யுடோபிய என்பதற்குக் ‘கற்பனை’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. “யுடோபிய என்பதற்குக் குறிக்கோளாக இருக்கக் கூடிய, கற்பனைக் கெட்டிய உயர்ந்த பரிபூரணநிலை, மனோராஜ்யம், குணபூரணமான கற்பனைக் கனவேயன்றி நினைவாக்க முடியாத ஒரு மனோராஜ்யம், அனுபவ சாத்தியமில்லாத (நடைமுறைக்கு உதவாத) சீர்திருத்தவாதி, மனோசிருஷ்டியான கற்பனையான மனக்கோட்டையைக் கட்டுபவர்”
(லிப்கோ டிக்ஸ்னரி ப.218) என்று அகராதி விளக்கம் தருகிறது. மேற்குறிப்பிட்ட விளக்கங்களின் மூலம் யுடோபிய என்பதற்குக் கற்பனையாகப் படைக்கப்படுவது, எதார்த்தத்துக்கு முரணானது என்று கொள்ளமுடிகிறது. “கற்பனை என்பது ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல், இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது"
(க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.87) என்று தற்கால தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. கற்பனையான உலகைச் சிறுகதையாளர்கள் எவ்வாறு படைத்துள்ளனர் என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம். தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகைப் பற்றி குறிப்பிடும் சில சிறுகதைகள் மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகைப் (ருவழியை) பற்றியதாக அமைந்த முதற்சிறுகதையாக அ. மாதவையாவின் ‘திரௌபதி கனவு' என்னும் சிறுகதையே. தமிழ்ச் சூழலில் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த முன்னவர்களுள் அ. மாதவையாவும், பாரதியாரும் முதன்மையானவர்கள் ஆவார்கள். பெண் அடிமைத்தனத்தின் சீர்கேடுகளைத் தம்கால சமூகத்தினருக்குத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே பெரும்பான்மையானோர் தம் படைப்புகளை அர்ப்பணித்தாலும் ‘திரௌபதி கனவு' கதையின் மூலம் பெண் விடுதலையைப் பெண்ணே கற்பனையான உலகத்தை உருவாக்க முற்படுகின்றாள்.
குழந்தைப் பருவத்தில் மணமுடிக்கப்பட்டு, மறுநாளே விதவையான திரௌபதி என்ற சிறுபெண் தான் படும் கைம்மைத் துன்பங்களைக் கூறுவதாகக் கதை தொடங்குகிறது. வயோதிகரான அவள் தந்தை ஐம்பது வயதிற்கு மேல் அவளை விட சிறிய பெண்ணை மணந்து கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ, தான் மட்டும் ஏன் கைம்மை மேற்கொண்டு துன்புற வேண்டும். தானும் ஒருவனை மணந்து மகிழ்ச்சியாக வாழ இச்சமூகம் ஏன் அனுமதிக்க மறுக்கிறது? என்று திரௌபதி எண்ணுகிறாள். இளம் வயதிற்கே உரிய ஆசாபாசங்களை அடக்க முடியாமல் அவள் துன்புறுகிறாள்.
திரௌபதி உறங்கும் போது விசித்திரமான கனவு காண்கிறாள். பெண் ஆட்சி செய்யும் நாட்டைக் கனவில் காண்கிறாள். அந்நாட்டில் பெண்கள் தலைமை இடம் பெற்று விளங்குகின்றனர். ஆண்கள் அவர்களின் அடிமைகளாக உள்ளனர். அந்நாட்டில் பெண்கள் புருஷனை இழந்தபின் உடனடியாக அடுத்தடுத்து எத்தனை மணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். பெண் குழந்தை இல்லையென்றால் அதற்காகக் கணவனைத் தள்ளி வைத்துவிட்டு மறுமணம் செய்து கொள்ளவும் பெண்களுக்கு உரிமை உண்டு. சொத்துரிமையும் அவர்களுக்கே உண்டு. அந்நாட்டில் மனைவியை இழந்த ஆண் விதவையாகிறான். அவன் மறுமணம் செய்துகொள்ள இயலாது. சமூக சீர்திருத்தவாதிகள் சிலர் சேர்ந்து ஆண் விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்க முயன்றாலும் ஊருக்குப் பயந்து அவர்கள் மறுமணத்திற்கு மறுக்கின்றனர்.
அப்பெண்கள் நாட்டில், பெண்கள் கல்விக் கற்றுச் சுதந்திரமாக வாழ்ந்தனர். ஆண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அறியாமையில் மூழ்கி வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். அந்நாட்டில் புருஷர்கள் கற்பு பேணுதல் வேண்டும். சுமங்கலனாக வாழ நோன்பு மேற்கொள்ள வேண்டும். இப்படியாகக் கதை முடிகிறது. இக்கதையே கற்பனையுலகு பற்றிய முதல் தமிழ்ச் சிறுகதை எனலாம்.
இந்தச் சமூகத்தல் பெண்கள் அனுபவிக்கும் துன்பம் அடிமைத்தனம் மோகப்பொருள் போன்ற ஆணாதிக்க போக்குகள் அப்படியே அந்நாட்டில் ஆண்கள் அனுபவிப்பதாகக் காட்டுவதுடன் இவ்வுலகில் ஆண்கள் பெறும் சமூகமதிப்பு, அதிகாரம் இவற்றை பெண்கள் அனுபவிப்பதாகவும் காட்டுகிறது. ஒரு கருத்தை, நேரடியாகக் கூறுவதைவிட அதை எதிர்மறையாகக் கூறின், சில நேரங்களில் சரியாக உணரப்படுகிறது. இந்த உத்தியின் மூலம் புதியதோர் உலகை உருவாக்கி படைப்பதன் மூலம் இவ்வுலகில் பெண்களின் துயரத்தை ஆண்கள் புரிந்து கொண்டு அவர்கள் மேம்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைக்கிறது.
அ. மாதவையாவோடு சமகாலத்தவரான பாரதியாரும் இதைப் போன்று பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக தம் சிறுகதை படைப்பின் மூலம் குரல் கொடுக்கின்றார். இதற்குச் சான்றாக ‘மிளகாய்ப்பழ சாமியார்’ சிறுகதையை குறிப்பிடலாம்.
அவருடைய ‘காக்காய்ப் பார்லிமெண்ட்’ சிறுகதையில் காகங்களின் பார்லிமெண்டில் நடைபெறும் நிகழ்வுகளைக் கற்பனையாகப் படைத்து அன்றைய மன்னராட்சி முறையைக் கேலியும் கிண்டலும் செய்வது போல புனையப்பட்டுள்ளது. மன்னராட்சியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதில் பங்குள்ளவர்களும் மக்களின் வரியைத் தங்கள் தங்கள் உடைமைகளாக மாற்றுவதை காகங்கள் தங்களுக்குள் உரையாடித் தாங்களும் அப்படி வாழப் போவதாக குறப்பிடுகின்றன. மன்னராட்சியில் நாட்டில் செல்வம் ஒரு சிலருக்கு மிகுதியாகச் சேர்ந்து கொள்கிறது. மக்களிடையே ஏற்றத்தாழ்வு மிகுந்து காணப்படுகிறது.
“காகங்களின் தலைமைக் காகம், காகங்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டது. காகங்களின் தலைவன் தன் இனத்திடம் ரஷிய தேசத்திலிருந்து நம் தேசத்திற்கு வந்துள்ள கொக்கு என்னிடம் தங்கள் நாட்டு ஜார் சக்கரவர்த்தி கோடான கோடி சம்பளம் வாங்குவதாகவும், அனைத்துக் குடிமக்களின் சம்பளத்தை விட அவர் ஒருவரிடம் செல்வம் மிகுதியாக உள்ளது” என்று கூறுவதாகக் குறிப்பிட்டது.
“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தி இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்தருக்கிறார்கள். நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீர் வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தயஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஓர் இழவும் கிடையாது” என்று கூறியது.
எனவே ராஜா காகம் தன் இனத்திடம் நாள்தோறும் உங்களுக்குக் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். இதனைக் கொண்டு எனது குடும்பத்தார் ஆகார கஷ்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவார்கள் என்றது. இதன் மூலம் எனது குடும்பத்துக் காக்கைக்கும் மற்ற காகங்களுக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லாத நிலைமாறி பொருளாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வேற்றுமையைக் காண முடியும் என்கிற தன் கருத்தை கூறுகிறது.
‘மூத்த காகங்களில் ஒன்றான மந்திரி காகம் இராஜா காகத்திடம் உமது வரும்படியில் மூன்றில் ஒரு பாகம் தங்களைப் போன்ற மந்திரிமார் செலவுக்குக் கொடுக்க வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறது. இதனால் காக்காய் கூட்டத்தில் கலகம் ஏற்பட வேறொரு காகம் அனைவரையும் சமாதானப்படுத்திற்று’
(பாரதியார் வேடிக்கைக் கதைகள் ப.81) என்று முடிகிறது இச்சிறுகதை.
மனிதன் தன் சுயநலத்திற்காக உருவாக்கப்படுகின்ற ஆளுவோர், ஆளப்படுவோர் என்னும் திட்டமிட்ட சமூகத்தைக் கிண்டல் செய்வதாக இக்கதையைப் பாரதியார் படைத்துள்ளார். ஆளுவோரும் ஆளப்படுவோரும் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக உருவாகி ஏற்றத் தாழ்வு மிக்க சமுதாயம் உருவாகின்றது. செல்வம் மேல்தட்டு மக்களைச் சேர்வதற்குக் கீழ்த்தட்டு மக்களின் உழைப்புச் சுரண்டல் மையமாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
அ. முத்துலிங்கத்தின் ‘செங்கல்’ என்னும் சிறுகதையில் உருண்டையான வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுகின்றான் ஒருவன். தன்னுடைய உருண்டையான வீட்டிற்குத் தேவையான வரைபடம் போடுகிறான். அவனது குடும்பத்தார் தங்கள் தேவையான அளவில் அறைகளை ஒதுக்கி கொள்கின்றனர். உருண்டையான வீடு உருண்டோடும் எனவே அதனைத் தண்ணீரில் மிதக்க விடலாம், என்றும் பறக்கவிடலாம் என்றும் திட்டமிட்டுக் கொள்கின்றான். தண்ணீரிலோ, பறக்கவோ விட்டால் வீடு ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் இடம் பெயர்ந்துவிடும் என்பதற்காக அஞ்சுகின்றான். அதனால் யானைத் துருத்திகளை நாலு மூலையிலும் வைத்துக் காற்றை எழுப்பினால் அந்தப் பலத்தால் வீடு ஒரே இடத்தில் நிலையாக மிதக்கும் என்று முடிவு செய்து கொள்கிறான். வீட்டின் அறைகளுக்குச் செல்வதற்கு ஏணி வைப்பது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. வீட்டிற்கு வளைவாக உள்ள ஓவியம், வளைந்த முகக்கண்ணாடி, மனக்கூண்டு என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறான். வீடு கட்டுவதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்படுகின்றது. கடிதம், மின் அஞ்சல், தொலைநகல், என பலவற்றிலும் தகவல்கள் வருகின்றன. உருண்டையான செங்கல்லை வாங்குவதற்கு செங்கல் வியாபாரிகளிடம் செல்லும் போது, அப்படியான செங்கல் இல்லை என்றாலும் கூட வணிகரீதியில் அவர்கள் பேசுவதைக் கேலியாக இச்சிறுகதை குறிப்பிடுகின்றது.
“ஒரு கடைக்காரன் என்னுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டான். அவனுடைய முதற் பார்வையிலேயே வெறுப்பு முழுச் சம்மதத்துடன் வெளிவந்தது. செங்கல் வந்ததும் எனக்கு அறிவிப்பதாக உறுதி கூறினான். அவனுடைய வாக்கில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
நான் களைத்து இணைத்து வீடு திம்பும் சமயம் இன்னொரு கடை எனக்கு நம்பிக்கை தரும் விதமாக நடந்து கொண்டது. அந்தக் கடைக்காரர் என்னுடைய கேள்வியில் ஆச்சரியம் காட்டவில்லை. அத்துடன் அவர் ஆம், இல்லை என்றும் பதில் கூறவில்லை. மாறாக எத்தனை கல் வேண்டும்? என்று விசாரித்தார். அதனுடைய விட்டம், பருமன், நிறம், பருவம் போன்ற நுணுக்கமான விபரங்களைக் கேட்டு, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டார்”
(அ.முத்துலிங்கம் கதைகள் பக்.536, 537)
யுவன் சந்திரசேகரின் “மீகாமரே... மீகாமரே" என்னும் சிறுகதையும் கற்பனையுலகச் சிறுகதையாகப் படைக்கப்பட்டுள்ளது. கடலில் பாய்மரப்படகில் பயணம் செய்கிறான் ஒருவன். காற்றின் திசை நோக்கி செல்லும் தன்மை கொண்ட பாய்மரப் படகு கடலில் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் சமுத்திரத்தின் ஒரு சிறு நிலபரப்பிற்கு அப்பாய்மரப்படகு சென்று விடுகின்றது. அத்தீவு பகலில் ஓசை இல்லாத தன்மையுடனும் இரவில் பேரோசை எழுப்பக் கூடியதாகவும் இருக்கிறது. இரவில் ஓசை எழும்பும் நேரங்களில் கடலில் நீர்த்திவலைகளில் மிதந்தபடி பெண்ணொருத்தி தவழ்ந்து இவன் அருகில் வருகின்றாள். மார்பகத்திற்கு மேல்பகுதி பெண் உடலாகவும், கீழ் பகுதி மீனின் உடல் போலவும் இருக்கிறாள். ஓர் இரவு பொழுதில் அவள் இவனை ‘மீகாமரே’ என்று பெயரிட்டு அழைக்கின்றாள். அவள் பேசும் மொழி இவனுக்கு முன்பின் அறிந்தது இல்லையானாலும் புரிகிறது. அவளின் மேற்புற பெண் உடல் கவர்ச்சியாக இருந்தாலும் அவளும் இவனை விரும்பியதாலும் இருவரும் இரவு பொழுதுகளில் கணவன் மனைவியாக வாழ்கின்றனர். அவளுக்கு இவன் ‘அஷோபா’ என்று பெயரிடுகிறான். அர்த்தம் புரியாத அந்தப் பெயரை அவள் ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் அந்தத் தீவிற்குக் ‘கனவுக் கோளம்’ என்று பெயரிடுகின்றனர். சில நாட்கள் கழித்துப் புயலில் சிக்கித் தொலைந்து போன அவளை அழைத்துச் செல்லப் பாய்மரக்கப்பலில் கடலில் நண்பர்கள் வருகின்றனர். இதனை உணர்ந்து கொண்ட பெண் அவனை விட்டுப் பிரிய போகிறோம் என்பதால் வருந்துகின்றாள். இருவரும் உரையாடும் போது அவள் கடல் பரப்பில் என்னென்ன நடக்கும், சமுத்திரத்தில் காணப்படும் ஒவ்வொரு தீவின் தன்மைகளைக் கூறுகிறாள்.
“சொல்லாத சில தகவல்களை அஷோபா எனக்கு எடுத்துரைத்தாள். நாங்கள் இருந்த கனவுக்கோளம் பகலில் நிசப்தத்தை ஆடையாய்ப் பூணுவதும், அஷோபாவும் நானும் சந்திக்கும் இரவுகளில் ஓசையின் ரீங்காரத்தைப் போர்த்திக் கொள்வதும் பற்றி அவளிடம் கேட்ட போது அவள் சொன்ன சங்கதிகளின் பிரகாரம் ஒற்றைக் கூரையிட்ட சிறு குடிசை என்பது போன்ற சித்தரம் உண்டானது எனக்குள் அவள் சொன்னதைக் கேளுங்கள்.
“சில நிலப்பரப்புகளில் இதற்கு விரோதமாய் இருக்குமாம், பகற்பொழுதுகள் பேரிரைச்சலுடனும், இரவுகள் மௌனமாகவும் இருப்பவை. சிலவற்றில் காற்று வெண்மேகக் கூட்டம் போல கண்ணுக்குத் தென்படுமாம். தீண்டின மாத்திரத்தில் மரணத்தை வழங்கும் கனிகளும் உணவாகப் பயன்படும் பாம்புகளும் உள்ள நிலவெளிகளும் உண்டாம். திராட்சைத் தோட்டங்களின் மத்தியில் ஒயின் ஊறும் கிணறுகள் உள்ள பிரதேசம் ஒன்றுக்குத் தான் சென்றதுண்டு என்று தெரிவித்தாள். மனிதர் வசிக்கும் பகுதிகள் பெரும்பாலும் மனிதர்களைப் பிரதிபலிப்பதாகவும், மனிதர் இல்லாத பகுதகளில் ஆமைகள் சுதந்திரமாய் ஓடித் திரியும் என்றும் சொன்னாள் (ஏற்கனவே ப.4).
மீகாமரை விட்டு பிரிவது என்பது பெருந்துன்பமாக அவள் கருதுகிறாள். இறுதியில் அவள் உடல் நீலம் பரிக்க உயிர் விடுகின்றாள் என்று இச்சிறுகதை முடிகிறது. மேலும் யுவன் சந்திரசேகரின் மூன்றாம் ஜாமங்கள் கொண்ட இரவு, நூற்றுச் சொச்சம் நண்பர்கள், சோம்பேறியின் நாட்குறிப்பு, சுழல் நாணயம், தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள், ஒளிவிலகல் போன்றவை கற்பனை உலகம் சார்ந்த கதைகளாக கருதலாம்.
1. யுடோபிய என்னும் உத்தி உள்ளடக்கம் சார்ந்த ஒரு உத்தியாக கொள்ளவேண்டும்.
2. கற்பனை உலகு சிறுகதைகள் எதார்த்த உலகில் நிகழும் நிகழ்வுகளைக் கிண்டல் செய்வதற்காக, கற்பனையான ஒரு கதையை கதாசிரியன் படைக்கிறான்.
3. ஒரு நிகழ்வை நேரடியாகக் கூறாமல், அதனையே மாற்றாகக் கூறும் போது ஒரு கருத்தை வலியுறுத்த இந்த உத்தியைப் பயன்படுத்தும் போது படைப்பு சிறக்க மேலும் வலு சேர்க்கிறது.
1. லிப்கோ டிக்ஸ்னரி, சிறுமலர், தி.நகர், சென்னை - 17, முதற்பதிப்பு - 2004.
2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, காஜாலை நகர், திருவான்மியூர் சென்னை-41, முதற்பதிப்பு - 2001.
3. பாரதியார், பாரதியார் வேடிக்கைக் கதைகள், குமரன் பதிப்பகம், தியாகராய நகர் சென்னை - 17, முதற்பதிப்பு - 2001.
4. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், தமிழினி, 342. டி.டி.கே. சாலை, சென்னை-14, முதற்பதிப்பு - 2003.
5. யுவன் சந்திரசேகர், உயிர்மை பதிப்பகம், சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600 018.