தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
94.பத்துப்பாட்டில் உணவும் விருந்தோம்பல் பண்பும்
வே. ராசாம்பாள்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கந்தசாமி கண்டர் கல்லூரி, பரமத்தி வேலூர் நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
சங்க நூல்களாக எட்டுத்தொகையையும், பத்துப்பாட்டையும் கூறுவர். பாட்டும் தொகையும் என்று கூறும் மரபும் உண்டு. பாட்டு என்றாலே பத்துப்பாட்டைத்தான் குறிக்கும். பத்துப்பாட்டு ஒரு பண்பாட்டுச் சுரங்கம், வரலாற்றுப் பெட்டகம், கலைகளின் இருப்பிடம், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியம். பத்துப்பாட்டை நினைவில் கொள்ள ஒரு வெண்பா பாடல் உள்ளது.
“முருகு பொருநாறு பாண்இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக்காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
என்பன.
இதில் ஆற்றுப்படை நூல்கள் - ஐந்து, அக நூல்கள் - மூன்று, புற நூல்கள் - ஆறு
பிற்காலத்தில் இதன் சிறப்பினை உணர்த்தப் பல வெண்பாக்களை எழுதியள்ளனர்.
“பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கும்”
(தமிழ் விடு தூது)
“பண்டை இயற்கை வளங்கள் எல்லாம் - பத்துப்
பாட்டின் வளத்திற் கண்டறிந்து
மண்டல மெங்கும் புகழும் அருந்தமிழ் - வாசம்
நுகர்ந்து மகிழ்வோமே”
(கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
தமிழகத்தின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு இப்பத்துப் பாடல்கள் மிகுதியாகத் துணை புரிகின்றன. தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஐவகை நிலங்களாகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றின் வருணனைகளைப் பெரும்பாலும் எல்லாப் பாடல்களும் தருகின்றன.
பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படைப் பாடல்கள் ஆற்றுப்படைக்கு இலக்கணம் தொல்காப்பியம் கூறியுள்ளது.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறுவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”
(தொல்காப்பியம் -1037)
உணவு
மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது உணவு. உணவின்றி உயிர் வாழ்வது மிகக் கடினம். உடையின்றி உயிர் வாழலாம். இக்காலத்தில் கூட உலகில் சில பகுதிகளில் உடையின்றியோ குறைந்த உடையுடனோ மக்கள் வாழ்வதை அறிகிறோம்.
தமிழர் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்தனர். இது இயற்கையான பகுப்பு. மலையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று கூறுவர். காடும் காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்றனர். வயலும் வயல்சார்ந்த இடத்தை மருதம் என்று அழைத்தனர். கடலும் கடல்சார்ந்த இடத்தை நெய்தல் என்றனர். மலைப்பகுதியும் காட்டுப்பகுதியும் திரிந்த போது வளமில்லாமல் பாலையாயிற்று. அதைப் பாலை நிலம் என்றனர். பொது நிலையில் மலையில் தேன் கிழங்கு போன்றவைகள் மிகுதியாகக் கிடைக்கும். நெய்தல் நிலப்பகுதியில் மீன் மிகுதியாகக் கிடைக்கும். கருவாடு கிடைக்கும். பெரிய நண்டுகளின் இறைச்சி கிடைக்கும். முல்லை நிலத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பதால் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பால், தயிர் போன்றவை மிகுதியாகக் கிடைக்கும். மருத நிலத்தில் நெல்லும் நெல்சோறும் காய்கறிகளும் மிகுதியாக உள்ளன.
பண்டமாற்று முறை பழங்காலத்தில் இருந்தது. குறிஞ்சி நிலத்தார் நெய்தல் நிலத்தாருக்குத் தேனைக் கொடுத்து மீனைப் பெற்றுக் கொண்டனர்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை)
பசித்த ஒருவனுக்கு உணவு அளித்தால் அவ்வுணவு அவனுக்கு உயிர் கொடுத்தலுக்குச் சமம் என்கிறது மணிமேகலை.
குறிஞ்சி நில உணவு
நன்னனுக்குரிய சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் தினைச் சோற்றையும், நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். அதை விருந்தினருக்கும் கொடுத்தனர். இதனை,
‘பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ (மலைபடுகடாம்168 - 169)
என்று கூறுகிறார். அத்துடன் நன்னனது மலையில் மூங்கில் அரிசிச் சோற்றையும் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றோடு கலந்து தயாரித்த குழம்பையும், மானின் இறைச்சியையும், பன்றியின் இறைச்சியையும் சேர்த்து உண்டனர். அத்துடன் கிழங்கையும் வேகவைத்து உண்டனர். குறிஞ்சி நிலத்து மலைவழிச் செல்லும் கூத்தர், தினைப்புனத்துக் காவலரால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரை நீக்கி மூங்கில் பற்றி எரியும் நெருப்பில் அதனை வாட்டி அவ்விறைச்சியைத் தின்றனர். மீதத்தை இலையில் கட்டி வழிக்கு உணவாகக் கொண்டு சென்றனர்.
முல்லை நில உணவு
முல்லை நிலச் சிற்றூர்களில் தினையரிசிச் சோற்றையும், வரகரிசிச் சோற்றையும், அவரைப் பருப்பையும் கலந்து செய்த உணவை உண்டனர். நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தில் சிவந்த அவரை விதைகளையும், மூங்கில் அரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையில் குழைத்துக் கூழாக்கி உட்கொண்டனர் என்பதை;
“செவ்வீ வேங்கைப் புவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லின் அவரையும் புளிங்கூழ்’’ (மலைபடுகடாம் 434- 436)
மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. மேலும், பொன்னை நறுக்கினாற் போன்ற ஒரே அளவுடைய நுண்ணிய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்.
மருத நில உணவு
சோழவளநாடு சோறுடைத்து என்பது பழங்காலப் பழமொழி. காவிரி பாய்வதால் எப்போதும் வளமுடையதாக இருக்கும். சோழநாட்டு மருத நிலத்தில் கரும்பும் நெல்லும் மிகுதியாக உள்ளன. கரும்பையும் அவலையும் கொடுத்து, மானின் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொள்கின்றனர். ஓய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும் சேர்த்துக் கொண்டனர். தொண்டை நாட்டு மருதநிலத்தில் சிறுபிள்ளைகள் காலையில் பழைய சோற்றை உண்டனர். பழைய சோற்றின் மேல் வெறுப்பு ஏற்பட்டால் அவலை இடித்து உண்டனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படை;
“கருங்கை வினைஞர் காதல் அம்சிறாஅர்
பழஞ்சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில்
அவல்எறி உலக்கைப் பாடுவிறந்து” (பெரும்பாணாற்றுப்படை 223 - 226)
என எடுத்துரைக்கின்றது. அது மட்டுமல்லாது, நெல் சோற்றைப் பெட்டைக் கோழிப் பொரியலோடு உண்டனர். அந்நாட்டுத் தோப்பில் வாழும் மருதநில உழவர் சோற்றோடு பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்து உண்டனர்.
நெய்தல் நில உணவு
பழங்கால சோழநாட்டின் தலைநகராகிய காவிரிப்பும்பட்டினத்தின் நெய்தல் நிலத்தார் கடலில் பெற்ற இறால் மீனையும், வயல் ஆமையையும் பக்குவம் செய்து உண்டனர். பனங்கள்ளைக் குடித்தனர். கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் பொரித்து விற்கப்பட்டன. ஓய்மா நாட்டு நெய்தல் நிலத்தார் நெய்தல் நில மகளிராகிய நுளைச்சியர் அரித்த கள்ளையும், உலர்ந்த குழல் மீனின் சூட்டு இறைச்சியையும் உண்டனர். தொண்டை நாட்டுக் கடற்கரைப் பட்டினத்தில் அதாவது இக்கால மாமல்லபுரத்தில் நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்து, கொழுத்த பன்றியின் இறைச்சியைச் சமைத்து உண்டனர் என்ற செய்தியை,
“கள்அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்துஉகு சில்நீர்வழிந்த குழம்பின்
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல்நாள்
குழிநிறுத்து ஓம்பிய குந்தாள் எற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர்” (பெரும்பாணாற்றுப்படை 339 - 345)
என்று பெரும்பாணாற்றுப்படை இவ்வரிகளின் வாயிலாக விளக்குகின்றது.
பாலை நில உணவு
ஓய்மாநாட்டுப் பாலை நில மக்களாகிய வேட்டுவர் இனிய புளிக்கறி இடப்பட்ட சோற்றை உண்டனர். தொண்டைநாட்டுப் பாலை நில மக்கள் புல் அரிசியைச் சேர்த்து நிலத்தில் உள்ள உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக்கண்டத்தோடு உண்டனர். விருந்தினருக்குத் தேக்கிலையில் உணவு கொடுத்தனர். விருந்தினரை உபசரிப்பதில் பாலை நிலத்தார் உயர்ந்தவராகக் கருதப்படுவர். இதனையே வள்ளுவரும்
“செல்விருந்தது ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள்-86)
என்றார். வந்த விருந்தினரைப் பேணி வர இருக்கிற விருந்தினரைப் பேணக் காத்திருப்பவன் உயர்ந்தோரின் விருந்தாளியாக இருப்பான் என்று விருந்தின் மேன்மையை எடுத்துரைக்கின்றார். மேட்டு நிலத்தில் விளைந்த நெல் அரிசிச் சோற்றையும் நாய் பிடித்து வந்த உடும்பின் இறைச்சியையும் பாலை நிலத்தார் உண்டனர்.
அரண்மனைகளில் உணவும் விருந்தும்
சங்ககாலத்தில் மன்னர்கள் விருந்து படைத்தனர். அத்தகைய விருந்தோம்பலின் தன்மையை வள்ளுவம் எடுத்துரைத்துள்ளது.
“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்”(குறள் 88)
விருந்தோம்பல் எனும் அறச்செயலில் ஈடுபடாதவர் தமது செல்வத்தை முயன்று காத்து அதனை நாடி வருவார் எவரும் இலர் என்பர். சோழநாட்டு மன்னனான கரிகாலன் தன்னைத் தேடி நாடி வந்த பொருநனுக்கும் அவன் சுற்றத்தினருக்கும் முதலில் நடந்த களைப்பு தீர பொற்கலங்களில் அரண்மனைப் பெண்கள் கள்ளைக் கொடுக்கின்றனர். அதனை உண்டு வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர். அடுத்து கொழுத்த செம்மறிக்கிடாயின் இறைச்சித் துண்டங்களை இரும்புக் கம்பியில் கோர்த்துச் சுட்டுத் தருகின்றனர். பல வடிவங்களில் பல சுவைகளில் பணியாரங்கள் தரப்படுகின்றன.முல்லை அரும்பை ஒத்த மெல்லிய அரிசிச் சோறும் கொடுக்கப் பெற்றது.
கரிகாலன் தந்த மிகுதியான இறைச்சி உணவால் பொருநன் அவன் சுற்றத்தினர் ஆகியோருக்கு கொல்லையை உழுத கொழுப்போன்று பற்கள் மழுங்கி விட்டன. அதனால் ஊன் உணவையே வெறுக்கின்ற நிலை ஏற்படுகின்றது.
“கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊண்தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாது ஊண்முனிந்து ஒருநாள்” (பொருநர் ஆற்றுப்படை117-119)
சுற்றத்தாரை உபசரித்ததோடு மட்டுமல்லாமல் ஏழு அடி தூரம் நடந்து சென்று அவர்களை வழியனுப்பினான். விருந்தினரை உபசரிப்பதில் கரிகாலன் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். வள்ளுவமும்
“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள் 90)
மென்மையான தன்மையுடைய அனிச்ச மலர் முகர்ந்த அளவில்தான் வாடும். மானம் உடைய விருந்தினரின் முகமோ மாறுபடப் பார்த்த அளவிலேயே வாடிவிடும் என விருந்து உபசரித்தலை எடுத்துரைக்கின்றது. வள்ளுவரின் வாக்கினை மிஞ்சிய அளவில் கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு அளவிடற்கரியது.
புலால் அற்ற உணவு
சங்க காலத்தில் பெரும்பாலோர் புலால் உணவையே உண்டனர். வேதியர் புலால் அற்ற உணவையே உண்டனர். இராசன்னம் என்ற ஒரு வகை நெல்லில் செய்த சோற்றோடு மாதுளம் பிஞ்சைப் பிளந்து மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் கலந்து பசு வெண்ணெயிலே வேகவைத்த பொரியலோடு உண்டுள்ளனர். உழவர் வீடுகளில் பலாப்பழம், வாழைப்பழம், இளநீர், நுங்கு போன்றவைகள் இருந்த செய்தி குறிப்படப்பட்டுள்ளன.
சிற்றுண்டி
மதுரைக் கடைத் தெருக்களில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அங்கு பாகில் சமைத்த மெல்லிய அடைகள் செய்யப் பெற்றன. பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட சுண்ட சருக்கரை கூட்டிப்பிடித்த ‘மோதகம்”என்ற ஒருவகைத் திண்பண்டம் செய்யப்பெற்றது. அப்ப வாணிகர் பாகொடு சேர்த்துக் கரைத்த பல சிற்றுண்டிகளை செய்தனர் எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.
தேறல் வகைகள்
சங்க காலத்தில் கொடுப்பவனாகிய அரசன் முதல் பெறுபவனாகிய புலவன் வரை தேறல் உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர். தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள் என்று பல வகையாகக் கள் வகைகள் இருந்தன. குறிஞ்சி நில மக்கள் அங்கு கிடைக்கும் மூங்கில் அரிசியைக் கொண்டு, அத்துடன் தேனையும் கலந்து கள் தெளிவைத் தயாரித்தனர். அதை மூங்கில் குழாய்களில் வைத்திருந்தனர். அது “தேக்கள் தேறல்” என்று அழைக்கப்பெற்றது (முருகு-195)
கள் எவ்வாறு தயாரிக்கப் பெறுகிறது எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இன்று தென்னை, பனை இவைகளில் இருந்து எடுக்கும் பதநீர் போன்று பழங்காலத்தில் இக்குடிவகைகள் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
சங்க காலத்தில் உணவே மருந்தாகப் பயன்பட்டது. சங்ககால உணவுமுறை உடலைச் சீரமைக்கும் வகையிலும் ஆரோக்கிய உணவாகவும் இருந்தது. விருந்தோம்பல் பண்பும் சிறப்புடையதாகச் செயல்பட்டது. தன் வாழ்நாள் எப்பொழுது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்ற தருவாயில், ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டு வருகின்ற வேளையில் சாகா வரம் பெற்ற அரிய வகை நெல்லிக்கனியைக் கொடுத்தான் ஒரு மன்னன். அக்காலத்தில் உள்ள விருந்தும் விருந்தோம்பலும் உணவும் சிறப்பாகக் கருதப்பட்டது. இக்கால உணவு முறையில் மருந்தையே உணவாக உட்கொண்டு வாழும் சூழ்நிலையில் இன்றைய நடைமுறை வாழ்க்கை உள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.