தமிழரின் வானியலும் உயிரியலும்
முனைவர் ஜெ. முத்துச்செல்வன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் செயின் கல்லூரி, சென்னை - 114.
பகுதி - 2
சங்க இலக்கியப்பாடல்கள்
சங்க இலக்கியப்பாடல்களும் பஞ்சபூதங்களின் தன்மையை,
“மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கைப்போல”
(புறநானூறு பா. 2)
என்று குறிப்பிடுகிறது. மண் திணிக்கப்பட்ட நிலம், நிலமானது வானை ஏந்தி நிற்கின்றது, ஆகாயத்தினைத் தடவிவரும் காற்றும், காற்றினால் உருவாகிய தீயும், தீக்கு
முரண்பட்டதாகிய நீரும் என்று பஞ்சபூதங்கள் ஒன்றோடு மற்றொன்று இணைந்திருத்தலைக் குறிப்பிடுகிறது. இதேபோன்று பரிபாடலும்,
“கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாராஒன்றன் ஊழியும்
உந்து வளிகிளர்ந்த ஊழும் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியோடு
தன்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
றுண்முறை வெள்ளமூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர்பீண்டி அவற்றிற்கும்
உள்ளீடாகிய இரு நிலத்தூழியும்”
(பரிபாடல் - 2. 5-12)
என்ற வரிகளில் அண்டப்பெருவெளியான வானத்தில் காற்றுத்தோன்ற, அக்காற்றின் வீசுதலால் தீ தோன்ற, அத்தீயினின்று நீரும், பனி, மழை இவற்றின் செயல்களால் நிலம் தோன்றியது என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய வானியல் ஆய்வோடு பொருந்துகிறது.
அறிவியல் வளர்ச்சியால் இன்று நிகழ்த்தப்படும் வானியல் ஆய்வுகளின் முடிவுகளைத் தமிழர்கள் சங்கஇலக்கிய காலத்திலேயே கூறக்கூடிய நுண்ணறினைப் பெற்றிருந்தனர் என்பதை,
“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே”
(புறநானூறு - 30)
என்ற பாடலில், ஞாயிறு எனும் சூரியனையும், அதனைச் சுழ்ந்த பிற கோள்களையும், காற்றின் திசையையும், காற்றே இல்லாத ஆகாயத்தையும் நேரில் சென்று அளந்ததுபோல கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்று முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகிறார். இக்கருத்து இன்றைய வானியல் ஆய்வில் கூறப்படக்கூடிய “புவியிலிருந்து மேற்செல்லச்செல்ல குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் சுவாசிக்கத் தேவையான காற்று மற்றும் புவியீர்ப்புவிசை ஆகியவை இல்லை என்பதற்குத் தொடக்கம் என்று கூறலாம். ஆகையால் உலகின் வானியல் ஆய்வுகளுக்கெல்லாம் முன்னோடியாகத் தமிழர்கள் இருந்தமை புலனாகிறது.
உயிர்களின் தோற்றம்
உயிர்களின் உற்பத்தித் தொடர்பாகப் பல்வேறு கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து நாட்டு அறிஞர் சார்லஸ் டார்வின் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் (1831) தென்னாப்பிரிக்காவிற்கும் பசிப்பிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சிசெய்து கண்டுபிடித்த தரவுகளின் அடிப்படையில் பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார். இக்கோட்பாடே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
பரிணாமக்கோட்பாடு
உயிர்கள் அணுக்களின் (பொன், வெள்ளி, இரும்பு, பிராணவாயு, எரிவாயு முதலானவற்றால் உண்டான கூட்டு மூலத்தாதுவின் திரள்) கூட்டு வகையால் உண்டாகின்றன.அவை புல், பூண்டு, புழுப்பூச்சி - ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன ஆகியவற்றைத் தொடர்ந்து மனித இனம் தோன்றியது என்பதே பரிணாமக்கோட்பாடாகும்.
கி.பி.19ஆம் நூற்றாண்டில் தோன்றிய இக்கோட்பாட்டை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு உணர்த்திய பெருமைக்குரியவர் தொல்காப்பியர். அவர்,
“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
(தொல். பொருள். மரபு - 27)
என்று பொதுவான உயிர்வகைமைகளைக் கூறியதோடு,
“புல்லும் மரனும் ஓரறிவினவே
நந்தும் முரலும் ஈரறிவினவே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே
மாவும் மாக்களும் ஐயறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே”
(தொல். பொருள். மரபு-28)
என்று அவற்றை விளக்கி அதற்கு உதாரணமும் தருகின்றார்.
ஓரறிவு உயிரினங்கள் (புல், பூண்டு, மரம்)
ஈரறிவு உயிரினங்கள் (சங்கு, நத்தை)
மூன்றறிவு உயிரினங்கள்(கறையான், ஈசல்)
நான்கு அறிவு உயிரினங்கள்(நண்டு, தும்பி)
ஐந்து அறிவு உயிரினங்கள்
ஆறு அறிவு உயிர்

இவரையொட்டியே மாணிக்கவாசகரும் தன் சிவபுராணத்தில்,
“புல்ஆகி பூடுஆய் புழுஆய் மரம்ஆகி
பல்விருகம்ஆகி பறவைஆய் பாம்புஆகி
கல்ஆய் மனிதர்ஆய் பேய்ஆய் கணங்கள்ஆய்
வல்அசுரர்ஆகி முனிவர்ஆய் தேவர்ஆய்
செல்லாஅ நின்ற இத்தாவர - சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்”
என்று குறிப்பிடுகிறார்.
ஓரறிவு தாவரத்திலிருந்தே பரிணாம வளர்ச்சி தொடங்குகிறது, இதன் இறுதி வடிவமே மனிதன் என்று தொல்காப்பியர் கூறுவது, 19ஆம் நூற்றாண்டில் உயிர்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்து கூறிய அனைத்து பரிணாமக் கோட்பாடுகளுக்கும் தொடக்கமாக அமைந்துள்ளது என்பது புலனாகிறது.
ஆழ்கடல் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்களாலும் சூரியனின் புறவுதாக் கதிர்கள் இப்பகுதியைச் சென்றடையாததாலும் ஆழ்கடல்பகுதியில் ஒளிச்சேர்க்கை செய்யும் உலகின் முதல் உயிரி சயனோ பாக்டீரியா தோன்றியது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இது உயிர்வாழ கர்பன் டை ஆக்ஸைடு, நீர், சூரியவொளி ஆகியவைப் போதுமானதாக இருந்தது.இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த பாக்டீரியாவானது முதலில் கடலில் தோன்றியது.
பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்த சயனோ - பாக்டீரியா நீர்வாழ் தாவரங்களாக மாறின.
தாவரங்களுக்கு ஆக்ஸிஜன் தேவையில்லை என்பதால் கடலிலிருந்து நிலத்திற்குப் பரவின.
இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடைக் கிரகித்து ஆக்ஸிஜனை வெளியிட்டதால் பூமியில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு குறைந்து ஆக்ஸிஜன் (o2) அளவு அதிகரித்தது.
ஆக்ஸிஜன் பிராணவாயுவாக மாறியது.இந்த ஆக்ஸிஜன் புறவுதா கதிர்களால் தாக்கப்பட்டு o3 எனும் ஓசோன் படலமாக உருவானது.
இந்த ஓசோன் படலமே பூமியைப் புறவுதா கதிர்களிடமிருந்து காப்பாற்றி மேலும் பல உயிர்கள் தோன்ற காரணமாயின. இம்மாற்றம் நிகழ பூமிக்குச் சுமார் 400 கொடி ஆண்டுகள் தேவைப்பட்டன.
முதல் உயிரி எங்கு தோன்றியது?
அணுக்களின் தொகுப்பால் உருவான ஆதி உயிர்கள் தோன்றிய இடம் ஆதிக்குமரிக்கண்டம் என்று உலகலாவிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிலர் இலெமூரியாக் கண்டம் என்றும் பெயரிட்டனர். இக்குமரிக்கண்டம் பற்றி புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
உயிரினம் குமரிய லெமூரியாவில் தோன்றி, வடகிழக்கில் இந்தியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் பரவிற்று என்ற தெளிவின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் மனிதனின் பரிணாமம் பற்றி ஆய்வை மேற்கொண்ட டார்வின் வழி ஹக்ஸ்லியைப் பின்பற்றி எங்கெக்ஸ், தாமஸ் ஹக்ஸ்லி, எர்னஸ்ட் ஹேக்கல், சோவியத்ரெசிதோவ் ஆகியோர் அனைவருமே லெமூரியாக் கண்டத்தில்தான் ஹோமோசேபியன் (அறிவுள்ள மனிதன்) ஆதிமனிதன் தோன்றினான் என்பதை ஏகோபித்து ஒப்புக்கொண்டனர்.
(குமரிக்கண்டம் பக். 72 - 73)
பண்பாடுகொண்ட அனைத்திலும் முன்னேறிய இனமாகிய ஆதித்தமிழ்க் குமரி மக்கள் கடல்வழிகயாகத் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா தெற்கு வடக்காக - இந்தியா எனப் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்தனர்.
பண்பாடுகொண்ட அனைத்திலும் முன்னேறிய இனமாகிய ஆதித்தமிழ்க் குமரி மக்கள் கடல்வழிகயாகத் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா தெற்கு வடக்காக - இந்தியா எனப் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்தனர்.
ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் உயிரினங்கள் தோன்றுவதென்பது சுலபமில்லை.0 டிகிரி குளிர்மூடிய பகுதிகளில் மறு உற்பத்தியிலும் மாறுபாடு இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டம் பிற்காலத்தில் தட்பவெப்ப மாறுதலில் உயிர்களின் சந்ததியைப் பெருக்கியதே தவிர - மூல உற்பத்திகளில் குமரிக் கண்டம் தவிர மற்றக்கண்டங்கள் அவற்றைப் பிறப்பிக்கவில்லை. ஏனெனில் அமைப்பில் குமரிக்கண்டத்தின் நில அமைப்புக்கூறுபாடு அப்படி அமைந்திருந்தது.இப்போதைய அமைப்பைவிட அப்போதைய உலகின் பூகோளம் தட்பவெப்பத்தில் மாறுபட்டிருந்தது என்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.
பழைமையான குமரித் தமிழர் நகரிக வளத்தின் இடிபாடுகள்யாவும் அழுத்தமான கடல் ஆழநீரால் சூழப்பட்டிருப்பதால் அவை அழிவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாதுகாப்பாக இருக்கின்றன.
மனித இயல் ஆய்வறிஞர் ஹக்ஸியைப் பின்பற்றிய ஆய்வாளர் ஏர்னஸ்ட் கெக்கல், “உயிரினம் ரெமூரியாவில் தோன்றி வடகிழக்கில் இந்தியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும், மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் பரவிற்று” என்றார். அதை உறுதிப்படுத்துவதாக உடற்கூற்று வல்லுநர் டச்சுயூசென்துபாய் என்பவர், சாவாத் தீவில் லெமூரிய மனிதனுடைய (பிதகேந்திபாஸ்) எலும்புகளைக் கண்டெடுத்தார்.பின்னர் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் அவ்வாறே குரங்கு மனிதனின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
உலகில் உயிர்களும், தாவரங்களும் பரவுவதற்கே லெமூரியக் கண்டம்தான் காரணம் என்ற ஆங்கில உயிர்நூலார் பிலிப்ஸ்லேட்டர் கருத்தினை கடல்நூலார், மாந்த நூலார் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
பண்டைய வரைபடங்களில் இடம்பெற்றிருந்த பெருவளநாடு, முதற் தமிழ்ச்சங்க பஃறுளியும், இரண்டாம் தமிழ்ச்சங்க குமரியாறும் அதன் நிலப்பரப்பும் கடல்கொள்ளப்பட்டதால் உலக வரைபடங்களிலும் அவை அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனாலும் இந்துமாக்கடலின் வடபகுதியில் மூழ்கிப்போன பெரும்நிலப்பரப்பான லெமூரியாக் கண்டத்தில்தான் உயிரினமே தோன்றி உலகெங்கும் பரவின. இதனையே குமரிக்கண்டம் என்றும் கடல்கொண்ட தமிழகம் என்றும் புதைபொருள் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
கண்டம் பிரியாத போது அதற்கிருந்த குமரிக்கண்டம் என்ற பெயர் - பிளந்து, பிரிந்து - தட்பவெப்பம் மாறிச் சிதைந்த போது அது ஆப்பிரிக்காக் கண்டம் என்று பெயர்ப்பெற்றது. எடுத்துச் சொல்லப்பட்ட மேலே கண்ட மாற்றங்களால் அதே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உயிர் (மறுஉற்பத்தி) சந்ததி உற்பத்தி இருந்தாலும் நவீன் உயிர் பெருக்கத்திற்கு அந்த நிலம் பயனற்றதாகி விட்டது. ஆகவே உயிர்களின் மூலம், நவீனம், பிறப்பிடம் அனைத்தும் குமரிக்கண்டமே என்பது உறுதியாகிறது.
பலகோடி ஆண்டுகளுக்கு முன் நெருப்பு குழம்பாக இருந்த பூமியில் உயிர்களின் உற்பத்திக்கு ஏற்ப தட்பவெட்பநிலையை முதலில் அடைந்தது குமரிக்கண்டம் என்பதைப் பன்னாட்டு, பல்துறை அறிஞர்களும் உறுதிபடுத்துகின்றனர். அதன்வழி அங்குத் தோன்றி வாழ்ந்து உலகெல்லாம் பரவிய தமிழர்களே உலக மனித இனத்தின் ஆதி முன்னோடி என்பதையும், அவர்களின் நாகரிகமே உலகத்தில் பன்பட்ட ஆதி நாகரிகம் என்பதையும் நாம் சொல்லாவிட்டாலும், பழங்காலம் முதல் தற்காலம் வரை நடந்த பல ஆராய்ச்சிகள் அவப்போது வெளிப்படுத்தி உறுதிசெய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிறைவுற்றது
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.