000 யோசனை அகலம் அவ்வளவு யோசனை, பார் நீளம் 18000 யோசனை, மான சோத்திர பர்வதத்தின் அயனங்கள் முதலிய இருக்கும். அதில் இந்திரன், வருணன், சந்திரன், யமன் முதலியோர்க்குப் பட்டணங்கள் உண்டு. இவற்றில் சூரியன் பிரவேசிக்கும் இடத்து நாழிகை, மிகுதி குறைகள் பெற்று உதயமாகி வரும் வழியில் மந்தேகரென்னும் அசுரரால் தடையுண்டு இருடிகள் வேதம் ஓதி யாற்றிய மந்திரக் கணையால் வெளி வந்து உதயமாவன். இச் சூரியன் உதயமாகிப் பூமியிலுள்ள நீரை வறட்டிச் சந்திரனுக்குக் கொடுப்பன். இவன் நாடோறும் மேருவை வலம் வருகையில் இவனுடன் வருகிற பரிசனங்களைக் கூறுவாம்.
இச்சூரியனைப் புலத்தியன், புலகன், வசிட்டன், அங்கிரா, கௌசிகன், பரத்துவாசன், பிருகு, கிருது, கௌதமன், காசிபன், சமதக்னி, அத்திரி முதலிய ரிஷிகள் மாதத்திற்கு ஒருவராகத் தோத்திரஞ் செய்வர். கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சுவன், நீரன், ஐராவதன், ஏலாபத்திரன், கார்க்கோடகன், சங்கபாலன், தனஞ்சயன், பரமன், வாசுகி இந்த நாகங்களில் ஒவ்வொருவர் மாதந் தோறும் தேரிழுத்துச் செல்வர். ஊருணாயு, தும்புரு, நாரதன், ஆகா, ஊகூ, விசுவாவசு, சர்வாவசு, திருதராட்டிரன், சூரியன், வாச்சன், உக்கிரசேநன், வரருசி, சித்திரன், காந்தரு இவர்களின் ஒவ்வொருவர் மாதந் தோறும் பாடுவர். கிருதத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்நிசை, பிரமலோசந்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை இவர்களில் ஒருவர் மாதந் தோறும் ரதத்தின் முன் நடனஞ் செய்து வருவர். வாதநாபன், வியாக்கிரதரன், பிரகேதி, திவதனன், சர்ப்பன், பிரமா, புதன், எச்சியாபுதன், வித்யுத், திவாகரன், பவுரி, செயன் இவர்கள் அரக்கர் மாதம் ஒருவர் காவலாகத் திரிவர். இரதபிருத்து, இருதசித்திரன், இரதேசன், அசுசேணன், இரதசித், சுபாகு, ரதசுவன், அசத்தியசித், தோரணன், சேநசித். தராச்சியன், அரிட்டநேமி இவர்கள் இயக்கர் மாதத்திற்கொருவர் தேர்த்தாம்பு பற்றுவர். பூர், அங்குசன், இந்திரன், பர்ச்சென்யன், கெபர்தி, மித்திரன், தோஷி, அரியமா, விவச்சுவான், விஷ்ணு, வருணன் இவை மாத சூர்யருக்குப் பெயர். இவ்வாறன்றித் தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரண்யன், பகவான், விவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் எனவும், பின்னும் அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், விஷ்ணு, பூஷி எனவுங் கூறுவர். இவர்களின் பெயர்கள் புராணங்கள் தோறும் மாறுபடுகின்றன. சூரியனது கதிர்கள் 1000 அவற்றின் 400 மழை பொழியும், 300 கதிர் விரித்து மழை வளத்தை உண்டாக்கும். 300 பனி பெய்யும், இந்தப் பன்னிரண்டு சூரியரும், பன்னிரு வகையாகக் கதிர் பெறுவர். சித்திரை மாதத்தில் அஞ்சன் 7000 கதிர்களுடனும், வைகாசியில் தாதா 8000 கதிர்களுடனும், ஆனியில் இந்திரன் 9000 கதிர்களுடனும், ஆடியில் சவிதா 9000 கதிர்களுடனும், ஆவணியில் விச்சுவான் 9000 கதிர்களுடனும், புரட்டாசியில் பகன் 11000 கதிர்களுடனும், ஐப்பசியில் பருச்சனி 1000 கதிர்களுடனும், கார்த்திகையில் தோஷ்டா 8000 கதிர்களுடனும், மார்கழியில் மித்திரன் 7000 கதிர்களுடனும், தையில் விஷ்ணு 11000 கதிர்களுடனும், மாசியில் வருணன் 5000 கதிர்களுடனும், பங்குனியில் பூடா 1000 கதிர்களுடனும் விளங்குவர். மேல் கூறிய சூரியமூர்த்திக்கு இளவேனிற் காலத்துக் கபில வர்ணம், வேனிற் காலத்துப் பொன்னிறம், கார் காலத்துச் சுவேத நிறம், கூதிர் காலத்துப் பாண்டு நிறம், முன் பனிக் காலத்துத் தாம்பிர நிறம், பின் பனிக்காலத்து லோகித நிறங்களாம். இனிப் புராணங்கள் சூரியர் பன்னிருவரையும் காச்யபர் அதிதியைக் கூடிப் பெற்றார் எனக் கூறும். அக்குமரர் ஆவார் விசுவவான், அரியமா, பூஷி, துவஷ்டா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன் என்பவர்களாம். முறையே இவர்களின் சந்ததிகளாவர். முதற்குமரனாகிய விவச்சுவான் சஞ்ஞாதேவியைப் புணர்ந்து சிரார்த்த தேவன், வைவச்சுதமனு, யமன் யமுனை எனும் இரட்டைப் பிள்ளைகள் அச்வநி தேவர்களையும், பெற்றனன். இந்த விவச்சுவான் சாயாதேவியைக் கூடி சநி, சாவர்ணிமநு, தபதி எனும் ஒரு குமரியையும் பெற்றான். இரண்டாவதான அரியமா மாத்துருகை என்பவளை மணந்து அநேக ஞானிகளைப் பெற்றான். 3.பூஷி, துவஷ்டாவின் தங்கையான ரசனையை மணந்து சந்நிவேசன், விசுவரூபன் என்பவர்களையும் 4.சவிதா, பிரசனியை மணந்து அக்நிஹேத்ரம், பசுபாகம், சோமம், சாதுர்மாச்யம் எனும் பஞ்சம காயஞ்ஞங்களைப் பெற்றான். 5.புகன், சித்தியை மணந்து மகிமா, விபு, பிரபு, என்பவர்களையும், ஆசுகி எனும் பெண்ணையும் 6. தாதா, குரு, சிநிவாலி, ராகா, அநுமதி என்பவர்களை மணந்து சாயம், தரிசம், பிராதம், பூர்ணமாசம் என்பவர்களையும் 7. விதாதா, கிரியையை மணந்து பஞ்ச சித்தி என்கிற அக்நி குமரனையும் 8. வருணன், சருஷிணியை மணந்து பிருகு, வால்மீக ருஷிகளையும் 9. மித்திரன், ஊர்வசியைக் கண்டு மோகித்து விட்ட வீர்யத்தால் அகத்திய, வசிட்டரையும்; பின்னும் 10. ரேவதியை மணந்து உற்சாகன், அரிட்டன், பிப்பலன் என்பவர்களையும் 11.சக்கிரன் அல்லது இந்திரன், பௌலோமி என்றவளை மணந்து செயந்தன், ருஷிபன், மிட்டுவான் என்பவர்களையும் 12. வாமநன் அல்லது உருக்கிரமன், கீர்த்தியை மணந்து சவுபகன் முதலிய குமரரையும் பெற்றனர். இவனுக்கு (10000) யோசனை விஸ்தாரம் மண்டல அளவை.
4. பசுவின் வயிற்றில் நெடுநாள் ஒளித்திருந்தவன், சத்திராசித்திற்குச் சியமந்தக மணி கொடுத்தவன்.
5. சமதக்னிமுனிவர் பத்தினியாகிய ரேணுகை வெயிலின் வெப்பத்தால் பரிதபிதத்தைப் பற்றிச் சமதக்னி முனிவர் சபிக்கத் தொடங்குகையில் பிராமண உருவங் கொண்டு வந்து அதைத் தடுத்துக் கொண்டவன்.
6. இவன் சுரபிகளைப் பெற்றான் என்பர். இவன் தேவிமார், சஞ்ஞை, உஷை பிரத்திஉஷை, சாயாதேவி.
7. ஒரு காலத்துப் பானுகோபனால் பிடியுண்டு தொட்டிலிற் கட்டுண்டவன்.
8. இராகு கேதுக்களின் வஞ்சவுருவை விஷ்ணுமூர்த்திக்குக் காட்டி அவ்விருவரது பகையைப் பெற்றவன்.
9. ஜடாயு, சம்பாதி இருவரும் தம் தந்தையாகிய அருணனைக் காண வந்த காலத்து அவர்களைக் கோபித்தவன்.
10. இவன் தேவியாகிய சஞ்ஞிகை சூரியனுக்கு வைவச்சுதமநு, யமன் யமுனைகளைப் பெற்றுச் சூரிய வெப்பம் பொறாது தனது சாயையில் ஒரு பெண்னை நிருமித்துச் சாயாதேவி ஆக்கி வைத்து விட்டுத் தகப்பனிடம் வந்தனள். தந்தை கோபித்ததால் இமயச் சாரலில் பெட்டைக்குதிரை உருக்கொண்டு சூரியனை எண்ணித் தவஞ் செய்தனள். இது நிற்கப் பின் மணந்த சாயையைத் தன் உரிய தேவியென்று சூரியன் புணர்ந்து அவளிடம் சாவர்ணிமநு, சநி, பத்திரை எனும் ஒரு பெண்ணினைப் பெற்றனன். இச்சாயைச் சக்களத்தி ஆதலால் சஞ்ஞிகையின் குமரர்களைக் கொடுமையாக நடத்தினள். இதை வைவச்சுதமனு பொறுத்திருந்தனன். அதனால் சாயை யமனை ஒரு கால் முரியச் சபித்தனள். இதை அறிந்த தந்தை குமரனுக்குச் சாபமிடுவரோ என்று யோகத்து அறிந்து உனக்குப் புழுக்கலாகா என்று, துவட்டாவிடஞ் சென்று மனைவியிருக்கும் இடங் கேட்கத் துவட்டா உன் வெப்பத்தை அடக்கி இமயமலைச் சாரலில் சென்று உன் மனைவியைக் காண்க என அவ்வகை ஆண்டுக் குதிரை உருக்கொண்டு செல்லச் சமிக்ஞை கண்டு பயந்து ஓடினள். சூரியனும் ஓடச் சூரியனுக்கு மூக்கின் வழி வீரியம் தோன்றிற்று. அதில் மருத்துவராகிய அசுவநி தேவர்கள் பிறந்தனர். (பிரமபுராணம்.)
11. இவனை நாரதர் ஒரு முறை உலகமெல்லாம் உன்னொளியால் நிரம்பியதெனப் புகழ்ந்தனர். அதனால் செருக்கடைந்து சிவமூர்த்தியின் நெற்றிக்கண்ணின் உளியால் கருவபங்கம் அடைந்தனன். (பழனி-பு.)
12. சூரியனது உஷ்ணத்தைக் கண்டு சஞ்ஞை கண்களை மூடிக் கொண்டனள். அதனால் சூரியன் சஞ்ஞையை நோக்கி நீ யமனைப் பெறுக என்றனன்.
13. சூரியன் குதிரை உருக்கொண்ட தன் பத்தினியைத் துரத்துகையில் அவன் ரேதசில் சிறிது பூமியில் விழ அதிலிருந்து ரேவதன் குதிரையுடன் சர்வாயு தபாணியாய்ப் பிறந்தனன்.
14. சூரியனுக்குச் சாயையிடம் பிறந்த குமரன். சாவர்ணி மனுவாயினன்.
15. நளாயினியின் சாபத்தால் தேரழுந்தப் பெற்றவன். இவன் உலகத்தைக் காயத்ரி சபித்தவர் அடைவர்.
16. விசுவகர்மனால் சாணையில் தீட்டப்பட்டு ஒளியிழந்து தொக்குத் தோஷம் என்னும் வியாதி அடைந்தவன்.
17. இவன் தேவி காந்திமதி துவட்டாவின் குமரி. இவளைச் சாயாதேவியின் சொல்லால் சூரியன் கிரணத்தால் வருத்தத் துவட்டா இவனது கிரணத்தைச் சானையில் தீட்டிக் குறைத்தனன் என்பது. (புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்.)
சூரியன்
1. அதிதியின் புத்ரன். இவன் மண்ணினாற் செய்த ஸவர்ணை என்னும் பெண்ணினிடம் ஸாவர்ணி எனும் ராஜருஷியைப் பெற்றான். (பார-அநு.)
2. தநு புத்திரனாகிய அசுரன்.
3. ஆகாய வெளியில் காணப்படும் அண்டங்களுள் சூரியனும் ஒரு கோளம். இதை அக்னி மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அது நமக்குத் தட்டையான ஒரு பொருள் போல் வட்டமாகக் காணப்படுகிறது. இது அண்ட கோள்களுள் முதன்மை பெற்றது. இதனை நடுவாகக் கொண்டு எட்டுக் கிரகங்கள் சம வட்டத்தில் சுற்றி வருகின்றன. அவை புதன், சுக்ரன், பூமி, செவ்வாய், வியாழன், சநி, யுரானஸ், நெப்தியூன் என்பவை. இக் கிரகங்களையும் பல உபக்கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சலகிரகங்களாதலால் இயற்கையில் ஒளியற்றுச் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகின்றன. இக்கிரகங்களுள் பெரிதாகிய சூரியகோளம் வட்ட வடிவினதாய் உள்ளது. இது தன்னைத் தானே 26 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 26 இலட்சம் மைலுக்கு அதிகம், இதன் குறுக்களவு 8 லட்சத்து 70 ஆயிரம் மைலுக்கு அதிகம் ஏற்பட்டது. இதன் பரப்பு நமது பூமியைக் காட்டிலும் 12 1Æ2 லட்சம் மடங்கு பெரிது, இதன் கனம் பூமியினும் 12 இலட்சம் மடங்கு அதிகம் என்றும் கணித்திருக்கின்றனர். அவ்வளவு பெரிதாயினும் நமக்கு அவ்வளவு சிறிதாகக் காணப்படுதற்குக் காரணம் இது பூமிக்குச் சுமார் 9 கோடியே 28 இலட்சத்து, 30 ஆயிரம் மைலுக்கு அப்பாலிருப்பதால் அவ்வகை தோற்றுகிறது. இச் சூரியக்கோளத்தில் பல புள்ளிகள் காணப்படுகின்றன. அவை 1000 மைல் பரப்புள்ளதாயும், பல மைல் ஆழமுள்ளவையாயும் காணப்படுகின்றன. இப் புள்ளிகள் பல வருடங்களுக்குப் பிறகு மாறுதல் அடைகின்றன. இச்சூரியன் 25 நாட்களில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொண்டு மணி ஒன்றுக்கு 1500 மைல் வேகத்தில் மேற்கில் செல்லுகிறது. எல்லாத் தீக்களுக்கும் இதுவே மூலம். காலப் பாகுபாட்டிற்கும் இதுவே காரணம். பூமி சூரியனைச் சுற்றியோடிக் கொண்டிருக்கிறது. சூரியனைச் சுற்றி ஓடும் வீதிக்குச் சூரிய வீதி என்று பெயர். பூமி சூரியனைச் சுற்றியோடும் இருசிக்குத் துருவம் என்று பெயர். பூமி சூரியனை நோக்கிச் சாய்ந்திருப்பதால் இரவு பகல் ஒரே அளவில்லை. இது மேற்கிலிருந்து சுற்றுகிறது.
சூரியன் வீதி
மேட இடப மிதுன வீதிகள். மேடம், இடபம், மிதுனம் வீதிகள்.
சாவர்ணை
சூரியன் தேவியரில் ஒருத்தி.
சாயாதேவி
சூரியன் மனைவிகளில் ஒருத்தி. சூரியன் தேவி, சஞ்ஞாதேவியைக் காண்க. சாயை - சாயாதேவி, நிழல், நிறம், மனைவி. சாயாபதி - சூரியன், சனி. சாயாபுத்திரன் - சனி. சங்கியை - சூரியன் தேவி. விச்வகர்மன் பெண். இவள் சூரியனது வெப்பத்தைப் பொறாது தன் சாயையில் ஒருத்தியை நியமித்து வைத்து விட்டுத் தந்தையிடஞ் செல்லத் தந்தை மறுத்தது கண்டு இவள் பெட்டை குதிரை உருக் கொண்டு தவத்திற்குச் சென்றனள். பின்பு சூரியன் தனது தேவியைக் காணாது மாமனாரிடம் வந்து இருக்குமிடம் அறிந்து ஆண் குதிரை உருவாய் அவளைத் தொடர்ந்தனன். இந்தக் குதிரையின் மூக்கின் தொளையின் வழி ஒழுகிய ரேதசில் அஸ்வநி தேவர் பிறந்தனர். இவட்குச் சஞ்ஞாதேவி எனவும் பெயர்.
சாவர்ணிமனு
சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். முன் சுவாரோசிமன் வந்தரத்தில் சயித்திர வம்சத்திற் பிறந்து சுரதன் என்னும் அரசனாக இருந்து பகைவரால் அபகரிக்கப்பட்டுக் காட்டில் வந்து மேதஸ் என்னும் முனிவநத்தில் சென்று சமாதி என்னும் வணிகனுடன் நண்பு கொண்டு மேதஸ் முனிவர், தேவி மந்திரம் உபதேசிக்க அதை அநுட்டித்துத் தேவி பிரதியட்சமாகத் துதித்து நின்றனன். தேவி அரசனை நோக்கி நீ உன் இராச்சியத்தைப் பெற்றுப் பிறகு சூரிய புத்திரனாய் மனுவாக என வரம் தந்து மறைந்தனள். அதனால் மனுவானவன்.
சூரியனின் பெயர்
அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழலவன், அழலோன், அனலி, ஆதபன், ஆதவன், ஆதித்தன், ஆயிரஞ்சோதி, இரவி, இருள்வலி, இனன், உதயன், எல், எல்லை, எல்லோன், என்று, என்றூழ், ஏழ்பரியோன், ஒளி, ஒளியோன், ஒற்றையாழியோன், கதிரவன், கனலி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்திரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன், சோதி, சோழன், ஞாயிறு, தபனன், தரணி, திவாகரன், தினகரன், தினமணி, தபோமனி, நபோமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிதி, பார்க்கன், பனிப்பகை, பானு, மார்த்தாண்டன், மித்திரன், விகர்த்தனன், விண்மணி, விரிச்சிகன், விரோசனன், வெஞ்சுடர், வெயில், வெய்யோன் ஆக இன்னும் அனந்தம் பெயர் உள.