(7)
இருக்கட்டுங்கய்யா… பன்னெண்டு மணி வரைக்குமாச்சும் எரியட்டும்... பிறகு அணைச்சிக்கிடுவோம்…- சிரித்துக் கொண்டே சொன்னார் லட்சுமணன்.
நம்ம வீடுகள்னா இப்டி பகல்ல லைட்டுப் போடுவமா? இந்த எடத்துலெ எவ்வளவு வெளிச்சம் இருக்கு… அது போதும்… அணைங்க… கேட்கமாட்டீங்களே… என்றவாறே விளக்கை அமர்த்தினார் லட்சுமணன்.
எந்தமாதிரியான சூழ்நிலைல உட்கார்ந்திருக்கோம்ங்கிறதை விட, எப்படி வேலை செய்கிறோம்ங்கிறதுதானே முக்கியம் லெட்சுமணன்?
அது உள்ளதுதானுங்க… ஆனாலும் பொதுமக்கள் வந்து போகுற இடமில்லீங்களா? பார்வையா இருந்தாத்தானே மதிப்பா இருக்கும்…
அவுரு சொல்றதும் சரிதான சார்… நீங்க ரொம்ப சிம்பிள் சார்… அப்படியிருக்கக் கூடாது… ஆபீசுக்குன்னு உள்ள ஸ்டேட்டசை மெயின்டெய்ன் பண்ணத்தான் வேணும்… அப்பத்தான் பப்ளிக் நம்மை மதிப்பாங்க… -நிறுத்தாமல் சொல்லிக்கொண்டு உள் அறையிலிருந்து வெளிப்பட்டார் மருது. அந்த அலுவலகத்தின் சீனியர் க்ளார்க்.
இப்படியே ஆரம்பித்தால் பேச்சு நீண்டு விடும். பிறகு வேலை நின்று போகும். எனவே அந்த விஷயத்தை அத்தோடு முடித்துவிட்டு அன்றைய பணிக்குத் தயாரானான் கணேசன்.
வாங்க மருது… உட்காருங்க… - எதிரே அமர்ந்தார் மருது. சொல்லுங்க சார்…என்றார் இவனைப் பார்த்து.
இன்னைக்குக் காலைல சீஃப் பேசினார் மருது. கலெக்டர் மனுநீதி நாள் பெட்டிஷன்ஸ் நம்மகிட்டே அஞ்சு பெண்டிங் இருக்கில்லையா… அதை ஃபைனலைஸ் பண்ணி வைக்கச் சொன்னார்… அதுலே சைட் இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சு ரிப்ளை வந்தது எத்தனைன்னு பாருங்க… எஸ்டிமேட் எதுவும் கொடுத்திருந்தாங்கன்னா அந்த ஒர்க் எக்ஸ்கியூஷனுக்கு ஃபைனான்ஷியல் சாங்ஷன் கேட்டு எழுதிடுவோம்… அந்த அஞ்சாவது பெட்டிஷன் டி. ஏ. பில் சம்பந்தப்பட்டது இல்லையா…? அந்த ஃபைலைப் புட்அப் பண்ணுங்க… அதையும் இன்னைக்கு மூவ் பண்ணி முடிச்சிடுவோம்…
சார்… அது கொஞ்சம் பிரச்னையானது சார்…
எப்படி?
டிஃபெக்ட்ஸ் ரெக்டிஃபை பண்ணச் சொல்லி ஏற்கனவே அதை ரிட்டர்ன் பண்ணிட்டோம் சார்… திரும்ப அந்தப் பில்லை ஆபீஸ்ல கொடுத்துட்டதா அவர் சொல்றாரு…
அப்படீன்னா கொடுக்கலைன்னு எழுதிட வேண்டிதானே?
அப்படி எழுத முடியாது சார்… ஏன்னா ரிஜிஸ்டர்ல பதிவாகியிருக்கு… பில்லைக் காணலை...
என்ன சொல்றீங்க…? - அதிர்ந்து போய்க் கேட்டான் கணேசன்.
உண்மைதான் சார்… உங்களுக்கு முன்னாடி இருந்த மானேஜர் பீரியட்ல வந்திருக்கு… செக்ஷன் கிளார்க் ஜோஸப்புன்னு ஒருத்தர்... இப்போ அவர் தர்மபுரில இருக்காரு…
அவர் எங்கே வேணாலும் இருக்கட்டும்ங்க… அதப்பத்தி நமக்கென்ன? அவர்ட்ட சார்ஜ் எடுத்தது யாரு? நீங்கதானே…?
ஆமா சார்…
‘பில்ஸ் பென்டிங் டு பி செட்டில்ட் - ன்னு சொல்லி சார்ஜ் கொடுத்திருப்பாருல்ல... நீங்களும் அப்படித்தானே எடுத்திருப்பீங்க…?
ஆமா சார்…
பிறகு எப்படிக் காணாமப் போச்சு….?
‘…………..’
என்ன பேசாம இருக்கீங்க…? பில் இருக்குங்கிற நினைப்புல நான் காலைல பாஸ்கிட்ட பேசிட்டேன்… இப்ப இப்டி சொன்னீங்கன்னா? இத்தனை நாள் ஏன் சொல்லலை?
விடுங்க சார்… நான் பேசிக்கிறேன்….
அப்டீன்னா…?
நான் அந்த டிரைவர்கிட்டயே பேசி என்ன செய்யணுமோ செய்துக்கிறேன் சார்….
இவனுக்கு ஏதோ புரிந்தது மாதிரி இருந்தது… ஆனாலும் சொன்னான்… அது சரி மருது… கலெக்டர் மனுவுக்கு பதில் போயாகணுமே…?
அவர்ட்ட எழுதி வாங்கி பதில் அனுப்பிடுவோம் சார்…
அப்போ பாஸ் வந்தார்னா நீங்க பேசிடுறீங்களா…?
சரி சார்.…
அதற்கு மேல் அதைத் தோண்டக் கூடாது என்று தோன்றியது கணேசனுக்கு.
இந்த மாதிரி அலுலவலகப் பணிகளில் எத்தனையோ நெருடத்தான் செய்கின்றன. விதிமுறைகளெல்லாம் சீராக வகுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறை என்பதே வேறாக உள்ளது. விதிமுறைகளை நூல் பிடித்தாற்போல் அமுல்படுத்த முடிவதில்லை. அறுந்துவிடும் போலிருக்கிறது. ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாது. செய்ய வேண்டியவைகளை நெகிழ்வுத்தன்மைகளோடு நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. நிர்வாகத்தில் மனித மனங்கள், குணாதிசயங்கள் ஊடுருவுவதால் அந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் காலதாமதத்தைத் தவிர்க்க முடிவதில்லை. மறைமுகமாகச் சிலவற்றைச் செய்து, கணக்கில் வராததுபோல் தீர்த்து விடுகிறார்கள். இப்படியெல்லாம் இருந்தால், நாளைக்கு, தனக்கே தெரியாமல் எதுவும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? யாரை எந்த அளவுக்கு நம்புவது?
ரொம்ப கவனமா இருங்க சார்… யாரோ சொன்னது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
விதிமுறைகளுக்கு ஏற்ப பணியாளர்கள் கடமையாற்றுவதற்குப் பதிலாக பணியாளர்களின் இயல்புக்கும், வேலைத்திறனுக்கும் தகுந்தாற்போல் அலுவலகப் பணிகளைக் கொண்டு சென்று விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய நிலை வந்துபோகிறது. இதில் காலதாமதம் தவிர்க்க முடியாததாகிறது.
உங்களுக்குத் தேவையானது எது எதுன்னு எனக்குத் தெரியும். தகுதியானவைகள் நீங்கள் எதிர;பார;க்கிற கால அவகாசத்துக்கு முன்னதாகவே கிடைக்கும். அதே சமயத்துல விதிமுறைகளுக்குப் புறம்பானதுக்காக நீங்க என்னை வற்புறுத்த முடியாது. ஒரு அலுவலகத்துக்கு இதுதான் வழின்னு சரியான பாதையைக் காட்டத்தான் நான் இருக்கேன். எது சரியோ அதை மட்டும்தான் நான் சொல்லுவேன். நான் என்னுடைய கடமைக்கு எந்த அளவுக்கு உண்மையானவனோ அதே அளவுக்கு உங்களுக்கும் உண்மையானவன்.
இப்படிச் சொல்லித்தான் பொறுப்பேற்றிருந்தான் முந்தைய அலுவலகத்தில். உண்மையான அற்பணிப்பு உணர்வோடு பணியாற்றினான். அந்த அலுவலகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்யப்படாத பணியாளர்களுக்கான ஓய்வூதிய முன் நடவடிக்கைகளையெல்லாம் எல்லோருக்கும் செய்தான். அந்த ஈடுபாடும் அக்கறையும் வேறு எங்குமே அந்த அளவுக்கு அவன் செலுத்தியதில்லைதான்.
ஆனாலும் அந்தத் தொழில் நுட்பப் பணியாளர்களின் அணுகுமுறை மாறிற்று. திறமையுள்ளவனாய் இவனைக் கருதியவர்கள் இவன் மூலம் சிலவற்றை வளைக்க முனைந்தார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்தான் இவன். இணங்க மறுத்தனர். அது பகையுணர்ச்சியை அவர்களிடம் தூண்டியது. நிலைமை முற்றிய வேளையில்தான் பதவி உயர்வு வந்தது. போதும் என்று வெளியேறினான்.
தயவுசெய்து இனிமே இந்த ஆபீஸ் பக்கம் வந்து விடாதீர்கள் என்றார்கள் அவர்கள். இவனுக்கு அவர்கள் மேல் கோபம் எழவில்லை. அவர்கள் அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டான்.
( 8 )
வணக்கம்ங்கய்யா… - கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்துப் பதில் வணக்கம் சொன்னான் இவன்.
ஐயா… கீழுத்து கிராமத்துலேர்ந்து வர்றேனுங்க… பக்கத்து வெங்கிமலைல ரெண்டு நாளா சரியான மழைங்க…
நின்றுகொண்டே சொன்ன அவரை, முதல்ல உட்காருங்க….என்றான் இவன்.
இருக்கட்டுங்கய்யா… என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அவர்.
இந்த அலுவலகத்திற்கு வந்த நாள் முதல் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். வருகிறவர்கள் கிராமத்து மக்கள். ரொம்பவும் பயந்தவர்களாயும், மரியாதை கொண்டவர்களாயும், இருக்கிறார்கள். பொது ஜனம் அலுவலகங்களை அணுகும்போது அவர்களுக்கு ஏனிந்தத் தயக்கம்? எதற்காக இந்த பயம்? முதலில் இதைப் போக்க வேண்டும். முறையோடும், தயக்கத்தோடும் விசாரிப்பதிலும் கூட கேட்கலாமோ, கூடாதோ என்பதான அச்சம் நிலவுவதாய்த் தோன்றியது.
மறுபடியும் இவன் வற்புறுத்த, தயக்கத்தோடு நுனியில் அமர்ந்தார் அவர்.
ரெண்டு நாளா பெய்த மழையிலே மண் அரிப்பு அதிகமா ஏற்பட்டுப் போச்சுங்க… மலைச் சரிவுல மண்ணோட திரண்டு வந்த வெள்ளம் எங்க பயிரையெல்லாம் அழிச்சிடுச்சிங்க… வீடுக இடிஞ்சி போயிடுச்சிங்கய்யா… குடிபடை ரோட்டுல நிக்குதுங்கய்யா… சாவடில ஒண்டியிருக்கு... அய்யாதான் பார்த்து ஏதாச்சும் செய்யணும்ங்கய்யா… -சொல்லியவாறே அவர் நீட்டிய மனுவை வாங்கிப் படித்தான் இவன். வாயால் சொன்னதை எழுத்தாய்க் கொண்டுவர முடியாத அவர்களின் மன ஓலம் - பலரது கையெழுத்தும், கைநாட்டுமாய் அதில் பிரதிபலித்தது. இதே நிலைமையை விவரித்து மாவட்டக் கலெக்டருக்கும் மனுக்கொடுத்திருப்பதாய்ச் சொன்னார் பெரியவர்.
அவரது முழு முகவரியைக் கேட்டு எழுதிக் கொண்டான் இவன்.
நாளைக்கு அந்த இடத்துக்கு எங்க ஆபீஸ்லேர்ந்து இன்ஜினியர்கள் வருவாங்க… சாவடில இருங்க… இடத்தைப் பார்த்துட்டு வேணுங்கிறதைச் செய்வாங்க… என்றான்.
ரொம்பச் சந்தோஷமுங்க… ஏழைப்பட்ட சனம்… கருணை வச்சு செய்தீங்கன்னா புண்ணியமாப் போகும்… - சொல்லி வணங்கிவிட்டுப் புறப்பட்டார் அவர்.
எவ்வளவு நம்பிக்கையோடு வந்து போகிறார்கள்? - ஏக்கப் பெருமூச்சு கிளர்ந்தது இவனிடம். அந்தச் சேதப் பகுதிகளுக்கு யார் பிரிவு அலுவலர் என்பதைக் குறித்து வைத்துக் கொண்டான் இவன். அவருக்கு ஒரு மேற்குறிப்புக் கடிதத்தை அந்த மனுவின் கீழேயே எழுதினான். அந்த இன்ஜினியரிடம் கொடுத்துக் கையொப்பம் பெற்றுவரக் கோரினான். நினைத்தபடியே பிரச்னை வரத்தான் செய்தது. அந்த மனுவை உடனே சம்பந்தப்பட்டவரின் பார்வைக்குக் கொண்டு போக வேண்டியது அவனது கடமை. அதை அவன் செய்தான். ஆனால் நடந்ததா? ஈகோ பிரச்னை எங்கேதான் இல்லை? பரவலாகப் பரந்துபட்டு, செழிப்பாக வளர்ந்து, புதர் மண்டிக் கிடக்கிறது.
ஐயா, அவர் இப்ப இதைப் பார்க்க மாட்டாராம். பாஸ் வந்து அவர் தபால் பார்த்தப்புறம்தான் இவர் பார்ப்பாராம்….
பாஸ்தான் தபால் ஸ்டேஜ்லயே கம்யூனிகேட் பண்ணனும்னு சொல்லியிருக்கார்னு சொல்ல வேண்டிதானே?
சொல்லிட்டேங்கய்யா… அதுக்குள்ளேயும் என்ன அவசரம் பொத்துக்கிட்டு வருதுங்கிறாரு… ரொம்பச் சங்கட்டமா இருக்குங்கய்யா அவுரு பேசுறது… - சொல்லிவிட்டு மனுவை டேபிள்மீது வைத்துவிட்டு விலகிக் கொண்டார் லட்சுமணன்.
இம்மாதிரிப் பொது மக்களின் மனுக்களுக்கெல்லாம் உடனுக்குடன் நடவடிக்கை தேவை என்று முனைப்பாகச் செயல்பட்டாலும், அதனை உணர்ந்து நிறைவேற்றத் தயாரில்லை. நாளை பதவி உயர்வில் அதிகாரியாக உட்காரப் போகும் எண்ணம்…! அப்பொழுது அலுவலகம் தனக்குக் கீழ்தானே என்கிற கர்வமான நினைப்பு. நாளைக்கு நானும் அப்பாவாகப் போறவன்தானே என்று இன்று தந்தையை முறையற்று எதிர்த்து நிற்க முடியுமா? வீட்டிற்கு அடங்காமல் திரிய முடியுமா? அந்தந்தப் பக்குவம் அந்தந்த வயது நிலையில் கிடைக்கப் பெறும்போது அதற்கான முழுத் தகுதியோடு நிற்க வேண்டாமா? வெறும் கல்வித் தகுதி மட்டுமே இன்றே எல்லாத் தகுதிகளையும் கொடுத்து விடுமா? இன்றைய எனது பதவி இது... இதற்கான பணி இது. மேலாளர் அனுப்பும் குறிப்புகளை அலுவலரின் சார்பாக ஏற்று, அதன்படி செயல்படுதல்… அவ்வளவுதானே… நான் எது செய்தாலும் அலுவலரின் சார்பாகத்தானே செய்கிறேன்… அதை ஏன் நான் செய்வதாக நினைக்க வேண்டும்? என்னே மனநிலை இது? அலுவலகத்திலிருந்து ஒரு தபால் வருகிறது. அதில் சொல்லியிருப்பது அலுவலரால் சொல்லப்பட்டதாகப் பொருள். அதன்படி செயல்படுதல் என் கடமை என்ற தேர்ந்த தீர்க்கமான மனநிலையை இவர்கள் கற்ற கல்வி கற்றுக் கொடுக்கவில்லையா? ஒரு அலுவலகம் இந்த மாதிரிச் சிந்தனைகளிலே இயங்கினால், அங்கே மக்களுக்கான பணி எப்படி செவ்வனே நிறைவேறும்? தான் முகாமில் இருப்பதால் செய்ய வேண்டிய அவசர, அவசியப் பணிகள் தடைபட்டுவிடக் கூடாது என்பதால்தானே இந்த அலுவலக நடைமுறை. அதை அதிகாரியின் கட்டளை என்று ஏன் எடுத்துக் கொள்ள மனம் தயங்குகிறது? எல்லோரும் சேர்ந்து அவரவர் பணியைச் சரியாகச் செய்துதானே அலுவலகம் என்கிற தேரை இழுத்துச் செல்ல முடியும்? இதில் நான், நீ என்கிற பிரச்னைகள் எப்படி முளைத்தன? ஏன் முளைத்தன? மனிதர்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் பிரச்னைகள் இப்படித் தோன்றிக்கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஒரு முடிவே கிடையாதா?
தன் கடமையைப் பொறுப்பாக உணர்ந்தவனுக்கு எந்த ஆணையின்பாற்பட்ட உந்துதலும் தேவையில்லை என்பதுதானே நிஜம். மனசாட்சி ஒன்றே போதுமானது என்று தோன்றியது இவனுக்கு. ஆனாலும் அன்றாட அலுவலக நடைமுறைகளே இப்படிக் கேட்பாரற்று அறுத்துக்கொண்டு போனால்…?
அந்த அலுவலகத்தில் இன்னும் என்னெல்லாம் பிரச்னைகள் முளைக்கக் கூடும் என்பதை பணியாற்றும் அலுவலக தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரின் நாடி பிடித்துப் பார்த்து, ஒரு புதிய எழுச்சிக்குத் தான் தயாராக வேண்டும் என்பதாக கணேசனின் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருந்தன. தன்னால் சமாளிக்க முடியுமா? என்கிற மெல்லிய பய உணர்ச்சி மனதின் மூலையில் தோன்ற ஆரம்பித்திருப்பதை லேசாய் உணர ஆரம்பித்தான் கணேசன்.
ரொம்ப பயங்கரமான ஆபீசாச்சே சார்… பூரா மல முழங்கிகளாச்சே… எவனும் சொன்ன பேச்சுக் கேட்கமாட்டானுங்களே…! உங்களால சமாளிக்க முடியுமா பார்த்துக்குங்க… முடிலன்னா லீவப் போட்ருங்க… நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க சார்…போறதா, வேண்டாமான்னு…? - தன் மீது அக்கறையுள்ள சிலர் கூறிய கருத்தான வார்த்தைகள், இப்போது வலிய ஞாபகத்துக்கு வந்தன.
பதவி உயர்வு வேண்டாம், இருக்கும் கௌரவம் போதும், உள்லூரிலேயே இருங்க, ஐநூறு, ஆயிரம் குறைந்தாலும் பரவாயில்லை… மன நிம்மதிதான் முக்கியம், காசு பெரிசில்லை… என்று சுசீலா நிறைய, தன்னிடம் அழுத்தமாக எடுத்துச் சொல்லியும், தான் கேட்காமல் கிளம்பி வந்ததை இப்போது நினைத்துக் கொண்டான் கணேசன்.
கண்ணையும் கருத்தையும் மூடிக் கொண்டு அவள் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என்ற ஏனோ மனதிற்குத் தோன்றி அவனைக் கலங்கடித்தது.