பிறப்புலேயே மனிதப் பிறவிதான் உயர்ந்தது. இந்தப் பிறவி இறைவனின் கருணையால வந்தது. புல்லாகிப் பூடாப் புழுவாய் மரமாகி பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாய் பேயாய்க் கணங்களாய் மனிதராய் தேவராய் உயரப்போகும் பிறப்பே இந்த மனிதப் பிறப்பு. இந்தப் பிறவியில நாம என்ன செய்யிறமோ அதுக்கு தகுந்தாற் போலத்தான் எல்லாம் கிடைக்கும். நாம போன பிறவியில செஞ்ச புண்ணியந்தான் இப்ப இந்தப் பிறவியில மனிதனாப் பிறந்திருக்கோம்.
இறைவனின் பெயரை நாம எப்போதும் சொல்லிக்கிட்டே இருந்தா நம்மளோட இந்த மனிதப் பிறவி நல்ல நிலையை அடையும். இறைவனின் திருப்பெயரைச் சொல்லச் சொல்ல வாழ்க்கையில முன்னேற்றம் இருந்துக்கிட்டே இருக்கும். அப்படி இறைவனின் நாமத்தைச் சொன்னதாலதான் இந்த மனிதப் பிறவியாகிய உயர்ந்த பிறவி நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த மனிதப் பிறவியப் பத்தி ஒரு கதை வழக்கத்துல வழங்கி வந்துருக்கு.
எல்லா உலகங்களையும் சுத்திச் சுத்தி வரக்கூடிய லோகசஞ்சாரியாகிய நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சு. அதாவது, இறைவனது பெயரையே சதாசர்வகாலமும் சொல்லிக்கிட்டே திரியறோமே? அப்படி இறைவனது பேருல என்னதான் இருக்கு. இதுதான் நாரதரோட சந்தேகம்.
சரி இந்தச் சந்தேகத்தை யாருகிட்ட போயித் தீத்துக்கறது. நாரதருக்கு ஒண்ணும் புரியல. அந்த நாராயண மூர்த்திக்கிட்டயே கேட்டுருவோம்னு நெனச்சிக்கிட்டு நமோ நாராயணான்னு சொல்லிக்கிட்டு பெருமாளப் போயிப் பார்த்தாரு.
நாரதரப் பாத்த கடவுள், “என்ன நாரதரே இந்தப் பக்கமா என்னையத் தேடி வந்துருக்கீங்கன்னு” கேட்டாரு. கடவுள் கேட்டவுடனேயே நாரதரு, “கடவுளே எனக்கு ஒரு பெருத்த சந்தேகம். ஒம்பேரச் சொல்லிக்கிட்டே திரியறனே. அந்தப் பேரச் சொல்றதுல என்ன இருக்கு. ஒம்பேரச் சொல்றதால ஏதேனும் புண்ணியமுண்டா?அதனோட பலனத் தெரிஞ்சிக்கணும்னு எனக்கு ஆசை வந்துருச்சி. மத்தவங்கக்கிட்ட சொன்னா சரியான பதில் வராது. ஒங்கக்கிட்ட கேட்டாத்தான் சரியான பதில் வரும்னு வந்தேன். என்னோட சந்தேகத்தை நீங்கதான் தீத்து வைக்கணும்னு” பணிவாச் சொன்னாரு.
கடவுளும் “சரிசரி ஒன்னோட சந்தேகத்தைத் தீத்து வைக்கிறேன். ஆனா நாஞ் சொல்றது மாதிரி நீ கேட்டுச் செய்யணும். சரியா? அப்படி நீ செஞ்சியினா ஒன்னோட சந்தேகமெல்லாம் தீந்துபோயிரும்னு” சொன்னாரு.
நாரதரும் சரின்னு ஒப்புக்கிட்டாரு. கடவுளு, நாரதரப் பாத்து, “இங்கயிருந்து பூமிக்குப் போ அங்க ஒரு கடற்கரை இருக்கும். அந்தக் கடற்கரை மணல்ல ஒரு புழு வெயிலுத் தாங்காம மெதுவா ஊந்து ஊந்து செரமப்பட்டுப் போயிக்கிட்டு இருக்கு. அந்தப் புழுவோட காதுல போயி என்னோட பேரச் சொல்லு. அப்பறம் அங்க என்ன நடந்ததுங்கறதை ஒடனே ஏங்கிட்ட வந்து சொல்லு” அப்படீன்னு சொன்னாரு.
நாரதரும் விழுந்தடிச்சுக்கிட்டு ரொம்ப ரொம்ப வேமாகப் பூமிக்கு வந்து கடவுள் சொன்ன கடற்கரைக்குப் போயிப் பார்த்தாரு. அங்க ஒரு புழு நகர முடியாமா நகர்ந்துக்கிட்டுப் போச்சு. அதனோட காதுல நாரதரு, “ஓம் நமோ நாராயணாய” அப்படின்னு சொன்னாரு.
அதக்கேட்ட நகட்ந்துக்கிட்டு இருந்த புழு நகர முடியாமத் துடிதுடிச்சுச் செத்துப் போச்சு. நாரதருக்குப் பக்குன்னு ஆயிப்போயிருச்சு. சே, இறைவனோட பேரச் சொன்னவுடனேயே நகர்ந்து போயிக்கிட்டு இருந்த புழு இறந்துடுச்சேன்னு நெனச்சிக்கிட்டுக் கடவுளுக்கிட்ட வந்து நடந்ததச் சொன்னாரு.
கடவுளு ஒண்ணுஞ் சொல்லாம, “சரி அப்படியா. இங்கேயிருந்து காசிக்குப் போ அங்கே நகரத்துக்கு வெளியில ஒரு பெரிய காடு ஒண்ணு இருக்கும் அந்தக் காட்டுல பெரிய மரம் ஒண்ணு இருக்குது. அந்த மரத்துமேல ஒரு புறா கூடுகட்டி வாழ்ந்துக்கிட்டு இருக்குது. இப்ப அந்தப் புறா முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கிற தருணத்துல இருக்குது. முட்டையில இருந்து குஞ்சுக வெளியில வரத் தயாரா இருக்குதுங்க. நீ போயி மூணாவதா உள்ள முட்டையில இருந்து குஞ்சு வெளியில வர்றபோது அதனோட காதுல என்னோட பேரச் சொல்லிப் பாரு. அப்பறமா என்ன நடக்குதுண்ணு வந்து சொல்லுன்னு” சொல்லி அனுப்புச்சாரு.
நாரதரும் ஒண்ணுஞ் சொல்லாம பூமிக்குப் போயி காசி மாநரகத்துக்கு வெளியில இருக்குற காட்டுக்குள்ளாறப் போயி கடவுளு சொன்ன மரத்தைக் கண்டுபிடிச்சி மூனாவதா உள்ள முட்டையில உள்ள குஞ்சு வெளியில வர்ற வரைக்கும் காத்திருந்தாரு. முட்டையில இருந்து புறாக் குஞ்சி வெளியில வந்து எட்டிப் பாத்துச்சு. உடனே நாரதரு, “ஓம் நமோ நாராயணாய” அப்படீன்னு இறைவனோட நாமத்தை அந்தப் புறாக்குஞ்சோட காதுல சொன்னாரு.
அவரு சொன்னதுதான் தாமதம் வெளியில நல்லாத் தலைய எட்டிப் பாத்துக்கிட்டு இருந்த அந்தப் புறாக் குஞ்சி ஒடனே செத்துப் போயிருச்சு. நாரதருக்கு அடடா அநியாயமா ஒரு பொறந்த புறாக்குஞ்சக் கொன்னுப்புட்டமேன்ற வருத்தத்தோட வேகமா இறைவன்கிட்ட வந்து நடந்ததச் சொன்னாரு.
இறைவன் அதைப் புன்சிரிப்போட கேட்டுட்டு, “சரிசரி வேகமாப் போயி அந்தக் காசி நகரத்துக்கு வெளியில இருக்கற சாக்கடை ஓரத்துல ஒரு பன்றி குட்டி போட்டுக்கிட்டு இருக்குது. அதனோட வயித்துல இருந்து கடைசியா ஒரு குட்டி வரத்தயாரா இருக்குது. நீ ஓட்ட ஓட்டமாப் போயி என்னோட பேர அதனோட காதுல சொல்லு. அப்பறமா என்ன நடக்குதுன்னு வந்து ஏங்கிட்ட சொல்லு” அப்படீன்னு சொல்லி அனுப்புனாரு.
அதக் கேட்ட நாரதரு அறைகுறை மனசோட காசி மாநகரோட வெளியில வந்து அங்க ஓரமா இருந்த சாக்கடையப் பாத்தாரு. அங்க ஒரு பன்றி ரொம்பச் செரமப்பட்டுக் குட்டி போட்டுக்கிட்டு இருந்தது. அதனோட வயித்துல இருந்து கடைசியா ஒரு குட்டி மட்டு வெளியில வந்து விழுந்து தலையத் தலைய ஆட்டிக்கிட்டு இருந்துச்சு, பன்றி மயக்கமாக் கெடந்துச்சு.
நாரதரு அந்தக் குட்டிக்கிட்டப் போயி அதோட காதுல, “ஓம் நமோ நாராயணாய” அப்படீன்னு சொன்னாரு. தலைய ஆட்டிக்கிட்டு இருந்த பன்றிக்குட்டி ஒடனே எறந்து போயிருச்சு. நாரதருக்கு ரெம்ப மனசுக்குச் சங்கடமாப் போச்சு.
வேகவேகமா வந்து கடவுளுக்கிட்ட நடந்ததச் சொல்லி வருத்தப்பட்டாரு. கடவுளு அதக் கேட்டுட்டு, “நாரதா என்னோட பேரோட மகத்துவம் ஒனக்குத் தெரியணும்னா நாஞ்சொல்றத நீ கேட்டுத்தான் ஆகணும். அதனால நாஞ்சொல்றத மறுக்காம நீ செய்யி. தேவையில்லாம குழப்பிக்காத. இப்பத்தான் காசிராஜாவோட மனைவிக்கு ஆண்குழந்தை பெறந்திருக்கு. நீ இப்பப் போயி என்னோட பேர அந்தக் குழந்தையோட காதுல சொல்லு. அப்பறமா என்ன நடக்குதுன்னு வந்து ஏங்கிட்ட சொல்லு” அப்படீன்னு சொல்லி அனுப்பிச்சாரு.
நாரதரும் மனசு படபடக்க காசி மாநகருக்குப் போனாரு. அங்க நகரமே விழாக் கோலம் பூண்டுருந்துச்சு. நாரதரு வேகவேகமா அரண்மனைக்குள்ளாறப் போனாரு. நாரதரு வந்தது தெரிஞ்ச ஒடனேயே காசி மகாராஜா ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட நாரதர வரவேற்றாரு.
ராஜாவப் பாத்த நாரதரு, “ஒனக்கு மகன் பிறந்ததாக் கேள்விப்பட்டேன். உனக்கு வாழ்த்துக்கள். உன்மகனை வாழ்த்தணும். அதனால அவனத் தங்கத் தாம்பாளத்துல வச்சி எடுத்துக்கிட்டு வரச்சொல்லு” அப்படீன்னாரு.
ராஜாவும் ஆஹா நம்ம பையனுக்கு தேவலோகத்துல இருந்து வந்துருக்கற நாரதரோட வாழத்தே கிடைக்கப் போகுது. நம்ம பையன் கொடுத்து வச்சிருக்கணும்னு நெனச்சிக்கிட்டு குழந்தையத் தங்கத்தட்டுல பட்டுத்துணியில படுக்க வச்சித் தூக்கிக்கிட்டு வரச்சொன்னாரு.
நாரதருக்கு உள்ளுரப் பயம். எங்க புழு, புறா, பன்றி மாதிரி ஆகிப்போயி ராஜா நம்மளக் கொன்னு கொலையத்துப்புட்டா நாம என்ன செய்யிறதுன்னு யோசனை செஞ்சாரு. யோசிச்ச பின்னால ராஜாவைப் பார்த்து, “மகாராஜா, ஒன்னோட பையன நான் வாழ்த்தறபோது எங்கூட யாரும் இருக்கக் கூடாது. நானும் ஒன்னோட பையனும்தான் இருக்கணும். அதுமட்டுமில்ல. நான் வாழ்த்திட்டுப் போன பிறகு கொஞ்ச நேரங்கழிச்ச பின்னாலதான் நீங்க இந்த அறைக்குள்ளாற வரணும்” அப்படீன்னு சொன்னாரு.
அதுக்கு ராஜாவும் சம்மதிச்சாரு. நாரதரு ஏதாவது ஏடாகூடமா நடந்துருச்சுன்னா நாம தப்பிச்சிரலாம்னு நெனச்சித்தான் இந்த நிபந்தனையை விதிச்சாரு. பெறகு ராஜா உட்பட எல்லாரையும் வாழ்த்துனாரு. ராஜா மகனைக் கொண்டு வந்த பெறகு அறையோட கதவைச் சாத்தித் தாழ்ப்போட்டாரு.
அறைக்குள்ளாற யாரும் இல்லைன்னு உறுதி செஞ்ச பின்னர், அந்தக் குழந்தையோட காதுல போயி, “ஓம் நமோ நாராயணாயன்னு” சொன்னாரு. தட்டுல படுக்க வச்சிருந்த குழந்தை எழுந்துருச்சி ஒக்காந்து, “சுவாமி என்னையக் கடைத்தேற்றி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததே நீங்கதான். நான் மொதல்ல புழுவா இருந்து சிரமப்பட்டேன். என்னோட காதுல கடவுளோட பேரைச் சொன்னீங்க நான் பறவையாகப் பிறந்தேன். அதன் பிறகு என்னோட காதுல வந்து கடவுள் பேரைச் சொன்னீங்க நான் மிருகமாப் பிறந்தேன். அதன் பின்னால என்னோட காதுல கடவுள் பேரச் சொன்னீங்க. நான் இப்ப காசி மகாராஜாவுக்கு மகனாப் பிறந்துருக்கேன். என்னோட இந்த உயர்ந்த பிறப்புக்கு நீங்க சொன்ன கடவுளோட பேருதான் காரணம்” அப்படீன்னு சொல்லிட்டு அப்படியே மீண்டும் குழந்தையாப் படுத்துக்கிருச்சு.
நாரதருக்கு ரொம்ப ஆச்சரியம். அட பேருல என்னருக்குன்னு நாம நெனச்சோம். ஆனா இழிந்த பிறவிய நீக்கி உயர்ந்த பிறவியத் தரக்கூடிய அளவுக்கு இறைவனோட பேரு இருக்கே. இது தெரியாம நாம போயி பேரச் சொல்றதுல என்ன இருக்குன்னு கடவுளுக்கிட்டயே கேட்டுட்டோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.
அந்தக் குழந்தைய வாழ்த்திட்டு நேராக் கடவுளப் பாக்கப் போனாரு. கடவுளப் பாத்து, “தெய்வமே பேருல என்னருக்குன்னு நாம்பாட்டுக்குத் தெரியாத்தனமாக் கேட்டுட்டேன். என்னய மன்னிச்சிருங்க. ஒங்க பேரச் சொல்லச் சொல்ல சாதராணமா இருந்த புழு இன்றைக்கு மகாராஜாவோட குழுந்தையாப் பெறந்திருக்கு. உங்களோட பேரின் மகிமையை உணர்ந்துக்கிட்டேன். இனிமே உங்க பேரத் தெனந்தோறும் சொல்லிக்கிட்டே திரிவேன்னு’’ சொல்லிட்டு கடவுள வணங்கிட்டுக் கிளம்பிட்டாரு. அவரோட சந்தேகமும் தீர்ந்து போயிருச்சு.
நம்ம ஒவ்வொருத்தரோட பேரும் இறைவனோட பேரு. அதனாலதான் ஒருத்தர நாம கூப்பிடும்போது அவரது முழுப்பேரையும் சொல்லிக் கூப்பிடணும். அப்படிக் கூப்பிட்டா கூப்பிட்டவங்களும் அந்தப் பேரு உள்ளவங்களும் சிறப்படைவாங்க. இறைவன் பேரச் சொல்லக் கூடிய பயனும் கிடைக்கும். பெயரோட மகத்துவத்தைச் சொல்றதுக்காக இன்றைக்கும் இந்தக் கதை வழங்கப்பட்டு வருது. இனிமே ஒருத்தரோட பெயரை முழுமையாச் சொல்லிக் கூப்புடுங்க.