கார் டப்பிங் ஸ்டுடியோ நோக்கிப் பறந்தது.
காரின் பின்னிருக்கையில் டப்பிங் ஆர்டிஸ்ட் அஹமது கபீரும் டப்பிங் இன்சார்ஜ் தாசரதியும் அமர்ந்திருந்தனர்.
“நாம டப் பண்ணப்போற படத்தின் டைட்டில் என்ன சார்?”
“தி பெர்ஷியன் கேட். பல்வேறு இனப்பூனைகள், பூனைகளின் தலைவன் பதவிக்குப் போட்டி போடுவதே... கதை. நீங்க மியாவ்விலேயே ஆயிரம் வெரைட்டி காட்ட வேண்டும். உங்க டப்பிங் வாய்ஸ் ஆங்கில ஒரிஜினலையும் தோற்கடிக்க வேண்டும்!”
‘மியாவ்’ என வாய்க்குள் சொல்லிப் பார்த்தான் அஹமது கபீர்.
“ரொம்ப கஷ்டம் சார் டப்பிங்குக்கு வேற ஆள் பாருங்க சார்!”
“மெஜஸ்ட்டிக் வாய்ஸ் உங்களுடையது. ஹீரோ பூனைக்கு உங்க வாய்ஸ்தான் மகா பொருத்தமாக இருக்கும். நாலு நா வேலை. நல்ல பேமென்ட் வாங்கித் தருகிறேன்!”
போர்டிகோவில் கார் நின்றது.
அமெரிக்காவிலிருந்து பட நிறுவன அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர். அவர்களிடம் அஹமது கபீர் அறிமுகப்படுத்தப்பட்டான்.
திரையில் ஒரிஜினல் வாய்ஸுடன் கார்ட்டூன் படம் ஓடியது.
தமிழ் டப்பிங் வசனங்கள் அடங்கிய பேடை அஹமது கபீரிடம் கொடுத்திருந்தனர்.
கபீர் டப்பிங் பேசினான்.
டப்பிங் இன்சார்ஜ் உதடு பிதுக்கினான். “சரியா வரல கரீம் சார். உங்களை பூனைகளோட ராஜாவா பாவிச்சிக்கங்க. குரலில் மிடுக்கும் இருக்கனும், மியாவ்வும் இருக்கனும்…”
ஏறக்குறைய நான்கு மணிநேர போராட்டத்துக்கு பின் அஹமதுகபீர் இரண்டாயிரம் அடி படத்துக்கு டப்பிங் பேசி முடித்தான்.
லஞ்ச் பிரேக்.
ஒளு செய்து விட்டு அஹமது கபீர் தொழுதான்.
கபீர் தொழுவதை தாசரதி பார்த்துக் கொண்டே இருந்தான்.
“கபீர் ஒரு சந்தேகம் கேட்கலாமா?”
“கேளுங்கள்!”
“தொழ ஆரம்பிக்கும் போது மும்முறை கை உயர்த்தி தொப்புளுக்குக் கீழ் கோர்த்துக் கொண்டீர்கள். கடவுளின் கவனத்தைத் தொழும் உங்கள் பக்கம் திருப்ப அப்படி செய்கிறீர்களா? உங்கள் செய்கை அதிகாலை சேவல் உலகை எழுப்பக் கூரை ஏறி கூவுவது போலிருந்தது…”
கபீர் சிரித்தான்.
“அதனை நாங்கள் தக்பீர் எனக் கூறுவோம். விரல்களை ஒன்று சேர்த்து இரு கைகளை கிப்லா நோக்கி உயர்த்துவோம். காதுகளில் உயர்த்திய கைபடக் கூடாது. ஒரு நாளின் ஐமுறை தொழுகைகளில் 15 முறை தக்பீர் கூறப்படுகின்றன. தக்பீரின் போது நாங்கள் ‘அல்லாஹுஅக்பர்’ எனக் கூறுவோம்!”
“அல்லாஹுஅக்பர் என்றால் என்ன அர்த்தம்?”
“அல்லாஹு மிகப் பெரியவன் என அர்த்தம்!”
“தக்பீர் பற்றி கூடுதல் தகவல்கள் கூறுங்களேன்...”
“தக்பீர் என்பது இறைவனிடம் முழுமையாகச் சரணடைவதற்கான ஒரு வடிவம். பிரார்த்தனை செய்பவர் தினசரி சலாத்தை வழங்க நிற்கும் போது, அல்லாஹ்வுக்கு பணிந்து அவர் / அவள் காதுகள் / தோள்களில் கைகளை உயர்த்துகிறார்!”
“ஓ அப்படியா?”
“தக்பீர் அகந்தை அகங்காரம் நீக்கி மனத்தாழ்மை வளர்த்து சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு அடிபணிய மட்டுமே. அல்லாஹுஅக்பர் பணிவின் தொடக்கம் இறைவனின் வல்லமை…”
“நைஸ்!”
“தொழுகையின் போது, தொழுகை அல்லாத செயல்களை தடுப்பது தக்பீர் தஹ்ரிமா (முதல் தக்பீர்). மீண்டும் மற்ற விஷயங்களை ஆகுமாக்குவது ஸலாம் கொடுத்தல்!”
“ஓஹோ!”
“தக்பீர் தஹ்ரிமாவுக்கு முன் நிய்யத் மிக முக்கியம். நிய்யத் என்றால் இறையச்சத்துடன் கூடிய தொழும் நோக்கம். நின்ற நிலையில் மட்டுமே தக்பீர் கூறப்பட வேண்டும். அல்லாஹு அக்பர் என்கிற இரட்டை வார்த்தை சொல்லாமல் தக்பீர் கட்ட முடியாது. தனியாகத் தொழுவது அவசியத்தின் பேரில். தக்பீர் தஹ்ரிமா பள்ளிவாசல் இமாம் உடைய தக்பீர் தஹ்ரிமா உடன் சேர்ந்து இருந்தால் நிறைய நன்மை கிடைக்கும்!”
“யா... யா...”
“அல்லாஹ் மிகப்பெரியவன் என்கிற வாக்கியம் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து மிகப்பெரியவர் எனலாம். இந்துக்கள் தங்கள் தெய்வம் மிகப்பெரியது எனலாம். மொத்தத்தில் இறைவன் மிகப் பெரியவன்!”
“சரியாகச் சொன்னீர்கள் கபீர்!”
“தக்பீர் தொழுகையின் போது மட்டும் சொல்லப்படவேண்டிய ஒன்றா?”
“இல்லை. தொழுகையில், இன்பத்தில், துன்பத்தில், பிறப்பு இறப்புக்குப் பின், மகிழ்ச்சி மற்றும் நன்றியுண்ர்வின் போது, ஈத் பண்டிகையின் போது, ஹஜ் யாத்திரையில், புரட்சியில், போரில் தக்பீர் கூறப்படுகிறது. முஸ்லிம் அரபுகளால் பயன்படுத்தப்படும் அரபு வெளிப்பாடு தக்பீர். தக்பீர் முழக்கத்தை அரபு கிறிஸ்துவர்களும் பயன்படுத்துகின்றனர்!”
“நல்ல தகவல்!”
“வங்கதேசத்தில் 2013ல் சபார் கட்டடம் இடிந்து 1129பேர் இறந்தனர். பதினேழு நாட்களுக்கு பின் கட்டட இடிபாடுகளிலிருந்து ரேஷ்மா பேகம் உயிருடன் மீட்கப்பட்டார். அப்போது மீட்பாளர்கள் அல்லாஹு அக்பர் எனக் கோஷமிட்டனர். அரபு கால்பந்து வர்ணனையாளர்கள் வர்ணனையின் போது, அல்லாஹு அக்பர் கூறுகின்றனர். ஈரானிய புரட்சியில் தக்பீர் கூறப்பட்டுள்ளது. இந்திய ஒவைசி அபுதாஹிர்கள் பதவி பிரமாணத்தின் போது, அல்லாஹு அக்பர் எனக் கோஷமிட்டனர். பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள் தக்பீர் கூறுகின்றனர்”
“தக்பீரின் பெருமைகள் இவ்வளவு இருக்கா?”
“ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு கொடியில் அல்லாஹுஅக்பர் உள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் 18வது பிரிவின் படி ஈரான் கொடியில் அல்லாஹு அக்பர் 22முறை எழுதப்பட்டுள்ளது. ஈராக் கொடியிலும் அல்லாஹு அக்பர். பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பிரிட்டீஸாரை எதிர்த்த எதிர்ப்பு இயக்கம் அல்லாஹு அக்பர் பொறிக்கப்பட்ட சிவப்புக்கொடி ஏந்தியது. ஏமனில் ஹுதிகள் பயன்படுத்திய கொடியில் அல்லாஹுஅக்பர் பச்சை நிறத்தில்…”
“தொழும் போது தக்பீர் கூறிவிட்டுக் கைகளை எங்கு வைக்க வேண்டும்?”
“தொப்புளுக்கு மேல் தக்பீர் கட்டுவதே சரியான முறை. ஹனபி வகை முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழேக் கைகளைக் கட்டிக் கொள்கின்றனர். வஹாபி வகை முஸ்லிம்கள் மார்பில் கைகளைக் கட்டிக் கொள்கின்றனர். ஆப்பிரிக்க முஸ்லிம்கள் கைகளைக் கட்டிக் கொள்ளாமல் தொங்க விடுகின்றனர்!”
“கைகளை எங்கு மடக்கினால் என்ன? பிச்சைப் பாத்திரத்தை மனிதர்களிடம் நீட்டாமல், இறைவனிடம் நீட்டினால் சரி”
“லிபியாவின் 1969-2011 தேசியகீதம் அல்லாஹு அக்பர். 1977ல் எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்தின் டைட்டில் அல்லாஹு அக்பர். ஈரானில் ஒரு கிராமப் பகுதிக்குப் பெயர் அல்லாஹு அக்பர். பிராண்ட் நுபியனின் 1993 ஆல்பம் அல்லாஹு அக்பர். லூனஸ் மத்தப் அல்லாஹு அக்பர் என்கிற பாடலைப் பாடியுள்ளார். வடதுருக்கி மலையில் அல்லாஹு அக்பர் தக்வான் பகுதி உள்ளது”
“மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை எதிரி நம்பிக்கையாகக் கருதுவது ஏன்?”
“இஸ்லாமின் கட்டுகோப்பு அவர்களைப் பயமுறுத்துகிறது. குடி, விபச்சாரம், வட்டி, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான இஸ்லாம் உலகக் கார்ப்பரேட்களின் ட்ரில்லியன் வருமான வழிகளை அடைக்கிறது”
“இருக்கலாம்!”
“வேறு எதாவது கேள்விகள்?”
“மொஹரம் ஊர்வலத்தில் “நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்” எனக் கோஷமிடுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன?”
“நஃரதுன் என்றால் உரக்கச் சப்தமிடுதல் எனப் பொருள். நஃரா எனவும் பொருள்படும். நகரா என்பது முரசு வாத்தியம். ‘யா அல்லாஹ் ஜாதி மதம் இனம் யாவும் தேவையில்லை. அல்லாஹ்வின் கருணை மட்டும் வேண்டும்’ என்பதே நாரே தக்பீர் அல்லாஹு அக்பரின் பொருள்!”
“ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கோஷமிடுகிறார்களே?”
“அவர்களின் கொடூரமான வன்முறைகளை மறைக்க அல்லாஹு அக்பர் கோஷமிடுகின்றனர். அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல. அவர்களின் செயல்களை தூய்மையான முஸ்லிம்கள் ஆதரிப்பதில்லை. அந்த மனித மிருகங்கள் அல்லாஹு அக்பரை நாஜி சல்யூட் பாணியில் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு எங்கள் வலிமையான கண்டனங்கள்!”
“தக்பீர் முழக்கம் காதில் கேட்டால், நாகூர் ஹனிபாவின் பாடலைக் கேட்டிருக்கிறேன். கபீர்… அற்புதமான பாடல். மத நல்லிணக்கத் தேவதை நாகூர் ஹனிபா...”
“மத நல்லிணக்கத் தேவனாக டைரக்டர் ஏ பி நாகராஜனையும் வரிக்கலாம்!”
“இந்து மதத்தில் பிள்ளையாரைக் கவர பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்வார்கள், உக்கி போடுவார்கள். காண்டாமணியை அடிப்பார்கள். நாம்தான் இறைவனின் கவனத்தைப் பெற முயற்சிக்கிறோம். மீன்தொட்டி மீனை சிறுவன் இடைவிடாது வேடிக்கை பார்ப்பது போல, இறைவன் நம்மை நொடிக்கு நொடி கண்காணிக்கிறான். மனித நேயத்துடன் கூடிய இறைபக்தியே இறைவனுக்கு உவப்பானது!”
“உண்மைதான் தாசரதி!”
“அல்லாஹ் மிகப்பெரியவன் என்கிற கோஷத்தைப் போலவே நானும் கோஷமிட விரும்புகிறேன். சிவாய நமஹ! ஓம்சிவாய நமஹ!”
“லக்கும் தீனுக்கும் வலியதீன். உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு. பரஸ்பரம் மதித்து அங்கீகரித்து மகிழ்ச்சியாக வாழ்வோமாக!”
மீண்டும் டப்பிங் ஆரம்பித்தது “மியாவ் நானே ராஜா!” என்றான் அஹமது கபீர்.