தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
50. தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுச் சிந்தனை
வெ. சுதா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக்கல்லூரி, தருமபுரி..
முன்னுரை
பண்பாடு என்ற சொல்லின் அறிமுகமும் விளக்கமும் முதலில் அறிந்திட வேண்டிய ஒன்று. சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரசிகமணி டி. கே. சி அவர்களால் ‘பண்பாடு” என்ற சொல், “Culture“ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக அறிமுகம் செய்யப்பெற்றது. ‘உலக நடைமுறையினையும் சமுதாயம் ஒத்துக் கொண்ட நெறிகளையும் பொருத்தி நடந்தலே ‘பண்பாடு” என்று எண்ணப்பெற்றது. பண்பாடு என்னும் சொல், சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் மனிதரால் ஈட்டப்பெறும் அறிவு, நம்பிக்கை, கலை, நீதி, விதிமுறை, நடைமுறை என்பனவும், ஏனைய ஆற்றல்களும், தொடர்ச்சியாக அமையும் செயல்களும் ஆகிய ஒட்டு மொத்தமான பண்பாட்டுச் சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய்கிறது.
புதின இலக்கியத்தல் இலட்சியப் பெண்கள்
பொதுவாக மு. வ. அவர்களைக் குறிக்கோள் உடைய புதின ஆசிரியர் என்றும், அவருடைய புதினங்களை ‘அறன் வலியுறுத்தும் நோக்கில் எழுந்த நீதி நூல்கள்” என்றும் கூறுவர். மு. வ வின் அகல்விளக்கில் கைம்பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ள பாக்கியம் அம்மையார், கல்வியில் நாட்டம் செலுத்தி அறிவை வளர்த்துக் கொண்டு கல்வி கற்பிக்கும் தொண்டில் ஈடுபடுவதாகப் படைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் குறிக்கோளிலாது கெடுவதைத் தடுத்து, ஏதேனும் ஒரு குறிக்கோளைப் படைத்து வாழ வேண்டும் என்ற அறிவுரையைச் சமுதாயத்திற்குத் தருகிறார் மு. வ. இவ்வாறு மனித சிந்தனையின் பிரதிநிதியாக இலட்சிய நோக்குடைய மாந்தராகப் படைக்கும் திறனைப் பின்பற்றுப் பலரும் தத்த்ம புதினங்களில் பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
பெண்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அவர்கள் போராடுவதை மையமாகக் கொண்டு புதினங்களைப் படைத்தவர் சு. சமுத்திரம். சோதனைகளைத் தாங்கி வெற்றி காணும் தலைமைப் பண்போடு கூடிய இலட்சியப் பெண்களைப் பாத்திரங்களாகப் படைத்துள்ளார். இவருடைய ‘வேரில் பழுத்த பலா” எனும் தொகுப்பைச் சார்ந்தது. ‘ஒரு நாள் போதுமா? என்னும் குறும் புதினம். இதில் வரும் அன்னவடிவை சமுத்திரத்தின் இலட்சியப் பெண்களுக்குச் சான்றாகக் குறிப்பிடலாம். அவர்களுடைய கணவன் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைகிறான். நீதிமன்றம் சென்று இதற்கு நியாயங்கேட்க வேண்டுமென்று கட்டிடத் தொழிலாளர் சங்கம் தீர்மானிக்கிறது. இவர்களைப் புதின இலக்கியத்தின் இலட்சியப் பெண்களாகப் பண்பாட்டு சிந்தனை மூலமாக அறிய முடிகின்றது.
பண்பாட்டுச் சிந்தனை
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களுள், கலித்தொகை, நற்றினை, குறுந்தொகை, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகியவை பண்பாட்டுக் கூறுகளைப் பதிவு செய்துள்ளன. கற்றறிந்தோர் ஏந்தும் கலித்தொகையில், தலைவலியை மறந்த தலைவன் ஒருவனுக்குத் தோழி கூறும் அறிவுரை பல்வேறு பண்புகளுக்கு விளக்கம் தருவதாக அமைவது சிறப்பிற்குரியது.
“ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுதல்
அன்பெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர் வவ்வல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” (கலி - 133)
என்னும் பகுதியை, மனித குலத்திற்கு நீதியைப் புகட்டும் இனியதொரு பண்பாட்டு சிந்தனைகளை உள்ளடக்கியது எனலாம்.
நற்றிணையிலும் இது போன்ற பதிவு இடம் பெற்றுள்ளது.
யாவர்க்கும் இனிமைதரும் பாங்கில் நடத்தல் நயன், வேறுபாடின்று யாவரிடமும் அன்பு பாரட்டுதல் நண்பு, குற்றம், தீமை இவற்றைக் கண்டு மனம் கூசுதல் நாணம், சமுதாயத்திற்குப் பயன்பட இருத்தல், நற்பண்புகள் நிரம்பப் பெறுதல், உலகத்தோடியைதல் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பும் நற்றிணைக் காட்சி இங்குக் குறிக்கத் தக்கது.
“நயனும் நண்பும் நானும் நன்குடைமையும்
பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்
நும்மினும் உடையேன் மன்னே” (நற் - 160)
என்னும் பகுதி நற்றிணை காட்டும் பண்பாட்டுச் சித்திரமாகும். சங்க இலக்கியம் காட்டும் இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளுள் தனிமனித வளர்ச்சிக்குத் துணைபுரியும் காதலைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
பகுத்துண்ணுதல்
பசி என்று வந்தோருக்குப் புசி என்று ஒரு பிடியாவது கொடுக்கும் நம் பண்டைய மரபு இன்றும் நிலவி வருகிறது. இலக்கியம் காட்டும் இனிய நெறிகளுள் ஒன்றான பகுத்துண்ணும் போக்கு தமிழ்ச் சமுதாயத்தின் உயிர் நாடி அறமாக விளங்குகிறது. கீறல்கள் என்ற புதினத்தில் அமையும் ‘அருவாமனைச் சட்டத்தில் ஒரு காலை ஊன்று எடுத்துச் செதிள் எடுத்தாள், தலையை வெட்டிச் சட்டியில் போட்டாள், வாலை வெட்டிப் பூனைக்கு எறிந்தாள், மீனின் உடலை இடையில் வெட்டி, உள்ளே கையிட்டுக் குடல் பகுதியை எடுத்துக் கோழிக்கு எறிந்தாள்” என்னும் பகுதி, பகுத்துண்ணும் அறத்தை எடுத்தியம்புவதாக அமைகிறது.
பண்பாட்டுச் சீர்குலைவு
நம் பண்பாட்டைச் சீர்குலைத்து, மேற்கத்திய ஒழுக்கக்கேடன கலாச்சாரத்ததை இன்று திரைப்படங்களும், பத்திரிக்கைகளும் பரப்பி வருகின்றன. உழைப்பை மதித்து அதற்கு நன்றி சொல்லும் திருவிழாவான பொங்கலுக்கு அனுப்பப்படும் வாழ்த்து அட்டையில் கூடத் தற்போது திரைப்பட நடிகர், நடிகையரின் படங்களே இடம் பெறுகின்றன. இத்தகைய பண்பாட்டுச் சீர்குலைவை, ‘பொங்கலோ பொங்கல்” என்னும் சிறு கதையில் கடுமையாகச் சாடுகிறார் அகிலன். இதனை ‘குடியானவனையும் தொழிலாளியையும் வருசத்திலே ஒரு நாளாவது மனுஷன் நினைச்சுப் பாக்கிறதுக்குஏற்பட்ட பொங்கல்டா இது, கறவை மாட்டுப்படத்தையோ, காளை மாட்டுப்படத்தையோ நீ வாங்கியிருந்தா, நீ சோத்திலே உப்புப் போட்டுத் திங்கறதுக்கு அது நியாயமா இருந்திருக்கும்.
சமூகப் பண்பாட்டின் அடையாளமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டுச் சீர்குலைவைக் கண்டிருக்கிறார் ஆசிரியர். இதன் மூலம் உழைப்பைப் போற்றும் உண்மையான பண்பாட்டு விழாவாகப் பொங்கல் திருவிழா அமைய வேண்டும் என்னும் எண்ணத்தைச் சமுதாயத்தில் விதைக்கிறார் அகிலன் என்றே கூறத் தோன்றுகிறது.
பண்பாட்டில் கல்வி
ஒரு நாட்டின் சமுதாய, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைவது கல்வி. இத்தகைய கல்வி இன்று தரம் குறைந்து வருவது இன்றிமையாத சிக்கலாகும். படித்த பட்டதாரிப் பெண் ஒருத்தியை, ‘பகத்சிங் யாரு?” என்று கேட்கத் தூண்டும் கல்வியைப் பற்று, ‘நீங்க படித்த கல்விமுறை அப்படி, மூளையை விழித்தெடுத்துவிட்டு களிமண்ணை அடைக்குற கல்வி” என்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் அவலத்தை எடுத்துக் காட்டுகிறது. சுயசிந்தனையையும் முயற்சியையும் மழுங்கடிக்கச் செய்யம் இத்தகைய கல்வி முறை மக்களிடையே மூடநம்பிக்கை வளர்வதற்கும் காரணமாக அமைகின்றது.
விருந்தோம்பல்
தமிழர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகிய விருந்தோம்பலைப் புறநானூறு சிறப்பாகக் குறிப்பிடுகிறது. விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” என்பது தொல்காப்பியம். (செய்யுளியல் 231) முன்பு புதியவர்களைக் குறித்த இச்சொல், நாளடைவில் வீட்டிற்கு வரும் பழைய நண்பர்களையும் உறவினர்களையும் சுட்டுவதாயிற்று.
தலைவியின் இல்லறக் கடமைகளில் விருந்தோம்புதல் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இது மனையறமாகப் போற்றப்பட்டது. மனைவியர் விருப்பத்துடன் விருந்தோம்பியமையைப் புறம் கூறுகின்றது.
மன்னனின் பண்பு
‘கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொந்தி விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி”
என்ற பாடலின் தலைவி மேலுலகம் சென்று விட்டார். அவளோடு நானும் உயிர்விடவில்லையே என மனம் கசிந்து வாடுகிறான் மன்னன். இவை புறநானூற்றின் மூலமாக மன்னனின் பண்பு நலனை வெளிப்படுத்துகின்றன.
முடிவுரை
நிலம் கீழ் மேலதாக ஆவதாயிருப்பினும், ஒருவன் செய்த நன்றியை மறத்தலாகாது என்று அறநூல் கூறுவதாகப் புறநானூறு தரும் செய்தி. மனித சமுதாயத்திற்குத் தேவையான பண்பாட்டுச் சிந்தனை எனலாம். சமுதாயத்தின் அங்கமான தனிமனிதன் மேம்பாட்டை வலியுறுத்தும் இத்தகைய பண்பாட்டுச் சிந்தனைகள், சங்க இலக்கியத்தில் பரவலாகக் காணக்கிடக்கின்றன. இலக்கியம் எல்லா நிலையிலும் வளர்ச்சியுற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட சங்க இலக்கியம் சிந்தனைகளைப் பின்பற்றினால் இன்றைய இலக்கியம் ஏற்றம் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே இதன் நோக்கமாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.