தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
28. பித்தனின் புதுமைகள்
முனைவர் வே. நிர்மலர்செல்வி
புதுமைப்பித்தனின் புதுமைச் சிந்தனைகளையும் ஆளுமையையும் அவரின் சிறுகதைகளைக் கொண்டு விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது. புதுமைப்பித்தன் என்னும் தமிழ்நாட்டு மாப்பசான் இவரை விட்டு நாம் சிறுகதை பற்றிச் சிந்திக்கவோ பேசவோ முடியாது. சமுதாய நிகழ்வுகள் பற்றிய அவரின் கேலியும் கிண்டலும், குத்தலும் குமுறலும், சொல்லோவியங்களும் குறிப்பிடத்தக்கன. இவரின் முன்னுரை கொண்டே வாசகன் சிறுகதையின் பன்முகத் தன்மையை உணர முடியும். சிறுகதை உலகில் தமக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டவர். தன் சொந்த வாழ்வில் அல்லலுற்ற இவர் சமுதாயத்தின் இருளடைந்த பகுதிகளை அவற்றின் இழிநிலைகளை வாழ்க்கை அனுபவம் தோன்றத் தீட்டிடும் திறமையர். மூட நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் எள்ளி நகையாடுபவர். இவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு தத்துவத்தையோ ஒப்பரிய கருத்தையோ பதிவு செய்வதாகவே அமைந்திருக்கும். அவர் நூறு கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் அவரின் ஒரு சில சிறுகதைகளைக் கொண்டு அவரின் புதுமைச் சிந்தனைகளை நாம் கண்டு கொள்ளலாம்.
புதுமைப்பித்தன் காதல், இறப்பு, வறுமை, கற்பு, பசி, பயம், சிறுமை, சீரழிவு, சோகம், குழப்பம், கொந்தளிப்பு, மந்திரம், புராணம் என்று பலவற்றைக் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவரின் கதாப்பாத்திரங்கள் எல்லாம் நிழல்கள் அல்ல நிஜங்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். உலக வாழ்வின் மீது நம்பிக்கை இழந்தவர்கள், நண்பர்களை நம்பி மோசம் போனவர்கள், காதலால் தோல்வியடைந்தவர்கள், சமூகத்தை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் மற்றும் துணிந்தவர்கள், சமயப் போர்வையில் உலா வரும் சாத்தான்கள், மனத்தால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் என்று பலவிதமாக அக் கதாப்பாத்திரங்கள் அமைந்துள்ளன.
சாப விமோசனம்
புதுமைப்பித்தன் கதைகளில் கற்பு பற்றிப் பேசும் சாபவிமோசனமும், பொன்னகரமும் பலராலும் விமர்சிக்கப்பட்டவை. சாபவிமோசனம் என்ற சிறுகதையில் புராண நிகழ்ச்சியைக் கதைக் கருவாகக் கொண்டு அக்கதையில் ஒரு எதிர்பாராத தீர்ப்பையும் பதிவு செய்கிறார். அக்கால கட்டத்தில் அச்சிறுகதை பலராலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல விமர்சனங்களுக்கு உட்பட்டது. இந்திரனால் மாசுபட்ட அகலிகை, கணவன் கௌதமனால் சபிக்கப்பட்டு கல்லாகிறாள். இராமனின் பாதம் பட்டு சாபவிமோசனம் பெறுகிறாள் அகலிகை. இராமனாவது தன்னைப் புரிந்துகொண்டானே என்று ஆறுதலடைகிறாள். ஒரு நாள் சீதையை ராமன் தீக்குளிக்கச் சொன்னான் என்று கேள்விப்படுகிறாள். கொதித்தெழுகிறாள்! அகலிகைக்கு ஒரு நீதி! அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? என்று கதறுகிறாள். அகலிகை மீண்டும் கல்லாகிறாள். கௌதமன் துறவியானான் என்று கதை முடிகின்றது. புதுமைப்பித்தன் தாமே நுழைந்து இந்தத் தீர்ப்பைத் தருகிறார். அதாவது கடவுளானாலும் இராமன் கொடுத்த சாபவிமோசனத்தைத் தேவையில்லை என்று தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் தன்னைக் கல்லாக்கிக் கொண்டாள் அகலிகை என்று ஒரு புதுமையான தீர்ப்பைச் சற்றும் எதிர்பாராத ஒரு முடிவை புதுமைப்பித்தனைத் தவிர வேறு யாரால் தர முடியும். இக்கதை அவரின் புதுமைச் சிந்தனைக்கு ஒரு சிறந்த சான்று.
பொன்னகரம்
பொன்னகரத்தில் வாழ்பவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள். அது வேறு உலகம், அதன் தர்மமும் வேறு, குதிரை வண்டி ஓட்டும் முருகேசன், அவன் மனைவி அம்மாளு முருகேசனின் தாயார், தம்பி என ஒரு ஏழ்மைக் குடும்பம். ஒரு நாள் குடிபோதையில் அடிப்பட்டு உயிருக்குப் போராடுகின்றான் முருகேசன், அவனுக்கு நினைவு திரும்புகின்றது, பசிக்குப் பால் கஞ்சி கேட்கின்றான், அம்மாளு ஒரு மில் தொழிலாளி, வீட்டிலோ வறுமை, செய்வதறியாது விழிக்கிறாள். வறுமையின் பிடியில் வாழ்பவர்களுக்கு கற்பு பெரிய விசயமல்ல. அம்மாளு தன் கணவனுக்காக சற்று பாதை மாறுகிறாள். கணவனின் ஆசையை நிறைவேற்றுகிறாள். தன் கணவனுக்காகத் தன் கற்பை விற்கிறாள். அம்மாளுவின் இந்நிலைமைக்கு சமூகமே பொறுப்பு என்கிறார் புதுமைப்பித்தன். அதோடு கற்பு! கற்பு! என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம் என்று தன் கதையை முடிக்கிறார்.
பொன்னகரத்தில் கற்பு படும் பாட்டை எரிமலையாகக் கொட்டுகிறார். ஒரு பக்கம் கற்பு! கற்பு! என மிரட்டும் பணக்காரச் சமூகம், மறுபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி நாள்தோறும் வாழ்வுக்குப் போராடும் சமூகம்! இங்கு ‘பொருளாதாரம்’ என்ற கருவிதான் கற்பை நிர்ணயிக்கின்றது. வறுமை எல்லாவற்றையும் எல்லை தாண்ட வைக்கின்றது என்று சமூகத்தின் யதார்த்த நிலையை உள்ளது உள்ளபடி ஒளிவு மறைவின்றி உரைக்க புதுமைப்பித்தனால் மட்டுமே முடியும்.
வாடா மல்லிகை
ஒரு இளம் விதவையின் வேதனையைச் சொல்லும் சிறுகதை வாடா மல்லிகை. இச்சிறுகதையில் வரும் சரசு, ஒரு அந்தணப் பெண். பதினேழு வயதில் தன் கணவனை இழந்தவள். ஓர் உலாவும் விடை தெரியாத விடுகதை, அவள் சமூகத்தில் மறுமணம் என்பது பெண்களுக்கு ஆகாத சொல், ஒரு சூழ்நிலையில் தன்னை விரும்பும் ஒருவனிடம் பாசத்தை நாடுகிறாள். அவன் அவளின் செயலை பரத்தையின் செயல் என்கிறான். அதற்கு அவள் நான் பரத்தையன்று, இயற்கையின் தேவையை நாடுகிறேன்! என்று சொல்லி இறுதியில் கையில் கடிதத்துடன் தற்கொலை செய்கிறாள். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கூறும் சமுதாயம் கணவன் இறந்தால் மனைவி மறுமணம் செய்துகொள்ள மறுக்கின்றது. புதுமைப்பித்தன் காலத்தில் இக்கொடுமை காணப்பெற்றது. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் எனச் சமூகம் வரையறை செய்துள்ளது. இதன் காரணமாகவே, சரசு அவள் காதலனை இயற்கையின் தேவைக்காக மட்டுமே நாடுகின்றாள் என்று எழுதுகின்றார் புதுமைப்பித்தன். ஒரு பெண்ணின் தேவையை உணராத கட்டுப்பாடுகள் அவசியமற்றது என்றும் உரைக்கின்றார்.
புதுமைப் பித்தன் ஆளுமை
இப்படிச் செல்லும் அவரின் சிறுகதைப் பயணத்தில் பல நிழல்கள் உயிர் பெறுகின்றன. பால்வண்ணம் பிள்ளை என்ற சிறுகதையில் பிடிவாத குமாஸ்தாவையும், பனை மரத்து அடியிலிருந்து கனவு காணும் பரமசிவம் பிள்ளையை கயிற்றரவு என்னும் சிறுகதையிலும், ஒரு ஏழை குடும்பத்தின் ஒரு நாள் பொழுது எப்படிக் கழிகின்றது என்பதை ஒரு நாள் கழிந்தது என்னும் சிறுகதையிலும், வாழ்வின் நிலையாமையை நினைவுப்பாதை என்னும் சிறுகதையிலும், கடவுளுக்கே நாம் மனிதனை விட்டு எட்டி நிற்பதே சாலச்சிறந்தது என்ற சிந்தனையை உருவாக்கிய சிறுகதை கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், இப்படி புதுமைப்பித்தன் அவரின் சிறுகதைகளில் தொட்டுச் செல்லாத அவலங்களே இல்லையென்று கூடச் சொல்லலாம்.
ஒவ்வொரு சிறுகதையிலும் அவரின் முடிவுகள் அவரின் தனிப்பட்ட ஆளுமையை எடுத்துரைக்கின்றன. புதுமைப்பித்தனால் சிறுகதைகள் தமிழிலக்கிய வடிவம் பெற்றன என்றே சொல்ல வேண்டும். கதைச் சொல்லும் முறைகளிலும் அனைவரில் இருந்து வேறுபட்டே இருந்தார். அவரின் சிறுகதைகள் நேற்றைய பாதையை ஆராய்வதோடு நில்லாமல், இன்றைய சாலையைச் செப்பனிட்டு பண்படுத்துவதோடு நாளைய வழிமுறைகளையும் நமக்கு வகுத்துத் தரும் என்பது திண்ணம்.
துணை நூல்கள்
1. புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு - மீ.ப. சோமு
2. இக்கால இலக்கியம் (தொகுப்பு) - பல்கலைக்கழக வெளியீடு
3. தமிழ் இலக்கிய வரலாறு - மது.ச.விமலானந்தம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.