தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
82.பாரதி மொழி
உ. ச. எ. முகிலன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ். ஆர். என். எம். கல்லூரி, சாத்தூர்.
முன்னுரை
மொழி என்பது வல்லமை பொருந்தியது. எழுத்துக்களின் மூலமாகவும்,. சீரிய கருத்துக்களின் மூலமாகவும் அடைய வேண்டிய இலக்கைத் திறம்பட அடையக்கூடிய திறமை மொழிக்கு உண்டு. அவ்வகையில் தன்னுடைய அளப்பரிய கருத்தாற்றலாலும், மொழி வன்மையினாலும் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பெருமை சேர்த்த பாரதியின் மொழி குறித்து இக்கட்டுரை ஆய்வதாக அமைகிறது.
பாரதியின் இறைமொழி
இன்று மக்கள் இறைவனிடம் வேண்டும் போது, தனக்கு சொத்து, சுகம், நிறைய செல்வம் என அளவில்லாத ஆசை கொண்டு இறைவனை வேண்டுகின்றனர். ஆனால் பாரதியோ, இறைவனிடம் வேண்டும் போது,
‘மனத்திற் சலனமில்லாமல்
மதியி லிருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திடநீ செயல் வேண்டும்”
என்று வேண்டுகிறார். மேலும்,
‘அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே
தன்னை யாருஞ் சமர்த்தெனக் கருள்வாய்”
என்று வேண்டுவதாகவும்
‘பல பண்ணிற் கோடிவகையின்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்”
என்று இறைவனை வேண்டுகிறார்
பெண்மை, மண், உண்மை என்றும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்பதை,
‘பொன் விடுதலை வேண்டும்
மண் பயனுற வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்”
“ஓம் ஓம் ஓம் ஓம்” என்று
வேண்டுவாய் அவரது மொழி அமைகிறது.
பொதுமைக் குணம்
குருவியிடம் கேள்வி கேட்டு குருவி விடை கூறுவதாய்ப் பாரதி நாட்டு மக்களுக்கு குருவியின் வழியாகப் பொதுமையைப் பறைசாற்றும் விதமாக,
“சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை யென்ன?
வண்ணக்குருவி - நீ வாழும் முறை கூறாய்?”
என்று வினவிய பாரதியார்,
குருவியின் வாய்மொழி வழியாக,
“கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமையில்லை - எல்லோன் வேந்தரெனத் திரிவோம்”
என்று பொதுமை வழிச் சமுதாயத்தைத் தன் மொழியின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.
நல்வழி கூறும் மொழி
எதைக் கைக்கொண்டு எதை விடுவித்தால் வாழ்வு இனிமையாகும் என்பதைப் பாரதி தன் பாட்டினிலே எடுத்துரைக்கிறார். இதனை,
“சத்தியம் கைக்கொள்ளடா - இனிச் சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா - வெறும் வேஷங்கள் தள்ளிடடா”
என்றும்,
“அச்சத்தை விரட்டியடா - நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்தினி மேலே நீ - என்றும் இன்பமே பெறுவையடா”
என்று நல்வழி காட்டுவதாக அமைகிறது.
பொதுமையுடைமை
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும் நிலையை நோக்கி இவ்வுலகம் எப்போது நடைபோடுகிறதோ அப்போதுதான் இவ்வுலகில் அமைதி பிறக்கும்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”
என்ற வள்ளலாரின் கூற்றுக்கிணங்க பாரதியும் தன் கவிதையில்
‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்டிட னிணங்கி வாழ்ந்திடவே”
என்று ஓரறிவு முதல் ஆறறிவு வரையான அனைத்து மக்களும் இப்பூமியில் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ வேண்டும் என்ற பொதுவுடைமைச் சிந்தனையைப் பாரதியின் மொழியில் காணலாம்.
மேலும்,
‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
என்று பொதுமையை முன்னிறுத்தும் மனப்பாங்கைப் பாரதியின் மொழிகளில் காணலாம்.
மக்களுக்கான மொழி
தன் பெண்டு, தன்பிள்ளை, தன் வீடு என்று சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு மத்தியில் பாரதி தம் கவிதையில் இம்மாநிலம் பயனுற வேண்டும் என்பதற்காகச் சிவசக்தியிடம்
‘நல்லதோர் வீணை செய்து - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லட சிவசக்தி - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
என்று தன் சிந்தனையையும், அறிவையும் தனக்கென கொண்டு வாழாது இம்மாநிலம் தழைக்க வித்திட்டது பாரதியின் மொழி.
மேலும்,
“... ... ... ... ... என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாவித்திட வேணும்”
என்றும் பாடுகிறார்.
சாதி களையும் மொழி
ஏழை - பணக்காரன், உயர்ந்தோன்- தாழ்ந்தோன், ஆண்டான்-அடிமை என்று சாதீய ஏற்றத்தாழ்வுகள் ஓங்கி இருந்த காலத்தில் தன் ஆற்றல்சார் மொழியால் சாதி என்னும் கொடிய வேரை, வேரோடுப் பிடுங்கி சாதி என்னும் நஞ்சை மேலும் பரவ விடாது தடுத்தவர் பாரதியார்.
‘காக்கை குருவி யெங்கள் சாதி - நீர்
கடலு மலையுமெங்கள் கூட்டம்”
என்றும்,
“கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை”
என்றும்,
“சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்”
என்றும்,
“ஆயிர முண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி
ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடி லனைவர்க்கும் தாழ்வே”
என்று சாதியைத் தகர்த்து எறிந்து மக்களிடத்தே ஒற்றுமை உணர்வை வளர்த்தெழச் செய்தது பாரதியின் மொழியாகும்.
மேலும்,
“சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்”
என்று உலகம் அன்பால் மட்டுமே தழைக்கும் என்ற உண்மையையும் தன் மொழியால் பறை சாற்றிச் சென்றார்.
தனி மனிதப் பிரச்சினைகள் குறித்து இன்று யாரும் வாய்திறக்க முன்வருவதில்லை. ஆனால் பாரதியோ தன் மொழியில்
“இனியொரு விதி செய்வோம், அதை
எந்த நாளும் காப்போம்.
தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம்”
என்று பெருமுரசு கொட்டியவர் பாரதி.
சட்டங்களும், நீதிகளும் ஏழைகளின் பக்கம் சாயாதிருக்கும் வேளையில் தனிமனித உரிமை குறித்துப் பேசியது பாரதியின் புரட்சி மொழியாகும்.
பெண்ணடிமை நீக்கும் மொழி
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பெண்ணடிமை என்று ஒழிகிறதோ அன்று தான் இவ்வையம் தழைக்கும் என்பதை
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்”
என்று கூறுகிறார்.
பெண்மை தான் இவ்வுலகுக்கு அச்சாணி என்று எடுத்துரைத்து
“பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா”
என்றும்,
“உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”
என்றும் கூறுகிறார்.
ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வு நீங்கி சரிநிகராய் வாழ வேண்டும் என்பதையும், கற்பு என்னும் பெயரால் பெண்ணை அடிமைப்படுத்தக் கூடாது என்பதையும் விளக்கும் நோக்கில்
“கற்பு நிலையென்று சொல்ல வந்தால் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”
என்று பெண்மையின் குரலாக விளங்குகிறது பாரதியின் புரட்சிமொழி.
முடிவுரை
மொழியால் ஆளும் உலகை மாற்றியவர் பாரதி. உள்ளத்து உணர்ச்சிகளை மொழியில் காட்டி, பெண்ணடிமை, சாதிப் பாகுபாடு, தீண்டாமை, ஏற்றத்தாழ்வினைப் போக்கி, சுதந்திரம், விடுதலை, சுயமரியாதை, பெண் உயர்வு, மொழிப்பற்று போன்றவற்றை உருவாக்கி மக்களை மக்களாக வாழச் செய்தது பாரதியின் மொழி எனில் அது மிகையில்லை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.