‘எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு!’
- இந்த வாக்கியத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரையிலான ஆண் பெண் என்று அனைவரும் சொல்கின்றனர்.
‘STRESS’ என்கிற வார்த்தையை தமிழில் ‘மன அழுத்தம்’ எனக் கூறுவர். மன உளைச்சல், உடல் உளைச்சல், மன இறுக்கம், தகைவு என்கிற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சரி, மன அழுத்தம் என்றால் என்ன?
மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மனரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச்செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்பு விளைவு அல்லது பின் விளைவாகும்.
இந்த மன அழுத்தம் என்கிற சொல்உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
மன அழுத்தத்திற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
* தொடர்ந்து நான்கு பருவத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் அல்லது பெரும்பான்மயான பாடங்களில் தோல்வியடைந்து ஐந்தாவது பருவத்தேர்வை ஒரு மாணவன் எதிர் கொள்ளும் போது
* இருபது வருடங்களாக உதவி இயக்குநராக இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், புதிதாகக் குறும்படம் எடுத்த ஒருவன் ‘பான் இந்தியா’ படம் எடுத்து புகழ்பெற்ற இயக்குனர் ஆகும் போது
* தொடர்ந்து நான்கு கருச்சிதைவுகளுக்கு பிறகு ஐந்தாவது கருவாவது தங்க வேண்டுமே என ஒரு பெண் பதைபதைப்பது
* ஆயிரம் பாட்டி வைத்தியங்களை செய்தும் தலைமுடி கொட்டும் போது
- இவைகள்தானென்றில்லை, பயனற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மக்கள் மன அழுத்தம் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
பச்சரிசிப் பல்லழகன்
“அன்று
மழலை மிட்டாய் பார்க்கிற
அதிசயமாய்
ஈறு தெரியச் சிரித்து
அன்பே என்று
நான் நீட்டிய
ரோஜாக்குள்
தெறித்து வீழ்ந்ததொரு
முத்துப்பரல்
கோபத்தில் நீ வீசிய
கன்னத்து அறையில்
நேற்று
நம் குட்டிம்மா
தன் முதல் பால்பல்லை
மண்ணில் புதைக்க
உள்ளங்கைகளில்
ஏந்திக் கொண்டே
ஓடிய போது
நெக்கு விடத் தொடங்கின
ஓராயிரம் பட்டு
ரோஜாக்கள் ”
- எஸ். கயல்
|
மன அழுத்தங்களில் ஐந்து வகை இருக்கின்றன.
1. உடனடி மன அழுத்தம் (Acute Stress)
உடனடித் தேவை மற்றும் சவால் உடனடி மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ரோலர் கோஸ்டர் சுற்றல் நேர்மறை மன அழுத்தம். சிறு கார் விபத்து எதிர்மறை மன அழுத்தம். உடனடி மன அழுத்தத்தினால் மனிதன் தப்பித்து ஓடு அல்லது தாக்கு என்கிற மனோபாவத்துக்குள் தள்ளப்படுகிறான். விளைவு ஹார்மோன் கூத்தும் உடலியல் மாற்றமும்.
2. நிகழ்வுகள் சார்ந்த உடனடி மன அழுத்தம் (Episodic Acute Stress)
ஒரு மனிதருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏற்படும் மன அழுத்தங்கள், நிகழ்வுகள் சார்ந்த உடனடி மன அழுத்தம் எனலாம். குழப்பமான ஒழுங்கீனமான வாழ்க்கை முறை கொண்டோருக்கு இவ்வகை மனஅழுத்தம் கட்டாயம் ஏற்படும். இத்தனை மணி நேரத்தில் இவ்வளவு செய்து முடிக்க வேண்டிய கட்டாயம். ஒருவருக்கொருவர் இடையேக் கொள்கை மோதல்கள், கட்டாயக் கடமைகள் இவை மூன்றும் நிகழ்வு சார்ந்த உடனடி மன அழுத்தங்களை ஏற்படுத்தும்.
3. நீண்ட நாட்களாகத் தொடரும் மனஅழுத்தம் (Chronic Stress)
பணியிடச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் நீண்ட நாள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இதய நோய், பதட்டம், மனச்சோர்வு பீடிக்கும்.
4. பயனும் நிறைவும் தரும் மன உளைச்சல் (Eustress)
பதவி உயர்வுக்காக, ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்காக, தனிப்பட்ட இலக்கை அடைவதற்காக ஏற்படும் ஒரு நேர்மறையான மன அழுத்தமே பயனும் நிறைவும் தரும் மன உளைச்சல் எனப்படும். இது அதிகமானாலும் உடலுக்கும் மனத்திற்கும் கேடுதான்.
5. அதிர்ச்சி மன அழுத்தம் (Traumatic Stress)
ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வில் கடுமையாக பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வர முடியாமல் தத்தளித்தல்.
நீண்டநாள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் தீராத நோயாலும், ஆறாத காயத்தாலும் அவதியுறுவர். கோபம், பதட்டம், மனச்சோர்வு, துக்கம், தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் தலை விரித்தாடும். பொருளைத் திருட்டு கொடுத்தோர், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோர், இயற்கைப் பேரழிலில் சிக்கியோர் நீண்டநாள் மன அழுத்தத்தில் உழல்வர். மரபியல் ரீதியாகவும் ஒருவரை நீண்டநாள் மனஅழுத்தம் பீடிக்கும். உடற்பயிற்சி இன்மை, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை நீண்ட நாள் மனஅழுத்தத்தை பரிசளிக்கும். இதய நோய்கள் குடல் நோய்கள் இவர்களுக்கு வரும்.
மனஅழுத்தம் உயிர் கொல்லி நோயா? இல்லவே இல்லை.
உலகில் 18 முதல் 24 வயதினரில் 66 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், 65 வயதினரில் 25 சதவீதம் பேர்தான் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரில் 0. 6 சதவீதம் ஆண்களும், 3. 5 சதவீதம் பெண்களும் தற்கொலை பண்ணிக் கொள்கின்றனர்.
மனஅழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்கள் இதோ-
* கார்டிசால்
* எபிநெப்ரின் (அட்ரினலின்)
* நார்எபிநெப்ரின் (நார்அட்ரினலின்)
பல் மருத்துவம் சார்ந்த மருத்துவத்தொடரில், மன அழுத்தம் குறித்து எதற்கு என இதனைப் படிப்பவர்கள் கேட்கக்கூடும்.
மனப்பதட்டம், தொடர் சோகம், அவநம்பிக்கை, அன்றாடச் செயல்பாடுகளில் விருப்பமின்மை ஏற்படுத்தும். மனிதரின் வாயிலுள்ள நுண்ணுயிர் கூட்டத்துக்கும் மனித உடல் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. என்.ஒய்.யூ. ரோரி மெய்யர்ஸ் செவிலியர் கல்லூரி தனது ஆய்வில் மனப் பதட்டம் மனிதரின் வாயிலுள்ள நுண்ணுயிரிகள் கூட்டத்தைக் கடுமையாக பாதிக்கிறது என கண்டுள்ளது.
மனிதரின் வாய்க்குள் பேக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் கூட்டம் நிறைந்திருக்கும். வாய் நுண்ணுயிரிகள் கூட்டத்துக்கும் மனஅழுத்தத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டுபிடித்து விட்டால் மனித மன இறுக்கங்களை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்கிறார் ரோரி மெய்யர்ஸ் செவிலியர் கல்லூரி துணை புல முதல்வர் பெய் வூ. 2009 ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுக்குள் 18 அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட 15000 அமெரிக்க இளைஞர்களிடம் அந்த செவிலியர் கல்லூரி கேள்விகளை தந்து பதில்களைப் பெற்றது.
நுண்ணுயிர்கள் தொகுப்பு வாயில் குறைவாக உள்ளவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருத்தனர். புகைப்பிடித்தல், வேறு நோய்களுக்கு மருந்து உண்ணல், உணவுப் பழக்கவழக்கம், மது அருந்தல் மற்றும் மோசமான பல் பராமரிப்பு வாயில் நுண்ணுயிரிகள் தொகுப்பை வெகுவாகக் குறைக்கும். இதேப் போன்று, வாய் நுண்ணுயிரிகள் ஏற்ற இறக்கத்தால் டிமென்சியா நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
பல் மருத்துவப் பட்டப்படிப்பு தேவைதானா?
க. சின்னதாஸ் , போடிநாயக்கனூர்.
நாள்தோறும் நான்கு முறை பல் துலக்குபவருக்கு மன அமைதியுடன் நல்ல உடல் நலமும் ஏற்படும் என்பது உண்மையா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
பொதுவாக, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் எதையும் செய்ய வேண்டும் என்கிற ஈடுபாடு சிறிதும் இருக்காது. சுய சுத்தம் பேண மாட்டார்கள். பிறரைக் கவரும் வகையில் ஆடைகள் அணிய மாட்டார்கள். கவனமாய், முழுமையாய்ப் பல் துலக்க மாட்டார்கள். ஒவ்வொரு முறை உணவு உண்ட பின் வாயைக் கொப்பளித்து, காலை, இரவு பல் துலக்கி நாக்கைச் சுத்தபடுத்தி மிடுக்காக இருந்து பாருங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளைச் சாதாரணமாக, எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். வாழ்க்கையில் பல வெற்றிககளை அடைவீர்கள்.
|
மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், பல் தொடர்பான பிரச்சனைகள் ஏராளமாய் வரும். அதனைத் தவிர்க்க;
* உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இயங்குதல் நல்லது.
* முடியாதவைகளைத் தேவையில்லை என்று ஒதுக்கி விட வேண்டும்.
* சரிவிகித உணவு உண்ணல் சிறப்பு.
* போதுமான தூக்கம்.
* சுயப்பராமரிப்பு தேவை.
* நேர நிர்வாகம் அவசியம்.
* பணிக்கிடையே ஓய்வு தேவை. மாதம் ஒருமுறை சிற்றுலா செல்லலாம்.
* தனக்கான எல்லைகளை வகுத்தல்.
* தினம் இருமுறை பல் துலக்கல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவர் ஆலோசனை பெறுதல் நலம்.
* தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி.
என்று பல், வாய் நலம் காத்து மன அழுத்தம் போக்கலாம்.