சுவரில் தொங்கும் தினசரி நாட்காட்டியிலிருந்து முந்தைய நாள் தேதியைக் கிழித்தான் பர்ஹான் முகமது.
“அத்தா!” அழைத்தான் பர்ஹானின் மகன் ஹம்சா.
“என்ன அம்சா?”
“காலம் நேரம் எல்லாம் நாம உருவாக்குனதா இறைவன் உருவாக்குனதா அத்தா?”
“பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் மட்டும்தான் காலம் நேரம் எல்லாம். பிரபஞ்சங்களையும் உயிர்களையும் படைக்கும் போதே இறைவன் காலத்தையும் நேரத்தையும் படைத்து விட்டான். பூமி தன்னைத்ததானே ஒருமுறை சுற்றி முடிக்க 24மணி நேரமாகிறது. அது ஒரு நாள். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 365.25 நாட்களாகிறது. அது ஒரு வருஷம். ஒரு மணி நேரத்தை 60நிமிடங்களாகவும் ஒரு நிமிடத்தை 60நொடிகளாகவும் பிரித்திருக்கிறோம். ஒரு நாளில் பனிரெண்டு மணிநேரம் பகல் பனிரெண்டு மணிநேரம் இரவு...”
“நாம் எந்த வகை காலண்டரை பயன்படுத்தி வருகிறோம்?”
“உலகில் பெரும்பான்மையானவர்கள் கிரிகோரியன் காலண்டரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஜுலியன் காலண்டரை கைவிட்டு அக்டோபர் 1582ல் போப் கிரிகோரி XIII கிரிகோரியன் காலண்டரை அமுல்படுத்தினார். கிரிகோரியன் காலண்டரை சூரியகாலண்டர் எனவும் கூறலாம். கிரிகோரியன் காலண்டரில் 12 மாதங்கள். ஜனவரி (31), பிப்ரவரி (28) - (லீப் வருடத்தில் 29), மார்ச் (31), ஏப்ரல் (30), மே (31), ஜுன் (30), ஜுலை (31), ஆகஸ்டு (31), செப்டம்பர் (30), அக்டோபர் (31), நவம்பர் (30), டிசம்பர் (31)”
“உலகில் எத்தனை வகையான காலண்டர்கள் உள்ளன அத்தா?”
“நாற்பது வகையான காலண்டர்கள் உலகில் புழங்குகின்றன மகனே. ஜுலியன் காலண்டர், இஸ்லாமிக் காலண்டர், ஹிந்து காலண்டர், பெங்காலி காலண்டர், ரோமன் காலண்டர், புத்தக் காலண்டர், ஹிப்ரு காலண்டர், இண்டியன் நேஷனல் காலண்டர், விக்ரம் சம்வாத், பகாய் காலண்டர், நானாசாகி காலண்டர், லூனிஸோனார் காலண்டர், அஸிரிரியன் காலண்டர், கொரியன் காலண்டர், எதியோப்பியன் காலண்டர், ஜப்பானீஸ் காலண்டர், தாய் சோலார் காலண்டர், பெர்பெர் காலண்டர், அர்மீனியன் காலண்டர், திபெத்தியன் காலண்டர், பர்மீஸ், மலையாளம், இரானியன், புராதண கிரீக், பிரன்ச் ரிபப்லிகன் காலண்டர் என காலண்டர்களை பட்டியலிடலாம்…”
“தமிழ் காலண்டரை பற்றி சொல்லுங்கத்தாI”
“தமிழ் காலண்டர் தமிழ் பேசும் எல்லா நாடுகளிலும் புழங்குகிறது. தமிழ்நாட்டில் இலங்கையில் மலேசியாவில் சிங்கப்பூரில் மொரிஷியஸில் தமிழ் காலண்டர் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் காலண்டர் பண்பாட்டு ரீதியாக மதரீதியாக விவசாய ரீதியாக புழக்கத்தில் இருக்கிறதுI”
“ஓ அப்படியா அத்தா?”
“தமிழ் வருடத்துக்கு பொது ஆண்டு 365நாட்கள் (8760 மணிகள் அல்லது 525600 நிமிடங்கள் அல்லது 31536000நொடிகள். நெட்டாண்டுக்கு 366நாட்கள்…”
“தமிழ் மாதங்கள் எத்தனை?”
“பன்னிரெண்டு. சித்திரை (31), வைகாசி (31), ஆனி (32), ஆடி(31), ஆவணி(31), புரட்டாசி (31), ஐப்பசி (29 அல்லது 30), கார்த்திகை (29 அல்லது 30), மார்கழி (29), தை (29அல்லது 30), மாசி (29அல்லது 30), பங்குனி(31)”
“சூப்பர்”
“தமிழ் காலண்டர் அறுபது வருட சுழற்சி கொண்டது. பிரபவ, விபவ, சுக்கில, ப்ரமோதூத, ப்ரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வ சித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்டசச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ஏக்தாட்சி, குரோதன, அட்சய ஆகியனவாகும்”
“அப்பாடி எவ்வளவு பெரிய பட்டியல்?”
“27நட்சத்திரங்கள் மற்றும் 12ராசிகளின் அடிப்படையில்தான் தமிழ்மாதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.”
“முஸ்லிம்களுக்கென்று உள்ள காலண்டர் பெயர் எது அத்தா?”
“ஹிஜ்ரி காலண்டர்”
“அதனை பற்றி சொல்லுங்கத்தா”
“நபிகள் நாயகம் மரணத்துக்கு பின் இரண்டாவது கலிபாவாக பதவியேற்றார் உமர் இப்னு அல் கத்தாப். இவர் கிபி 634-644 வரை ஆட்சி செய்தார். இஸ்லாமியருக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டுமென்று உமர் முடிவு செய்தார். மார்க்க அறிஞர்களுடன் கூடி ஆலோசித்தார். அவர்கள் நான்கு தெரிவுகளை உமர் முன் வைத்தனர். இஸ்லாமிய நாட்காட்டி கீழ்க்கண்ட நான்கு நிகழ்வுகளின் ஒன்றில் ஆரம்பிக்கலாம் என்றனர்”
“அந்த நாலு நிகழ்வுகள் என்னென்ன?”
“நபிகள் நாயகம் பிறப்பு (ஒன்று), நபிகள் நாயகம் நபித்துவம் பெற்ற நாள்(இரண்டு), நபிகள் நாயகமும் நபி தோழர்களும் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்த நாள் (மூன்று), நபிகள் நாயகத்தின் மரணம் (நான்கு)”
“எந்த நிகழ்வை தெரிவு செய்தார் இரண்டாவது கலிபா?”
“நபிகள் நாயகமும் நபிதோழர்களும் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த நாளை உமர் தேர்ந்தெடுத்தார். இஸ்லாமிய நாட்காட்டிக்கு ‘ஹிஜ்ரி’ என பெயர் சூட்டப்பட்டது. ஹிஜ்ரி சந்திரனை அடிப்படையாக கொண்ட காலண்டர்…”
“இஸ்லாமிய நாட்காட்டி எந்த வருடம் ஆரம்பித்தது?”
“ஜுலைமாதம் 15ஆம்தேதி கிபி 622ஆம்ஆண்டு ஹிஜ்ரி காலண்டர் தொடங்கியது”
“ஹிஜ்ரி காலண்டரின் மாதங்களின் பெயர்களை கூறுங்களேன்”
“முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜுமாதா அல் ஊலா, ஜுமாதா அல் உக்ரா, ரஜப், ஷஅபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜு. பனிரெண்டு மாதங்களில் ரஜப், துல்காயிதா துல்ஹஜ்ஜு, முஹர்ரம் சிறப்பானவை. ரபியுல் அவ்வல் மாதபிறை 12திங்கட்கிழமை நபிகள் நாயகம் பிறந்தார்கள். அவரது பிறந்தநாளைதான் ‘மீலாது நபி’ என கொண்டாடுகிறோம். ரஜப் மாதத்தில் போரிடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாதத்தில்தான் நூஹ் நபி கப்பல் கட்டி மக்களை பிரளய வெள்ளத்திலிருந்தது காப்பாற்றினார். ஷஅபான் மாதத்தில் தான். ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதம் இறக்கப்பட்டது. ரமலானின் கடைசி பத்து நாட்களில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது. பன்னிரெண்டாவது மாதம் துல்ஹஜ்ஜில் ஐந்தாவது கடமையாக ஹஜ்யாத்திரை நாம் மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எல்லா மாதங்களும் நல்ல மாதங்களே எல்லா நாட்களும் நல்ல நாட்களே...”
“இன்று இஸ்லாமிய நாட்காட்டி தேதி என்ன?”
“ஹிஜ்ரி 1445 முஹர்ரம் ஆறு”
“ஒரு முக்கியமான கேள்வி அத்தா”
“கேளு”
“உலகில் 200 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக கூறியுள்ளீர்கள். முஸ்லிம்கள் எல்லாரும் இஸ்லாமிய காலண்டரை பின்பற்றுகின்றனரா?”
“அரபு நாடுகளில் இஸ்லாமிய காலண்டர் பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அறவே இல்லை என கூறலாம். ஆங்கில கிரிகோரியன் காலண்டரை தான் நாம் அனைவரும் பின்பற்றுகிறோம்...”
“வாட் எ பிட்டி”
“மதரஸாக்களில், நிக்காஹ் பதிவேட்டில், நிக்காஹ் அழைப்பிதழ்களில், பள்ளிவாசல்களில் இஸ்லாமிய காலண்டர் தேதிகளை குறிப்பிடுகிறார்கள்”
“எனக்கு எதாவது அறிவுரை சொல்ல விரும்புகிறீர்களா, அத்தா?”
“ஆமாம்... உலகமக்களோடு ஒட்டி வாழ ஆங்கில காலண்டரை இடது கையில் வை. தமிழ்நாட்டில் வசிக்கும் இந்தியர் நாம். நம் தாய்மொழி தமிழ். அதனால் தமிழ் காலண்டரை வலதுகையில் வை. இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்திருக்கிறோம் நாம். இறைவன் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆகவே, ஹிஜ்ரி காலண்டரை உன் இதயத்தில் வை...”
“டெரிபிக் அறிவுரை அத்தா”
“இது உனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்துக்கும் பொருந்தும்…”
“கரக்ட்”
“மகனே, வருகிற வெள்ளிக்கிழமை சனிக்கிழமை முஹர்ரம் 9, முஹர்ரம் பத்து ஆஷுரா நோன்பு நோற்போம்”
“ஓகே... டன் அத்தா” வலது கட்டை விரல் உயர்த்தினான் ஹம்சா.
“எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்” என்றான் பர்ஹான் முகமது.