சுந்தர் அந்த பெரிய மாமிச மலை போன்ற மனிதனைக் கண்டதும் பயந்து விக்கிப் போய் நின்றான்.
“ஏய் இங்க வந்த பையன் எங்கே?” என்று அலறினான்.
பயத்தில் வார்த்தைகள் வாயிக்கு வராமல் பாத்ரூமை நோக்கிப் பார்வையை வீசினான். அதற்குள் அந்தப் பையன் டிரவுசரை தூக்கி பட்டன்களை மாட்டியபடி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் அந்த பயங்கர மனிதன் தன் சிவந்த முட்டைக் கண்கள் உருட்டியபடி, “இங்கே என்னடா பண்ற கேடி?” கர்ச்சித்தான்.
அந்தப் பையனோ கொஞ்சம் கூட பயப்படாமல், “ஒண்ணுக்கு அவசரமா வந்துடுச்சு போகமலிருக்க முடியலே” என்று சொல்லிவிட்டு டிரம்ஸைத் தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டான்.
“ஓகோ பெரிய துரை லாட்ஜ் ரூம்லேதான் ஒண்ணுக்கு போவாரோ. ரோட்டோரமா இருக்க வேண்டியதுதாண்டா. உங்களையெல்லாம் கொண்டாந்து சேத்தரதுக்குள்ளே இருக்கு நடநட.” -என்று பிட்றியைப் பிடித்துத் தள்ளாத குறையாய் நகர்த்திக் கொண்டு போனான்.
அவன் நகர்ந்ததும் சுந்தர் மெல்ல கதவில் எட்டிப் பார்த்தான். குண்டன் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். டிரம்ஸைத் தூக்கிய சிறுவன் டிரவுஸர் பட்டனை சரி செய்வது போல தயங்கிபடி நின்றான்.
அவன் தயங்கியதைக் கண்டதும் மீண்டும் மீன் நழுவி விடக்கூடாதே என்று, “ஏண்டா பயலே?”
“டிராயர் பட்டன் எட்டமாட்டிங்குதுய்யா”.
“எட்டாதுரா”.
“எட்டு எட்டு எட்டிருச்சு” என்றவன் சுந்தரைப் பார்த்து,“எட்டுமணி” என்று கத்தினான்.
அதற்குள் அந்த பெரிய ஆள் கீழே இறங்கியிருந்தான். மேலும் நிற்காமல் விடுவிடு என அந்த பையனும் இறங்கிப் போய்விட்டான்.
வாத்தியக் கோஷ்டி அதற்குள் கொஞ்சம் தூரம் நகர்ந்து போயிருந்தது. அவர்களோடு அந்தச் சிறுவனும் அந்தக் குண்டனும் சேர்ந்து கொண்டனர். சுந்தர் சுற்றும் முற்றும் பார்த்தபடி அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே கட்டிலின் மேல் அமர்ந்தான். பயத்தில் நெஞ்செல்லாம் லேசாய் நடுங்குவது போலிருந்தது. பையன் கொடுத்த பொட்டலத்தில் என்ன இருக்கும், என அறிய ஆவலாயும் இருந்தது.
டிரம்ஸிலிருந்து எடுத்த சதுரமான காகிதம் சுற்றிய பொட்டலம் கட்டிலுக்கடியிலிருந்த குப்பைக் கூடையில் பத்திரமாயிருந்தது. அந்தப் பொட்டலத்தை எடுக்கக் குனிந்த போது கூடவே அழைப்பு மணியின் ஒலியும் கேட்டது. சுந்தர் பதறிப் போனான். அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனான். எங்கே ஒளிப்பது என்று யோசித்தான். முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்னால் ச்சேச்சே கீழே விழுந்து மானத்தை வாங்கலாம். அழைப்பு மணி மறுபடியும் ஒலித்தது. மேலே இருந்த வெண்டிலேட்டரைப் பார்த்தான். அதுதான் பத்திரமான இடம் ஆனால் வைப்பது எப்படி? குழாயின் மேல் கையைப் பிடித்து காலையூன்றி கஷ்டப் பட்டு வைத்தாகி விட்டது. அழைப்பு மணி விடாமல் ஒலித்தது. ஓடிப் போய்க் கதவைத் திறந்தான். எழுத்தாளர் கீர்த்தீயன் மாலையும் கையுமாய் நின்று கொண்டிருந்தார் அவருடன் கூட ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.
“என்ன சுந்தர் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டிருந்தே?”
“பா…பா…பாத்ரூ…”
“பாத்ரூம் போயிருந்தயா? அதற்கு ஏன் இப்படி திணருகிறே முகமெல்லாம் ஒரே வேர்வையாய் வேர்க்கிறது”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க.” கீர்த்தீயன் உள்ளே வந்தார்.
மாலையை கோட் ஸ்டேண்டில் மாட்டினார். சட்டையைக் கழற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தார். கூடவந்தவர் தயங்கி நின்றார். “மிஸ்டர் ராம்ராஜ் நீங்க கூட இருக்க வேண்டிய அவசியமில்லை இந்தப் பையன் இருக்கான் நீங்க வேறே ஏதாவது வேலையிருந்தா பாருங்களேன்” என்றதும் அந்த ஆள் சரிங்க என்று கிளம்பினான்.
சுந்தர் இப்போது சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.
கீர்த்தீயன் அவனைப் பார்த்து சிரித்தபடி, “சுந்தர் நீ ரொம்ப நேரத்திலேயே வந்துட்டயா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க... சார் கொஞசம் முன்னாலதான் வந்தேன்.”
அப்போது அழைப்புமணி கேட்டது.
சுந்தர் ஓடிப்போய் கதவைத் திறந்தான.
ரூம் பையன் இரண்டு காபியுடன் வந்திருநதான். ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டு சுந்தரையும் பருகச் சொன்னார். சுந்தர்க்கு தானும் கீர்த்தீயன் மாதிரி ஒரு பெரிய எழுத்தாளராகி விட வேண்டும் என்று நெடுநாளைய கனவு கண்டு கொண்டிருந்தான் வழிதான் புலப்படவில்லை.
இன்று அவரையே கேட்டுவிட வேண்டியதுதான் என்று,
“ஐயா நானும் உங்கள மாதிரி ஒரு எழுத்தாளராகனும்னு ஆசை. அதுக்கு என்ன வழின்னு நீங்க சொல்லணும்.”
அதைக் கேட்டதும் பலமாய் ஒரு முறை சிரித்துக் கொண்டு, “இது சாத்தியம்தான் ஆனால் பொறுமையோடு கொஞ்சம் போராட வேணும். தினசரி எதையாவது எழுத வேணும் எழுதுவதை எல்லா பத்திரிகைகளுக்கும் மாற்றி மாற்றி அனுப்ப வேணும் கதை திரும்பி வருகிறதே என்று சோர்ந்து போகாமல் சலிக்காமல் ஒரு வருஷம் எழுது. அடுத்த வருஷம் என்ன மாதிரி என்பதை நீயே புரிஞ்சுக்க முடியும் இவ்வளவுதான்" என்றதும் ஒரு மாபெரும் வித்தையை கற்றுக் கொண்ட சுந்தரின் மனது ஒரேயடியாய் துள்ளியது.
அப்போது ஒட்டடைக் குச்சியோடு ஒட்டடை அடிப்பவன் அறையுள் நுழைந்து பாத்ருமைத் திறந்தான் வெண்டிலேட்டர் ஓரமாய் ஏராளமாய் ஒட்டடைகள் தொங்கின.