கடந்த சில பகுதிகளில் செயற்கைப் பல் கட்டுவதைப் பற்றிப் படித்தோம்.
இந்தப் பகுதியில் பற்களில் சாயம் பூசுவது குறித்தும், பற்களில் ஓவியம் வரைவது குறித்தும் படிக்கலாம்.
ஆதிமனிதனின் கரும்பலகை பற்கள்தான்.
பற்களின் மீது கருப்பு சாயம் பூசுதல், அதில் பல நிறங்களிலான மெருகுப் பூச்சு பூசுவதையும் நீண்ட காலமாகச் செய்து வந்திருக்கிறான் மனிதன்.
பண்டையக் கலாச்சாரங்களில், பற்களில் கருப்புச் சாயம் பூச்சு பூசிக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.
* தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசனியா நாடுகளில் ஆஸ்ட்ரோனேசியன், ஆஸ்ட்ரோஏசியாட்டிக், கரா-டாய் மொழி பேசும் மக்கள் பற்களுக்குக் கருப்புச் சாயம் பூசியிருந்திருக்கின்றனர்.
* ஜப்பான் நாட்டில் மெய்ஜி காலத்துக்கு முன் இணையை தேடும் இளம்பெண்கள், ஆண்களைக் கவர, தங்களது பற்களில் கருஞ்சாயம் பூசி இருக்கின்றனர்.. அது காலப்போக்கில் திருமணமான பெண்களின் அடையாளமாக மாறிப் போய்விட்டது.
* அமெரிக்கப் பெருநிலப் பகுதியில் வடபெரு மற்றும் ஈக்குவாடர் நாட்டு சூவர் இன மக்கள் பற்களுக்குக் கருஞ்சாயம் பூசி இருக்கின்றனர்.
* மீசோ அமெரிக்க மக்கள் பற்களை விரும்பி மாற்றி அமைத்திருக்கின்றனர்.
* பிலிப்பைன்ஸ் பழங்குடி மக்கள் பற்களைக் கருமைபடுத்தி இருக்கின்றனர்.
பற்களுக்கான குறள்கள்
* வாய் நோய் தடுக்க வழியாம் எயிறையும்
நோயின்றி கூர்ந்து நினை.
* அவரவர் வாய்க்கும் அருமை மெய்க்கும்
அவரவர் பல்லே அணி.
- தஞ்சாவூர் ஹரணி
|
மேற்காணும் இனக்குழுக்கள், தங்கள் பற்களைக் கருமைப்படுத்த கீழ்க்கண்டக் காரணங்களே முதன்மையாக இருந்திருக்கின்றன.
* தங்கள் திருமணத் தகுதிகளை தங்கள் இனக்குழு ஆண்களுக்குத் தெரியப்படுத்தல்.
* உடல், மனப்பக்குவத்தை தெளிவுபடுத்தல்.
* பற்களிலான கரும்பூச்சு முக அழகை அதிகரிப்பதாக நம்பினர்.
* கரும்பூச்சு பல் சொத்தையைத் தடுத்து, பற்களைப் பாதுகாப்பதாக எண்ணினர்.
* முகத்தின் வெள்ளை பவுடர் பூச்சுக்கு, பற்களின் கரும்பூச்சு எதிர்மறை அழகைத் தருவதாகக் கருதினர்.
கரும்பூச்சுக்கு உதவும் பொருட்களை பழங்குடி மக்கள் ‘மிஸ்ஸி’ என்றனர். இரும்பு மற்றும் காப்பர் சல்பேட், டானின் படிகப்பொருள், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவைகளைப் பற்களின் கரும்பூச்சுக்குப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
பற்களைக் கருமைபடுத்த சிலர் தேனீரில் இரும்பைக் கலந்து வேதிமாற்றம் செய்வர். பின்னர், அந்தத் திரவத்தில் கிராம்பு, சோம்பு, இலவங்கபட்டை இடித்துப் போட்டு பருகியிருக்கின்றனர்.
தென்கிழக்குப் பகுதி இஸ்லாமியக் கலாசாரத்திலும் பற்களில் கரும்பூச்சு நடந்துள்ளது. கரும்பூச்சு பூசும் மீசி கலவையை நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் புனிதம் என அறிவித்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது.
கிழக்கு இமயப்பகுதி, நேபாளம், மேகாலயா, அஸ்ஸாம், நாகலாந்து பழங்குடியின மக்கள் மரப்பிசினைப் பயன்படுத்தி, பற்களைக் கருப்பாக்கி உள்ளனர்.
குறிப்பிட்ட சில நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்து மக்களும் பற்களைக் கருப்பாக்கியுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாலிக் முஹம்மது ஜெயாசி என்கிற கவிஞர் 13 ஆம் நூற்றாண்டில் சித்ரோகரை ஆண்ட பத்மாவதி ராணியின் புன்னகையைப் புகழ்ந்து பாடிய பாடலில், ‘கருப்பு இதழ்களில் வைரப்புன்னகை கொண்ட ராணியே!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பற்களுக்குக் கருப்புச் சாயம் பூசுவது நல்லதா? கெட்டதா? என்று பார்த்தால், அபூர்வமாகச் சில நேரங்களில் நல்லதும் நடந்திருக்கிறது.
லாவோ மற்றும் வியட்னாமின் கம்மு இனப்பெண்கள் நியூகினியா வால்நாட் கொட்டைகளையும் குரோட்டன் தோட்டசெடி தண்டுகளையும் கிராட்டோ ஜைலம் பூஞ்செடியின் அடிமரத்தையும் சுட்டுச் சாம்பலாக்கிப் பற்களில் பூசி உள்ளனர். பரிசோதனைக் கூட ஆய்வில் நியூகினியா வால்நட் சாம்பல் வாயின் எச்சிலில் பெருகும் கிருமிகளை பெரும் அளவில் கட்டுபடுத்துவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய ஜப்பானில் மணப்பெண்கள் ஒககுரோ எனும் (Ohaguro) சடங்கைச் செய்திருக்கினறனர்.
பற்களில் கனிமிஜுன்டோ திரவத்தை பூசியிருக்கின்றனர். அந்தத் திரவத்தில், பெர்ரிக் அசிடேட், வினிகர், டானின் கலந்திருக்கின்றனர்.
பண்டைய எகிப்தில் எகிப்திய மக்கள் படிமக்கல்லும், வினிகர், ஒயினும் கலந்த பானத்தைக் குடித்துப் பற்களை வெண்மைபடுத்தி இருக்கின்றனர்.
ரோமர்கள் சிறுநீரைக் குடித்து பற்களை வெண்மைபடுத்தி இருக்கின்றனர்.
சில ஆசிய மக்கள் தேங்காய் ஓடை எரித்துச் சாம்பலாக்கி, பற்களில் பூசியுள்ளனர்.
வியட்நாமியர்கள் ஒரு சிறுபூச்சியின் உமிழ்நீரிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்புப் பிசினைப் பயன்படுத்தி, பற்களை கருப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
1870 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கம் ஒககுரோ பற்களை கருப்பாக்கும் முறையைத் தடை செய்தது. இருப்பினும், ஜப்பானிய நாடக நடிகர்களும், திரைப்படக் கலைஞர்களும் கருப்புச் சாயத்தைப் பயன்படுத்திக் கொண்டுதானிருக்கின்றனர். கெய்சா மாவட்டத்தில் நடைபெறும் ஜப்பானியத் திருவிழாக்களில் கபுக்கியில் ஒககுரோ காணப்படுகிறது. ஜப்பானிய சாமுராய் மக்களின் அடையாளம் கரும்பூச்சுப் பற்கள்தான். அவர்கள் வெள்ளைநிறப் பற்கள் மிருகங்களுக்கு தீயசக்திகளுக்கு காட்டுமிராண்டிகளுக்கு உரியவை என நம்பினர்.
ஆனால், பல் மருத்துவர்கள் கருப்பு நிறப் பற்களை பல் ஆரோக்கியச் சீர்கேடு என்கின்றனர். பண்டைய மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்திட வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ பற்கள் கருப்பாக இருக்கக் கீழ்க்கண்ட காரணங்களை கூறலாம்.
* பற்கறைகள் - க்ரோமோஜெனிக் பேக்டீரியாக்களான ஆக்டினோமைசிஸ், பிரிவோடெல்லா மெலானினோஜெனிக்கா பற்கறைகளை ஏற்படுத்துகின்றன.
* பெர்ரிக் சல்பேட் போன்ற இரும்பு படிவுகள் பற்களைக் கருமைப்படுத்துகின்றன.
* காப்பி, தேநீர், ஒயின் பருகுதல் பற்களுக்கு நிற மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் கேடுகளையும் விளைவிக்கின்றன.
* புகைப்பிடித்தல் மற்றும் புகையிலையை வாயில் போட்டு சுவைத்தல் போன்றவை பற்களில் கறைகளை ஏற்படுத்துகின்றன.
* சில வேளைகளில் ஈறுகளின் தேய்மானத்தால் பற்களின் வேர்ப்பகுதி வெளியில் தெரிகிறது. அந்நிலையில் வேர்பகுதி நுனிப்பகுதியை விடக் கருமையாகக் காணப்படும்.
* பற்சொத்தையால் பற்களின் மேற்பூச்சு சிதைவடைந்து, மஞ்சள் நிறமாகத் தெரியும்.
* மரபியல் ரீதியாகவும் பற்கள் ஆரோக்கியமற்று மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* வயது முதிர்வால், பற்கள் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து சற்று மஞ்சள் கலந்த கருப்பு நிறத்திற்கு மாற்றமடைகிறது.
* டெட்ராசைகிளின் போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பற்களின் நிறத்தை மாற்றுகின்றன.
* விபத்துகளும் காயங்களும் பற்களின் நிறத்தை மாற்றுகின்றன.
* பற்சிப்பி குறைவளர்ச்சி (Enamel Hypoplasia), பற்திசு பகுதி அழுகல் (Pulp Necrosis), அழுகிய அல்லது சிதைந்த பற்கள், ஈறு அழற்சி போன்றவைகளும் பற்களின் நிறத்தை மாற்றிவிடுகின்றன.
* கால்சியம் குறைபாடு பல்வேறு பல் பிரச்சனைகளை உருவாக்குகிறது. பற்களில் காணப்படும் வெண்புள்ளிகள் பற் சொத்தைக்கான தொடக்கம் எனலாம்.
அசைவ உணவு உண்பவர்களின் பற்களுக்கு ஆயுள் குறைவு!
எம்.முத்துப்பாண்டி, மதுரை.
அசைவம் உண்பவர்களுக்கு பற்கள் நாற்பது வயதில் விழுந்துவிடும். ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு எண்பது வயதானாலும் பல் விழாது என்கிறார்களே, இது உண்மையா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
உங்கள் பெற்றோரின் பற்களில் மஞ்சள் நிறமிருந்தால் உங்களுக்கும் மஞ்சள் நிறப் பற்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல பல் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள், உங்கள் பற்களை லேசர் முறையில் சுத்தம் செய்து, பற்களை பெராக்ஸைடு ப்ளீச் செய்து, பற்களை வெண்மைப்படுத்துவர். நாள்தோறும் இரு முறை பல் துலக்கினால் போதும். கூடுதலாகப் பல் துலக்கி, உங்களது பற்களையும், ஈறுகளையும் பலவீனப்படுத்த வேண்டாம்.
|
கால்சியம் குறைபாடால் பற்கள் எளிதில் உடையும் ஈறுகளில் அரிப்பு ஏற்படும், வாயைச் சுற்றி மரத்துப் போகும், விழுங்குவதில் சிரமம் ஏற்படும், விரல் நகங்கள் நொறுங்கும்.
பற்களைப் பலப்படுத்த கால்சியத்தை அதிகளவு உட்கொள்ள வேண்டும். பால், கீரை பருப்பு வகைகள், சில வகை மீன்கள், கால்சியம் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். கால்சியம் கலந்த பற்பசைகள் நல்லது. அமில இனிப்பு வகைகளைத் தவிர்ப்போம். குளிர்பானம் வேண்டவே வேண்டாம். பல் மருத்துவர் ஆலோசனைப்படி ப்ளூரைடு சிகிச்சையினை மேற்கொள்ளலாம்.