தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
8. இதயவேந்தன் சிறுகதைகளில் கதைப் பின்னலில் உத்தி முறைகள்
முனைவர். இரா. சின்னத்தாய்
முன்னுரை
இலக்கியப் படைப்பின் நோக்கங்களில் முக்கியமானது கருத்துப் புலப்பாடாகும். இக்கருத்துப் புலப்பாட்டிற்கு இன்றியமையாதது உத்தியாகும். “கருத்து சுவைபடக் கூறப்படும் முறையினால் தான் வாசகன் அதனைத் தெளிவாகவும், ஆழ்ந்தும் உணர முடியும். ஒரு கருத்தைச் சுவைபடக் கூற வேண்டுமாயின் தகுந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும்” (1) என்று கூறும் ம. திருமலையின் கருத்து எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும். எனவே உத்தி முறை ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடுவதற்குக் காரணம், அவர்கள் கையாளும் உத்தி முறையே ஆகும்.
ஒரு படைப்பாளன் உருவமும் உள்ளடக்கமும் எடுத்தாளும் திறமையால் தனித்து நிற்கிறான். இவ்வாறு எடுத்தாளும் முறைதான் உத்தி எனப்படுகிறது. மா. இராமலிங்கம் இது பற்றிக் கூறும் போது, “புனைகதை, நாடக ஆய்வில், நுவல் பொருள் (Subject), பாடுபொருள் (Theme) ஆகிய இரண்டையும் அறிதல் முதன்மையானது. நுவல் பொருளாவது பேசப்படும் பொருள், பாடுபொருளாவது அப்பொருள் பற்றிப் படைப்பாளன் கூறும் தனிநோக்குச் சிந்தனை” (2) என்பார். இங்கே படைப்பாளன் கூறும் தனிநோக்குச் சிந்தனையை உத்தி என்று கொள்ளலாம்.
இதயவேந்தன் விழுப்புரத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நூற்றி நான்கு சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவருடைய படைப்பில் உள்ளடக்கத்தில் இடம் பெறும் கதைப் பின்னலில் சில உத்தி முறைகளைப் பற்றி இக்கட்டுரை ஆராயும்.
கதைப்பின்னலில் உத்தி
“கற்போர் மனத்தில் தான் பதிக்க விரும்பும் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் கதை நிகழ்ச்சிகளை முறை மாற்றிக் கலைஞன் அமைத்தபின் முழுவடிவம் பெற்று விட்ட சிறுகதையில் நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ள நிரல் முறையே கதைப் பின்னலாகும்” (3) ஆகக் கதைப்பின்னல் என்பது ஆசிரியர் கதையில் உள்ள நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கோர்வையாக்கி, கற்பவர்கள் தெளிவாகப் புரியும்படி அமைக்கும் முயற்சியாகும். இம்முயற்சியின் அடிப்படையில் படைப்பாளி இதய வேந்தனும் கீழ்க்காணும் உத்திகளில் கதைப் பின்னலை அமைத்துள்ளார். அவை;
1. பின்னோக்கு உத்தி
2. கடித உத்தி
3. உரையாடல் உத்தி
4. கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள்
என்பவையாகும்.
பின்னோக்கு உத்தி
“ஒரு கதையைச் சொல்லிக் கொண்டே போகிற போது, கடந்த கால நிகழ்ச்சிகளை ஒரு பாத்திரத்தின் நினைவோட்டமாக எழுத்தாளர்கள் எடுத்துக் கூறுவர். இதனையே பின்னோக்கு உத்தி அல்லது நினைவுக்காட்சி” (4) என்று திறனாய்வாளர் குறிப்பிடுவர்.
“கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சியை, ஏற்புடைய இடத்தில் வெளிக்கொணரவும் பாத்திரத்தின் மன உணர்வை வெளிப்படுத்தவும் இப்பின்னோக்கு உத்தி துணை நிற்கிறது” (5) என்பார் மா. இராமலிங்கம். கதையோட்டத்திற்கு ஏற்றவாறு கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிக் கூறி நிகழ்கால நிகழ்ச்சிக்குத் துணை நிற்கும் நோக்கில் படைப்பாளி கையாளும் உத்தியே பின்னோக்கு உத்தியாகும்.
‘பசி’ கதையின் தொடக்க வரிகள் அலுலவகத்திலிருந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்தக் கோப்புகளை எடு, இந்தக் கோப்புகளை எழுது என்று போட்டு நச்சரித்து விடுகிறார்கள் அதிகாரிகள். வேலை நேரத்தில் ஒன்றும் வேலை செய்யாமல் ‘ஓய்வூதியம்’ போல் பெற்றுச் செல்லும் எழுத்தர்களும் இருக்கிறார்கள்” (6) என்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை வீட்டிற்கு வந்ததும் எண்ணிப் பார்க்கும் செயலைப் பின்னோக்கு உத்தி என்று கூறலாம்.
மேலும், அக்கதையின் இடையே ஒரு நாள் அவருக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை நிகழ்ந்தது. அப்போது அவர் ஐந்து வேளை தொடர் பட்டினியாய் கிடந்ததை அவரால் மறக்க முடியவில்லை. அவ்வேளையில் இளமைக் காலத்தில் தாயின் அரவணைப்பை நினைத்துப் பின்னோக்குச் சிந்தனையில் ஆழ்கிறார் ஆசிரியர்.
“இட்லி தோசை இரவு மீந்தது கொடுத்தால் அப்படியே மடியில் சுருட்டி வந்து எனக்குத் தருவாள். தங்கையும் விடாமல் பங்கு கேட்பாள். அடிச்சீ அவன் தான் பசிதாங்க மாட்டான்னு தெரியும்லடீ. அம்மாவுக்கு என்னையும் என் பசியையும் நன்றாகத் தெரியும். தங்கையை நெட்டித் தள்ளுவாள். அம்மாவை நினைத்த படியே தூங்கி விட்டிருந்தேன்” (7) இக்கதை நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கு உத்தியுடன் முடிகிறது.
கடித உத்தி
கடிதங்கள் மூலமாகக் கதை கூறுவது சிறுகதைகளில் ஓர் உத்தியாகும். “நீண்ட கால இடைவெளியில் நடக்கும் கதையைச் சொல்லவே இது ஏற்றதெனினும், சிறிது நடந்து முடியும் சிறுகதைகளும் ஒரேவழி இவ்வுத்தியில் எழுதப்படுவதுண்டு” (8) என்று வேலஸ் ஹில்டிக் குறிப்பிடுகின்றார்.
“தமிழ் நாவல்களில் கடித உத்தி, கதை வளர்ச்சிக்காகவும் கதை மாந்தர்களின் பண்பு நலன்களைத் தெரிந்து கொள்ளவும் கதை நிகழ்ச்சிகளால் உருவாகின்ற சிக்கல்களைத் தீர்க்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது” (9) என்பது இ. முத்தையாவின் கருத்தாகும். எனவே கதையாசிரியர்கள் கதை கூறுவதற்கு கடித வடிவத்தை ஓர் உத்தியாக மேற்கொள்கின்றனர்.
இதய வேந்தனின் ‘சிநேகிதன்’ என்னும் கதை நண்பனுக்கு எழுதும் கடிதமுறையின் கடித வடிவத்தை ஓர் உத்தியாக மேற்கொள்கின்றார்.
“என்னிலிருந்து காணாமல் போன என் அன்பு சிநேகிதன் அன்பானந்தனுக்கு என்று கடிதத்தைத் தொடங்கி,
வாழ்வின் கடைசி அத்தியாயத்திற்குள் என்றேனும் ஒரு நாள் நாம் சந்திக்காமலா போய் விடுவோம். முடிந்தால் எல்லாவற்றையும் பேசுவோம். இப்போதைக்கு இவ்வளவுதான். இன்னும் எழுதுவேன். அன்பானந்தனுக்கு மாறாத அன்புடன் அன்பு சிநேகிதன்” (10) என்று கடிதத்தில் முடிக்கிறார். எனவே இக்கதை கடித உத்தியுடன் அமைந்துள்ளது.
உரையாடல் உத்தி
சிறுகதைகளில் இடையிடையே இடம் பெறும் உரையாடல்கள் கதையை வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கும், பாத்திரங்களின் பண்பு நலன்களைக் குறிப்பாகத் தெரிந்து கொள்வதற்கும் துணை நிற்கின்றன. பெரும்பாலும் உரையாடலின்றி சிறுகதைகளோ நாவல்களோ அமைவதில்லை. “சிறுகதைகளில் உரையாடல் மிகுந்திருந்தலும் உண்டு. குறைந்து அமைதலும் உண்டு. கதை மாந்தரின் பண்பை விளக்குவதற்கோ, கதை நிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமையலாம். அது எழுதுவோரின் திறனைப் பொறுத்ததே ஆகும்” (11)
‘இல்லை’ என்னும் கதையில் கப்பூர் கிராம மக்களைச் சந்திக்க அதிகாரி செல்கிறார். அங்கு மக்களைச் சந்திக்க அதிகாரி செல்கிறார். அங்கு அக்கிராம மக்களிடம் மனுவை வாங்கிப் படித்து விட்டுப் பல கேள்விகளைக் கேட்கிறார். அப்போது மக்களிடம்,
“தண்ணி இல்லியா!
ஆமாங்க; சேரில குடிக்க
தண்ணீ பைப்பு இல்ல
பொதுக் குழாயே இல்லியா
ம்க்கும்
அவன் தலைவர் பக்கம் திரும்பினான்
நான் பல முறை எழுதிக் குடுத்திருக்கேன் சார்
... ... ... ... ... ... ... ... ...
ஏரி கொள மாகிலும்
இல்லைங்க... ... ...
... ... ... ... ... ... ... ... ...
ரேசன் அட்டை இல்லியா?
‘இல்ல, இல்லன்னு சொல்றீங்களே, என்னதான் இருக்குது இந்த ஊர்ல, இல்ல, இல் லன்னு சொல்றதுக்கு உயிரோட நாங்கதான் இருக்கம் சாமி” (12)
என்ற உரையாடலில், அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தைக் கண்முன் நிறுத்துகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதால் இக்கதைக்கு ‘இல்லை’ என்னும் பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது.
கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள்
கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள் என்பது ஒரு நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சிகள் பலவற்றைச் செறிவுடனும் சுவையுடனும் திறம்பட அமைப்பதாகும்.
“ஒரு நிகழ்ச்சி, ஒரு காட்சி, வாழ்வின் ஓரியல்பு, மக்கட் பண்புகளில் ஒன்று, சுவைகளில் ஒன்று ஆகிய இவற்றில் யாதேனும் ஒன்றினை ஒட்டிச் சிறுகதை புனையப் பெறும்.” (13) எனவே சிறுகதைகள் ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் இடம் பெற்றால் அக்கதைகளை ஒரு நிகழ்ச்சி கதைகள் என்று கூறலாம்.
இதயவேந்தன் எழுதிய ‘அதிர்ச்சி’ கதை குஜராத்தின் புஜ் என்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி ஆசிரியருக்கு ஒரு கதைக்களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
‘குஜராத்துக்கு நிவாரண நிதி உதவி’ என்று அரசு ஊழியர் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்த பொழுது சில மனிதர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது காசாளராகப் பணிபுரியும் ஆசிரியர் அந்நிகழ்ச்சியை எண்ணிப் பார்க்கிறார்.
“உடனுக்குடன் எல்லாமும் சாட்சியாய், செய்தியாய் வந்து என் கண்முன்னே நிற்கிறது. எல்லாம் மவுனமாய் இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் நீர் வீழ்ச்சியைப் போல் பேரிரைச்சலோடு ஓவென அழுகிய சத்தம் கேட்கிறது.” (14) ஆனால் சம்பளத்தில் பணம் பிடித்ததைக் கவுரவக் குறைச்சலாக நினைக்கிற சில மனிதர்களுக்குப் பின்னால் வீடு, வாசல், நிலம்... எல்லாம் இருக்கிறது. எதுவுமே இல்லாமல் நிர்க்கதியாய் நிற்கும் அவர்களைப் பற்றி ஒரு நிமிடம் நின்று யோசிக்கவோ, மௌன அஞ்சலி செலுத்தவோ தயாரில்லாத சூழலில் மனம் குமைந்தது என்று புஜ் நகரம் பூகம்பநிதிக்கு அரசு ஊழியர் ஒரு நாள் ஊதியம் தர வாக்குவாதம் செய்த நிகழ்ச்சியைக் கதையாக்கியுள்ளார்.
முடிவுரை
இவ்வாறு இதயவேந்தன் தன் சிறுகதைகளில் மனித வாழ்வின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய நிகழ்ச்சிகளாக, மேற்கூறப்பட்ட உத்திகளின் வாயிலாகப் பதிவு செய்கிறார்.
அடிக்குறிப்புகள்
1. மா. திருமலை, தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு. ப. 50.
2. மா. இராமலிங்கம், நோக்குநிலை, ப. 150.
3. மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் சிறுகதைக் கலை, ப.54.
4. மா. இராமலிங்கம். நாவல் இலக்கியம், ப. 152.
5. மேலது.
6. விழி. பா. இதயவேந்தன், பசி, ப.117.
7. மேலது, பக்.122, 126.
8. க. மீனாகுமாரி, பிச்ச மூர்த்தி படைப்புகள் ஓர் ஆய்வு, ப. 68.
9. இ. முத்தையா, தமிழ் நாவல்களில் மொழிப்பயன்பாடு, ப.6.
10. விழி. பா. இதயவேந்தன், சிநேகிதன், பக்.17, 26.
11. டாக்டர். மு. வரதராசன். இலக்கியமரபு, ப. 167.
12. விழி. பா. இதயவேந்தன், இல்லை, பக். 50-52.
13. தா. ஏ. ஞானமூர்த்தி. இலக்கியத் திறனாய்வியல், ப.331.
14. விழி. பா. இதயவேந்தன், அதிர்ச்சி, ப. 54.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.