தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
38. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள்
சி. சரண்யா
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
சங்ககாலத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் இருந்தன. அச்சமூகத்தில் காணப்பட்ட சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். ஆதலால் பெண்களைத் தம் உயிரெனக் கருதி வளர்த்தனர். பெண்கள் தனக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யவும், கல்வி கற்கவும், கணவன்களைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றிருந்தனர்.
“ஆணும், பெண்ணும் சரிநிகர்” என்ற நிலையே அக்காலத்தில் காணும்படி இருந்தது.
பெண்களின் மனமறிந்து பெற்றோர்கள் நடந்து கொண்டனர். இதற்குச் சான்றாக விளங்குகிறது நம்பிகப்பொருள் என்னும் இலக்கண நூல்.
இன்றைய சமூகம், அன்றைய சமூகத்திற்கு எதிர்மறையாக உள்ளது. ஆம், இன்று எந்தப் பெண்களாலும் தம் கருத்தைச் சுதந்திரமாய்க் கூறமுடியவில்லை. பெண்கள் கூறும் கருத்து சரியாய் இருந்தாலும் ஒரு பெண் சொல்லி, நாம் கேட்பதா என்று ஆண்கள் நினைக்கின்றனர்.
ஆண் பெண் இருவர் பேசினாலே குற்றம் எனக் கருதப்படுகிறது. ஆனால் சங்ககாலத்திலேயே ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்து உள்ளனர் என்பதற்குச் சான்றாக ஔவை-கபிலர் நட்பினைக் கூறலாம்.
புராணங்கள் காட்டும் பெண்ணடிமை
சடங்குகளின் வழியாக ஏற்பட்டது தான் புராணம். புராணங்களில் காரண காரியங்களைக் கற்பிக்க முயன்றனர். இப்புராண நிகழ்ச்சிகளுக்கும், கதைகளுக்கும், சான்றுகளோ கல்வெட்டுகளோ கிடையாது. இருப்பினும், இப்புராண நிகழ்ச்சிகள் தான் இன்றும் மக்கள் மனதில் நிறைந்து இருக்கின்றன.
அரிச்சந்திர புராணம்
அரிச்சந்திர புராணத்தில் பெண்கள் அடிமைகளாகக் கூறப்படுகின்றனர். அதனால்தான் கணவனாகிய அரிச்சசந்திரனுக்குப் பெண்ணை ஒரு விலைப்பொருளாக விற்கும் உரிமை இருந்தது. பெண்ணை ஒரு உயிராக நினைத்து இருந்தால், அவளிடம் எவ்விதச் சம்மதமும் கேட்காமல் அவளை விற்றிருக்க மாட்டான். “பெண்ணைப் பொருளாக நினைத்த காலம் புராணக்காலம்”
இயற்கை நாயனார் புராணம்
சிவபக்தரான இயற்பகையினார் ஒரு சிவஅடியார் உன் மனைவியைக் கொடு என்று கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் தருகிறேன் என்றார். பெண்ணை ஒரு உயிரியாக நினைத்து இருந்தால் அந்த அடியார் அப்படிக் கூறியிருக்கமாட்டார். அவரின் மனைவி சற்று யோசித்து பிறகே இசைந்தாள்.
அவள் யோசித்து இசைந்ததற்குக் காரணம், நான் கூறி என்ன நடக்கப்போகிறது, என் சொல்லைக் கேட்கவா போகிறீர்கள் என்று நினைத்துத்தான் இசைந்து இருக்கிறாள்.
வேதகாலம் காட்டும் பெண்ணடிமை
சமுதாயத்தில் பெண்கள் வெறும் போகப் பொருளாகக் கருதப்பட்ட காலம் வேதகாலமாகும். ரிக் வேதத்தில் 10 ஆம் பகுதியில் 24வது சூத்திரத்தில் கணவன் தங்கள் மனைவிகளைப் பகடைக் காய்களாக வைத்துச் சூதாடப்பட்ட செய்தியினைக் கூறுகிறது.
திருமண நிகழ்ச்சிகளில் ஓதப்படும் வேதங்களும் பெண்ணை அடிமைப்படுத்துவதையே குறிக்கிறது.
சடங்குகள் காட்டும் பெண்ணடிமை
காலங்காலமாக நடந்து வரும் பழக்கம் இன்று சடங்காக மாறியுள்ளன. நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் சடங்கு, சம்பிரதாயம் என்பதைத் தான் முதலில் கூறுகிறார்கள். பழங்காலத்தில் இயற்கை நிகழ்வுகளாக இடி, மின்னல் போன்றவற்றிற்கு மனிதன் பயந்தான். இருப்பினும் உருவ வழிபாட்டை அவர்கள் மேற்கொள்ளவில்லை. காலம் செல்லச்செல்லப் பார்ப்பனரின் வருகையால் அவைகள் சடங்காகவே மாறிவிட்டன.
சடங்குகள் கூறுபவை என்னவென்றால், ஆண் பிள்ளைகள் மட்டுமே பொருளாதார வாரிசுகள் என்றும், பெண்ணுக்கு அந்த உரிமை கிடையாது என்பதை நிலை நாட்டுவாகவும் தான் அமைந்து உள்ளது.
தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமை
தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமைக் கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருந்தனர் என்றும் தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதும் உண்டு.
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை
சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்களால் செய்யப்பட்டவை. மொத்தப் புலவர்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்கு மிகச் சிறிதே. எனினும் பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள் ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் காட்டுகிறது.
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமைகள் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்பதற்குக் குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை திணைகளைச் சார்ந்த பெண்கள் பொருள் ஈட்டுவதில் முக்கியப் பங்களித்தமை சுட்டப்படுகிறது. இந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம் ஆண், பெண் வாழ்வு சமத்துவமாகத்தான் இருந்ததென்று தெரிகின்றது. குறவர்கள் வேட்டையாடப் போவதுபோலக் குறத்திகள் குறி சொல்லுவதற்கும், மலைபடு திரவியங்களை விற்பதற்கும் புறப்பட்டு விடுவார்கள். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லுவார்கள். மீனவப் பெண்கள் மீன்களைக் கொண்டு போய் விற்பனை செய்து வேறு பண்டங்களை வாங்கி வருவார்கள்.
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு 100க்கு 16 சதவீதம் ஒதுக்கீடு என்றால் பெண்களுக்கு 100க்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். பெண்கள் நாட்டிற்கு பயன்பட வேண்டும்.
பெண்கள் கற்பு என்ற நிலையில் கட்டுப்படுத்தி அடிமையாக்கி வைத்திருக்கிறோம். அப்படி ஆண்கள் செய்யாமல் விட்டுவிட வேண்டும். பெண்களின் எண்ணங்கள், உழைப்பு ஆகியவை இந்நாட்டிற்கு தேவை.
பெண்கள் ஆடை, ஆபரணங்கள் அதிக ஆசை கொண்டு வாழ்கின்றார்கள். அப்படி இல்லாமல் பெண்கள் வரவிற்கு ஏற்ற செலவினைச் செய்ய வேண்டும். அப்போது தான் அனைவரும் நிம்மதியான வாழ்வை வாழ முடியும்.
பெண்கள் கல்வியில் அதிக நாட்டம் கொள்ள வேண்டும், அப்போது தான் நம் நாடு முன்னேறும். பெண்களாகிய நம்மாலும் நாட்டிற்குப் பயனுண்டு.
பெண்ணுக்கும் உரிமை வேண்டும்
ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தையும் பெண்களுக்கும் சரிசமமாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே பெண்கள் சமுதாயம், உலக சமுதாயத்தில் பயன்பெற முடியும். பெண்களை நாம் முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறோம். இந்நிலை மாறினால் நம் நாடு கண்டிப்பாக முன்னேறும்.
“ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை”
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”
பெண்களே, பழக்கத்தையோ, மதத்தையோ, வேதத்தையோ, சாஸ்திரத்தையோ கண்டு பயப்பட்டுவிடாதீர்கள். காலத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ளுங்கள்.
துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும், சைனாவையும் பாருங்கள். துருக்கியப் பெண்களின் கண்களுக்கும் சீனப் பெண்களுடைய கால்களுக்கும் விடுதலை ஏற்பட்டு விட்டன என்று பெண்களே நினையுங்கள்” பெண்கள் விடுதலைக்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் முன்னேறலாம்.
பெண்விடுதலையே நாட்டின் முன்னேற்றம்
பெண்கள் சமுதாயம் விடுதலை பெற்றுச் சுதந்திரமாகச் செயல்பட்டால் மட்டுமே நம் நாடு முன்னேற முடியும். பெண்கள் ஆண்களைப் போல அனைத்துத் துறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்போது நான் நம் நாடு முழு வளர்ச்சி பெற முடியும்.
சீர்திருத்தவாதி பெரியார்
சீர்திருத்தங்களைச் செய்ய முயன்ற தலைவர்கள் பலர். அவற்றுள் எம் பெரியாரின் கொள்கையில் ஒத்துப்போனவர்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு இயக்கத்தை பெரியார் தொடங்கினார். பெரியார் இவர் கூறிய கருத்துக்கள் சரியாகவும், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும் இருந்ததால் மனமாற ஏற்றுக் கொண்டார்.
முடிவுரை
பெரியாருக்குச் சிறுவயதில் உயர்வு, தாழ்வு எண்ணங்கள் கற்பிக்கப்பட்டதால், அதனை எதிர்க்கும் போராட்ட குணங்களும் அவரிடம் முளைவிடத் தொடங்கின. பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொருட்டு, பல போராட்டங்களைப் பெரியார் நடத்தி உள்ளார். பெண்கள் சங்ககாலத்தில் சுதந்திரமாக தங்கள் வாழ்க்கை நிலையையும், கல்வி உரிமையை உயர்த்தி இனியைமான வாழ்க்கை வாழ்ந்தனர். இடைக்காலத்தில் வேற்று இனத்தவரான பார்ப்பனர்களின் வருகைக்குப் பின் அவர்களின் சுயநலத்துக்காகப் பெண் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.