ஊரிலிருந்த அம்மன் கோவிலிலிருந்து, விடாமல் தப்பட்டையின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தின் தாக்கத்தால் அக்கிராமத்தில் பண்டிகையின் கொண்டாட்டம் ஆரம்பமானது போலிருந்தது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அந்த ஒருநாளைப் பொறுத்தமட்டில் பரிபூரணமாக நீங்கி ‘கரீபி ஹட்டாவ்’ என்ற கோஷம் உண்மையான பொருளுடையதாய், ஏழைகளே அற்ற பாக்கியவான்களையுடைய கிராமம் அதுவாயிருந்தது.
ஒவ்வொரு வீட்டின் முன்னும், சாணியால் மெழுகி, கோலமிட்டு, மனை வைத்து அதன்மேல் ஒரு பிடி அரிசி இட்டு மாரம்மனின் கலசத்தை நிறுத்தியிருந்தனர்.
வேப்பிலை, அரளிப்பூ, செம்பருத்தி, செண்டுபூ முதலிய பூக்களை அம்மனுக்கு சாத்தி, மஞ்சள், குங்குமம், ஊதுபத்தி, சாம்பிராணி, விளக்கு முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் முன்னால், தங்கள் தங்கள் சக்திக்கேற்ப ஆடு, வெள்ளாடு, சேவல்களை பலியிட்டு அம்மனின் நேர்த்திக்கடனை நேர்த்தியாக செய்ததில் பரமதிருப்திப்பட்டனர் அந்தக் கிராம மக்கள்.
மற்ற உறவினர்கள் போல் சன்னுவின் குடும்பமும் இந்த வருடம் பண்டிகையில் பங்குகொள்ளத் தயாரானது. அவனின் அழைப்பை ஏற்று, வந்திருந்த உறவினர்களால் அவனுடைய சிறிய குடிசை விரிந்து நிரம்பியிருந்தது.
வீட்டுக்காரியான கெஞ்சி, கம்பி பார்டர் போட்ட புது சேலையுடுத்து சரசர சத்தத்துடன் வீடு முழுவதும் ஓடி ஓடி நடந்தாள். சன்னுவும் கோழிமுட்டை போல் வெண்மையான வேஷ்டியுடுத்தி, அன்றே ‘நரசோஜி’ டெய்லரிடம் அதிகக் கூலி கொடுத்து அவசரமாகத் தைத்துத் தந்த முன்கையே மூழ்கும்படியான சட்டையணிந்து, தோளில் நீளமாக தொங்கிய புதுத்துண்டுடன், குடிசையின் எரவாணியில் கடந்த வருடம் சொருகி வைத்த கத்தியைத் தேடினான்.
அவனின் ஆறு குழந்தைகளில் மூன்று ஆண் குழந்தைகளுக்கு மட்டும், கடூர் சந்தையிலிருந்து ஒரே அளவில் சிவப்பு, கருப்பு கோடு போட்ட மேல் சட்டையும், அரைக்கால் சட்டையும் வாங்கிக் கொடுத்திருந்தான். குழந்தைகள் அதைச் சந்தோசமாக அணிந்திருந்தினர்.
பெரிய பையனின் மேல்சட்டை, சிறிதளவே முட்டி தெரியுமளவிலிருந்தது. உட்காரும் போதும், குனியும் போதும் சிலசமயம், எப்போதாவது கால்சட்டை தெரிந்தது. ஆனால் அவனை விட இளையவனுக்கு, முட்டியிலிருந்து இன்னும் சிறிது இறங்கி, கால்சாட்டை போடாமலிருந்தாலும் பாதகமில்லையென்பதாயிருந்தது.
ஒத்த வயதுடைய பையன்களெல்லாம் “ஐயய்யோ இவன் சட்டையப் பாருங்கடா! எம்மாம் பெரிசாயிருக்கு! உள்ளே கால்சட்டையே போடலே பாருங்கடா” என்று கிண்டலடித்தபோது “ஏய், இங்க பாருங்கடா புதுக்கால்சட்டை போட்டிருக்கேன்” என்று அந்தப் பையன் தன் மேல்சட்டையை முழுவதுமாக உயர்த்தி அதை நிரூபிக்க வேண்டியிருந்தது.
மூன்றாமவனுக்கோ பின்னங்கால்களைத் தொட்டது. பாவம், பையனுக்கு அதனால் ஓடியாடத் தொல்லையாயிருந்தாலும், ‘புதுச்சட்டை’ என்ற பெருமையில் அதைச் சகித்துக்கொண்டான்.
பெண் குழந்தைகளுக்கும் அதே மாதிரிதான். பெரியவளான ‘புட்டி’ ஓடியாடும்போது பசை கூடியிருந்த அந்தச் சீட்டிப் பாவாடையின் ஓரம் தரை பெருக்குவதைக் கண்டு “இம்மாம் பெரிசா ஏம்புள்ளே தைச்சிக்கிட்டே” என்று பார்த்தவரெல்லாம் கேட்டனர்.
“தண்ணியிலே போட்டா பின்னால, சுருங்கிடும்னு டெய்லர் சொன்னான் எங்கப்பாட்டே” என்று புட்டி சமாளித்தபோது “மேல எடுத்து சொருகு, ஓரமெல்லாம் அழுக்காகும்” என்று பரிந்து பேசினார்கள். ஆனாலும் புதிய பாவாடையை, பண்டிகை முடியும் வரையாவது சுதந்திரமாக பறக்கவிடவேண்டுமென்று நினைத்த புட்டி அதை மேலெடுத்துச் சொருக விரும்பவில்லை.
பாவாடையினுள் மூழ்கிப்போயிருந்த இரண்டாமவள் கால்தடுக்கி, தடுக்கி அடிக்கொருமுறை சறுக்கி விழுந்து யாராவது பார்த்தால் ஓவென அழுவது, யாரும் பார்க்கவில்லையென்று தெரிந்தால் பாவாடையை உதறிக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும், அதனின் நிறம் மாறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.
தாயின் இடுப்பிலோ அல்லது உறவினர் கூட்டத்தில் யாருடைய இடுப்பின் மேலேயோ ஒட்டிக் கொண்டிருந்த கடைசி மகளோ, தன் இருப்பேயற்று, பாவாடையாயிருந்தாள். ஒரு மாதமானாலும், எண்ணெய், தண்ணீர் காணாத அவர்களின் தலை இன்று வட்டியோடு குறையைத் தீர்த்துக்கொண்டது போல், அதிகமான விளக்கெண்ணையால் பிசுபிசுப்பாய் ஒழுகி, அவர்களின் நெற்றி, கன்னம், காது வரையிலும் வழிந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு நாளும் துண்டு ரொட்டிக்காக ஏங்கிக் கொண்டிருந்த அவர்களுக்கு இன்று, அஜீரணமாகுமளவு சாப்பாடு! பண்டிகைக்கு வந்த உறவினர்கள் கொண்டு வந்திருந்த பொறி, பொறிகடலை, முறுக்கு, பக்கோடா, பத்தாசு முதலியவற்றால் சட்டைப்பையை நிரப்பியதோடு மசால், அரைத்துக்கொண்டிருந்த சித்தியிடமிருந்தும் உள்ளங்கை அகலத் தேங்காய்ச்சில்லும் கிட்டியது. . .
“அம்மனுக்கு பூஜை போடுறாங்க போய் பாருங்கடா, நீங்களும் போயி கும்பிடுங்க” என்று சன்னுவின் அக்கா - மாதேவக்கா குழந்தைகள் கூட்டத்தை அதட்டி விரட்டும்போது, அவர்கள் குதூகலமாக வீட்டுக்கு ஓடிவந்தனர். கலசத்தில் வைத்து பூஜை நடந்து கொண்டிருந்த அம்மனின் எதிரில் சன்னுவின் உறவினர்... ‘கர்ரங்க’ வெள்ளாட்டின் பின்னங்கால்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான். கெஞ்சியின் தம்பி கோவிந்தா, வீச்சருவாளுடன் அதைப் பலியிட தயாராயிருந்தான். கெம்பா, பசஜ்ஜா, ஜுட்திம்மா முதலானவர்களெல்லாம் பார்வையாளராயிருந்தனர்.
சன்னு, அம்மனுக்குச் சூடம் காட்டி, தீர்த்தத்தை வெள்ளாட்டின் மேல் தெளித்து பூ, குங்குமம் வைத்தான். உடம்பில் சில்லென்று நீர் பட்டவுடன், வெள்ளாடு ஒருமுறை பலமாக மெய்சிலிர்த்தது. அதற்காகவேக் காத்திருந்த பசஜ்ஜா ஹும்ஹும் அம்மா உத்தரவு கொடுத்துட்டா போடுறா கோவிந்தா என்று சொன்னபோது, அவன் தன் உடலின் சக்தி முழுவதையும் கையில் இறக்கி பலமாக வீசினான் வீச்சருவாளை.
பலியான ஆட்டின் தலை, சதக்கென்று துண்டிக்கப்பட்டு நிலத்தில் விழுந்தவுடன், சீறிப்பாய்ந்த இரத்தத்தை தாம்பாளத்தில் ஏந்தினர். சில நிமிடங்கள் விலுவிலுவென்று துடித்த முண்டம் இறுதியாக அடங்கியது.
அம்மனின் முன்னால் விழுந்த முண்டத்திலிருந்து மெல்லச் சொட்டிக் கொண்டிருந்த இரத்தம் நிலத்தில் குளம் கட்டியது. அதனுடன் இறைத்த குங்குமம், சிவப்புப் பூக்களின் நடுவே பயங்கரமாகக் காணப்பட்ட அம்மனை, குழந்தைகளனைவரும் பயம் ததும்பிய கண்களுடன் பார்த்துக் கொண்டே, பெரியவர்களின் சொற்படி கைதொழுதனர்.
அம்மா தாயே, வருடா வருடம் இப்படியே பண்டிகை செய்து, உன் நேர்த்திக்கடன் செலுத்துகிற பாக்கியம் கொடும்மா. எங்கள் வறுமையை வெறுமையாக்கம்மா என்று வேண்டிக்கொண்டு, சன்னுவும், கெஞ்சியும் அம்மனுக்கு முன்னால் விழுந்து கும்பிட்டனர்.
அதற்கடுத்த வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தது. ஆண்களின் பழக்கப்பட்ட கைகள் கத்தியை வாகாகப் பிடித்து மடமடவென்று அறுத்து மாமிசத்தை கூறுபோட்டது. உள்ளேயும் பெண்கள் அதே சுறுசுறுப்புபோடு மிளகாய் வற்றல் வறுத்து, அரைத்து, மசாலாவும் சேர்த்து அரைத்து சமையலில் வேகம் காட்டினர்.
சமையல் முடித்து, கோயில் அம்மனுக்கு நைவேத்தியமும் காட்டி வந்தாயிற்று. வழக்கமாக ஆண்கள் முதல் பந்தியில் உட்கார, அவர்களுடன் குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரே தட்டிலேயே இரண்டு, மூன்று பேராக சாப்பிட்டு முடித்தனர்.
ஏற்கனவே வேண்டுமளவு சாராயம் குடித்து மப்பிலிருந்த சன்னு, தான் சாப்பிடுவதை விட, கூடச் சாப்பிட உட்கார்ந்தவர்களை, குழறல் வார்த்தையால் உபசரிக்கத் தொடங்கினான். “சாப்பிடுங்க, கேட்டு வாங்கி வயிறு நிறைய சாப்பிடுங்க... நீங்கள் எல்லாம் என் வீட்டுக்கு எப்பவும் வர்றவங்க இல்லை, வருடத்துக்கொருமுறை கூப்பிடும்போது வர்றவங்க. இல்லேன்னா யாரும் இல்லை. என்னவோ இந்த வருடம் அம்மாவின் கருணை என்மேல விழுந்திருக்கு... பண்ணையாரும் பெரிய மனசு பண்ணினாரு. அதனால நானும் நாலு பேரைப்போல, அந்தத் தாயோட நேர்த்திக்கடனை செலுத்தின புண்ணியவானாயிட்டேன்!”
“உண்மை கண்ணப்பா, அந்தத் தாயோடகருணை உன் மேல் இல்லாமப் போயிருந்தால், உன்னால இப்படிக் கொண்டாட முடிந்திருக்குமா?” என்ற பசஜ்ஜா (பெரியவர்) சொன்ன போது, “ஹா - அப்படி சொல்லு என் அப்பனே, கருணை இல்லேன்னா என்னைப்போல நரமனுசனால என்ன செய்திருக்க முடியும்!” என்று சன்னு, சீசாவிலிருந்த திரவத்தை அலுமினிய தம்ளரில் ஊற்றி, “தாத்தா, இந்தா - இதைக்குடி” என்று பசஜ்ஜாவிடம் கொடுத்தான்.
“நீ முதல்ல குடி” என்று பசஜ்ஜா பேருக்கு சொன்னபோது அய்யய்யோ! என்னா சொல்லிட்டே என் அப்பனே! மலை மாதிரி பெரிய மனுசன் நீ எதிரில குந்திக்கிட்டிருக்கப்போ, நான் முதல்ல குடிக்கணுமா?.... இந்தா, தாத்தா, நாங்கெல்லாம் உன் பிள்ளைங்க. நீ எச்சில் பண்ணினதை நாங்க குடிக்கணும்” என்றபடி சன்னு, தம்ளரைக் கொடுத்தான். பசஜ்ஜா கண்மூடி களகளவென்று அதைக் குடித்து, தம்ளரைத் திருப்பிக் கொடுத்து, முகம் சுளித்தபடி தட்டிலிருந்த சிறிது இறைச்சித்துண்டை தொட்டுக் கொண்டார்.
பசஜ்ஜாவின் ‘எச்சிலை அருந்தியபின்’ சன்னு, மீண்டுமொருமுறை அனைவருக்கும் குடிப்பதற்கு ஊற்றி, “ஏய் கெஞ்சி, இன்னும் இரண்டு மூணு கரண்டி இறைச்சி கொண்டு வந்து வைம்மா இங்கே” என்று மனைவியிடம் அதிகாரமாய் சொன்னான். கெஞ்சி, காலையிலிருந்து இதுவரைக்கும் அடுப்பு முன்னால் கொதித்து, வேர்வையில் நனைந்து தொப்பலாயிருந்தாலும், வருத்தப்படாமல், மிக சுறுசுறுப்பாய் கிண்ணம் நிறைய இறைச்சியைக் கொண்டு வந்து எல்லார் தட்டிலும் பரிமாறத் தொடங்கினாள்.
ஏற்கனவே, வயிறு முட்டத் தின்ற சிலர் “எக்கா எக்கா வேணாங்க்கா, உன் கால்ல விழுறோம், போட வேணாங்க்கா” என்று தட்டின் மேல் கை வைத்து மூடியபோது “பந்தியில பாரபட்சம் பண்ணுனாப்ல ஆயிடும், போட்டுக்கோங்கப்பா சும்மா... நீங்க ஒண்ணும் அந்த அளவுக்கு சாப்பிடல என்று சன்னு பலவந்தப்படுத்தினான். பெண்கள் சாப்பாட்டிற்கு உட்கார்ந்தபோதும், அவன், அவர்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து உபசரித்தான்.
மறுநாள் ஊரம்மனின் உற்சவம். அம்மனின் உற்சவமூர்த்தியை நிறுத்தி அலங்கரிக்கப்பட்ட தேர், தெருவில் ஊர்வலம் வந்தது. தப்பட்டை, நாதஸ்வரம், கொட்டு முதலான வாத்தியங்களின் பின்னணியில் பொய்க்கால்க் குதிரையாட்டம் நடந்தது. கூடவே வேஷம் தரித்து சோமக்கடவுளின் ஆட்டம். பெரியவங்க, சின்னவங்க அனைவரும் கண்ணிமைக்காமல் இரவெல்லாம் உற்சவரின் ஊர்வலத்தைப் பார்த்து மனம் குளிர்ந்தனர்.
சந்துக்கு இரண்டாய் திறந்திருந்த கடைகளில் பெரியவர்கள் வெற்றிலை பாக்கு, புகையிலை பீடி, சிகரெட்டுகளை வாங்கிக் குடித்து அவர்களின் ஆசையை தீர்த்துக் கொண்டார்கள். குழந்தைகள் இனிப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்களை தின்று தீர்த்துக் கொண்டனர். கிராமத்து இளைஞர்கள் உற்சாகத்துடன் நடித்த “ஸ்ரீகிருஷ்ண பாரிஜாதா” நாடகம் பண்டிகைக்கு விசேஷ மெருகேற்றியது.
பண்டிகையின் மறுநாள், மீதமிருந்த பழையதை தின்று முடித்து, சன்னுவின் உறவினர்கள் தங்களின் ஊருக்குத் திரும்பினர். மாதேவக்கா, புறப்படும்போது, சன்னுவின் குழந்தைகளின் கைகளில் ஆளுக்கு ஐந்து பைசா கொடுத்து “வரும் பௌர்ணமிக்கு, நம்மூருல மாதேவப்பன் திருவிழா நடக்கவிருக்கு, வீட்டுக்கு வீடு கும்புடுகிறோம் அப்ப எல்லாரும் வாங்க” என்று வற்புறுத்திக் கூறிச் சென்றாள்.
சன்னு பழையதை உண்டபின் பாயில் படுத்துவிட்டான். இரவு முழுவதும் தூங்காததால், கண் இழுத்தது. “அடுப்பு முன் ஒரு கட்டை கூட இல்லை நாளைக்கி கஞ்சி காய்ச்ச என்ன பண்றது. எந்திரி நான் ஒருத்தியே போகவா மலைப்பக்கம்?” என்று கெஞ்சி சத்தம் போட்டப்போ, சன்னு மெல்லக் கண்திறந்து ஆச்சரியமாகக் கேட்டான் “என்ன சொன்ன?! பத்து இருபது கட்டு சேர்த்து வைச்சமே அத்தனையும் எரிச்சிட்டியா!”
“வந்த கூட்டத்துக்கு வடிச்சு கொட்டலயா? நாலு நாள்? இனி எப்படி மிகிளும்?... வெறும் கட்டை மட்டுமில்லை, பானையில் ஒரு மணி அரிசி, ஒரு கேழ்வரகு கூட மிச்சமில்லை. எல்லாம் கழுவி கவுத்தியாச்சி”
கெஞ்சி, காட்டமாகப் பேசியபோது “போகட்டும் விடு, அம்மனுக்கு பூஜை பண்ணிட்டு, சாப்பாடு போட்டுட்டு இப்படி எல்லாம் எடுத்தெறிந்து பேசக்கூடாது. பண்ணினது புண்ணியம் இல்லாமப் போயிடும். ரெண்டு பேரும் போய் ஆளுக்கொரு கட்டு விறகு கொண்டு வரலாம்... வா கொஞ்சம் இளைப்பாறு, சிறிது படுத்து எழுந்திரு என்று அவன் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்த பண்ணையார் வீட்டாள் ஹிர்நாகன், “பண்ணையார் கூப்பிடறாங்க வாடா சன்னு!” என்று கூப்பிட்டான்.
‘பண்ணையார்’ என்ற சத்தம் காதில் விழுந்தவுடன் சன்னு பாயிலிருந்து படக்கென்று எழுந்து உட்கார்ந்தான். கெஞ்சியும் பீதியுடன் கணவனின் முகம் பார்த்தாள். பண்டிகையின் கொண்டாட்டத்தில் மெய்மறந்திருந்த அவர்களுக்கு, முன்னே நடந்திருந்த விசயம் உடனே நினைவுக்கு வந்தது.
ஊரிலுள்ளவர்களெல்லாம் பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது, சன்னு எந்தவித சிந்தையுமின்றி, இயலாமல் உட்கார்ந்திருந்தான். போன வருடம் அவனுக்கு இப்படியே ஆனது. பணக்காரர்களனைவரும் பெரிய பெரிய பலியைக் கொடுத்து, அம்மனின் அருள் பார்வைக்கு பாத்திரமாயினர். சன்னு மற்றும் அவனைப் போலிருந்த ஏழைக் குடும்பங்கள் மட்டும், கேவலம் ஒரேயொரு கோழியால் அம்மனைத் திருப்திப்படுத்தி, தாங்களெல்லாம் அதிருப்திப்பட்டனர்.
ஆனால் இந்த வருடம் அந்த அளவு மோசமாக பண்ணக்கூடாது. வீட்டிலுள்ளவர்க்கெல்லாம் புதுத்துணி எடுத்து தைத்து, அரிசி, கேழ்வரகு, உப்பு, மிளகு எல்லாவற்றையும் தாராளமாக வாங்கி வந்து நல்லா கொழுத்த ஆட்டையும் கொண்டு வந்து அம்மனுக்கு பலியிட்டு, உறவினர்களையெல்லாம் அழைத்து சாப்பாடு போட்டு, தாங்களும் உண்டு பண்டிகை கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தான் சன்னு.
நினைத்தளவிற்கு எளிதாயில்லை வேலை. புருசன், பெண்டாட்டி, என்னதான் இடுப்பு ஒடிய வேலை செய்து, வெளிவேலைக்கு போனாலும் எட்டு பேருக்கு வயிறு நிறைப்பதே கடினமாயிருந்தது. இதில் பண்டிகை எப்படி செய்வது? சன்னு, சிந்தித்து சிந்தித்து ஓய்ந்து போனான். கடைசியில் அவன் கண்டது ஒரே வழி, ஊரிலிருந்த பண்ணையாரான மல்லேசப்பாவிடம் கைமாத்து கேட்பது.
முதல்நாள் அவன் பண்ணையாரைக் காணச் சென்றபோது, “அவர் ஊரிலில்லை. நாளைக்கு வருவார்” என்று பதில் வந்தது அவரின் இரண்டாம் மனைவியிடமிருந்து. மறுநாள் சென்றபோது “இப்போ படுத்துருக்காரு, சாயங்காலமா வா” என்றதால் திரும்பி வந்து விட்டான். சாயங்காலம் போனபோது “காபி குடிக்கிறார் வரும்வரை இங்கேயே உட்காரு” என்றவுடன், இரண்டு மணி நேரம் ஆகாயத்தைப் பார்த்தபடி உட்கார்ந்துவிட்டான்.
பண்ணையார், வெளித்திண்ணைக்கு வந்து தரிசனம் கொடுத்தப்போ, “கால்ற விழுறேன் சாமி” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான். அவர் தலையணையில் வசதியாய்சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். “என்னலே வந்தது?” என்று வழக்கமாகக் கேட்டபோது “பண்டிகை வருதே சாமி, அதுக்கு ஒரு இருநூறு ரூபாய் கைமாத்து வாங்கலாம்னு வந்தேன்” என்று ஆறடி உயரத்தை மூன்றடியாகச் சுருக்கி, தலையைச் சொறிந்து கொண்டே வேண்டி நின்றான் சன்னு.
பண்ணையார் ம்ஹும் ம்ஹும் என்று புருவமுயர்த்தி, “இருநூறு ரூபாய் கைமாத்தை என்னைக்கு திருப்பிக் கொடுக்கப்போறே? என்று கேட்டார்.
“முதல் அறுவடை வந்ததும் கொடுத்துர்றேன் சாமி” சன்னு திடமாகக் கூறினான்.
“எப்படித் தீர்ப்பாயோ? அப்போ வெறும் வட்டி மட்டுமாவது உன்னால கட்ட முடியுமோ இல்லையோ... நிலமும் இல்லை, ஊரில வீடுமில்லை, இருநூறு ரூபாய் கடன் குடுத்துட்டு மூணுநாமம் போட்டுக்கோங்கறயா?” பண்ணையார் தன் அபிப்ராயத்தை எந்த தாட்சண்யமும் இல்லாமல் தன்னோட பாணியில் அவனிடம் சொன்னபோது, சன்னு யோசனையிலாழ்ந்தான்.
‘உண்மை, தனக்கிருக்கும் சொத்துன்னா, மனைவி, ஆறு பிள்ளைங்க, எல்லாம் சின்னவங்களே. ஒருத்தன் கூட பெரியவனா இல்லை. புலி திங்கறதுக்கு ஒரு மாடில்லை, எலி திங்கறதுக்கு ஒரு பிடி பயறுகூட இல்லை தன் குடிசையில்’
“நீ சொல்றது உண்மைதான் சாமி, ஆனாலும் என் கைகால் திடமாயிருக்கு, உங்க புண்ணியத்துல கூலி வேல செய்து சம்பாதிச்சி, உங்க கடனைத் தீர்த்துருவேன். இந்த ஏழைகிட்ட கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி! போன தடவை மாதிரி ஆயிடுச்சின்னா, அம்மன் கோபம் கொண்டுருவா,” என்று சன்னு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
“சாத்தியமேயில்லை, எப்படியாவது பண்ணிக்கோ, நீ கூலி வேல செய்து சம்பாதிப்பது, உன் பெண்டாட்டி, புள்ளைங்க சாப்பாட்டுக்கே பத்தாது, இதுல கடனை எப்படி அடைப்பே?” என்று வெடுக்கென பேசிவிட்டு, பண்ணையார் வேறு வேலைக்கு கவனத்தை திருப்பத் தொடங்கியபோது, சன்னு நிராசையானான்.
“வாங்குன பணத்தைக் கொடுக்காம ஏமாத்தறவனில்லை சாமி நானு, என் பேச்சில உங்களுக்கு நம்பிக்கையில்லாதப்போ வேறென்ன பண்றதுக்கிருக்கு. விடுங்க போறேன்” என்று புறப்பட்டான். பண்ணையார் மனதில் எதையோ நினைத்துக் கொண்டவராய், இல்லைன்னா இப்படிப் பண்ணு சன்னு என்றபோது, மூழ்குபவன் கைகளில் மரத்துண்டு கிடைத்ததுபோல, என்ன சாமி!” என்று உற்சாகமாகமாய்க் கேட்டான்.
“பாரு, இருநூறு என்ன கூடவே 50 ரூபா வாங்கிட்டுப் போய் பண்டிகை பண்ணு. எதுக்குன்னா, இப்ப இருக்கிற காலத்துக்கு நூறு ரூபாய் பத்து ரூபாய்க்கு சமமாயிருக்கு. சுமாரான ஒரு ஆடு வாங்கினாலும், நூறு ரூபாய்க்கு மேலேயே வேணும். இன்னும் துணி, மணி, பயிறு, கியிறு இதுக்கெல்லாம் யாருகிட்ட கேட்பே”
பண்ணையாரே, இப்படிப் பேசுறாரோ, இல்லை ஊர் அம்மன் இவர் உடம்பில் புகுந்து, இப்படி பேச வைக்கிறாளா என்ற சந்தேகத்தில், சன்னு ஊமையாகி அவரையே பார்க்கத் தொடங்கினான்.
“என்னத்துக்கோ?.வாய்மூடிகிட்டயே நான் சொல்றது உண்மையா? பொய்யா?” என்று அவர் மீண்டும் கேட்டபோது சன்னு, நன்றியுணர்வுடன் சிரித்துக்கொண்டே “உண்மை சாமி” என்று மட்டுமே சொன்னான்.
“பாரு சன்னு, நீ கூலி வேல பண்ணி தீர்க்கிறேன்னு சொல்றது பொய். அது உன்னால முடியாது. இப்ப 250 ரூபா கொடுக்கறேன். வாங்கிட்டுப்போ. ஒரு வருடம் என் வீட்டிலிருந்தே விவசாயம் செஞ்சி அடைச்சிடு. தினம் இரண்டு வேளை சாப்பாடு போடறேன். உடுத்திக்கிறதுக்கு பழையதுணி கொடுக்கறேன் என்னங்கறே?
அவரு தாராளமனசு காட்டினதற்கான காரணம் இப்போது புரிந்தது சன்னுவிற்கு. அவனின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. இதுவரைக்கும் யாருக்கும் அடிமையாகாமலே, சுதந்திரமாக உழைத்து, உண்டு மனைவி மக்களுடன் வாழ்ந்தவனுக்கு இப்போது பிறர் மனையில் அடிமையாளாக வாழ மனது தயங்கியது.
ஆனாலும் இதுக்கு ஒப்பலைன்னா, கடன் கிடைக்காது. கடன் கிடைக்கலைன்னா பண்டிகை செய்ய முடியாது. சன்னு இன்னும் அதிகமாக சிந்திக்காமல் “வருஷம் பூரா உழைத்து வெறும் 250 போதாது, இன்னும் 50 ரூபா சேர்த்திக்கிடுங்க என்னங்க சாமி?” என்று கேட்டுக் கொண்டான்.
மனிதன், சூழ்நிலைக் கைதியாகும்போது, எப்படி விவேகத்தை இழந்துவிடுகிறான் என்பதை, பண்ணையார் அனுபவத்திலிருந்து அறிந்து கொண்டார். ஆனாலும், வேட்டை இவ்வளவு சீக்கிரம் விழுமென்று அவர் எதிர்பார்த்தாரில்லை. நாளுக்கு ஒரு ரூபாய் கணக்கு வைத்துக் கூலி கொடுத்தாலும் மாசத்துக்கு ரூ.30. வருடத்துக்கு 365 ரூபாய். அப்படி வர்றபோது, 65 ரூபாய் அதிகமான லாபமாகவும், கூடவே இப்படிப்பட்ட திடமான ஆளும் கிடைக்கிறப்போ வேணாங்கறது உண்டா?
ரொம்ப நேரம் ஆலோசனை செய்வது போல நடித்து, “ம்ஹும், நீ இவ்வளவு கெஞ்சி கேட்கறப்போ, நான் முடியவே முடியாதுன்னா அது என்ன நியாயம்? எனக்கு 50 ரூபாய் கையிலிருந்து நஷ்டமாகப் போனாலும் பரவாயில்லை. பிழைச்சுட்டுப்போடா. 300 ரூபாய் கொடுத்துர்றேன். வேற என்னப்பா?” என்று கேட்டார்.
சன்னு, வேறொன்றும் கேட்கக்கூடிய நிலைமையிலில்லை. தன்மானத்தை, தன் சுயமரியாதையை கேவலம் 300 ரூபாய்க்காக அப்பவே விட்டுக் கொடுத்தாயிற்று. தாமதமானால் சன்னு மீண்டும் மனசு மாறிவிடுவானோ? என்று சந்தேகித்த பண்ணையார் அந்த நிமிடமே அவன் கையில் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தப்பத்திரம் எழுதி அவனின் இடதுகை பெருவிரல் ரேகையை ஒத்தி எடுத்துக் கொண்டார்.
கைமாத்து வாங்கிட்டு வர்றேன்னு போன புருஷன் அடிமைப் பட்டம் வாங்கிக் கொண்டு வந்ததைக் கேட்டு, கெஞ்சி ஆதங்கப்பட்டாள். “கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு நம் வீட்டுலே நாம குளிர்ந்திருந்தமே! ஒடோடிப்போய் ஒரு வருட வனவாசம் ஒத்துக்கிட்டு வந்துட்டயே!” என்று கண்ணீர் வடித்தாள்.
சன்னுவிற்கும், தான் அவசரப்பட்டு வலையில் விழுந்துவிட்டோமோ என்று நினைத்தாலும், மனைவியின் முன் ஒப்புக் கொள்ள சித்தமாயில்லை. “வேற வழியே இல்லை கெஞ்சி, ஒத்தவங்களெல்லாம், எருமை மாடு மாதிரி இருக்கிற ஆட்டை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தறப்போ, நாம் சும்மாயிருந்தா அவளுக்குக் கோபம் வராதா?” என்று பயத்தை ஏற்படுத்தி தன் காரியத்தை சாதித்துக் கொண்ட போது “சரி விடு” என்று கெஞ்சி மனச்சிந்தையை விலக்கி நிறுத்தி பண்டிகையின் அவசர கோலத்தில் மெய் மறந்தாள்.
“வாப்பா, எப்படியிருக்கானோ, அப்படியே கூட்டிட்டு வா என்று ஆர்டர் போட்டுருக்காரு ஸ்வாமி அவரு” என்று ஹரிநாகன் வெளியிலிருந்து மீண்டுமொருமுறை கூப்பிட்டபோது, சன்னு பரிதாபமாக மனைவி மக்களைப் பார்த்தான்.
“கூப்பிடுறாங்களாம் போ முடியாதுன்னா நடக்குமா? நமக்கு சிவன் இருக்கிறான்”! பொங்கி வந்த துக்கத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டே சொன்னாள் கெஞ்சி.
சன்னு, அவளுக்கு ஏதேதோ சொல்ல நினைத்தவன் தொண்டை இறுக்கிக் கொண்டதுபோல அமைதியாக வெளியில் வந்து ஹரிநாகனைப் பின் தொடர்ந்தான்.