தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
101.முதுமொழிக்காஞ்சியில் வாழ்வியல் நெறிகள்
செ. விஜயலட்சுமி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்-11.
முன்னுரை
உலக மொழிகளில் உயர்வும் சிறப்பும் உடையது தமிழ்மொழி. உலகச் செம்மொழிகளில் ஒன்று நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி. இத்தாய்மொழியைப் பிறப்பிடமாகக் கொண்டு பல இலக்கியங்களும், இலக்கணங்களும் தோன்றின. ஒரு மொழிக்கு இன்றியமையாதவை அம்மொழியில் உள்ள இலக்கியங்களும் இலக்கணங்களுமே ஆகும். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. இலக்கியம் மக்களின் வாழ்க்கையை எதிரொலிக்கின்றன. மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரீகம் முதலானவற்றை வெளிப்படுத்துகின்றன. சங்ககாலம் முதல் தற்காலம் வரை தோன்றியுள்ள இலக்கிய வகைமைகளைக் கொண்ட நெடிய இலக்கிய வரலாறு தமிழ்மொழியில் உள்ளது. தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கிய வகைகள் கால அடிப்படையில் வகைமைப்படுத்தப்பட்டுள்ளது. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சியில் காணப்படும் வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி, முதுசொல் என்பவைப் பழமொழியைக் குறிக்கும். காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். அறிவு நிறைந்த மொழியாகிய காஞ்சி என்பது இதன் பொருளாகும். முதுமொழியைப் பழமொழி என்றும் அழைப்பர். முதுமொழிக்காஞ்சி உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறுகின்றது. இதனைத் தொல்காப்பியர்,
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
(தொல்.பொருள் புறம்.76)
கூறுவதைப் போன்று நிலையாமையை இந்நூல் கூறவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலையில் மூதுரைப் பொருந்திய முதுமொழிக்காஞ்சி எனச்சுட்டும் ஆசிரியர்,
“பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணதக் கூறின்று”
என்று விளக்குகிறார். அதாவது, உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமக்களுக்கு எடுத்துரைப்பது என்பது இந்நூற்பாவிற்கான விளக்கமாகும்.
“காஞ்சி என்பது பெண்கள் இடையில் அணியக்கூடிய ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக்காஞ்சி என்பது அறவுரைக் கோவை என்னம் பொருள் பயந்து நிற்கும்” (1) என ச. சுப்பிரமணியன் கூறுகிறார். முதுமொழிக்காஞ்சி உலகில் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் அறிவுரைக் கோவை நூலாகும் என்பதில் ஐயமில்லை. இந்நூலின் செய்யுட்கள் அனைத்தும் வெண்செந்துறையால் ஆனது. இவை இரண்டடிகளைக் கொண்டது. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் அமைந்திருப்பது வெண் செந்துறை ஆகும். இந்நூலுள் பத்துப்பத்துக்களாய் மொத்தம் 100 பாடல்களைக் கொண்டுள்ளது. சிறந்த பத்து, அறிவுப்பத்து, பழியாய்ப் பத்து, துவ்வாப்பத்து, அல்ல பத்து, இல்லவைப்பத்து, பொய்யப்பத்து, எளியபத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து எனப் பத்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலின் ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ எனத் தொடங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார் ஆவார். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குநுறூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். இவரேதான் என்று கூறுவாரும் உளர். ஆனால் இவர் வேறு, அவர் வேறு என்று கூறுவோரும் உண்டு.
வாழ்வியல் நெறிகள்
ஒவ்வொரு மனிதனும் தான் இப்படிதான் வாழவேண்டும் என்று ஒரு கட்டுப்பாட்டைத் தன்னுள் வகுத்துக்கொண்டு வாழ்தல் ஆகும். வாழ்வியல் நெறிகள் என்பதற்கு ஆங்கிலத்தில் Ethics என்றழைப்பர். Ethics என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகத் தமிழில் அறநெறிகள், அறவியல், நன்னெறிக் கோட்பாடுகள், வாழ்வியல் ஒழுகலாறுகள், பண்புகள், ஒழுக்க முறைகள் முதலான சொற்கள் வழங்கி வருகின்றன. இவற்றுள் வாழ்வியல் நெறிகள் என்ற சொல்லே பெரிதும் வழக்கில் இருந்து வருகின்றன. சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவவேண்டும் எனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுபாடுகளையும், ஒழுக்கங்களையும் விதித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்புகளைத்தான் நாம் வாழ்வியல் நெறிகள் என்று கூறுகிறோம். இந்த வாழ்வியல் நெறிகளை இரண்டாகப் பகுப்பர். அவை தனிமனித வாழ்வியல் நெறிகள் (Personal Ethics) மற்றும் சமூக வாழ்வியல் நெறிகள் (Social Ethics). சமூக நெறிகளை அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பகுத்துக் கூறுவது பண்டையத் தமிழரின் மரபாகும். இதனைத் தொல்காப்பியர்;
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு”(தொல். பொருள்)
சங்க இலக்கியமும் அவற்றையேக் குறிப்பிடுகின்றன. இன்பத்தை வாழ்வில் அடைவதற்குப் பொருள் தேவை. அவற்றை அறவழியில் நின்று தேட வேண்டும் என்பது பண்டையத் தமிழரின் வாழ்வியல் நெறிகளாகும். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுடன் வீடு என்ற ஒன்றையும் சேர்த்து உறுதிப் பொருள்கள் நான்காக மாறியது இக்காலக்கட்டத்தில் தான். மனிதன் தன் பிறப்பின் பயனாக வீடுபேற்றினை அடைவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒழுக்கம்
ஒழுக்கமுடையவனாக வாழ்வதே சிறந்த பண்பு ஆகும். ஒழுக்கம்தான் ஒருவனின் குணநலங்களைத் தீர்மானிப்பதாகும். மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் மிக முக்கியம் என்பதனைக் கூடலூர் கிழார் பின்வருமாறு கூறுகிறார்.
“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை” (சிற.பத்-1)
கடலால் சூழ்ந்த இவ்வுலகத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்ததாகும்.
கல்வி
பழந்தமிழர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதனை இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். கல்வி மனிதனை மனிதனாக்குகிறது. கல்வி கற்றலின் அவசியத்தை அறிந்த கிழார்;
“குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று” (சிற.பத்-7)
கல்வி கற்றவர்கள் எக்குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் உயர்ந்தவர்களாவார்கள். கல்லாதவர்கள் எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் இழிந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என்று கூறுகிறார். இதனையேத் திருவள்ளுவரும்,
“மேற்பிறந் தாராயினும் கல்லாதார் கீழ்கிறந்தும்
கற்றார் அனைத்திலார் பாடு” (திருக்-409)
கல்வி கற்றால் மட்டும் போதாது. கற்ற கல்வியை என்றும் மறவாது இருத்தல் வேண்டும். அதனை;
“மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை” (சிற.பத்-3)
அதிகமான நூல்களைக் கற்று பேரறிவுடையவன் என்பதைக் காட்டிலும், படித்த கல்வியை மறவாது இருத்தல் சிறந்ததாகும். கல்வியின் இன்றியமையாமையை விளக்குகிறார்.
கல்வி கற்பதைவிட கற்றாரை வழிபடுதல் சிறந்தது ஆகும் என்பதனை;
“கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று” (சிற.பத்-8)
கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் பழமொழிக்கேற்ப, கல்வி கற்றவர் என்றால் அவர்க்குக் கிடைக்கும் மரியாதையே தனிதான். கல்வி கற்றவர் சொன்னால் மக்கள் யாவரும் அதைக் கேட்பார்கள் மற்றும்
“கற்றல் வேண்டுவோன் வழிகாடு தண்டான்” (தண்.பத்-3)
ஒருவன் கல்வியைக் கற்க விரும்புகிறவன் ஆசிரியர்களுக்குச் செய்யும் வழிபாடுகளைத் தவிர்த்தல் கூடாது என்கிறார். கூடலூர்கிழார் தான் கற்ற கல்வியின் முக்கியத்துவத்தையும், அவற்றின் பயன்களையும் கூறி அனைவரும் கல்வி கற்றல் வேண்டும் என்றும், அக்கல்வியினால் மக்கள் வாழ்வில் மேன்மையடைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
பழி கூறாமை
ஒருவர் செய்த உதவியை நாம் எப்பொழுதும் மறத்தல் கூடாது. அவர் செய்த உதவி சிறியதேயானாலும் அவற்றை மறத்தல் கூடாது. ஒருவர் செய்த உதவியைப் பழித்து பேசக் கூடாது என்பதனை;
“செய்யத்தக்க நற்கேளிர் வெய்யாமை பழியார்” (பழி பத்-7)
தமக்கு உதவி செய்யும் உறவினர்கள் உதவி செய்யவில்லை என்று அவர்களைப் பழித்துப் பேசக்கூடாது என்று உரைக்கிறார் கிழார். உறவினர்கள் உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களைப்பற்றிப் பழிக்கூறல் கூடாது. இவ்விடத்தில் உறவின் முக்கியத்துவத்தைப் பதிவு செய்துள்ளார். உறவினட்களின் துணை எப்பொழுதும் வேண்டும் என்பதனை அறிலாம்.
“அறியாத் தேசத்து ஆசாராம் பழியார்” (பழி பத்-8)
அறிஞர்கள் தான் அறியாத ஊரைப் பற்றி ஒருபோதும் பழித்துக் கூறமாட்டார்கள். ஏனெனில் ஊர்க்கு ஊர் மக்களின் வாழ்க்கை முறை வேறுபட்டிருக்கும். எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றின் உண்மைத்தன்மையை அறியாமல் குறை கூறல் கூடாது.
ஈகைத்தன்மை
இல்லாத ஒருவருக்கு இருப்பவர் கொடுத்து உதவும் பாங்கை ஈகைத்தன்மை எனலாம். வள்ளல்தன்மை, கொடைத் தன்மை என்றும் ஈகையை அழைப்பர். இந்நூலில் ஈகையைக் குறித்து ஆறு பாடல்கள் காணப்படுகின்றன.
“அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று” (அல் பத்-8)
ஒருவருக்குக் கொடுக்கும் பொருளானது அறவழியில் நின்று சேர்த்த பொருளைத் தான் வழங்க வேண்டும் இல்லையேல் அவை ஈகையாகாது என்பதனைத் தெளிவாகக் கூறுகிறார். மனிதர்கள் தீயவழியில் செல்லாமல் இருக்க அறிவுறுத்துகிறார். மேலும்,
“பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது” (துவ் பத்-4)
ஒருவருக்குக் கொடுக்கும் போது அவற்றை முழுமனதோடு செய்தல் வேண்டும் என்றும் விருப்பம் இல்லாமல் செய்வதனால் பயன் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார்.
மறுபிறப்பு
தமிழர்கள் மறுபிறப்பு உண்டு என்பதில் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தனர். முதுமை அடைவது மறுபிறப்பு உண்டு என்பதனை அறியாமல் மூப்பு அடைவது மூப்பாகாது என்பதனைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.
“மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று” (அல் பத்- 10)
உலகத்தில் பிறந்த மக்கள் எல்லாருக்கும் மறுபிறப்பு என்ற ஒன்று உண்டு. அப்பிறப்பில் இன்பம் பெற வேண்டுமானால் இப்பிறவில் அறத்தின் வழியில் வாழ்தல் வேண்டும் என்பதனை அறிவுறுத்துகிறார்.
இன்பம்-துன்பம்
வாழ்க்கை என்றாலே பாதி இன்பமும், துன்பமும் கலந்தவையாகத்தான் இருக்கும். அவ்வகையில் முதுமொழிக்காஞ்சியில் இன்பம், துன்பம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
“துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது” (எளி பத்-5)
தான் செய்யும் முயற்சிகளால் வரும் துன்பத்தை விரும்புவருக்கு இன்பம் எளிதாகும். தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய விரும்புவர் விடாமுயற்சி செய்ய வேண்டும் என்றும் அதனால் முதலில் துன்பம் கிடைத்தாலும் பிறகுஇன்பம் கிடைக்கும் என்று கூறுகிறார். இதனை;
“இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது” (எளி பத்-6)
என்று கூறுகிறார். இவையே வாழ்க்கையில் இன்பம் துன்பம் தோன்றுவதற்கான காரணங்களாகும்.
“இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்” (தண் பத்-7)
இன்பம் வேண்டும் என்பவனுக்கு எப்பொழுது துன்பம் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தமாட்டான்.
முடிவுரை
மேற்கூறிய வாழ்வியல் நெறிகள் மட்டுமல்லாது வாய்மை, பொய்மை, செய்நன்றி அறிதல், புலால் உண்ணாமை, மது அருந்தாமை, குடிச்சிறப்பு, அரசனின் பண்புகள், நட்பின் சிறப்பு போன்றவைகளும் காணப்படுகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது. இப்பாடல்களின் வழி சங்கம் மருவிய காலத்தில் மக்கள் அறத்தின் வழியில் வாழ்ந்து வந்தனர் என்பதை அறிய முடிகிறது. இலக்கியங்கள் யாவும் மக்களை நல்வழிப்படுத்துவதற்காகத் தோன்றியவையாக உள்ளன. குறிப்பாக, இதற்கு அறவிலக்கியங்கள் பல சான்றாக அமைந்திருக்கின்றன. சங்ககாலத்திற்குப் பிறகு, சங்கம் மருவிய இலக்கியங்கள் தோன்றின. இவற்றின் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை ஆகும். இக்காலக்கட்டத்தை இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் ‘இருண்டகாலம்’ என்று அழைப்பர். ஆனால் அது முற்றிலும் தவறானது. ஏனெனில் களப்பிரர்களும் தங்களுடைய மொழியில் சமயத்தைப் பரப்பாமல் தமிழ் மொழியில் சமயக்கருத்தைப் பரப்பினர் என்பதனை இக்கட்டுரையின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
பயன்பட்ட நூல்கள்
1. ச. வே. சுப்பிரமணியன் (பதி)., மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.
2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் தெளிவுரையும் மூன்றாம் பகுதி., தமிழ் நிலையம், சென்னை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.