பேரண்டப்பகுதியில் உள்ள ஒன்பது கோள்களில் பூமியும் ஒன்றாகும். அவற்றுள் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தன்னகத்தே வைத்துள்ள புவியின் தோற்றத்தைப் பற்றியும், உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும், ஆதிமனிதன் யார்? எங்குத் தோன்றினான் என்பதைப் பற்றியும் இலக்கிய, இலக்கணச் சான்றுகளுடன், ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கட்டுரையாகும்.
இயற்கையின் புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்விற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய மற்றும் பிற இலக்கியப் புலவர்களும், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, கன்பூசியஸ் போன்ற பிறநாட்டு ஆய்வாளர்களும் எடுத்துரைத்துள்ளனர்.
புவியின் தோற்றம், பிரபஞ்சத்தின் இயக்கம், பஞ்சபூதங்களின் தன்மை, உயிர்களின் தோற்றம், மனிதன் பிற உயிர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறான் போன்ற பல்லாயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்குப் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் விளக்கங்களையும் கொடுத்துள்ளனர்.
புவியின் தோற்றம், இயக்கம், உயிர்களின் பெருக்கம் போன்றவை நிகழ்வதற்குப் பல கோட்பாடுகள் இருப்பினும் அவற்றில் அடிப்படைவாதங்களைக் கொண்டு இரண்டு வகையான கொள்கைகளாகப் பகுக்கலாம். அவை,
1. கடவுள் கொள்கை (கடவுளும் தேவதைகளும் இந்த உலகை இயக்குகின்றனர். அவர்களே உலகில் உள்ள அனைத்தையும் படைத்தனர் என்பது)
2. அறிவியல் கொள்கை (பூமி இயற்கையில் ஏற்பட்ட பேரண்ட வெடிப்பினால் சூரியனிடமிருந்து பிரிந்து பரிணாமக்கோட்பாட்டின் அடிப்படையில் பல மாற்றங்களினால் தன்னை வடிவமைத்துக்கொண்டு பல உயிர்களை உருவாக்கியது என்பது)
கடவுள் கொள்கை
செம்மொழியான தமிழ்மொழியில் நமக்குக் கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கணங்களுக்கெல்லாம் ஆதிநூலாக விளங்குவது தொல்காப்பியமாகும்.இந்நூலின் ஆசிரியரான தொல்காப்பியர், இவ்வுலகமும் இவ்வுலகத்தின் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற கடவுள் கொள்கையை ஏற்கவில்லை.மாறாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்ற அறிவியல் கொள்கைக்கு அடித்தளம் அமைத்ததுள்ளார்.அதனால் கடவுள் கொள்கை இங்கு கைவிடப்படுகிறது.
அறிவியல் கொள்கை (பேரண்ட வெடிப்பும் பரிணாமக்கொள்கையும்)
பேரண்ட வெடிப்பு
1927இல் பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் ஜியார்ச்சு லெமெட்ரே அவர்கள் பிரபஞ்சத்தின் தோற்றத்தை, “ஆதியில் இருந்த சக்திமிக்க மிகப்பெரிய சடப்பொருள் ஒன்று அதன் உயர்ந்த அடர்த்திநிலைக் காரணமாக வெடித்து சிதறியதன் மூலம் தோற்றம் பெற்றதே இப்பிரபஞ்சம்” என்று குறிப்பிட்டார்.
இப்பெருவெடிப்பு தொடங்கியதிலிருந்து அணுக்களும், அண்டப்பொருட்களும் தோன்றின. அதனைத் தொடர்ந்து சூரியமண்டலமும் அதிலுள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம்பெற்ற காலத்திலிருந்து தற்காலமானது சுமார் 500 கோடி ஆண்டுகள் கழிந்துள்ளன எனலாம்.
பூமி தன் தாயான சூரியனின் ஈர்ப்பு விசையால் அதனைச் சுற்றிவருகிறது.இந்த ஓயாத சுழற்சியினால் பூமி உட்பட அனைத்துக்கோள்களும் கோளவடிவம் பெற்றன.
அண்டவெளியில் சுற்றும் இந்த பூமியைப்பற்றி ஆய்வுசெய்த மேனாட்டவர்கள் கி.பி.15ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை உலகம் தட்டையானது என்றே நம்பியிருந்தனர்.
15ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டு நிக்கோலஸ் கிராப்ஸ் என்பவர் உலகம் உருண்டையானது என்று சொன்னார்.ஆனால் அதனை யாரும் ஏற்கவில்லை.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ (1564 - 1642) உலகம் உருண்டை என விளக்கினார், அதற்றகான காரணங்களை அடுக்கினார்.உலகம் நம்பியது.
இந்த ஆராய்ச்சியகளுக்கெல்லாம் முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டிலே, உலகம் உருண்டை வடிவானது என்றுச்சொல்லியது ஒரு தமிழ்க்குரல், அந்த குரலுக்குச்சொந்தக்காரர் திருவள்ளுவர். அவரின் திருக்குறள்,
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
(குறள் -1031)
என்கிறது. இதில் உருண்டை வடிவம் உள்ள பொருள்தானே சுழலமுடியும்,
இத்தகைய சுழலும் உலகமோ உழவுத்தொழிலால்தான் உய்ய (உயிர்வாழ) முடியும் என்பதையும் அவர் அழுத்தமாக அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் உருண்டை என்பதையும் அதன் தோற்றத்தையும் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகரும்,
“அண்டப் பதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னனுப் புரையச்
சிறியவாகப்.....”
(திருவாசகம். திருவண்டப்பகுதி 1-6)
என்று எழுதுகிறார். பரந்த வானவெளியில் பலகோடியாக உடைந்து சிதறிய நெருப்புத் துண்டின் ஒரு சிறுபகுதியே இந்தப் பூமி. அது உருண்டை வடிவமாகும் என்கிறார்.
யாழ்நூலின் சிறப்புப் பயிரத்தில்,
“ஒளிபரிதி யியக்கத்தாற் சிதைந்து
தீர்ந்ததோர் பகுதி யுலகமாகிய.......”
என்ற பாடலும், சூரியனிலிருந்து சிதறிய அக்கினிக்குழம்பே பூமியாக உருமாறப் பலகோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.அவ்வாறு ஆன உருண்டைவடிவமே பூமி என்கிறது. எனவே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே பூமி உருண்டை வடிவானது என்பதில் தெளிவு பெற்றவர்களாகத் தமிழர்கள் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
புவியின் தோற்றம்
பூமியின் மேற்பரப்பு குளிரத் தொடங்கியது. ஆனால் பூமியின் உட்பகுதியில் இருந்த வெப்ப அழுத்தத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து, கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி ஆகியவற்றைப் பெருமளவில் வெளியேற்றின. இத்துடன் சிறிதளவு மீத்தேனும், அம்மோனியமும் வெளிவந்தன.
அப்போது பூமியில் ஆக்ஸிஜன் (o2) இல்லை.வெளிவந்த நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நீராக மாறியதால் பூமியில் கடல் தோன்றியது.
பூமி எப்படித் தோன்றியது என்பதை, தாலஸ் (tholes) என்ற அறிஞர், உலகம் நீரினால் ஆக்கப்பட்டது, அதனால் நீரே முதன்மைப்பொருள் என்றார். அனாக்ஸிமினிஸ் (Anaximinies) என்ற அறிஞர் காற்றினாலேயே உலகம் ஆக்கப்பட்டது என்றார். அனாக்ஸி மேண்டர் (Anaximandar) (சுமார் கி.மு. 6) என்பவர், ஏபைரான் (Apeiron) என்ற உருவமற்ற, யாரும் பார்க்கமுடியாத பொருளால் உலகம் உருவாக்கப்பட்டது என்றார். இவ்வாறு பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைப் பற்றி மட்டும் அறிஞர்கள் ஆராய்ந்து விளக்கியகாலத்தில், பூமி பஞ்சபூதங்களினால் ஆன ஒரு கூட்டுப்பொருள் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தமிழர்கள் விளக்கினர்.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலகம் எப்பொருள்களால் ஆனது என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதற்குத் தொல்காப்பியரே முதல் சான்றாக அமைகின்றார்.
இவ்வுலகமாகிய பூமி பஞ்சபூதங்களினால் ஆனது என்பதை,
“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (தொல். பொருள். மரபு - 635)
என்ற நூற்பாவில் பஞ்சபூதங்கள் அனைத்தும் ஒன்று மற்றொன்றோடு கலந்து மயங்கி நிற்பதை உலகம் (பூமி) என்று கூறுகிறார். (இரண்டு பங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்ஸிஜன் வாயுக்கள் இணைந்து நீராக மறுவது விதி)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.