முகமது அலி ஜின்னாவை அவரது இரண்டு மகன்கள் குண்டுக்கட்டாய்த் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் வந்தனர். ஜின்னாவுக்கு வயது 62. பழைமைவாத முஸ்லிம். சமயம் சொன்னதையும் கடைப்பிடிப்பார், சமயம் சொல்லாததையும் சொன்னதாகச் சொல்லிக் கடைப்பிடிப்பார்.
“டாக்டர் வணக்கம். இவர் எங்கள் தந்தை. இவருக்குக் கடந்த ஒரு வருடமாகவேக் கடுமையான மலச்சிக்கல். அவ்வப்போது ஆசனவாயில் இரத்தம் வழியும். ஒரு வருடத்தில் 6 கிலோ எடை குறைந்திருக்கிறார். வயிற்றில்
அசௌகரியம் உணர்கிறார்!”
‘விடுங்க என்னை… நான் வீட்டுக்கு போகனும்…. எனக்கு வைத்தியம் தேவையில்லை. நோயைக் கொடுப்பவன் இறைவனே, நோயைக் குணப்படுத்துவதும் இறைவனே!’’
“பேசாமல் இருங்கத்தா…”
முதலில் மருத்துவர், ஜின்னாவைக் குப்புறப் படுக்க வைத்து கையுறை கைகளால் குதப்பகுதியை ஆராய்ந்தார். பின் 50 நிமிடங்கள் கோலோனோஸ்கோபி வைத்துப் பெருங்குடலை நுணுக்கமாகப் பார்த்தார். பின் கோலான் பயாப்ஸி எடுத்தார்.
பயாப்ஸி பரிசோதனைக் குறிப்பைப் பார்த்த மருத்துவர் இரு மகன்களிடம் “உங்கள் தந்தைக்கு ஆரம்ப நிலைப் பெருங்குடல் புற்றுநோய். தகுந்த மருத்துவம் செய்தால் குணப்படுத்தி விடலாம்!”
“போய்யா டாக்டர். உன் பையை நிரப்பிக்க எனக்கு வைத்தியம் சொல்றியா?”
அறைக்குள் மருத்துவ மனநல ஆலோசகர் ஜீனத் நுழைந்தாள்.
“இவரை என் அறைக்குக் கூட்டிட்டு வாங்க!”
ஜீனத்தின் அறையின் இருக்கையில் தந்தையை அமர வைத்தனர் மகன்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா!”
“வஅலைக்கும் ஸலாம்…”
“உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்கிறது, இஸ்லாத்துக்கு எதிரானதுன்னு நம்புகிறீர்களா?”
“ஆமாம்!”
“நான் ஒரு இஸ்லாமியப் பெண். மருத்துவத்துடன் மார்க்கத்தையும் படித்திருக்கிறேன். குர்ஆன் மருத்துவ அறிவியலை ஆதரிக்கிறது. குர்ஆனில் நோயைக் குணப்படுத்துதல் தொடர்பான ஆறு வசனங்கள் உள்ளன. சூரா தஹா
மற்றும் சூரா இன்ஷிரா. இரண்டுமே குர்ஆனிய மருத்துவத்தில் உள்ளடக்கம். இஸ்லாமிய மருத்துவம் என்பது அறிவியல், தத்துவம், ஆன்மிகம் மூன்றும் தனித்துவமாக இணைந்த சங்கமம்…”
‘ம்ப்ச்!”
“ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சிகிச்சை உண்டு. அந்த நோய்க்கு முறையான சிகிச்சை தந்தால் அது அல்லாஹ்வின் விருப்பத்தால் குணமாகும். ருக்யா, தெய்வீக பரிகாரங்கள், இஸ்லாமிய பிரார்த்தனைகள், சூத்திரம், நோய்க்கு நாம் சாப்பிடும் மருந்து அனைத்தும் அல்லாஹ்வின் விதியை மாற்றுமா? அவை அனைத்துமே அல்லாஹ்வின் விதியில் ஒரு பாதி. மருந்தைத் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனை அதி முக்கியம்…”
“நீ சொல்வதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நடந்த, நடக்கும், நடக்கப் போகும் ஒவ்வொரு விஷயமும் அல்லாஹ்வால் தீர்மானிக்கப்படுகிறது. நோய் நமக்கு மனத்தாழ்மையை கற்றுத் தருகிறது. திமிராக இருக்கும் நாம்
நோய்வாய்ப்பட்ட பின் நம் வாழ்க்கைமுறையை மறுபரிசீலினை செய்கிறோம். ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு சோர்வும் ஒவ்வொரு ஆரோக்கியமற்ற நேரமும் உண்மையில் பாவ சுத்திகரிப்பு செய்முறை!”
“இன்னும் சிலபடி இறங்கி வாருங்கள் அத்தா. இஸ்லாத்தைப் பொறுத்தவரை மருத்துவம் ஒரு மரியாதைக்குரிய தொழில். ‘ மனிதரின் நோய்களுக்கு மருத்துவரின் கைகளில் மருந்தை அனுப்பி வைத்தியம் பார்க்கிறேன்’ என்கிறான் அல்லாஹ். மேலும் எந்த மருத்துவர் ஒரு நோயாளியை காப்பாற்றுகிறாரோ அந்த மருத்துவர் மனித குலத்தை முழுவதுமாக காப்பாற்றியவராகிறார் (அல்குர்ஆன் 5:32) மருத்துவச் சிகிச்சையை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. சிகிச்சையைத் தேடுவது உங்கள் பின்வாங்க முடியாத ஒரு கடமையாகும். முதுமையைத் தவிர எல்லா நோய்களுக்கும் சிகிச்சை உண்டு. ஹலாலான மருந்துகள் கொண்ட சிகிச்சை முறை சாலச் சிறந்தது!”
“என்னை மூளைச் சலவை செய்கிறாய் அம்மா!”
“தேன் மனித குலத்துக்கு தேவையான அருமருந்து. அத்திப்பழம், திராட்சை, பேரீச்சை, மாதுளம் பழங்கள் நான்குமே மருத்துவப் பழங்கள். வெங்காயம் பூண்டு போன்றவை புற்று நோய்க்கு எதிரானவை என்கிறது இஸ்லாம்!”
“வெறும் தேனைத் தொடர்ந்து குடித்தால் என் பெருங்குடல் புற்றுநோய் குணமாகுமா?”
“இந்த அறியாமை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை. முஸ்லிம் சமுதாயம் மருத்துவத்தில் உலகத்திற்கே வழிகாட்டியது. கிபி 872 இல் கெய்ரோவின் துலும் மருத்துவமனை நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தன. பாக்தாத், முஸ்தான், சிரியா, கோர்டோபா, திரிபோலியிலும் பல்லாயிரக்கணக்கான மருத்துவ புத்தகங்கள் இருந்தன. துனிசியாவில் கிபி 830ல் கொய்ரவான் மருத்துவமனை நிறுவப்பட்டது. கிபி 981 இல் பாக்தாத்தில் அல் அகுடி மருத்துவமனை திறக்கப்பட்டது!”
“இதற்கும் நான் மருத்துவத்துக்கு உடன் படாமல் முரண்டு பண்ணுவதற்கும் என்ன சம்பந்தம்?”
“மேற்கத்திய உலகத்துக்கு மருத்துவ அறிவை வாரி வழங்கிய இஸ்லாமிய சமுதாயம் பழைமைவாதம் பேசி இருளில் சிக்கிக் கொண்டது”
“பழைமைவாதம் பெரிய தெய்வக் குற்றமா? பாரம்பரியத்தை பேணுவது தவறாகுமா?”
“மேலும் கேளுங்கள் அத்தா. ஜுனடி ஷாபூர் பாக்தாத் நகரங்களில் மருத்துவர் அறிவு வளர்க்கப்பட்டது. மருந்தியல் நச்சியல் நுணுக்கங்கள் கற்றுக் கொள்ளப்பட்டன. நோயை கண்டறியும் திறன் மேம்பட்டது. மய்யபாரிகின் மருத்துவமனையில் அறிவியல் சங்கம் நிறுவப்பட்டது!”
முகமது அலி ஜின்னா இறுகி மௌனித்தார்.
“ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை என்கிற இருளை விட்டு வெளி வரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் இலக்கியம், முஸ்லிம்களின் விஞ்ஞானம் மற்றும் மருத்துவமே அடிப்படை. இந்த அறிவுதானத்திற்கு ஐரோப்பா பெருமளவுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது. மருத்துவ முன்னோடி முஸ்லிம்களின் பட்டியலை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்...
1. அல்ராஸி(ரோஜஸ்)கிபி844-946–மருத்துவம்:பாக்டீரியா துறையின் முன்னோடி.
2. இப்னு சீனா (அவி சென்னா) கிபி 980- 1037– மருத்துவம்: அல் கானூன் புத்தகம்.
3. அல் ஜஹ்ராவி கிபி 936- கிதாப் அல் தஸ்ரிப் புத்தகத்தை எழுதிய அறுவை சிகிட்சை நிபுணர் பல் மருத்துவரும் கூட.
4. இப்னு ஸுஹ்ர் - அறுவை சிகிச்சை.
5. கல்கசாந்தி - தூக்கநோய் காரணம் கண்டறிந்தவர்.
6. முஹம்மது சகரிய்யா யாஸீன் – மருத்துவம்.
7. அலி இப்னு அப்பான் (20 பாகங்கள் கொண்ட மருத்துவ நூல் எழுதியவர்)
8. இபின் பஜ்ஜா – கிதாப் அன் நபாத்
9. இபின் அல் வாபித் - ரசவாத கலையில் தேர்ச்சி.
10. இபின் அல் தஹபி - நீர் புத்தகம்.
11. அல் கஹாப்
12. இல்ம் அல் அகாமீர்
13. யுஹன்னா பின் மசவாய்
14. அல் பால்கி - உளவியல்
15. அல் மவ்சிலி - கண் புரை மருத்துவர்.
16. இபின் அல் ஹைதம் - நவீன ஒளியியல் தந்தை
17. இபின் அல் நபீஸ் – சிரியா.
18. இபின் ருஷத் அல் குல் லியத் பி அல் திப் -லத்தீன் மொழியில் கோவிஜெட். பெரியம்மை ஒரு மனிதரை ஒரு தடவை தான் தாக்கும் என்கிற புரட்சி கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்!”
இப்ப்டி நிறைய இசுலாமிய மருத்துவர்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம்!
“ இந்தப் பட்டியல் எல்லாம் எனக்கு எதற்கு?”
“இப்படித்தான் இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடுவதாக நினைத்து, ஆங்கில மொழியை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளக்கூடாது என பத்வா கொடுத்தனர். விளைவு இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பதில் பின்தங்கி போயினர்”
“என்னதான் முடிவாக சொல்ல வருகிறாய் அம்மா?”
“உங்களுக்கு வந்திருக்கும் பெருங்குடல் புற்று நோய்க்கு நீங்கள் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் சீக்கிரமே இறந்து, தற்கொலை செய்வதற்கு சமமான பாவத்தைச் சுமந்து நிற்பீர்கள்… மருத்துவத்தை முழு நம்பிக்கையுடன்
மேற்கொள்ளுங்கள். முழுமையாக நலமடைந்து விடுவீர்கள். மருத்துவத்துக்கு இடையே உங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் மருத்துவம் துணை மருத்துவம் விண்வெளி பௌதிகம் கால்நடை மருத்துவம் உயிரியல் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் முத்திரை படைக்கட்டும். நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை சாத்வீக முறையில் உலக மக்களுக்குக் காட்டுவோம்…!”
சூரியனித்தார் முகமது அலி ஜின்னா.
“இன்ஷா அல்லாஹ்… மருத்துவரின் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுவேன்…. உனக்குத் திருமணம் ஆகி விட்டதா?”
“இல்லை!”
“என் இளைய மகன் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராக இருக்கிறான். அவனுக்கு உன்னைப் பெண் கேட்டு விரைவில் உன் வீட்டுக்கு வருகிறோம்... மாஷா அல்லாஹ்!”