தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
29. கி. ராஜநாராயணனின் கோமதி சிறுகதையில் திருநங்கை
செ. புனிதவதி
முன்னுரை
தமிழ்ச் சிறுகதை மரபு கதை சொல்லுதல் என்ற நிலையில் இருந்து தொடங்குகின்றது. பண்டைய தமிழ் இதிகாசங்களிலும் புராணங்களிலும் எண்ணிலடங்காச் சிறுகதைகள் இடம்பெறுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் மேலை நாட்டில் தோன்றி வளர்ந்து இன்று உலகெங்கிலும் ஏற்கப்பட்ட இலக்கிய வகையாகத் திகழ்ந்தது. அதனைத் தமிழ் இலக்கியத்திற்குக் கொண்டு வந்த பெருமை வ. வே. சு. ஐயர் அவர்களைச் சாரும் என்பதை நாம் அறிவோம்.
சமகால வாழ்வியல் சிக்கல்களையும் தனிமனித உணர்வுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் சுருக்கமாகக் கூறுவதற்கு ஏற்றதொரு வடிவமாகச் சிறுகதை காணப்பட்டது. காலப்போக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை புதிய சிந்தனைகளையும் கருத்துகளையும் வெளிக்கொணர்ந்து மிகுந்த செல்வாக்கு பெற்றது. தொடக்கக்காலச் சிறுகதை ஆசிரியர்களாகப் பாரதியார், வ.வே.சு. ஐயர், மாதவய்யா முதலானவர்களைக் கூறலாம். பின்பு சிறுகதை உலகில் புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, லா.ச.ரா., ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் முதலியோர் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகச் சிக்கல்களை மையமாகக் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர். அதில் ஆண். பெண் இருவரால் ஒதுக்கப்பட்ட, வேடிக்கைப் பொருளாய் மூன்றாம் பாலினராய்த் திகழும் திருநங்கையரைப் பற்றிக் கி. ராஜநாராயணன் கோமதி எனும் சிறுகதையில் சமையல் வேலைக்காக வந்த திருநங்கையின் வாழ்வியலையும் மன உணர்வினையும் விளம்பியுள்ளார். இவற்றினை மையமாக வைத்துத் தமிழ் இலக்கியத்தில் திருநங்கையர், அவர்களின் பிறப்பு பற்றிய செய்திகள், இன்றைய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் கூறி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
திருநங்கை விளக்கம்
மனித சமூகம் ஆண், பெண் என்ற இரு பாலினத்தவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக மூன்றாம் பாலினத்தவர் (Trans Gender) என்று திருநங்கையரை அழைப்பதை நாம் பார்க்கின்றோம். திருநங்கையர் எனப்படுபவர்கள் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டுப் பின்னர்த் தம்மைப் பெண்ணாக உணர்ந்து பெண்களாகவே வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.
திருநங்கையர் நாள்
திருநங்கையர்களின் சமூகப் பாதுகாப்பு கருதியும் அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15, 2008ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கைகளுக்குத் தனி நல வாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளைத் திருநங்கையர் நாளாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடத் தமிழக அரசு மார்ச் 5, 2011 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் திருநங்கையர்
இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழர்களில் தமிழ்ச் சமூகங்களில் ஒருவராக வாழ்ந்து வருகின்ற திருநங்கைகள் அடையாளம் காணப்படாதவர்களாக இருந்து வருகின்றனர். தமிழ் இலக்கியங்களில் இவர்களுடைய வரலாற்றையும் வாழ்வியலையும் அடையாளம் காணும் நோக்கில் இலக்கியம், இலக்கணம், காப்பியம், புராணம், நிகண்டு போன்றவை திருநங்கை குறித்துத் தங்களுடைய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளன. தொல்காப்பியம்
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்” (தொல்-சொல்:4)
என்று கூறுகிறது. திவாகர நிகண்டு திருநங்கையின் தோற்றம் நடை உடை பாவனை பற்றித் விரிவான விளக்கம் கொடுத்துள்ளது.
“பேடி இலக்கணம் பேசுங்கலை
நச்சுப் பேசலும் நல்லுரை ஓர்தலும்”
பெண்டகன் - பெண் தன்மை மிக்கவன். பேடி - ஆண் தன்மையற்ற பெண்ணுருவம் மிக்கவன். நபுஞ்சகன் - பெண், ஆண் அல்லாதது. கண்டகன் - பால் உணர்வற்றவன் என்று சூடாமணி நிகண்டு திருநங்கை குறித்து விளக்கம் தருகிறது. ஆண் தன்மை மிக்க பெண்ணைப் ‘பேடன்’ என்ற சொல்லால் பிங்கல நிகண்டு கூறுகிறது. மகாபாரதத்தில் ‘சிகண்டி’ என்றொரு கதாபாத்திரம் திருநங்கையாகக் காணப்படுகிறது.
பிறப்பு பற்றிய செய்திகள்
திருநங்கையர் வடமாநிலங்களில் தெய்வத்தின் பிறப்பாக நம்பப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிறப்பு இழிவாகப் பார்க்கப்படுகிறது. அறிவியலாளர்களின் கருத்துப்படி குரோமோசோம்கள் கூடுதல் குறைதலினால் பால் ரீதியான மாற்றங்கள் மரபணு அடிப்படையில் இயற்கையாகவே பிறக்கின்றனர் என்று கூறுகிறார்கள். மானுடவியலாளர்கள் சமூகச் சூழலால்தான் திருநங்கைகள் உருவாக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படச் சித்தர்களில் முன்னோடியான திருமூலர்
“குழவியும் ஆணாம் வலத்ததுவாகில்
குழவியும் பெண்ணாம் இடத்ததுவாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கும்
குழவி அலியாதம் கொண்ட கால் ஒக்கிலே...” (திருமந்திரம் - 402)
திருநங்கையின் பிறப்பு பற்றி அறிந்து கூறியுள்ளார்.
கோமதி சிறுகதையில் திருநங்கை
கி. ராஜநாராயணனால் எழுதப்பட்ட இச்சிறுகதை திருநங்கையை மையமிட்டுப் பேசக்கூடியது. பால்மாறுபாடு கலாச்சாரத் தளத்தில் ஏற்படுத்தும் உடைப்பு என்பதாக முன்வைக்கப்படுகிறது. இதன் தலைப்பே இவர்களின் சிக்கலை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கோமதி என்பது பெண்பாலைக் குறிக்கும். ஆனால் இப்பெயரைப் பெற்று வரும் பாத்திரம் ஆணுமல்லாத பெண்ணுமல்லாத திருநங்கையைக் குறித்து வருகின்றது. இச்சிறுகதையில் திருநங்கைகள் மாற்றுப் பாலினப் பண்புகளை உள்வாங்கிக்கொண்டு தங்களின் செயல்களை எவ்வாறு மாற்றிக் கொள்கின்றனர் என்பதையும் அதனால் சமூக அமைப்பிலும் குடும்ப அமைப்பிலும் அனுபவிக்கின்ற சிக்கல்கள் என்னென்ன என்பதையும் மிகவும் இயல்பாகக் கி. ராஜநாராயணன் பதிவு செய்துள்ளார்.
தொழில்முறை
சமூகத்தில் பல்வேறு நிலைகளில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் கேலிப் பொருளாகவும் திருநங்கைகள் காணப்படுகின்றனர். அதனால் வாழ வழியில்லாமல் தவறான தொழில்களில் ஈடுபடுகின்றனர். அத்தொழிலில் இன்று பெரும்பாலான திருநங்கைள் ஈடுபட்டு வருவதற்கு வறுமையும் ஒரு காரணமாகும். ஒப்பாரி பாடுதல், சமையல் செய்தல், கடைகளுக்குச் சென்று கைதட்டிப் பணம் வாங்குதல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். சில திருநங்கைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இவர்களது இந்நிலையினைக் கி. ராஜநாராயணன் விளக்கியுள்ளார்.
“இப்பேர்ப்பட்ட ஒரு இடத்துக்குத்தான் கோமதி சமையல் உத்தியோகத்துக்குப் பெட்டி படுக்கையுடன் போய்ச் சேர்ந்தான். பக்கத்து வீட்டுப் பெண்கள் இவனை ஓர் வேடிக்கைப் பொருளாகப் பார்க்க வந்தனர். அன்று எல்லாருக்கும் பெரிய விருந்து நடந்தது. அவன் படைத்த உணவை ருசி பார்த்த பின்தான் அப்பெண்களுக்கு அவன் மீதுள்ள இளப்பம் ஓரளவு நீங்கியது.
சாப்பிட்டு முடித்த ரகுபதி நாயக்கர் இந்தப் புதுச் சமையல்காரனைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி வரவழைத்தார். கோமதி அஞ்சி ஒரு பூனைபோல் அவர் எதிரே போய் நின்றான். இவனைப் பார்த்ததும் ஏளனமாகக் கடகடவென்று சிரிக்கத் தொடங்கிவிட்டார். அவனுடைய அச்சத்தைக் கண்டு ரகுபதி நாயக்கர் இன்னும் உரக்கச் சிரித்தார். இவனா? என்பதைப்போல். சமையல் தொழிலில் ஈடுபட்ட கோமதியின் வாழ்வியலையும் அவனின் மன உணர்வுகளையும் கி.ராஜநாராயணன் கூறியுள்ளார். தற்காலத்தில் இறப்பு வீடுகளில் ஒப்பாரிப் பாடல்கள் பாடுவதற்கு அவர்களைப் பயன்படுத்துவதை ஆசிரியர் கூறியுள்ளார்.
தன் இனிமையான பெண்குரலில் சோகம் ததும்ப ஓர் ஒப்பாரியைப் பாடினான் கோமதி. உணர்ச்சியோடு விதவைக் கோலம் பூண்டுவிட்ட ஒரு பெண் சொல்லுவதாக
“கருப்பும் சிகப்புமாய் நான்
கலந்துடுத்தும் நாளையிலே
சிகப்பும் கருப்புமாய் நான்
சேர்ந்துடுத்தும் நாளையிலே”
பாடியதைக் கேட்டவுடன் அங்கிருந்த பெண்கள் அழுது விட்டனர். அதோடு நாடோடிப் பாடல் ஒன்றையும் பாடினான்.
“சோளம் இடிக்கையிலே சொன்னையடி ஒரு வார்த்தை ஐயோ
கையை பிடிக்காதீங்க என் கருவளைவி சேதமாகும்”
அப்பெண்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிரித்தனர். திருநங்கைகளின் வாழ்வியல் மிகவும் நுட்பமானதென்றும் பெண்களின் ஆதரவுதான் அவர்களுக்கு மனரீதியான ஊக்கத்தைத் தரும் என்று கி.ராஜநாராயணன் கூறியிருக்கிறார்.
கோமதியின் பரிதாப நிலை
திருநங்கைகளின் பிறப்பே சிக்கல் கொண்டது. மனிதப் பிறப்புகளில் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பிறப்பு. மனித இனத்தில் ஒருவராகக்கூட இவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பிறப்பு ஒன்றாக இருக்கப் பாலினப் பண்புகள் வேறொன்றாகக் கொண்டு பிறப்பது இயற்கையின் விளைவு. இதனைப் புரிந்து கொள்ளாமல் காலங்காலமாக ஒதுக்கியே வருவது இச்சமூகம் இழைத்து வரும் பெருங்கொடுமையாகும்.
“கோமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துப் படபடவென்று தம்மைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்ணாடியின் முன் போய் நின்று தன்னைச் சரிபடுத்திக் கொண்டு பால் டம்ளரை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு மாடியை நோக்கி மணப்பெண் போகிறதைப் போல் ஏறிச் சென்றான். கோமதி... கோமதி... உள்ளே வாயேன் என்று சுலோ கூப்பிட்டாள். ‘யார் கோமதி’ என்று கேட்டான் ரகு. அது ‘நான் அப்போ சொல்லவில்லையா?’ சமையலுக்கு ஒரு புது ஆள் என்று ‘ஓஹோ’, ‘யாரோ பெண்பிள்ளை போலிருக்கிறது’ என்று எண்ணிக்கொண்டு இருந்த போது “அண்ணா பாலை எடுத்துக்கொள்” ரகு திரும்பிப் பார்த்தான். முகத்தைச் சுழித்தான். இந்த முகத்தை அவனால் தாங்க முடியவில்லை. சுலோவை இதெல்லாம் என்ன என்ற முறையில் கோபத்தோடு பார்த்தான். கோமதி என்ற பெயரை வைத்துக்கொண்டு திருநங்கையாக வருவதைப் பார்த்ததும் ரகு அருவெறுப்பு கொள்கிறான். சமூகத்தில் திருநங்கையர் (அரவாணிகள்) இழிவாகவும் நகைச்சுவைப் பொருளாகவும் பார்க்கப்படுவதை ரகு கதாப்பாத்திரத்தின் வழியாகக் கி. ராஜநாராயணன் உணர்த்துகிறார்.
இன்றைய சூழலில் திருநங்கையர்
தனிமையும் தீண்டாமையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுச் சகித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இழிநிலை திருநங்கையரின் வாழ்வில் எப்போதும் தொடர்கிறது.
சமூக மதிப்பு எதுவுமில்லாமல் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையின் பொருள் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள், தங்களுக்கென்று வாழ இடமில்லாமல் தங்களது உரிமைகளைப் பெற முடியாமல் இருக்கின்றனர். இது ஒருபுறமிருக்கத் தற்போது பெரும்பாலான திருநங்கைகள் சாதிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பல நிறுவனங்களில் பணிபுரிபவராகவும் காணப்படுகின்றனர். தற்பொழுது அரசு அவர்களுக்கென்று கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வு சக மனிதர்கள் போலக் காணப்பட வேண்டுமென்று அக்கறை கொண்டு திகழ்கின்றது.
கல்வி, வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் மூன்றாம் பாலினம் ஆண், பெண் மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறதை அறிய முடிகின்றது. அண்மையில் சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை தமிழகத்தில் காவல்துறையில் பெண் உதவி ஆய்வாளராகத் தேர்வாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
திருநங்கையர்களின் வாழ்வு மேம்படுவதற்கான தீர்வுகள்
1. தங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்படுகிற போதுதான் திருநங்கையர் இத்தகைய வாழ்வியல் துன்பங்களை எதிர்கொள்ளப் பிச்சை எடுக்கவும் பாலியல் தொழில் செய்யவும் துணிந்து விடுகின்றனர். இதற்குச் சமூகத்தின் புறக்கணிப்பு முக்கியக் காரணமாகும். ஆகவே அவர்களுக்கான வாய்ப்புகளைத் தர அரசு முன்வர வேண்டும்.
2. வேற்றுக் கிரகத்து மனிதனைப் போல் எண்ணாமல் அவர்களின் சராசரி மனிதன்தான் என்ற நிலையினைச் சமூகத்திற்கு உணர்த்தும் விதமாகக் குறும்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் அவர்களைப் பற்றிய நல்ல கருத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
3. பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர். இதனைத் தடுக்க வழிமுறை செய்யப்பட வேண்டும். அவர்களும் மனிதர்கள்தான். தகாத வார்த்தை கூறி அவர்களின் மனத்தைப் புண்படுத்துகின்றனர். இது குறைக்கப்பட வேண்டும்.
4. உணவு, இடம் பிழைக்க வழியின்றி பல திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கனடா நாட்டில் சட்டப்படி உரிமை பெற்று வாழ்வது போல் நமது நாட்டிலும் செய்யப்பட வேண்டும்.
5. அலி, ஒம்பது, பேடி, உஸ் என்ற சொற்களைவிட்டு ‘Sister’, ‘அக்கா’ என்றுகூட அழைக்கலாம். அவ்வாறு அழைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே அப்படி அழைத்தால் நன்றாக இருக்கும்.
முடிவுரை
தற்பொழுது திருநங்கைகள் வெளியுலக அறிவும் கல்வியறிவும் பெற்றே காணப்படுகின்றனர். குறிப்பிட்ட அளவினர் மட்டுமே பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்குப் பல்வேறு வழியிலும் ஆதரவுக் கரங்கள் நீட்டுவதால் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களுக்குச் சமமாகத் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்து வருகின்றனர். அவர்களுக்கென்று தனி வலைத்தளங்கள், நிறுவனங்களில் முன்னுரிமை, ஊடகங்கள் போன்ற நிலைகளில் தங்களை முன்னிறுத்திக் கொண்டுள்ளனர். தங்களுக்கென்று தேர்தல் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்றவற்றைப் பெற்றுப் பிறரைப் போன்று நாமும் சமுதாயத்தில் ஓர் இடத்தைப் பெற வேண்டும் என்ற அவர்களின் எண்ணமும் உணர்வும் வரவேற்கத்தக்கன. நம்மில் ஒருவராக மனித நேய உணர்வுடன் அவர்களைப் பார்க்க வேண்டும். வேடிக்கைப் பொருளல்லர் அரவாணிகள். உயிருள்ள மனிதர்கள்.
பார்வை நூல்கள்
1. 21 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் ஆய்வு
2. தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்
3. மறுவாசிப்பில் மரபிலக்கியம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.