தமிழ்த் தொலைக்காட்சியும், தொடர்களும் பருந்துப் பார்வை
இரா.விஜயராணி
பகுதி - 3
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வகைகள்
இன்று பலவிதமான தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றன. அனைத்திலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் இருந்தால் மற்ற சேனல்களோடு போட்டி போட்டு முன்னேற முடியாத நிலை உருவாகிவிடும். ஆதலால் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் தங்களுக்கே உரிய தனித்தன்மைகளுடன் நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகின்றன.
எந்த ஒரு சேனலும் தங்களுக்கான தனித்தன்மையுடன் செயல்படும்போதுதான் அந்தச் சேனல்களின் TRB ரேட் கூடுகிறது. இல்லையெனில் அந்தச் சேனல் மக்களிடத்தில் செல்வாக்கை இழந்துவிடுகிறது. TRB கூடினால் மட்டுமே அந்த சேனல்களில் விளம்பரதாரர்கள் அதிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவர். அப்பொழுதுதான் அந்தச் சேனலுக்கான வருவாய் அதிகரிக்கும்.
வரிவடிவப்படியான நிகழ்ச்சிகள்
வரிவடிவமிடப்படாத நிகழ்ச்சிகள்
தகவல் நிகழ்ச்சிகள்
வரிவடிவப்படியான நிகழ்ச்சிகள்
விருது வழங்கப்படும் விழா நிகழ்ச்சிகள் (சில பகுதிகள் முன்னரே திட்டமிட்ட வரிவடிவப்படி)
நாடகம் (தொடர்)
1. குடும்ப நாடகம்
2. மர்ம நாடகம்
3. கடவுள் நம்பிக்கை
4. புராண நாடகம்
5. வரலாற்று நாடகம்
6. நகைச்சுவை நாடகம்
7. மொழிமாற்றம் செய்யப்பட்டவை
வரிவடிவமிடப்படாத நிகழ்ச்சிகள்
விளையாடும் நிகழ்ச்சிகள்
நிகழ்நிலை தொலைக்காட்சி போட்டித் தொடர்கள்
அரட்டை அரங்க நிகழ்ச்சிகள்
தகவல் நிகழ்ச்சிகள்
தகவல் விளம்பர நிகழ்ச்சிகள் (திரைப்படம், பொருட்காட்சி)
செய்திகள்
தொலைக்காட்சி ஆவணப்படங்கள்
செய்தித் தொகுப்புகள் (கலந்துரையாடல்)
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்கனவே பதிவுசெய்து வைத்துக்கொண்டு உரிய நேரத்தில் அந்நிகழ்ச்சிகளை நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. சில நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பாக இருக்கும் பட்சத்தில் அதனை அந்த இடத்திலிருந்தே நிறுவனங்கள் தொலைக்காட்சியின் மூலம் நமக்கு நேரடிக் காட்சிகளைத் தருகின்றன. விளையாட்டுப் போட்டிகள், விருது வழங்கும் நிகழ்ச்சி போன்றவற்றை நேரடி ஒளிபரப்பின்மூலம் தொலைக்காட்சிகள் நம் வீட்டிற்குள் கொண்டுவந்து தருகின்றன.
தொடர்களின் வகைகள்
தமிழ் தொலைக்காட்சி உலகில் இன்று தொடர்கள் இல்லாத பொழுதுபோக்குச் சேனல்களே இல்லை எனும் அளவிற்கு பெருகி உள்ளன. பொதுவாகத் தொடர்கள் என்றால் எல்லாம் ஒரே மாதிரியானவையல்ல. ஒவ்வொன்றிலும் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளே ஒவ்வொரு தொலைக்காட்சி நாடகத் தொடரையும் மற்றத் தொடர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. தொலைக்காட்சித் தொடர்களை அவற்றின் கருத்தமைவிற்கேற்ப பிரித்தால் கீழ்க்காணும் வகையில் பிரிக்கலாம்.
1. குடும்பத் தொடர்
2. மர்மத் தொடர்
3. கடவுள் நம்பிக்கைத் தொடர்
4. புராணத் தொடர்
5. வரலாற்றுத் தொடர்
6. நகைச்சுவைத் தொடர்
7. மொழி மாற்றம் செய்யப்பட்டத் தொடர்
1. குடும்பத் தொடர்
இன்று தொலைக்காட்சித் தொடர்களில் பெரும்பாலனவை குடும்பத்தை மையமிட்டவையாக உள்ளன. இவைகள் குடும்பத்தில் பெண்கள்படும் இன்னல்கள், பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், புகுந்த வீட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் குடும்பத் தொடர்களின் கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் இல்லையென்றால் இந்தத் தொடர்களே இல்லை எனும் அளவிற்கு மாறியுள்ளன.
பொதுவாகப் பெண்களின் உணர்வுகளைத் தொடர்களில் கூறினால் அது பார்ப்பவரைத் தன்பால் ஈர்க்காது ஆதலால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே நவீனத் தொழில்நுட்பத்துடன்கூடிய இசை, கேமரா உத்தி ஆகியவற்றின் மூலம் பார்ப்பவரை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் ஈர்க்கின்றன.
ஒரு நாள் ஒரு தொடரைப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று யாரும் அதைவிட்டு விலகாத வண்ணம் பார்த்துக் கொள்ளவே தொடர்களை எடிட்டிங் செய்து அன்றைய இறுதி ஒரு எதிர்பார்ப்புடனே நிறுத்தி விடுகின்றனர். இதனைப் பார்க்கும் பெண்கள் அடுத்து என்ன ஆகுமோ? என்ற பதட்டத்துடனே இருப்பார்கள். இதனால் மறுநாள் இதனைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
குடும்பக் கதை என்றால் அனைத்து வர்க்கத்தினரைப் பற்றியும் குறிப்பிட்டால் அந்தத் தொடர் முழு வெற்றியடையாது. ஆகையால் தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் அதிகமாக உள்ள மக்கள்தொகை நடுத்தர குடும்பமே எனவே, நடுத்தர மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்தே இந்தத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன.
இதனைப் பார்க்கும் நடுத்தர குடும்பப் பெண்கள் தங்கள் வாழ்க்கையையே பிரதிபலிப்பதைப் போன்று உணர்கின்றனர். பொதுவாக இந்தத் தொடர்கள் வீட்டில் இருக்கும் பெண்களைக் குறிவைத்தே எடுக்கப்படுவதால் அவர்களது சூழலுக்கேற்பவே இதில் வரும் கதாநாயகிகளும் இடம் பெறுகின்றனர்.
எ.கா
1. வள்ளி, 2. அத்திப்பூக்கள், 3. கல்யாணப் பரிசு, 4. ராஜகுமாரி
2. மர்மத் தொடர்
தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் மற்றத் தொடர்களும் வெற்றி பெறுவதுண்டு. அவ்வகையில் மர்மத் தொடர்களும் இருக்கின்றன. இவை பார்ப்பதற்கு ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று பார்க்கும் மனிதர்களைக் கேள்வி கேட்க வைக்கும் அளவிற்கு இதில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
மர்மத் தொடர்களைப் பார்க்கும்போது ஒருமாதிரியாகவும் பின்னால் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது வேறுமாதிரியாகவும் இருக்கும். முதலில் சில கதாபாத்திரங்களின் மேல் சந்தேகம் ஏற்படும். பிறகு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது வேறு கதாப்பாத்திரம் அந்நிகழ்வுக்குக் காரணமாக இருப்பதை நாம் அறியமுடியும்.
மர்மத் தொடர்கள் ஆரம்பத்தில் ஏன்? எதற்காக இவ்வாறு நடக்கிறது என்று புரியாது இறுதியில்தான் அதன் காரணத்தை நாம் அறியமுடியும். இது ஒரு துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். மர்மத்தை இறுதியில் காண்பதால் நாம் ஒரு துப்பறிவாளர் போலவே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் மர்மத்தை நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
மர்மத் தொடர்களில் உள்ள விறுவிறுப்பும் குழப்பமும் வேறு எந்தத் தொடரிலும் ஏற்படுவதில்லை. இந்தக் குழப்பத்தில் இருந்து நாம் தெளிவுறும்போது நம் வாழ்விலும் இதுமாதிரி நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் எண்ணம் ஏற்படும்.
மர்மத் தொடர்கள் சில குற்றங்களை அடிப்படையாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன. அந்தக் குற்றங்களின் பின்னணிகளை ஒவ்வொன்றாகக் காண்பித்து, குற்றங்கள் எவ்வாறெல்லாம் நடந்திருக்கலாம் என்பதை இவ்வகையான தொடர்கள் சொல்லித் தருகின்றன.
எ.கா
1. மர்ம தேசம், 2. சிதம்பர ரகசியம், 3. கறை
3. கடவுள் நம்பிக்கைத் தொடர்
மாறிவரும் காலச் சூழலில் இன்றைய மக்கள் நல்லெண்ணங்களை விட்டுவிட்டு தீய பழக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தவும் தீயவழியிலிருந்து தடுக்கவும் இந்தக் கடவுள் நம்பிக்கைத் தொடர்கள் துணைபுரிகின்றன. இந்த மாதிரியான தொடர்களைப் பார்க்கும் பொழுது தவறுசெய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது.
கடவுள் நம்பிக்கைத் தொடரால் கடவுள் நேரடியாக வராமல் சில மனிதர்கள்மூலமும் நமக்கு உதவிகளைச் செய்யக்கூடும் என்பதை இந்தவகையான தொடர்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. கடவுள் நம்பிக்கை தொடர்கள் ஒளிபரப்பப்படும் நேரம் தங்கள் வீட்டில் கடவுள் அந்த நேரத்தில் வந்துபோவதைப் போல சிலர் உணர்கின்றனர். எவ்வாறெல்லாம் நாம் சேர்த்த பணத்தில் மற்றவர்களுக்கு நன்மை செய்யலாம் என்பதைக் கற்றுத் தருகின்றன இந்தத் தொடர்கள்.
கடவுளின் வரலாற்றினையும் அவரது சக்திகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகளையும் புதுவித தொழில்நுட்ப கிராபிக்ஸின்மூலம் தத்ரூபமாக மாயாஜால வித்தைகளை நம் கண்ணுக்கு விருந்தளிக்கிறது இவ்வகைத் தொடர்கள். இதில் கடவுளே மனிதர்களாக வந்து நல்லவர்களுக்கு உதவுபவர்களாவும் கெட்டவர்களை தீமை செய்யாமல் தடுப்பவர்களாகவும் இருக்கின்றனர். சில வேளைகளில் தீமை செய்பவரை அழித்துவிட்டு நன்மையை நிலைநாட்டுகின்றனர்.
தெய்வம் என்ற ஒன்று இருக்கும் பொழுது அதற்கு ஈடான துஷ்ட சக்தி என்று சொல்லப்படும் கேடுவிளைவிக்கும் பயங்கர மந்திரவாதிகளும் இதில் வருவர். மந்திரவாதிக்கும் இந்தக் கடவுளுக்கும் நடக்கும் போட்டியையே இந்தத் தொடர்கள் ஒளிபரப்புகின்றன. சில மந்திரவாதிகள் மக்களோடு மக்களாகவும், சிலர் மறைந்து இருந்து வாழ்பவர்களாகவும் இருப்பர். ‘வாய்மையே வெல்லும்’ என்பதைப் போல தீய சக்திகள் இறைசக்தியின் முன் ஆற்றல் இழந்துவிடும் தன்மையை இத்தொடர்கள் புலப்படுத்துகின்றன.
எ.கா
1. ராஜ ராஜேஸ்வரி, 2. நாகம்மா, 3. தேவி
4. புராணத் தொடர்
கடவுள் நம்பிக்கை கதைகளுக்கு அடுத்த படியாகத் தெய்வத் தொடர்களாகப் பார்ப்பது இந்த புராணக்கதைத் தொடர்களைத்தான். புராணத் தொடர்கள் பழங்காலத்தில் வாழ்ந்து தெய்வமாகியவர்களைப் பற்றியது. தெய்வங்களே மனிதர்களாகப் பிறந்து, வாழ்ந்து, வழிகாட்டி மக்களுக்கு எவ்வாறு எல்லாம் வாழவேண்டும் என்பதை விளக்குவது இந்தப் புராணத் தொடர்களாகும்.
புராணத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் கடவுளாகப் போற்றப்படுகின்றனர். இவர்கள் புராணகாலத்தில் மனிதர்களாகவும் தற்போது தெய்வங்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இப்படி எல்லாம் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தர்மத்தை மீறிச் செயல்படக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவே இந்தத் தொடர்கள் விளங்குகின்றன.
புராணகாலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் அவர்கள் எவ்வாறு தங்கள் பொழுதைப் போக்கினர் என்பவற்றையும் நாம் இத்தொடர்களின் வாயிலாக காணமுடிகிறது. அவர்கள் பேசும் மொழிக்கும் நாம் பேசும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாட்டினை இத்தொடர்களின் வாயிலாக அறியமுடிகிறது.
புராணக் காலத்தில் இருந்த போர்முறையானது அறப்போராக இருந்தது. அதில் ஒரு தர்மம் இருந்தது. ஆனால் தற்போது உள்ள போரானது ஏதும் அறியாத அப்பாவி மக்களைப் பாதிப்பதாகவே உள்ளன. புராணகாலத்தில் இருந்து வீரம் தற்போது இல்லையென்பதை நமக்கு இந்தத் தொடர்கள் உணர்த்துகின்றன.
புராணங்கள் நமக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. இதில் உள்ள கருத்துக்கள் நமது வாழ்க்கையை பயனுள்ளவையாக மற்றவர்களுக்கு உதவுவதாகவே இருக்கின்றன. அக்கால மக்கள் வாழ்ந்த இடங்களும் அவர்களது மனதினைப் போன்றே பெரிதாகவே இருந்தன. ஆனால் தற்போது உள்ள மக்களின் மனங்கள் அவர்கள் வாழும் இடத்தைப்போன்றே சிறிதாக உள்ளன.
அப்பொழுது பொய் பேசுதல், ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், அடுத்தவர் பொருட்களைக் கவர்தல் போன்ற நிகழ்வுகள் குறைவாகவே இருந்தன. ஆனால் இன்றோ இவையெல்லாம் நிரந்தரமான அன்றாட வாழ்க்கையைப்போல் ஆகிவிட்டன.
புராணக்கதைகளை சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி போன்றவற்றில் ஒளிபரப்பினர். ஒரே கதையினைப் பல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பிய பெருமை இந்த புராணக் கதைக்கே உரியது. ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்கள் தயாரிப்பில் சில மாற்றங்களைச் செய்து காட்சிபடுத்துதல், ஒலியமைப்பு போன்றவற்றில் வேறுபடுத்திக் காட்டுகின்றனர். இதனால் ஒவ்வொரு சேனலுக்கும் உள்ள வேறுபாட்டினை நாம் அறியமுடிகிறது.
வேறு எந்தக் கதைத் தொடருக்கும் இல்லா சிறப்பு இவைகளுக்கு மட்டுமே உள்ளன. ஒருமுறை இந்தத் தொடர்களை ஒளிபரப்பிய பிறகு சிறிது காலம் கழித்து, இதேத் தொடர்களைச் சேனல்கள் புதுவித தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு ஒளிபரப்புகின்றன. இதனால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு உயிரோட்டமான உணர்வு கிடைக்கிறது. தற்போது மகாபாரதம் தொடர் ஞாயிறு காலை சன் தொலைக்காட்சியிலும், திங்கள் முதல் வியாழன் வரை மாலை விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகின்றது.
எ.கா
1. இராமாயணம், 2. மகாபாரதம்
5. வரலாற்றுத் தொடர்
வரலாற்றுத் தொடர்களும் ஒருவித புராணத் தொடர்களைப் போலவே இருக்கின்றன. அதில் தெய்வங்களைக் காட்சிப்படுத்தி ஒளிபரப்புகின்றனர். இதில் வரலாற்றில் இடம்பிடித்த மக்களைக் காட்சிப்படுத்தி ஒளிபரப்புகின்றனர்.
நம் நாட்டில் வாழ்ந்த மிகப் பிரபலமான மனிதர்களை முதன்மைப் பாத்திரமாக வைத்து இந்தத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. இந்தத் தொடர்களின் மூலம், எவ்வாறு ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வை சக்தி வாய்ந்த இத்தனை பிரபலமான வாழ்வாக மாற்றினான் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இவை அமைகின்றன.
உலகில் தோன்றிய அனைத்து மனிதர்களும் பிரபலமானவர்களாக ஆவதில்லை. அவர்கள் செய்யும் செயல்களும் அவர்களுக்கு ஏற்பட்ட சூழல்களுமே அவர்களை அந்த உயரிய இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அதனைத் தாங்கி நின்று பொறுமையுடன் காத்திருப்பவருக்கே வெற்றிகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட கதைகளைப் பார்க்கும் மக்களின் மனதில் ஒரு நெருப்பைப் பற்ற வைக்கிறது இத்தொடர்கள். இவரைப் போல் நாமும் இவ்வுலகில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தினை மக்களின் மனங்களில் ஏற்படுத்துகிறது.
வரலாற்றுத் தொடர்களை முதலில் பார்க்கும் போது, அது ஒரு சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதைப் போன்றே இருக்கும். நாட்கள் போகப் போகத்தான் இவர்கள் மிகப்பெரிய ஆட்களாக வருதை நாம் கவனிக்க முடிகிறது. ஒரு பிரபலமான மனிதனைப் பற்றிய சுயசரிதையைப் படிப்பது அனைவருக்கும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். ஆனால் இம்மாதிரியான தொடர்களைப் பார்க்கும்போது அது நமக்கு சுவாரஸ்யத்தை தருவதாகவும் மகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது.
படிப்பதைக் காட்டிலும் காட்சிகள் நம் மனதில் எளிதில் பதிபவை. ஆகையால் இம்மாதிரியான தொடர்கள் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகின்றன. வரலாற்றில் நம்மை செய்து இடம் பிடித்தவர்களும் உண்டு. தீமை செய்து இடம் பிடித்தவர்களும் உண்டு. நகைச்சுவை செய்து இடம் பிடித்தவர்களும் உண்டு. சார்லி சாப்ளின் தன் நகைச்சுவையால் இவ்வுலகில் பிரபலமடைந்தார்.
எ.கா.
1. வீர சிவாஜி, 2. ஜான்சி ராணி
6. நகைச்சுவைத் தொடர்
தொலைக்காட்சிகள் என்றாலே பொழுதைப் போக்கவே இருக்கின்றன. பொதுவாகத் தொடர்கள் என்றால் அது மக்களுக்கு ஒரு சீரியஸைத் தருகின்றன. ஆனால் இந்த நகைச்சுவைத் தொடர்கள் மக்களுக்கு மன இறுக்கத்திலிருந்து விடுதலையைத் தருகின்றன. அன்றாட அவசர வாழ்க்கையிலிருந்து மனதை நிலைநிறுத்துகிறது.
மற்ற தொடர்கள் அதிகம் வருவதைப் போல இந்த நகைச்சுவைத் தொடர்கள் அதிகம் வருவதில்லை. காரணம் என்னவென்றால் மற்ற தொடர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும், இந்தத் தொடர்களுக்கு வருமானம் குறைவாகவே இருக்கின்றன. சிலவேலைகளில் நகைச்சுவை சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது. இதில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களைப் புண்படுத்தியும் எடுக்கப்படுகிறது.
சாதாரண தொடரினை எடுப்பதைப் போன்று எளிமையானவை அல்ல இந்த நகைச்சுவைத் தொடர்கள். நகைச்சுவைத் தொடர்களைத் தயாரிக்க எண்ணும் போது அது மற்றவர்களையோ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இத்தொடரினை ஒளிபரப்பியதற்காகச் சேனலுக்கும் இதனைத் தயாரித்த தயாரிப்பாளருக்கும் நெருக்கடி ஏற்படவும் சில இடர்பாடுகள் ஏற்படவும் வாய்புகள் உள்ளன.
மனிதனின் எந்திர வாழ்க்கையை வாழ நினைத்து தன்னை மனிதன் என்ற நிலையிலிருந்து எந்திர நிலைக்கு மாற்றிக் கொண்டு வருகிறான். இதனால் அவனது உடல், மனம் இரண்டும் பாதிப்படைவதை அறியவில்லை. நவீன கண்டுபிடிப்புகள் மனிதனைச் சுறுசுறுப்பான நிலையிலிருந்து சோம்பேறி என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றன.
நகைச்சுவைத் தொடர்கள் மனிதர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைகின்றன. இவை இன்றைய சூழலில் மக்களுக்கு தேவையான ஒன்றாகும். இவை இல்லையென்றால் தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே வில்லத்தனம் என்ற நிலையை மாற்றியவையே இந்த நகைச்சுவைத் தொடர்கள்தான். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது உண்மையே.
எ.கா.
1. சின்னப் பாப்பா பெரிய பாப்பா, 2. ரமணி வெர்சஸ் ரமணி
7. மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்
தமிழ்நாட்டில் இங்கேயே தயாரித்து வெளியிடப்பட்டத் தொடர்களைப் போலவே மற்றமொழித் தொடர்களும் வெற்றி பெற்றுள்ளதை நாம் காணமுடிகிறது. நம் தொடர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு இதற்கும் கிடைத்தது ஒரு பெரிய விஷயமாகும். முதன்முதலில் மற்றமொழித் தொடர்களை ஒளிபரப்பிய பெருமை விஜய் தொலைக்காட்சியையே சாரும்.
விஜய் தொலைக்காட்சியே தமிழ்நாட்டில் மற்றமொழித் தொடர்களை ஒளிபரப்பிய புதுமையைச் செய்தது. விஜய் தொலைக்காட்சியில் தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மற்ற சேனல்களும் மற்ற மொழி நாடகங்களை ஒளிபரப்பப் தொடங்கின.
ராஜ் தொலைக்காட்சியில் மற்ற மொழித் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இதில் தமிழ்நாட்டுத் தொடர்களைக் காட்டிலும் மற்றவையே அதிகம் ஒளிபரப்பாகின்றன. அதேபோல் ஜீ தொலைக்காட்சியானது வட நாட்டுத் தொடர்களையே மொழிமாற்றம் செய்து ஒளிபரப்புகின்றன. முழுவதும் மொழிமாற்றம் செய்த தொடர்களை ஒளிபரப்புவதில் முதல் இடத்தில் இருப்பது இந்த சேனலே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு மக்களும் நம் தொடர்களைப் போலவே இதிலும் ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் அனைத்தையும் மொழிமாற்றத்துடனே ஒளிபரப்புகின்றனர். இந்திய பாரம்பரிய தொடர்களை மட்டுமின்றி மற்ற நாட்டு கொரியன் சேனல்களையும் ஒளிபரப்புகின்றனர். கொரியன் தொடர்களும் மொழிமாற்றத்துடன் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
இதனால் அந்நாட்டில் உள்ள பழக்க வழக்கம், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றினை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. நமக்கு அங்கு உள்ள பாரம்பரியத்தினையும் நம் நாட்டில் வட மாநிலத்தில் உள்ள பாரம்பரியத்தினையும் குடும்ப அமைப்புகளையும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. அவர்களது திருமணமுறை நம் திருமணமுறையிலிருந்து வேறுபட்டதை நாம் இத்தொடர்களின்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
எ.கா.
1. தெய்வம் தந்த வீடு, 2. மண் வாசனை, 3. என் கணவன் என் தோழன், 4. நெஞ்சம் பேசுதே, 5. உள்ளம் கொள்ளை போகுதே
மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்களில் மிக அதிக அளவிலான வாசகர்களைப் பெற்றுள்ள தொடர்களில் முதலிடம் வகிப்பது உள்ளம் கொள்ளைப் போகுதே என்பதாகும்.
நிறைவாக
தொலைக்காட்சித் தொடர்களை முழுவதுமாக நிராகரித்துவிட முடியாது. நகர எந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்ட மத்திய வர்க்க மக்களின் குடும்ப உறவுகளின் எதார்த்தங்களையும் சிக்கல்களையும் முறையையும் ஓரளவிற்கு இத்தொடர்கள் சொல்லுகின்றன. எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் சூழ்ச்சியிருக்கும் என்ற கருத்தியலை முன்வைப்பதாக இவை அமைகின்றன.
இன்றைய அவசர உலகில் கூட்டுக் குடும்பத்தின் அருமையையும் தேவையும் முற்றிலுமாக மறைந்துவிட்டது. கணவன் - மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் மனதளவில் தனித்தனி மனிதர்களாகவே உலா வருகின்றனர். இன்னும் சில வருடங்களில் கூட்டுக் குடும்பம் என்ன என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடும் அபாயத்தில் இருக்கிறோம்.
ஆகவே கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும் உறவுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் எடுத்துக் கூறும் வகையில் தொடர்கள் அமையுமானால் நலம் பயக்கும். இத்தகைய பொழுதுபோக்கு அவசியம் தேவை. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் வணிக நோக்கினை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு நல்லதொரு சமூக உருவாக்கத்தினை மனதில் கொள்வார்களானால், தொடர்கள் சமூகத்திற்கு பயன் அளிப்பதாக அமையும்.
கட்டுரையாக்கத்திற்கு பயன்பட்ட தரவுகள்
1. அல்பாகவி.காம்
2. தமிழ் விக்கிப்பீடியா
3. தி ஹிந்து தமிழ் நாளிதழ்
4. பூச்சோங் எம்.சேகர் வலைப்பூ
5. தமிழ்க் களஞ்சியம்.காம்
6. யார்ல்.காம்
பின்னிணைப்புகள்
நிறைவு பெற்றது

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.