(1)
நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு.
“சொல்லுங்க அழகேசன்…”
“ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா… அது பணமாயிடுச்சான்னு…?”
“இல்ல அழகேசன்… இன்னும் பில்லு டிரஷரி போகலை… இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…”
“நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்… பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…”
“இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், ஆகியோரையும் சார்ந்த விஷயமாயிற்றே?
“நீங்க உங்களுக்கா வேணும்ங்கிறபோது செக்ஷன்ல பார்த்து, சொல்லி, காரியத்தை முடிச்சிக்கிறீங்க… வர முடியாத நேரங்கள்ல என்கிட்டே சொல்றீங்க… அப்பவும் அங்கயே சொல்லி வாங்கிக்க வேண்டிதானே? ஏற்கனவே நீங்க ஏற்படுத்தி வச்சிருக்கிற வழக்கம்தானே?”
“ஐயா, வர முடியாத நிலமை. ஸ்பேர்ஸ் எல்லாம் நேற்றுத்தான் வந்திச்சு… இன்னைக்குத்தான் டோசருக்கு மாட்டப் போறாங்க… நான் கட்டாயம் ஒர்க் ஷாப்புல இருந்தாகணும்… இல்லன்னா பழைய ஸ்பேர்செல்லாம் கலெக்ட் பண்ண முடியாது… அதுக்காகத்தான்…”
“சரி பார்க்கிறேன்…”
“பார்க்கிறேன்னு சொல்லாதீங்கய்யா… முடிச்சுக் கொடுங்க… நீங்க சொன்னீங்கன்னா செய்துடுவாங்கன்னுதான் உங்ககிட்டே சொல்றேன்… நீங்களே உதறுனீங்கன்னா எப்படி?”
“அப்போ எப்பவும் ஒரே மாதிரி இருக்கணுங்க… ஒவ்வொரு தடவையும் உங்க விருப்பப்படியெல்லாம் செய்துக்கிறதுங்கிற நடைமுறை கூடாது…”
“சரிங்கய்யா… சரிங்கய்யா… இனிமே அப்டியே செய்துருவோம்ங்கய்யா…”
“ரைட்… நீங்க எதுக்கும் இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு மேல பேசுங்க…”
“சரிங்கய்யா…” - எதிர் முனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஆயிரத்தெட்டு ஐயா… பேச்சுக்குப் பேச்சு ஐயா, யாருக்கு வேண்டும் இதெல்லாம்? நானா இவர்களை இப்படி ஐயா போடச் சொன்னேன்? சாதாரணமாய் எல்லோரும் அழைப்பதுபோல் பொதுவாக ‘ஸார்’ என்றுவிட்டுப் போக வேண்டிதானே? ஏன் போலியாய் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
மனிதர்கள் தங்கள் காரியங்களை முடித்துக் கொள்ள இப்படியான வழிமுறைகளில் பிறரை, வேண்டியவர்களை அணுகுகிறார்கள். பேசும் பேச்சிலும், அதன் தொனியிலும் உள்ள போலித்தனம் கூசச் செய்யவில்லையா? இவனுக்கு இது புது அனுபவம். ஒவ்வொருவரும் தங்கள் தவறுகளை மறைக்க இப்படியான ஆயதங்களைக் கையாள்கிறார்களோ என்று தோன்றியது.
மனதில் உண்மையான மரியாதை இருந்தால் போதாதா? இப்படியெல்லாம் கூறிக்கொண்டு இவர்கள் குழையும் பொழுது எதிலும் சந்தேகம் வரத்தான் செய்கிறது.
‘இருந்து குடிப்போம்’ என்று காபியுடன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான்.
ரமேஷ் அறைக்குள் படிக்க ஆரம்பித்திருப்பது தெரிந்தது. படிக்க என்று உட்கார்ந்து விட்டால் நன்றாய், தீவிரமாய்த்தான் படிக்கிறான். அதில் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. ஆனாலும் அவனை எழுப்பி உட்கார வைப்பது அத்தனை பிரயத்தனமாயிருந்தது. சலிக்காமல் முயல்பவள் சுசீலாதான்.
கணவன், மனைவி இருவரில் ஒருவர் இதைச் செய்துதான் ஆக வேண்டும். இருவருமே ஒதுங்கிக் கொள்ளுதல் என்பது வினையாய்த்தான் முடியும். அத்தோடு மனசாட்சி என்று ஒன்று உள்ளதே?
“என் படிப்புக்காக நீங்க என்ன செய்தீங்க? ரெண்டு பேரும் இழுத்துப் பொத்தித் தூங்கினீங்க… அப்போவே என்னைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தி விட்டிருந்தா நானும் இன்றைக்கு நல்ல மார்க் வாங்கியிருப்பேனில்லையா?” என்று நாளை விரல் நீட்டிக் கேட்டு விடக் கூடாதே?
இந்தக் கேள்வி அடிக்கடி மனதில் தோன்றத்தான் செய்கிறது. இது மட்டும்தானா? இன்னும் என்னென்னவோ! புதிய அலுவலகம் பயமுறுத்துவதுபோல் வீடும் அடிக்கடி பயமுறுத்தத்தான் செய்கிறது.
தோளுக்கு மேல் போய்விட்டான் பையன். இனி தோழன்தானே? ஒரு அளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை. கண்டிப்பதென்ன? நட்பாகவே ஸ்நேக பாவமாகவேதான் சொல்ல முடிகிறது. சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு மேல் குரலெடுத்தால் உடனே சலிக்கிறான்.
“அப்பா, விடுப்பா… விடுப்பா… டென்ஷனாகாதே! “ என்று நம்மைத் தேற்றுகிறான். அல்லது சலித்தவனாய் படாரென்று அறைக் கதவைச் சாத்துகிறான். அது மரியாதைக் குறைவான செயல் என்று தெரியவில்லை. சொல்லப் புகுந்தால் வீட்டை விட்டே ஓடி விடுவான் போலிருக்கிறது. ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.
மனம் பயப்பட்டது. ஒரு குழந்தை வைத்திருப்பவர்களெல்லாம் இப்படித்தான் பயப்படுவார்களோ? என்று தோன்றியது.
“என்ன அப்டியே உட்கார்ந்துட்டீங்க? குளிக்கப் போகலையா?”
-அடுப்படியில் இருந்து குரல் கொடுத்தாள் சுசீலா. அவளுக்குத் தெரியும் அவனின் நியமங்கள். அடுத்தடுத்த காரியங்களை எவ்வளவு நேரத்தில் செய்வான் என்பதை அறிவாள்.
எல்லாவற்றிலும் ஒரு முறைமையும், ஒழுங்கு முறையும் வேண்டும் என்று நினைப்பவன் கணேசன். அப்பொழுதுதான் சிந்தனை ஒருமைப்படும். செய்யும் காரியங்கள் சீர்படும். பிழையின்றிச் செய்ய இயலும் என்பதாகச் சொல்லுவான்.
ஆனால் இந்த முறைமையை ஒருவன் தன்னளவில்தான் கடைப்பிடிக்க முடிகிறதே தவிர மற்றவர்பால் திணிக்க முடியுமா? அல்லது எதிர்பார்க்கத்தான் இயலுமா?
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, முழுக்க முழுக்க அது சாத்தியமாவதில்லை. ஒரு மாதிரி வளைந்து கொடுத்துக் கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது. அப்படி வளைத்தே ஒடித்து விடுவார்கள் போலிருக்கிறது.
“அப்பா, நான் குளிச்சிட்டு வந்திடறேன்… அப்புறம் நீ போகலாம்…” சொல்லியவாறே டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் ரமேஷ். அவனுக்கு ஆறரைக்குள் கிளம்பியாக வேண்டும். காலை ஷிப்ட். அவனைப் பஸ் ஸ்டாப்பில் விட்டு வந்து இவன் புறப்பட வேண்டும்.
‘சட்டுன்னு குளிச்சிட்டு வா… அப்பாவுக்கு லேட்டாயிடும்…’ சுசீலா சொல்ல நினைப்பதைச் சொல்லி விடுவாள். அது அவள் பாணி. விலையுண்டோ இல்லையோ சொல்கிறாள்.
ஆனால் தனக்கு அது சாத்தியமாவதில்லை. அம்மா ஆயிரம் சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் பையன். தான் ஒரு வார்த்தை சொன்னால் பொறுக்க மாட்டேன் என்கிறான்.
வீட்டு நிர்வாகத்தில் இது சாத்தியப்படவில்லை. சரி, ஆபீஸ் நடைமுறையிலாவது சாத்தியமாகிறதா? ஆகிறது. சிலவற்றில் ஆகிறது. பலவற்றில் ஆவதில்லை. கடுமையாக நடைமுறைப்படுத்த முனைந்தால் நிறையச் சிக்கல்கள் உருவாகின்றது. நூல் பிடித்தாற்போல் இருக்க முடியாதுதான். ஆனாலும் ரொம்பவும் நெகிழ்வை எதிர்பார்க்கிறார்கள்.
“இவரென்னங்க, நடப்பு தெரியாத ஆளா இருக்காரு…” காதுபடவே கேட்டிருக்கிறான்.
எது நடப்பு? விதிப்படி நடப்பது நடப்பா? அல்லது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நடத்திச் செல்வது நடப்பா?
வழக்கமான காலை உடற்பயிற்சியை முடித்துத் தியானத்தில் அமர்ந்தவனின் மனதில் எண்ணங்கள் ஒருமுகப்பட்டு இப்படிப் பல கேள்விகளை எழுப்பின.
சற்று நேரத்திற்கு முன் பேசிய அழகேசனின் முன் பணக்கேட்பு அனுமதி விஷயமே அதில்தானே தாமதிக்கிறது என்று தோன்றியது.
(2)
“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான்.
சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான்.
ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது, சொட்டச் சொட்ட ஈரம் தென்பட்டது.
“இந்தத் தண்ணீர் அப்டியே தலைல இறங்கும்… சளி பிடிக்கும்… அதனால ஈரம் போகத் துடைக்கணும்… புரிஞ்சுதா?” - என்றவாறே நன்றாகத் துவட்டிவிட்டான். வேண்டாம் என்று சொல்லும்போது தினமும் எப்படித் துடைப்பது? அந்தச் சிறு பழக்கம்கூட இன்னும் கைவரவில்லை.
நினைத்தபோது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. சுவர் நன்றாக இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். அதுபோல் உடல் ஆரோக்யம் இருந்தால்தான் நன்றாய் கவனமாய் சுறுசுறுப்பாய் படிக்க முடியும். இதெல்லாமும் எத்தனையோ முறை சொல்லியாயிற்று. கேட்டால்தானே?
“வாயைத் திறந்தால் அட்வைஸ்தானாப்பா? பிளேடு போடாதே… பேசாம இரு…”
இப்படி அவன் அடிக்கடி கூறப்போக. உண்மையிலேயே தான்அப்படித்தான் இருக்கிறோமோ என்று ஒரு எண்ணம் வந்து விட்டது இவனுக்கு.
அடிப்படையாய்ச் சில விஷயங்கள் பழகவில்லையென்றால் என்ன பயன்? இதை எப்படி அவனுக்குப் புரியவைப்பது? சொல்ல வேண்டியதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்?
“எல்லாம் போகப் போகச் சரியாப் போகும்… விடுங்க… சும்மா சொல்லிட்டிருந்தா சங்கடப்படுறான்… பெரிய நொச்சுப் பார்ட்டிங்கிறான் உங்களை…”
இவனுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது. இந்தக் காலத்துப் பையன்கள் பேசும் பேச்சும், அவர்களின் பாஷையும் விநோதமாய்த்தான் இருக்கிறது. என்னென்னவோ வார்த்தைகளெல்லாம் உபயோகத்துக்கு வந்துவிட்டன.
மச்சி, மச்சான்… ஜவ்வு பார்ட்டி, கடல போடாத, ஜல்லியடிக்காத, லொள்ளு, ஜொள்ளு, தீயா இருக்கு, இப்படி இன்னும் பல…. - எதுவும் ஒழுக்கத்தின், கட்டுப்பாட்டின் அடையாளங்களாய்த் தெரியவில்லை என்பது மட்டும் நிஜம்.
“என்னங்க… குளிச்சு முடிச்சாச்சா? போர்க் குழாயை மூடுங்க… மோட்டாரை நிறுத்தணும்…-கம்ப்ரெஷர் மோட்டார் ஓடும் சத்தத்தை மீறி சுசீலா கத்தினாள்.
இரண்டு வாளி குளிக்கவில்லை. அதற்குள் தொட்டி நிறைந்து வழிகிறது. ஓரளவுக்கு பூமிக்கடியில் தண்ணீர் இருப்பு நன்றாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும். இப்பொழுது அரை மணிக்குள் நிரம்பி விடுகிறது.
பின்புறம் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் போர்த்துளை போடுவதற்கு நீரோட்டம் பார்த்துச் சொன்னவர் சாமிநாதன்தான். இவன் அலுவலகத்தில் பணியாற்றும் புவியியல் ஆய்வாளர்.
“உங்ககிட்டப் போய் காசு வாங்குவேனா சார்? அதெல்லாம் ஒரு பைசா வேணாம்… நான் வாங்க மாட்டேன்…” கட்டாயமாக மறுத்து விட்டார்.
நீரோட்டம் நிர்ணயம் செய்யும் அந்தக் கருவிக்கான வாடகைக் கட்டணத்தையும் அவர் மறுத்தார். அது கூடாது, தவறு என்று இவன்தான் கட்டாயமாகச் செலுத்தி ரசீது பெற்றான். வெளியே இந்த மாதிரி அவர் பலவாறாக இருக்கக்கூடும் என்று தோன்றியது இவனுக்கு.
மோட்டாரை நிறுத்தினாள் சுசீலா. உடனேயே ரமேஷ் கொல்லைப்புறம் நோக்கி ஓடுவதைப் பார்த்தான்.
கம்ப்ரெஷர் மோட்டார் என்பதால் உடனே ‘ஏர் ரிலீஸ்’ பண்ண வேண்டும். அந்தக் காற்று வேகமான சத்தத்தோடு வால்வைத் திறந்து விடும்போது வெளியேறும். அதைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். ப்ளஸ்-2 படிக்கும் பையன். இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை. படிப்பு, படிப்பு, படிப்பு. அத்தனை படிப்புச் சுமை.
இந்தப் படிப்புச் சுமையினால் அவர்கள் எத்தனை பால்ய சந்தோஷத்தை இழந்திருக்கிறார்கள்?
“கிரிக்கெட் ஒன்றைத் தவிர வேறே என்னெல்லாம் விளையாட்டுத் தெரியும் உனக்கு?”
“ஏம்ப்பா அப்டிக் கேட்கிறே?”
“கேட்கிறேன்… சொல்லு…”
“ஃபுட்பால், டென்னிஸ், வாலிபால், கபடி, பாஸ்கட் பால்…”
“கிட்டி விளையாட்டு தெரியுமா?”
“அப்டீன்னா?”
“ஒரு அடிக்கு ஒரு கம்பு, நல்லா மொழு மொழுன்னு சீவிக்கணும். அதுல கால் அடி அளவுக்கு ஒரு கில்லி… ரெண்டு பக்கமும் முனையிலே சிறைச்சு, நடுவுல மேடா மத்தளம் மாதிரி சைசுல தயார் பண்ணனும். இங்கிலீஷ் எழுத்து ‘வு’ மாதிரி தரைல குழி தோண்டி இந்தக் கில்லியை நுனில வச்சு அந்தப் பெரிய கம்பால எத்தி விடணும். கேட்ச் பிடிச்சா அவுட்டு. தரைல விழுந்ததை எடுத்து ‘வு’எழுத்துக் குழில வச்சிருக்கிற கம்பு மேல படுறமாதிரி எறிஞ்சாலும் அவுட்டு. படலைன்னா பிறகு கில்லியை வச்சு கம்பால அடிக்கணும். இப்படியே விளையாட்டு தொடரும்.
“சரியான லூஸூ விளையாட்டா இருக்கும் போலிருக்கு…”
“அப்படியில்லடா… இதுலேர்ந்துதான் கிரிக்கெட் டெவலப் ஆச்சு… அது தெரியுமா உனக்கு?”
“விடாதப்பா… ரீல் விடாத…” சொல்லிக்கொண்டு படிக்கப் போய்விட்டான் ரமேஷ்.
அன்று ஐந்தாறு பேராகச் சேர்ந்து இப்படி விளையாடிய கிட்டி, பம்பரம், கோலி என்பதான சிறு சிறு விளையாட்டுக்களில் இருந்த இன்பம், அவை அளித்த சந்தோஷம், எல்லாமும் இழந்து விட்டார்களே இன்றைய சிறுவர்கள்?
நினைக்க நினைக்க ஏக்கமாகத்தான் இருந்தது இவனுக்கு.
இன்று காலையில் எழுந்ததிலிருந்து பையன் சிந்தனையாகவே ஆகிவிட்டதோ என்று தோன்றியது.
நேரத்தைப் பார்த்தான். ஆறு பதினைந்து.
“ரமேஷ், ரெடியா?”
“ஷூ மாட்டிட்டிருக்கேம்ப்பா…”
“பாட்டில்ல தண்ணி விடுங்க…”
“அதைத்தான் தேடுறேன்… பாட்டிலைக் காணலை…”
“காணாட்டி என்ன? இன்னொண்ணை எடுத்து நிரப்பி கொடுத்தனுப்புங்க… ஸ்கூல்ல வச்சிட்டு வந்திருப்பான்…” சர்வ சாதாரணமாய்ச் சொல்கிறாள்.
ஒரு பாட்டில் முப்பது, நாற்பது ரூபாய். எத்தனை பாட்டில்கள்தான் வாங்குவது? அதுபோல் எத்தனை பேனாக்கள்தான் வாங்குவது? தொலைப்பதற்கு ஒரு அளவே இல்லையா? கவனமாக வைத்துக் கொள்வதல்லவா நல்ல பழக்கம். காசு, தேவைக்குச் செலவு செய்யலாம். விரயம் பண்ண முடியுமா? சொல்ல முடியாது. சொல்லிச் சொல்லி அலுத்து விட்டான்.
“சதா குற்றம் சொல்லுறது, குறை சொல்லுறது, இதுதான் வேலை உங்க அப்பாவுக்கு…”
சுசீலாவே இப்படிச் சொல்கிறாள். தேவையான அறிவுரைகள், சொல்லப்பட வேண்டாமா? நல்ல விஷயங்கள் எப்பொழுதும் சற்றுத் தீவிரமாகத்தானே வெளிப்படும்? அது மனதில் படிந்தால்தானே பொறுப்புணர்ச்சி வரும்! ஒரு சிறுவன் ஒரு நல்ல பிரஜையாக உருவாவது முக்கியமில்லையா? இன்று அவனை சீராக வடிவமைத்தால்தானே நாளை கலைநயம்மிக்க, கருத்தான பொக்கிஷமாக உருவாவான்?
மனதில் எண்ண ஓட்டங்கள் வரிசையிட புதிய பாட்டிலில் வெந்நீரை நிரப்பிப் பையனிடம் கொடுத்தான்.
கேட்டைத் திறந்து வண்டியை வெளியேற்றினான்.
“ஒன் எம்” போயிருக்கும். ரெண்டு பஸ் மாறிப்போ… அரச மரம் ஸ்டாப்புல கொண்டு விடுறேன்…”
பையன் பின்னால் அமர, வண்டியைக் கிளப்பியபோது மீண்டும் தொலைபேசி மணி அடித்தது.
தினசரி வழக்கம்தானே இது! எல்லோருக்குமான கடனைத்தான் ஒருவனே சுமப்பது என்பதான நடைமுறையை ஏற்றுக் கொண்டாயிற்று. கவனித்துத்தானே ஆக வேண்டும்! புதிய அலுவலகப் பொறுப்பில் எத்தனையோ வித விதமான டென்ஷன். இந்த எண்ணத்தோடேயே தொலைபேசி விபரத்தை வந்து கேட்டுக் கொள்வோம் என்று போய்க் கொண்டிருந்தான் கணேசன்.