76. சதபல விரதம்
இது ஆவணி மாத கிருஷ்ண பட்ச அஷ்டமியில் அநுட்டிப்பது. இதில் ரோகிணி நட்சத்திரம் கூடின் நலம். புத வாரம், சோம வாரம் கூடினும் நலம். இதில் விரதமிருப்பவன் பிரேதயோனி அடையினும் நீங்குவன்.
77. கிருஷ்ண ஜன்மாஷ்டமி
இது ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமியில் ரோஹிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி உபாசிப்பது.
78. ஜேஷ்டா விரதம்
புரட்டாசி மாதம் பட்ச அஷ்டமியில் ஜேஷ்டாதேவியை உபாசித்து அநுட்டிப்பது. இது இலட்சுமி பரிஹாரத்தின் பொருட்டு அநுட்டிப்பது. இது மூன்று தினம் அநுஷ்டிக்கின் உத்தமம்.
79. தூர்வாஷ்டமி விரதம்
இது புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமியில் அநுஷ்டிப்பது. வெண்ணிறமாய்ப் படர்ந்த வடக்குச் செல்லும் அறுகால் உன்னைப் போல் வேரோடிச் சந்ததி வளர்ந்திருக்க வென்று சிவமூர்த்தியையும் கணேச மூர்த்தியையும் பூசிப்பது.
80. மஹாலட்சுமி விரதம்
இது புரட்டாசி மாதம் சுக்கிலாஷ்டமி முதல் பதினாறு நாள் லட்சுமியை நோக்கி விரதமிருப்பது. இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் பெறுவர்.
81. மஹாஅஷ்டமி விரதம்
இது ஐப்பசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமியில் தட்ச யஞ்ஞ நாசனியாகிய காளியை எண்ணி அநுட்டிப்பது.
82. நவமி - ஸ்ரீராமநவமி விரதம்
இது சித்திரை மாதம் சுக்லபட்ச நவமியில் அநுஷ்டிப்பது. இத்திதி மத்யான்ன வியாபினியாய்ப் புனர்பூச நட்சத்திரம் கூடியதாயின் நலம்.
83. சரஸ்வதி புஸ்தக மண்டல விரதம்
இது ஐப்பசி மாதம் சுக்ல பட்ச நவமியில் சரஸ்வதியை எண்ணிப் பூசிப்பது.
84. அட்சய நவமி விரதம்
இது கார்த்திகை மாதம் சுக்கில பட்சத்தில் நவமி திதியில் அநுஷ்டிப்பது. இது துவாபரயுகாதி இந்நாளில் கூச்மாண்டன் என்னும் அசுரன் விஷ்ணுமூர்த்தியால் கொல்லப்பட்டான். இத்தின முதல் 3 நாள் துளசி தளத்தைக் கைக்கொண்டு விரதமிருக்கின் கன்னியாதான பலத்தையடைவர். இத்தினத்தில் துளசியை விஷ்ணுவிற்கு விவாஹம் நடத்தினால் பெரும் புண்ணியம் அடைவர்.
85. தசமி விரதம் - தசஹாதசமி விரதம்
இது ஆனி மாதம் சுக்கில பட்ச தசமியில் அநுஷ்டிப்பது. இது ஸம்வச்சரத்தின் முகமாகக் கூறப்பட்டிருக்கிறது. இத்தினத்தில் ஒரு நதியை அடைந்து ஸ்நான தானாதிகள் செய்து நியமத்துடன் இருப்பவர் பத்து வித பாவங்களிலிருந்து நீங்குவர். ஆதலால் இதற்குத் தசஹரதசமி என்று பெயர்.
86. திக்தேவதா விரதம்
இது ஆடி மாதம் சுக்ல தசமியில் அநுஷ்டிப்பது. இதில் திக்தேவதைகளை அந்தத் திக்குகளில் ஸ்தாபித்துப் பூசித்தல் வேண்டும்.
87. தசாவதாரவரதம்
இது புரட்டாசி மாதம் சுக்ல தசமி விஜயதசமியில் தசாவதார சுவர்ண பிரதிமை செய்வித்துப் பூசை முதலியன செய்து விரதமிருப்பது.
88. விஜயதசமி
இது ஐப்பசி மாதம் சுக்ல பட்ச தசமியில் தாரகோதயம் விஜயமென்று கூறப்படுதலால் விஜயதசமி எனப்படுகிறது. இத்தினத்தில் வெற்றியை விரும்பினவர்கள் தேவியைப் பூஜிக்க. வன்னி பூஜையும் இத்தினத்தில் உண்டு.
89. ஏகாதசி - வஞ்சுள ஏகாதசி விரதம்
அருணோதயத்தில் தசமி சம்பந்தமாய்ச் சூரியோதயத்தில் ஏகாதசி வியாபித்திருத்தல் நலம் என்பர். இத்தினத்தில் ஔதும்பர பாத்திரமாகிய அத்தி மரத்தால் செய்த பாத்திரத்தில் நீர் கொண்டு விரத சங்கற்பஞ் செய்து கொண்டு விரதமிருந்து விஷ்ணுமூர்த்தியைய் பூசித்து அந்நாளில் ஆகாரம் முதலியன இல்லாமலும், பகலிற் தூங்காமலும், இரவில் விஷ்ணுவை. மந்திர பூர்வமாகப் பூசித்துப் பரான்னம் புசியாமலுமிருந்து மறுநாள் விஷ்ணுவைப் பூசித்துத் துளசிதளத்துடன் தீர்த்தார்ப்பணம் பெருமாளுக்குத் தர்ப்பணஞ் செய்து நெல்லிக்கனியுடன் பாரணஞ் செய்யில் சுத்தியடைகிறான். இத்தினத்தை “தத்ரசுதாசிகை ஏகாதசி யுதாத்வாதசி உன்மீலினீ; த்வாதசி வா;த்ததே சேத்ஸாவியஞ்ஜலி” என்பதால் வஞ்சுள ஏகாதசி என்பர்.
90. சுக்ல கிருஷ்ண ஏகாதசி
மார்க்கசீர்ஷ சுக்ல பட்சத்தாயினும், கார்த்திகையிலாயினும் ஏகாதசி வியாபிப்பது. இதில் தசமியில் ஒரு வேளை பூசிப்புள்ளவனாய் ஏகாதசியில் நியமத்துடன் கணேசரைச் சோடச உபசாரத்துடன் பூசித்துத் சதுரச்ர வேதிகையில் காரெள் பரப்பி அதன் மீது பதினாறு இதழ்க் கமலம் எழுதி அதன் நடுவில் கும்பம் நிறுத்தி அதில் நிறையக் காரெள் நிரப்பிக் கறுப்பு வஸ்திரம் தரித்து, இரண்டு அரசந்தளிர் பஞ்ச ரத்னமிட்டுச் சங்கர்ஷ்ணாதியரையும், கண மாத்ருகைகளையும், ஷேத்ர பாலகரையும், பூசித்து மற்றப் பக்கத்தில் சுக்ல ஏகாதசியின் பொருட்டு வெள்ளெள் பரப்பி, வெள்ளை வஸ்திரம் கலசத்திற்கு அகணிந்து, மேற்கூறிய தேவ கணங்களைப் பூஜித்துக் கும்பத்தை எடுத்து விட்டு லட்சுமி நாராயணனை அவனது அஷ்ட லட்சுமிகளுடனும் பரிஜனங்களுடனும் ஆவாகித்துப் பூஜித்து, திக்பாலகர்களையும், மற்றத் தேவர்களையும் பூசித்துத் தானாதிகள் செய்து விரதமிருந்து மறுநாள் ஸ்நானாதிகள் முடித்து ஓமாதிகள் செய்து தேவதாஹவி கொடுத்து விரதமிருந்து மறுநாள் பாரணஞ் செய்க. இவ்வாறு செய்தவர் விஷ்ணுபதம் பெறுவர்.
91. கோபத்ம விரதம்
ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் அநுஷ்டிக்கப்படுவது. பசுக்கள் கட்டுமிடத்தில் கோமயத்தால் மெழுகிட்டுப் பச்சரிசி மாவில் 33 இதழ்க்கமலம் எழுதிப் பஞ்சவர்ணத்தால் சோபிக்கச் செய்து பூசித்து அதன் மத்தியில் சர்வதோபத்ர மண்டலத்தில் விஷ்ணு பிரதிமை பொன்னால் செய்வித்து விதிப்படி பூசித்து ஹோமஞ் செய்து கன்றுடன் கூடிய பசு வினை ஆசார்யருக்குத் தானஞ் செய்து வேதியர்க்கு அன்னமளிப்பது. இதை அநுஷ்டிப்போர் சர்வ காமியங்களையும் அடைவர்.
92. கார்த்திகை சுக்ல ஏகாதசி விரதம்
இதில் நியமத்துடன் விஷ்ணு ஸதாபனஞ் செய்து பூசிப்பது. இது பீஷ்மர் சரசயனத்திலிருந்து பாரத முடிவுவரைக் கண்ட நாளாதலின் இதில் பீஷ்ம பஞ்சக விரதம் இருப்பர்.
93. மார்கழி ஏகாதசி விரதம்
இது மார்கழி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசியில் அநுஷ்டிப்பது. இந்நாள் தேவர்க்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரைக் களிப்பித்த நாள். இதில் உதயம் ஏகாதசி, மத்யம் த்வாதசி, அந்தியம் திரயோதசி விரதமிருக்கின் ஆயிரம் ஏகாதசி பலம் உண்டு.
94. வைதரணி விரதம்
இது மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் அநுஷ்டிப்பது. இது பீஷ்மர் சரசயனத்திலிருந்து நாள். இதில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு தர்ப்பணாதிகள் செய்து கோபூசை செய்து விரதமிருப்பது.
95. துவாதசி - சைத்ர சுக்ல த்வாதசி விரதம்
இது சித்திரை மாதத்தில் சுக்கில பட்ச துவாதசியில் விரதமிருப்பது. இது எல்லா நலமும் தரும்.
96. வைசாக சுக்ல துவாதசி விரதம்
வைகாசி மாதம் சுக்ல பட்சத்வாதசியில் விரதமிருப்பது. இதில் விஷ்ணுவைப் பூசிக்கின் எல்லா நலமும் அடைவர்.
97. ஆஷாட சுக்ல துவாதசி விரதம்
ஆடி மாதம் சுக்ல த்வாதசியில் விஷ்ணுவை எண்ணிச் செய்வது. இதை அநுஷ்டிப்போர் சகல சித்தியும் பெறுவர்.
98. ச்ராவண சுக்லத்வாதசி விரதம்
ஆவணி மாதம் சுக்ல த்வாதசியில் விரதமிருப்பது. இதில் பவித்ராரோபணஞ் செய்து விரதம் இருப்பது.
99. வாமன ஜயந்தி விரதம்
இது புரட்டாசி மாதம் சுக்ல பட்ச த்வாதிசியில் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய நாள். இந்நாளில் தேவர் பொருட்டுப் பலியை அடக்கத் திரி விக்ரம அவதாரங் கொண்ட வாமன மூர்த்தியைப் பூஜித்து விரதம் இருப்பது.
100. க்ஷூராப்தி சயன விரதம்
இது கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசியில் அநுஷ்டிப்பது. இதில் லட்சுமி நாராயண பூஜை செய்து விரதமிருப்பது. இதில் விஷ்ணுமூர்த்தி க்ஷூராப்தி சயனத்திலிருந்து பிருந்தாவனத்தில் எல்லாத் தேவைகளாலும் பூசிக்கப்பட்டனர்.