அறநூல்களுள் முதன்மையானதும் ஒழுக்க நெறிகளை நாடு, இனம், மதம், மொழி என்ற எல்லை கடந்து வலியுறுத்துவதும் உலகப்பொதுமறையாகும். ஒரு சமுதாயம் மேன்மை பெற தனிமனித ஒழுக்கமே முதற்காரணமாக அமைகிறது. அவ்வகையில் மக்கள் சமூகம் மேன்மையடைய வள்ளுவர் வலியுறுத்தும் அறங்களைத் தனிமனித ஒழுக்கங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் மேன்மையானவை; சமமானவை. இதில் உயர்வு தாழ்வு கிடையாது. பிறப்பால் ஒன்றுபட்ட மனிதன் உயிர் வாழப் பல்வேறு தொழில்களைர் செய்து வருகிறான். இச்சமூகம் உயர்வடைய அனைத்து மனிதர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. மனிதர்களில் உயர்வு தாழ்வு கருதுவது சமூக வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும். இதனை,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்ற குறள் வழி எடுத்தியம்புகிறார்.
மேலும், அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் அவரவர் செய்கின்ற செயல்பாடுகளால் உண்டானது. இந்தச் செயல்களின், தொழில்களின் அடிப்படையில் மனித இனத்தை உயர்வென்றும் தாழ்வென்றும் கூறுவது அநீதியாகும். இன்று சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு இதன் மூலம் மக்களை வேறுபடுத்துவதால், பல்வேறு பூசல்கள் ஏற்பட்டுச் சமூகம் வளர்ச்சி நிலையை மறந்து விடுகிறது. யார் உயர்ந்தவன் என்ற நிலையில் பொருட் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்படுவதுடன் சமூக வளர்ச்சி தடைப்படுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உரக்கச் சொல்கிறார் வள்ளுவர்.
உடைமை வர்க்கம் தோன்றிய போதுதான் மனிதர்களிடையே பேதங்கள் தோன்றின. வள்ளுவர் வலியுறுத்தும் உடைமைகளால் மக்கள் சமூகம் மேம்படுமே தவிர பிரிவுபடாது. எனவே, உலகப் பொதுமறையாம் திருக்குறளில் மானுடம் செம்மையுறும் பல்வேறு உடைமைகளை வலியுறுத்துகிறார் வள்ளுவர். அன்புடைமை, அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, பண்புடைமை, ஊக்கமுடைமை என்பன மனித சமூகம் மாண்பு பெற வள்ளுவர் கூறும் அவசியமான உடைமைகளாக அமைகின்றன.
உலகில் தோன்றிய உயிர்களில் அன்பில்லாத உயிர்களைக் காண முடியாது. இந்த அன்பே அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அன்போடு வாழும் வாழ்வே சிறப்புடையது; அர்த்தமுடையது.
ஒரு சமூகம் உயர்வடையத் தனிமனித ஒழுக்கமே முக்கியமாக அமைகிறது. இதன் மூலமே ஒரு நல்ல சமூக அமைப்பு உருவாகும். அன்போடு வாழ்வதே உயிர் வாழ்வதற்குச் சமம். அன்பில்லாத உயிர் வாழ்வு பொருளற்றது என்பதை,
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
(குறள்:80)
என்ற குறள் வழி வெளிப்படுத்துகிறார். உலகில் தோன்றிய உயிர்களில் அன்பில்லாத உயிர்களைக் காண முடியாது. இந்த அன்பே அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அன்போடு வாழும் வாழ்வே சிறப்புடையது.
அன்பின் உயர்நிலையை வள்ளலார், “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற அடிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். உயர்திணைகளிடத்து மட்டுமன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அன்புடன் நேசிக்க வேண்டும் என்கிறார் இராமலிங்க அடிகளார்.
சிந்தனையே ஒரு மனிதனைச் செம்மையாக்கும். ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் இலக்கண நூல்கள் இயம்புகின்றன. இதில் ஆறாவது அறிவான பகுத்தறிவால் நன்மை தீமைகளைப் ஆய்ந்தறியும் ஆற்றல் படைத்தவன் மனிதன் மட்டுமே. இன்றைய நிலையில் மனித மனம் பல்வேறு தீய சிந்தனைகளால் பாழ்பட்டுக் கிடக்கிறது. மனித முன்னேற்றம் தடைபட்டுள்ளது. இந்நிலை மாற தனிமனித சிந்தனை வளர வேண்டியது அவசியமாகிறது. மற்றவர் சொல்லுகின்ற வார்த்தைகளை அவ்வாறே ஏற்காமல் அதன் நன்மை தீமைகளைப் பகுத்தாய்ந்து செயல்படுவதே உண்மையான அறிவாகும். இதனை,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
(குறள்:423)
என்ற குறள்வழி வலியுறுத்துகிறார்.
இத்தகைய அறிவு உடையவரே அனைத்துச் செல்வங்களையும் பெற்றவருக்குச் சமமாவார்கள். இவ்வறிவால் இவர்கள் அடையும் நன்மை எல்லையற்றது. இதனை,
“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”
(குறள்.430)
என்னும் குறள் வழி உணர்த்துகிறார்.
‘ஒழுக்கம்’ என்பது செயல். ஒருவரது செயல்களே அவருடைய பண்புகளை அளந்தறிய உதவுகிறது. நல்லொழுக்கமே தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவையாகிறது. இதில் மாறுபடும் போது தனிமனிதன் மட்டுமல்ல, அவனைச் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் இரண்டுமே பாதிப்படைகிறது. எனவே, ஒழுக்கமுடைமையே அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையானது என்கிறார் வள்ளுவர். இதனை,
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்”
(குறள்.138)
என்ற குறள் வழி எடுத்தியம்புகிறார்.
எனவே மனித சமூகம் சிறப்பாக வளர வழிவகுக்கும் இவ்வொழுக்கத்தை உயிருக்கும் மேலானதாக மனிதர்கள் மதித்துப் போற்ற வேண்டும் என்பதை,
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
(குறள்:131)
என்னும் இக்குறள் வழி அறிவுறுத்துகிறார்.
ஒழுக்கமே உயரிய பண்பு. உயிரை விடவும் மதிப்பு மிக்கது. எனவே, அதனைப் போற்றி ஒழுகுவதே அனைவரின் கடமை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
மனித மனம் பல்வேறு சிந்தனைகளை உடையது. இந்த மனத்தின் சிந்தனையே பல்வேறு செயல்களுக்கும் காரணமாக அமைகிறது. மனித மனம் சில சமயங்களில் சுயநலத்தோடு செயல்படுவதால் சமூகத்தில் குழப்பம் ஏற்பட்டு ஒழுக்க நிலை பாதிப்படைகிறது.
தவறு என்பது அறியாமல் நடந்து விடுவது. இதற்காகத் தண்டனை அளிப்பது நமக்கு எதிர்மறை விளைவுகளையே உண்டாக்குகிறது. இந்த நிலையில் மனிதன் பொறுமை என்னும் பண்பையும், மன்னிப்பு என்னும் கருணையையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பொறுமை என்ற குணமே தவறுகளைக் குறைப்பதோடு மனித இனத்தைப் பண்படுத்தும். பொறுமை என்ற குணமே உயர்ந்த உடமையாகும் என்பதை பொறையுடைமை அதிகாரத்தின் வழி வலியுறுத்துகிறார்.
தன்னை அகழ்ந்து துன்புறுத்தும் மனிதர்களுக்கு நிலமானது ஒரு போதும் துன்பம் செய்வதில்லை. மாறாக இனிய மலர்களையும், கனிகளையும், உணவு தானியங்களையும் தந்து மகிழ்விக்கிறது. அதைப் போல மனிதர்களும் தங்களுக்குத் துன்பம் செய்தவர்களின் தவறினைப் பொறுத்துக் கொள்வதோடு அவர்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். இதனை,
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
(குறள்-151)
என்னும் குறள் வழி வலியுறுத்துகிறார்.
இப்பொறுமை என்ற உயர்ந்த பண்பை மக்கள் உடைமையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
மனித மனம் பண்பட்டு இருப்பதே பண்பாடு எனப்படும். பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதல். ஒருவர் மற்றொருவரிடம் பேசும் முறை, பழகும் முறை அவரது பண்பாட்டை வெளிப்படுத்தும். நல்ல பண்புகளே நல்ல சமூகம் உருவாக வழிவகுக்கும்.
இத்தகைய பண்பாளர்கள் இருந்தால்தான் உலகம் நன்மையடையும். இப்பண்பு மக்களிடையே இல்லாது போனால் சமூகம் சீர்கேடடையும். எனவே, மக்களினம் நல்ல பண்புகளைக் கொண்டிருந்தால் மேன்மையடையும் என்பதனை,
“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
(குறள்-996)
என்ற குறள் வழி அறியலாம்.
சங்ககால மன்னன் ஒருவன் உலகம் இன்று வரை நிலைத்திருக்கக் காரணம் என்னவென்று சிந்தித்தான். அதன் விளைவாக அவன் கண்டறிந்த உண்மை, தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் மக்கள் இருப்பதே இவ்வுலகம் நிலைத்திருக்கக் காரணம் எனத் தம் முடிவாகக் கூறுகிறான். இதனை,
“உண்டால் அம்ம இவ்வுலகம்” எனும் புறநானூற்றுப் பாடல் வரிகளால் அறியலாம்.
இவ்வாறு இந்த உலகில் அறிவு, அனுபவம், ஆற்றல், சிந்தனை, பொறுமை போன்ற குணங்களில் குன்றாகத் திகழ்கின்றவர்களைச் சான்றோர்கள் என்று போற்றுகின்றோம். இத்தகைய சான்றோர்களின் தலையாயக் குணமாகச் சான்றாண்மை விளங்குகிறது. சான்றாண்மையை வள்ளுவர்,
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்”
(குறள்-989)
என்னும் குறள் வழி விளக்குகிறார்.
சான்றாண்மை என்னும் குணத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர், இந்த உலகமே அழியக்கூடிய நிலை வந்தாலும் சான்றாண்மை என்னும் குணத்திற்குக் கரையாக விளங்குவார். தம் உயிர், உடல் அழிந்தாலும் தம் நிலையிலிருந்து சிறிதும் மாறாதவரே சான்றோர் என்று சான்றாண்மைக்கு விளக்கம் கொடுக்கிறார் வள்ளுவர்.
உலகப் பொதுமறையை இயற்றிய வள்ளுவப் பெருந்தகை மனித சமுதாயம் மாண்பு பெற, சமூகம் மேன்மையடைய பல்வேறு உடைமைகளை வலியுறுத்துகிறார். வள்ளுவர் கூறும் வாய்மொழிகளைப் பின்பற்றினால் மானுடம் வெல்லும்; மனித மதிப்பு உயரும் என்பதை உணர முடிகிறது.
1. திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
2. தமிழ் இலக்கிய வரலாறு, கலையக வெளியீடு, பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம்.