1. இவன் வியாழன் தேவியாகிய தாரையிடம் சந்திரனுக்கு உதித்தவன். பிரகஸ்பதியும் சந்திரனும் இன்னானுக்குப் பிறந்தவன் என்று அறியாது வாதாடுகையில் தாயை நோக்கி உண்மை கூறச் சொன்னவன். இவன் தவத்தால் கிரகபதம் அடைந்தனன். நான்கு குதிரைகள் பூண்ட தேரினையுடையான். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவன். இவன் தேர்க் குதிரைகள் எட்டென்றுங் கூறுவர். சுக்கிரனுக்கு மேல் இரண்டு இலட்சம் யோசனைப் பிரமாணத்தில் இருக்கிறவன். இவன் தவச்சாலையருகு, இளைய தோழியருடன் வர அத்தோழியர்களுக்கு இதஞ் சொல்லிக் காந்தருவர்களை அவர்களுக்குக் கணவராக்கி இளையை வசப்படுத்தி மணந்து புரூரவனைப் பெற்றனன். இளனுடைய சாபம் நீங்கிச் சிவபிரானை நோக்கி அச்வமேதஞ் செய்வித்துச் சாபம் நீங்கச் செய்தவன். இருக்கு வேதத்தின் ஐந்தாவது காண்டத்து அதிகாரியானான். (காசிகாண்டம்.) (வேறு.)
2. பந்தனுக்கு ஒரு பெயர்.
3. தனசீலன் என்னும் வேதியன் குமரன். இவன் தாசி விருப்பனாய்த் தாய் தந்தை முதலியவரைக் கொன்று காமத்தால் தாலவமுனிவர் பத்தினி சுலபையைக் கைப்பற்ற அவள் இவனைக் குட்டம் பிடிக்கச் சபிக்க அந்த வியாதியால் இறந்து மறுபிறப்பும் அவ்வியாதியால் வணிகனாய்ப் பிறந்து சூரசேநனால் வியாதி நீங்கி நல்லுலகு அடைந்தவன்.
சூரியனையடுத்துச் சுற்றி வரும் கிரகம். இது சூரியனுக்கு 3 பேகடியே 60 இலட்சம் மைலுக்கு அப்பாலிருந்து 24 மணிக் கணக்கில் தன்னைத் தானே ஒரு தரஞ் சுற்றிக் கொண்டு 88 நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகிறது. இதன சுற்றளவு சுமார் 9500 மைல், குறுக்களவு 3000 மைல் என்றும் எண்ணுகின்றனர். இது நமது பூமிக்கு 5 கோடியே 70 லட்சம் மைல் தூரத்திருக்கிறது. சூரியனொளி இதன் மேல் நெருங்கிப்படுதலால் இது நன்றாய்த் தெரிகிறதில்லை. இந்துக்கள் இக்கிரக நிறம் பசுமை என்பர். இதனை அடுத்த கிரகம் சுக்ரன்.
புதன் பெயர்
அருணன், அறிஞன், அனுவழி, அனுகு, கணக்கன், சந்திரன் மகன், சவுமன், சாமன், சிந்தை கூரியன், சௌமியன், தூதுவன், தேர்ப்பாகன், தேவன், நற்கோள், நிபுணன், பச்சை பண்டிதன், பனிமகன், பாகன், புத்தி, புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால், மேதை, புதன் கிழமைக்கும் பெயர். ஒரு நாள், தாய்தாரை, நவக்ரஹங்களுள் ஒன்று.