குறுந்தொகையில் ஒரெழுத்து ஒருமொழி
முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
முன்னுரை
குறுந்தொகைப் பாடலில் அறத்தொடு நிற்றல், வரைவு கடாதல், உடன்போக்கு, களவு, கற்பு, விரிச்சிகேட்டல், வாயில் நேர்தல், உள்ளுறை, இறைச்சி, தலைவன், தலைவி கூற்று, தோழி கூற்று என இலக்கியச்சுவையை மிகுதிப்படுத்தும் பாடல்களைக் கொண்டதுதான் அகப்பாடல் என்கிறோம். இவ்வகப்பாடலைப் பாடிய புலவர்கள் மொழிப்புலமையை வெளிப்படுத்தும் வகையில் சொற்களைக் கையாண்டிருப்பது அவர்களின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது. அப்படிக் குறுந்தொகையில் உவமை, உருவகம், எதுகை, மோனை, முரண், போன்ற யாப்பு நடையையும் அதில் பயின்றுள்ள ஓரெழுத்து ஒருமொழி புலவர்கள் கூறியது கூறல் ஆகாது என்ற நடையைப் பின்பற்றினர் என்பது தெளிவாகிறது. அந்த வகையில் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களை ஆய்வதே இக்கட்டுரையின் பொருளாக அமைகிறது.
ஒரெழுத்து ஒருமொழி
ஓர் எழுத்து பல பொருளைத் தருகிறது. இந்த ஓர்எழுத்து ஒருமொழி குறுந்தொகையில் மிகுதியாகக் காணப்படுகிறது. இதனால் புலவர்களின் சொல் சிக்கனம் புலப்படுகிறது. ஓரெழுத்து ஒரு மொழியைத் தொல்காப்பியர்
"நெட்டெழுத்து ஏழே ஆர் எழுத்து ஒரு மொழி" (தொல். 43)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ இந்த ஏழும் ஓர் எழுத்து ஒருமொழி என்கிறார்.
“உயிர்மலி லாறுந் தபநவி லைந்துங்
கவசவினாலும் யவ்வி லொன்னு
மாகு நெடினொது வாங்குறி லிரண்டோ
டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின” (நன்னூல், எழுத்.129)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ எனவும் மா, மீ, மு, மே, மை, மோ எனவும்,
தா, தீ, தூ, தே, தை எனவும்,
பா, பூ, பே, பை, போ எனவும்,
நா, நீ, நே, நை, நோ எனவும்,
கா, கூ, கை, கோ எனவும்,
வா, வீ, வை, வௌ எனவும்,
சா, சீ, சே, சோ எனவும்
யா எனவும்,
நொ, து எனவும் வரும் என நன்னூலார் ஓரெழுத்து ஒருமொழி 42 எனக் குறிப்பிடுகிறார்.
ஊ - இறைச்சி,
ஒ - மதகுநீர் தாங்கும் பலகை,
நே - அன்பு,
சோ - மதில்,
நோ - துன்பப்படு,
து - உண்
ஓரெழுத்தாலாகிய மொழிகள் நாற்பத்திரண்டும் சிறப்புக்குரியனவாகும்.
ஓர் எழுத்து ஒரு பொருளை மட்டுமே தரக்கூடியதும் இருக்கிறது.
ஆ, ஈ, ஏ, ஐ, கை, சா, சே, தூ, தே, தீ, தை, நோ, பூ, பை, பா, பே, மா, மை, யா, நா, நீ, வை, வீ, வ போன்றவை ஓ ரெழுத்து ஒரு மொழியாகக் குறுந்தொகையில் பயின்றுள்ளதைக் காணமுடிகிறது.
ஆ
‘ஆ’என்னும் ஒர் எழுத்து பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சா மரம் போன்ற பொருளைத் தருகின்றன. ஆனால் ‘பசு’என்னும் பொருளில் மட்டுமே குறுந்தொகையில் பல பாடல்கள் காணப்படுகின்றன.
"பல்ஆ, நெடுநெறிக்கு அகன்று வந்தெனப்
புன்தலை மன்றம் நோக்கி, மாலை
மடக்கண் குழவி அணவந்து அன்ன" (குறுந். 64;1-3)
‘பல் ஆ’ என்பது பல பசுக்களும் எனும் பொருளில் வந்துள்ளது. மேய்ச்சலுக்காக நீண்ட நெறியைப் பசுக்கள் கடந்து சென்று விட்டன. பசுக்கள் கொட்டிலில் இருந்து போனதால் வெறிச்சோடிப்போன கொட்டிலைப் பார்த்து மாலைப்பொழுதிலே இளங்கன்றுகள் வருந்தின. இது தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்குத் தாயைப் பிரிந்து தவிக்கும் இளங்கன்றுகள் உவமானமாகிறது. இது மாலைப்பொழுது என்பதால் வருத்தம் மிகுவிப்பதைச் சுட்டுகிறது.
"நாள் ஆ மேயும் பனிபடு நாளே பிரிந்தனர்" (குறுந்.104;3-4)
‘நாள் பூ மேயும் விடியற்காலத்திலேயே பசுக்கள் மேயும் காலம் பின்பனிக்காலம். தக்காலத்தில் தலைவன் பிரிந்து சென்று பல நாள்கள் ஆகிவிட்டதே என்ற தலைவியின் தவிப்பு
"நல்ஆன் தீம்பால்" (குறுந் 27;2)
நல்ல பசுவின் இனிய பால்.
"கடும் சூரை நல் ஆன் ‘நடுங்குதலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன" (குறுந். 132)
விரைவில் பாலைச் சுரக்கும் தன்மையுள்ள நல்ல பசு என்பது ‘கடும்சுரை நல்ஆன்’ எனப்பட்டது. இத்தன்மையுள்ள பசுவின் கன்றானது தாயைப்பார்க்கும் ஆசையோடு இருப்பதைப் போன்று தலைவி தலைவனைப் பிரிந்து இருக்கிறாள்.
"... ... ... ... ... நினைப்பின்
முதைச் சு வல் கலித்த. முற்றா இளம்புல்
மூது ஆ தைவந்தாங்கு" (குறுந். 204;2-4)
‘மூது ஆ’ எனபவைக் கிழப்பசுவைக் குறிப்பது . முதுமையின் காரணமாக மெல்ல முடியாமல் புல்லைத் தடவி இன்புறும் கிழப்பசுவைப் போன்றது என்னுடைய ‘காமம்’ என்கிறாள் தலைவி.
"பல் ஆ பயந்த நெய்யில்" (குறுந்.210;2)
பல பசுக்கள் தந்த நெய். இது கடையேழு வள்ளல்களில் ஒருவனான நள்ளியின் நாட்டு வளத்தைச் சிறப்பிக்கும் வகையில் அமைகிறது.
"புல் ஆர் நல் ஆன்" (குறுந்.275;4)
புல்லை மேய்ந்து வருகின்ற நல்ல பசு,
"அமர்கண் ஆமான் அம் செவிக் குழவி" (குறுந். 322;1)
காட்டுப் பசுவின் கன்று,
‘மடக்கண் வரை ஆ’ (363)
வரை ஆ என்றால் காட்டுப்பசுவைக் குறிப்பது.
‘பல் ஆன்கோவலர்’ (358)
பல பசுக்களையுடைய இடையர்கள்.
"நல்லேறு இயங்குதோறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக்குரலே" (190)
பசுக்கள் எல்லாம் காளையுடன் இன்பமாக இருக்கும் போது நான் மட்டும் தலைவனைப் பிரிந்திருக்கிறேனே எனத் தலைவி வருந்துகிறாள்.
தாயைப் பிரிந்த பிள்ளையின் வருத்ததிற்குப் பசுவைக் காணாத கன்றைப் போல எனவும், பிள்ளையைப் பிரிந்த தாயின் வருத்தத்திற்குக் கன்றைப் பிரிந்த பசுவைப் போல எனக் காலந்தொட்டுச் சொல்வது வழக்கம். அதாவது, பிரிவின் வருத்தத்தைக் காட்டுவதற்காக இப்படிச் சொல்வதுண்டு. அதைப்போலக் குறுந்தொகைப் பாடல்களில் தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்திற்குப் பசு சுட்டப்படுகிறது. ஆகவே இங்கு ஓரெழுத்து ஒரு மொழியாக ‘ஆ’ பயின்றுள்ளதைக் காணமுடிகிறது.
ஈ
ஈ என்னும் எழுத்து பறக்கும் ஈ, தா, குகை,தேன்,கொடு, எனப் பல பொருளைச் சுட்டுகிறது. குறுந்தொகைப் பாடலில் ஈதல், ஈயும் என்னும் சொல் ‘கொடு’ என்பதைக் குறிப்பது. அதாவது வள்ளலின் வண்மையைக் காட்டுவதற்கு ‘ஈ‘ என்னும் எழுத்து குறிப்பிடப்படுகிறது.
"தா என் கிளவி ஒப்போன் கூற்றே"(தொல்;927)
வறுமையின் காரணமாக ஒருவர் கேட்ட பொருளை நாம் தந்துவிட்டு மீண்டும் தான் கொடுத்த பொருளைக் கேட்பது என்பது அறமல்ல. அப்படிக் கேட்பதை விட உயிர் விடுவதே மேல்.
"இடுக்கன் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தா என் சொல்லினும்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே" (349; 5-7)
"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி" (631-2)
ஈதல் ‘ஈ‘ என்பதற்குத் தொல்காப்பியர்
‘ஈ’ என் கிளவி இழிந்தோன் கூற்றே’ (தொல். 927)
இரப்போர்க்குக் கொடுத்து வாழவேண்டும் எனும் உயர்ந்த பண்பைச் சுட்டுமிடத்தில் ‘ஈ. என்னுமெழுத்து அமைந்துள்ளது. ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என வள்ளுவர் குறிப்பிடுவது அறிந்ததே.
"ஓவாது ஈயும் மாரி வண்கை" (குறுந். 91;5)
அதியமானின் கொடை உள்ளதைக் காட்டுகிறது. எதையும் எதிர்பார்க்காத கொடையான மழையைப் போன்று எப்பொழுதும் எல்லோருக்கும் கொடுக்கும் கொடையுள்ளம் கொண்டவன் அதியமான் என்பதைச் சுட்டுகிறது.
ஏ
‘ஏ’ என்னும் எழுத்து அம்பு, உயர்ச்சி மிகுதி இவற்றைக் குறிக்கிறது.
"பூ ஒத்து அலமரும் தகைய, ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே (72:1-2)
‘ஏ’என்பது அம்பைக் குறிப்பது. இங்கு தலைவியின் கண்கள் மலர்களைப் போன்று அழகானது தான் என்றாலும் அது எனக்கு அம்பைப் போலத் துன்பத்தைத் தருகின்றன எனத் தலைவன் கூற்றாக இப்பாடல் அமைகிறது. இங்கு துன்பத்தைக் காட்டும் சொல்லுக்கு ‘ஏ என்னும் ஓரெழுத்து’ அமைந்துள்ளது.
ஐ
‘ஐ’ என்னும் எழுத்து அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு என பல பொருளைத் தருகிறது. மெல்லிய என்னும் பொருளில் அகநானூற்றில் வருவதைக் காணமுடிகிறது.
"கன்றும் உண்ணாது கலத்திலும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்க ஆங்கு
எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது
பசலை உண்கியர் வேண்டும்,
திதலை அல்குல் என்மாமைக் கவினே” (குறுந்., 27)
தலைவன் அழகு தலைவனுக்குப் பயன்படாது மேனி எங்கும் பசலை படர்ந்துள்ளது என்பதில் ’என்ஐ’ என் தலைவனுக்கு என் அழகு பயன்தரவில்லை என்பதில் ‘ஐ’ என்னும் ஓரெழுத்து பயின்றுள்ளதைக் காணமுடிகிறது.
"ஐது தொடை மாண்ட கோதைபோல" (குறுந்.62;3)
‘ஐது’ என்பது அழகைக் குறிக்கிறது, அழகாகத் தொடுக்கப்பட்ட மாலையைப் போன்ற மேனியை உடையவள் தலைவி என்பதை இப்பாடல் சுட்டுகிறது.
"வாரல்! வாழியர்!ஐய எம் தெருவே’ (குறுந். 139;6)
ஐய என்பது தலைவனைக் குறிக்கிறது.
ஐய(196) என்ஐ (203) தலைவனைக் குறிக்கிறது.
"வளை உடைத்து அனையது ஆகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத்துஐ எனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று, பிறையே," (குறுந்.,307;1-3)
செம்மை நிறமுள்ள அந்தி வானத்திலே பிறை தோன்றுவதை வியப்பாகச் சுட்டுவதற்கு ‘ஐ’ என்னும் ஓரெழுத்து பயின்றுள்ளது. இது தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்தை மிகுவிப்பதாய் அமைகிறது.
"சேற்றைநிலை முனைஇய செங்கண் கார் ஆன்
நள் என் யாமத்து ஐ எனக் கரையும் " (குறுந்.,261;3-4)
கார்காலத்தின் இறுதியிலே பெய்த மழையின் காரணமாக மாட்டுக்கொட்டில் சேறும் சகதியுமாக இருக்கிறது. சேற்றிலே நிற்பதை வெறுத்த, சிவந்த கண்களையுடைய கரிய எருமைகள் நள்ளிருட்டிலே கத்துகிறது. எருமையின் மொழியாக இங்கு ‘ஐ’ எனும் எழுத்து சுட்டப்பட்டுள்ளது.
“வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயில் பொதித்த தாதமரை” (குறுந்.,376;4-5)
மஞ்சள் வெயில் என்று சொல்கின்ற மாலை நேர சூரியனின் கதிர்கள் அழகைக் கூட்டுகிறது. இங்கு அழகைச் சுட்ட ‘ஐ‘ என்னும் ஒரெழுத்து அமைந்துள்ளது.
" ... ... ... ... .. ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று
ஐது ஏகு அம்ம மெய்தோய் நட்பே" (குறுந்.,401 ;5-6)
தலைவியின் உடம்பிலே ஏற்பட்ட மாறுபாட்டைக் கண்டு தலைவியின் பெற்றோர் இற்செறிப்பு செய்தனர். அப்பொழுது தலைவி ஒரு நாள் தான் தலைவனுடன் நட்பு கொண்டு உடம்பைத் தழுவி விளையாடினோம். அதுவே இன்று வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாத அளவு செய்து விட்டதே. இது வியப்பாக இருக்கிறது என்கிறாள் தலைவி. இங்கு ‘ஐ’ - வியப்பைக் குறிக்கிறது.
27, 62 இம்மூன்று பாடல்களிலுள்ள ‘ஐ’ அழகையும்,
139,196, 203 தலைவனையும்,
307, 401 வியப்பையும்
376வது பாடலிலுள்ள ‘ஐ’ என்னும் ஒலி எருமை கத்தும் மொழியாகவும் அமைந்துள்ளது.
"ஐ மென் தூவி" (அகம்,289;13)
அன்னச் சிறகின் தன்மையைக் குறிப்பிட ‘ஐ’ மெல்லிய என்னும் பொருளைத் தருவதாய் அமைகிறது.
கை
‘கை’ என்னும் எழுத்து ‘கரம்’ என்னும் உறுப்பைக் குறிப்பதாகும். குறுந்தொகைப் பாடலில் தலைவியின் வளையல்கள் அணிந்த கையைக் குறிப்பிட ‘முன்கை’ எனவும், யானையின் தும்பிக்கையைச் சுட்டுவதற்கு ‘கை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியைப் புலவர்கள் கையாண்டிருப்பதை அறிய முடிகிறது.
" ... ... ... ... ... ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலை யொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே" (15;4-6)
தலைவனும் தலைவியும் உடன்போக்குச் சென்றதை அறிந்த செவிலித்தாய் தன்மகளின் திருமண நிகழ்வை எண்ணிப் பார்க்கும் பொருட்டு வளையல்களைத் தொகுப்பாக, அதாவது அதிகமாக அணிந்த கை ‘முன்கை’ எனச் சுட்டப்படுகிறது. திருமணத்தின் போது கைநிறைய வளையல்கள் அணிவிப்பது தமிழர் மரபு என்பது புலப்படுகிறது.
‘என் கை’(31) ‘பெருங்கை வேழம்’ (37)
நீண்ட கையையுடைய ஆண்யானை
‘கையில் ஊமன்’ (58) ‘
கையில்லாத ஊமை’ ஒருவன்,
‘நேர் இறைமுன்கை"(53) ‘கைவள் ஓரி’(199) ‘கைபிணி நெகிழின்’(237), ‘கை சுவைத்து’(307)
யானையின் கையைக் குறிக்கிறது.
’யானை கை மடித்து உயவும்’(388), ‘ கை புணையாக’ (398), ‘கையுடை நன்மாப்பிடி’ (319).
"அம்ம வாழி தோழி!நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர்இருந்தனர் கொல்லோ!
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே" (1497)
பெண் கேட்கப் பெரியோர்களை அனுப்புவது பழந்தமிழர் பழக்கம். அதுவே இன்றும் தொடர்கிறது. பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதற்கும் இது தொடர்கிறது. எல்லாம் நன்மையாக முடியட்டும் என்னும் கருத்திலே நன்று நன்று என்று சொல்வர். இந்த நாள் சிறந்தது என்று வரவேற்பர். தமிழர் பழக்க வழக்கத்தைக் குறிப்பிடும் இப்பாடலில் ‘தண்டுடைக் கையர்’ என்பது அகவை முதிர்வின் காரணமாக ஊன்றுகோலை வைத்திருப்பவரைக் குறிப்பது. வெண் தலை என்பது நரை கண்டுள்ள தலையையும், சிதவலர் என்பது முண்டாசு கட்டியவரையும் குறிப்பதாகும். இது பழந்தமிழர் மரபைச் சுட்டும் பாடலாக அமைகிறது.
தெய்வத்தை வேண்டி கையிலே காப்புக் கட்டிக் கொள்ளும் வழக்கம் இன்று இருப்பதுபோல் சங்க காலத்திலும் இருந்திருக்கிறது. தலைவன் பிரிவால் தலைவி தம் கடனை, கடமையைச் செய்யவில்லை என்பதை
‘கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம், வரிச்சியும் நில்லாம்
உள்ளலும் உள்ளாம்; அன்றே; தோழி! (குறுந்., 218; 2-5)
நேர்த்திக் கடனையும் மேற்கொள்ளவில்லை, காப்பு நூலையும் கட்டிக் கொள்ளவில்லை. பறவை நிமித்தத்தையும் பார்க்கவில்லை எனச் சுட்டுகிறார். இதிலிருந்து சங்ககால மக்களின் நம்பிக்கை புலப்படுகிறது.
“கொடிச்சி கைக்குளிரே" (291)
தலைவி கையில் குளிர் என்னும் கருவியை வைத்திருந்ததைச் சுட்டுகிறது.
சே
‘சே’ என்னும் எழுத்து காலை, எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு என்னும் பொருளைத் தருவதாகும்.
‘சிறைபனி உடைந்த சேய்அரி மழைக்கண்’ (86;1)
தலைவனைக் காணாத தலைவியின் கண்கள் பிரிவுத் துயரத்தால் அழுது அழுது சிவந்தன என்பதைக் குறிக்க ‘சேய்அரி மழைக்கண்’ எனும் தொடர் அமைகிறது‘
‘சுடர்செல்வானம் சேப்ப’ (234;1)
சூரியன் மறைந்த பின் தோன்றும் செவ்வானத்தைக் குறிக்கிறது.
தூ
‘தூ’ என்னும் எழுத்து வெண்மை, தூய்மை, இறைச்சி, பறவை இறகு என்பதைக் குறிக்கிறது.
‘துறை தொறும் பரக்கும் தூமணல் சேர்ப்பனை’ (51;3)
திருமண நாள் நீண்டு கொண்டே போனதனால் தலைவி கொண்ட வருத்தத்திற்கு நீர்த்துறைகளில் எல்லாம் வெண்மையான மணல் பரந்த கடற்கரையை உடைய தலைவன் தான் உன் தலைவன் எனத் தோழி தலைவியிடம் ஆறுதல் தேற்றுகிறாள்.
"மால் வரை இழிதரும் தூவெள் அருவி" (95:1)
பெரிய மலையிலிருந்து விழுகின்ற தூய்மையான வெண்மையான அருவி. இதில் ‘தூ’ என்பதற்குரிய வெண்மை, தூய்மை இரண்டும் வந்து பாடலுக்கு நயம் சேர்க்கின்றன.
‘தூத்திரை’ (55)
வெண்மையான அலை,
‘தூவெள் அருவி’ (234)
தூய்மையான, வெண்மையான என்பதைக் குறிப்பதற்கு ‘தூ’ என்னும் ஓரெழுத்து பயன்பட்டுள்ளது.
பே
‘பே’ என்னும் ஓரெழுத்து மேகம், துரை, அழகு, அச்சம் என்னும் சொற்களைக் குறிக்கும். பேய் என்னும் அச்சம் தரும் சொல்லும் இதிலிருந்து பிறந்ததேயாகும்.
‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப" (87; 1-2)
மரா என்றால் செங்கடம்ப மரம் என்றும், ‘மன்றம்’ என்பது பலர் ஒன்று கூடும் இடம் என்பதையும் குறிப்பதாகும். செங்கடம்ப மரத்தில் உறையும் தெய்வம் பழமையான, அச்சம் தரும் தெய்வம் என்பதைச் சு ட்ட ’பேஎமுதிர் கடவுள்’ என வந்துள்ளது. ஆலமரம், புளியமரம் என்றால் அச்சம் தரும் என்னும் வகையிலும், வேப்ப மரம் தெய்வம் உறையும் மரம் என்பதும் இன்றும் மக்களால் நம்பப்படுவது போல சங்ககாலத்திலும் இருந்ததையும் அறிய முடிகிறது.
"பெரும் பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம்" (89; 4-5)
கொல்லி மலையிலுள்ள அச்சம் நிறைந்த கருமையான கண்களையுடைய தெய்வத்தின் உருவம் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், கொல்லிப்பாவையைப் போன்ற தலைவி மெல்லிய தன்மையுடையவள் எனத் தோழி, தலைவியை பற்றி இவ்விதமாக எடுத்துரைக்கிறாள்.
மை
கண்மை (கருமை) அஞ்சனம், இருள், மசி (ink) போன்றவற்றைக் குறிக்கும் ஓரெழுத்துதான் ‘மை’ ஆகும்.
‘மை பட்டன்ன மாமுசுக்கலை" (121;2)
மை பூசியது போன்ற கருமையான முகத்தையுடைய ஆண் குரங்கு என்பதில் ‘மை’ என்பது கருமையைக் குறிக்கிறது.
"மை அணி மருங்கின் மலை அகம் சேரவும்
மலை வந்தன்று மாரி மாமழை" (319 4-5)
‘கரிய மேகங்கள் பொருந்திய மலை என்பதால் ‘மை’ என்பது கரிய என்பதைக் குறிக்கிறது. இது கார்காலத்தில் மழை வருவதற்கான நிலைப்பாட்டையும் தலைவியின் வருத்தத்தையும் ஒருசேரக் காட்டுகிறது.
"கைவளை நெகிழ்தலும் மெய்பசப்பு ஊர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் " (371;2-4)
‘மை’ என்பது மேகத்தைக் குறிக்கிறது. மேகம் பொருந்திய மலை என்பதைக் காலத்தோடு பயிர் செய்யும் மரபை எடுத்துரைக்கிறது. இதன் வழி எதை மறைத்தாலும் காமத்தை (காதலை) மறைக்க முடியாது என்பது வெளிப்படையாகிறது.
குறுந்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் ஓரெழுத்து ஒரு மொழியை, பல்வேறு சொற்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர். ‘என் ஐ’ என்பதால் ‘ஐ’ தலைவனைக் குறித்தாலும் வேறு சில பாடல்களில் ‘என் தலைவனை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது கூறியது கூறல் இலக்கணப் பிழை என்பதால் இதைக் கையாண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இலக்கணச் சுவை குன்றாமல் இதைப் பயன்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் புலவர்களின் பாத்திறத்தையும், அவர்கள் கையாளும் சொல்லாட்சியையும், புலமையையும் எடுத்துரைப்பதாய் இச்சொற்கள் அமைவதைக் காணமுடிகிறது.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.