சில பேரு எதுக்கெடுத்தாலும் ஆசைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களோட ஆசைக்கு அளவே இருக்காது. எதுலயாவது எக்குத்தப்பா முட்டிக்கிட்ட பெறகுதான் அவங்களுக்கேத் தங்களோட ஆசை தவறுன்னு தெரியும். அதுவரைக்கும் அவங்களுக்குத் தெரியாது. ஆசைங்கறது எரியுற நெருப்பு மாதிரி. நெருப்பு தனக்குக் கெடைச்சதை எல்லாத்தையும் எரிச்சிச் சாம்பலா ஆக்கினாலும் இன்னும் இன்னும்னு அடங்காமக் கேட்டுக்கிட்டு எரிச்சிக்கிட்டே இருக்கும். எரிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லைங்கறபோது அந்த நெருப்பே தணிஞ்சி அணைஞ்சு அழிஞ்சி போயிரும். இதை வௌக்கிறதுக்காக ஒரு கதை இந்த வட்டாரத்துல வழக்கத்துல வழங்கி வருது.
ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தான். அவன் நல்லவன். ஆனா அவனோட மனைவி ரெம்பப் பேராசைக்காரி. அந்த விவசாயி எந்தக் கஷ்டமுமில்லாம சொகமா வாழ்ந்து வந்தாங்க. ஆனாலும் அந்த வெவசாயியோட மனைவிக்குப் பேராசை. நமக்கிட்ட நெலபுலமிருக்கு. ஆடு, மாடு இருக்கு. ஆளு அம்புன்னு இருக்கு. ஆனா நமக்கிட்ட ஒரு பொட்டுத் தங்கமே இல்லையேன்னு வருத்தப்பட்டா. புருஷனப் போட்டு நச்சரிச்சிக்கிட்டே இருந்தா.
அவனும் எதையெதையோ சொல்லிப் பார்த்தான். ஆனா அவ கேட்டபாடில்லை. அவனும் யார் யாரையோ கேட்டுப் பாத்துத் தங்கம் சேர்க்கறதுக்கு எதாவது வழி தெரியுதான்னு பாத்தான். அவனோட பொண்டாட்டியும் பலபேரைப் போயிப் பாத்து யோசனை கேட்டு வந்தாள்.
அப்ப அந்த வீட்டுக்கு ஒரு சாமியாரு வந்தாரு. அந்தச் சாமியார முகம் மலர வரவேற்ற அந்த விவசாயியும், அவனோட மனைவியும் அவரை நல்லாக் கவனிச்சாங்க. அவங்க கொடுத்த சாப்பாட்ட நல்லாச் சாப்புட்டாரு சாமியாரு. அவருக்கு அந்த வெவசாயி நல்லவருன்னும் அவனோட மனைவி பேராசைக்காரின்னும் நல்லாப் புரிஞ்சிப் போச்சி.
அந்தச் சாமியாரு கொஞ்ச நேரம் அந்த விவசாயியோட வீ்ட்டுத் திண்ணையில உட்கார்ந்து இருந்தாரு.
அப்ப அந்த விவசாயியோட மனைவி தன்னோட புருஷனக் கூப்புட்டு, “இங்க பாருங்க, இந்தச் சாமியாரப் பாத்தா ரொம்ப சக்தி உள்ளவரு மாதிரித் தெரியுது. இவருகிட்ட தங்கம் கிடைக்கிற மந்திரத்தைத் தெரிஞ்சிக்கோங்க ஏமாளியா இருந்துராதீயன்னு” சொன்னாள்.
அதுக்கு அந்த விவசாயி, “நீ சொல்றதெல்லாஞ் சரி. அவரு என்கிட்ட கேட்டா நானு அந்த மந்திரத்தைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிறேன். ஆனா ஒன்கிட்டக் கேட்டா நீயி அந்த மந்திரத்தைக் கேட்டுத் தெரிஞ்சிக்கோன்னு” சொல்லிட்டு சாமியாருக்கிட்ட வந்தான்.
அந்த விவசாயியப் பாத்த சாமியாரு, “மகனே நீ ரொம்ப நல்லவனா இருக்க. ஆனா, உன்னோட வீட்டுக்காரி பேராசைக்காரியால்லா இருக்கான்னாரு”
அந்த விவசாயி, “சாமி நானும் எத்தனையோ சொல்லிட்டேன். ஆனா அவ திருந்துருதாத் தெரியல. நீங்கதான் அவளத் திருத்தணும்னு” சொன்னான்.
அவரும் சரின்னுட்டு, அந்த விவசாயியோட மனைவியக் கூப்பிட்டு, “மகளே உனக்கு என்ன வேணும் கேளு. உன்னோட விருப்பத்தை நிறைவேத்துறேன்னு” சொன்னாரு.
சாமியாரு தன்னைக் கேட்டதைப் பார்த்து அவ ரொம்ப சந்தோஷப்பட்டா.
அவ சாமியாரு முன்னால வந்து கீழ விழுந்து வணங்கி, “சாமி எனக்கு எல்லாம் இருக்கு. இருந்தாலும் கொஞ்சங் கூடத் தங்கமே இல்லை. எனக்குத் தங்கம் வேணும். அதுக்குரிய மந்திரம் ஏதும் இருந்தாச் சொல்லுங்க. அதுபோதும்னு” சொன்னாள்.
அவ சொன்னதக் கேட்ட சாமியாரு, “நான் ஒரு வரம் தர்ரேன். இனிமே நீ எதைத் தொட்டாலும் அது தங்கமா மாறிடும். உனக்கு வேணுங்கற தங்கத்தை இந்த வரத்தின் மூலமா நீ சேர்த்துக்க. வேற எதாவது தேவைன்னா நான் இந்த ஊருல இருக்கற அரச மரத்தடியில தங்கி இருப்பேன். அங்க வந்து பாருன்னு சொல்லி வாழ்த்திட்டு மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்துப்புட்டுப் போயிட்டாரு”
விவசாயியும் அவனது மனைவியும் அவர வணங்கி வழியனுப்பி வச்சாங்க.
அந்தச் சாமியாரு அந்தப் பக்கம் போன உடனேயே அந்த விவசாயியோட மனைவி வீட்டுக்குள்ளாற வந்து அவ கண்ணுல பட்ட அவ ஒக்கார்ற கட்டிலத் தொட்டா அடுத்த கணம் அந்தக் கட்டிலு தங்கக் கட்டிலா மாறிடுச்சு.
இந்த மாதிரி வீட்டுல இருக்கற அனைத்துச் சாமான்களும் அவ தொட்டதால தங்கமா மாறிடுச்சு. அவளுக்கு அப்பவும் ஆசை அடங்கல.
அந்த விவசாயி தன்னோட மனைவியைப் பாத்து, “இதோட போதும் நிறுத்திக்க. இப்ப இருக்கறதெல்லாம் தங்கமா மாறிடுச்சு. இதுபோதும்னு” சொல்லிப் பார்த்தான்.
ஆனா அவளோட ஆசை அடங்கறதாத் தெரியலை.
அவ கோவத்தோட அடப் போங்கன்னு சொல்லி அந்த விவசாயியோட தோளத் தட்டினா. அவளோட கை அவ புருஷன் மேல பட்டதால அவனும் தங்கச் சிலையா மாறிட்டான்.
அவளுக்கு அப்பத்தான் புரிஞ்சது. “ஐயையோ நம்ம புருஷனும் தங்கமா மாறிட்டாரு. இனி என்ன பண்றது. ஓட்டமா ஓடிப் போயி மொதல்ல இந்தச் சாமியாரப் பார்த்து நம்ம புருஷன பழையபடி மாத்தணுமேன்னு” அழுது புலம்புனா.
அவளுக்குத் தண்ணித் தாகமெடுத்துச்சு. சரி தண்ணியக் குடிச்சிட்டுப் போயிச் சாமியாரப் போயிப் பார்ப்போமுன்னுத் தண்ணிப் பானையில இருந்த தண்ணிய லோட்டாவுல மோக்கப் போனா. அந்த லோட்டாவும் தண்ணியும் தங்கமா மாறிப் போயிடுச்சு.
எல்லாப் பாத்திரத்தில இருக்கற தண்ணிய எல்லாம் கையால அள்ளிக் குடிக்கலாமிண்ணு போனா ஆனா அவ தொட்டவுடனேயே தண்ணியெல்லாம் தங்கமா மாறிப்போச்சு. அவளுக்கு அழுகை அழுகையா வந்துச்சு.
“ஐயோ என்னோட பேராசையால எம்புருஷன இழந்துட்டேன். இப்பக் குடிக்கக்கூடத் தண்ணி கெடைக்கலியே! நான் என்ன செய்வேன். இனிமே இந்தத் தங்கமும் வேணாம் ஒண்ணும் வேணாம். நான் இப்பவே ஓடிப்போயி அந்தச் சாமியாரப் பாத்து தங்கத்த மாத்துரதுக்கு வரம் வாங்கிக்கிட்டு வந்துடறேன்னு” சொல்லிச் சாமியாரு உட்க்கார்ந்துருக்கற அரசமரத்த நோக்கி ஓட்டமும் நடையுமாப் போனா.
அவ ஓடியாறதப் பார்த்த சாமியாரு மனசுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டாரு. அவ வந்தவுடனே, “மகளே, ஏன் இப்படி ஓடியாறே? உனக்கு வேறெதுவும் வேணுமா? தயங்காமக் கேளு தர்றேன்னு” சொன்னாரு.
அதுக்கு அந்தப் பேராசைக்காரி, “ஐயா சாமி எனக்குத் தங்கத்து மேல இருந்த ஆசையெல்லாம் போயிருச்சு. எனக்குத் தங்கமும் வேணாம், ஒண்ணும் வேணாம். எனக்குப் பழையபடி என்னோட புருஷனத் திருப்பிக் கொடுக்கணும். நீங்க கொடுத்த வரத்தையும் திரும்ப எடுத்துக்கணும். எனக்கு எதுவும் வேணாம். நான் ஆசையில்லாதவளாத் திருந்திட்டேன். எனக்குப் பழைய வாழ்க்கையத் திருப்பிக் கொடுங்கன்னு” சாமியாரு கால்ல விழுந்து பொறண்டு அழுதா.
அவ மனந்திருந்தியதப் பாத்த சாமியாரு, “சரி கவலப் படாத. இனிமே அளவா ஆசைப்படு. அளவுக்கதிகமா ஆசைப்படாதே. போதுங்கற மனசுதான் தங்கம். இதப் புரிஞ்சிக்க. நீ வீட்டுக்குப் போயித் திரும்ப எல்லாத்தையும் தொடு பழையபடி எல்லாம் மாறிடும். உன்னோட புருஷனோட சந்தோஷமா குடும்பத்தை நடத்துன்னு” சொல்லிட்டு அந்த எடத்த விட்டுப் போயிட்டாரு.
திரும்பவும் வேகம் மழைவேகமா ஓடி வந்த விவசாயியோட பொண்டாட்டி மொதல்ல தன்னோட புருஷனத் தொட்டா அவன் பழையபடி ஆயிட்டான். இப்படி அவ எல்லாத்தையும் தொட்டவுடனே எல்லாப் பொருளும் பழையபடி ஆயிருச்சு. அவ புருஷன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டு அவனோட புள்ளை குட்டிகளோட ரொம்பநாளு சந்தோஷமா வாழ்ந்து வந்தா.
இந்தக் கதையச் சொல்லி மனங்கொண்டதே மாளிகைன்னு நெனச்சிக்கிட்டு வாழுங்கன்னு இப்பவும் பெரியவங்க சொல்வாங்க.